14

14

தேசம்நெற் நேர்காணலுக்காக நேர்கண்டவரின் முகநூல் முடக்கப்பட்டது!

தேசம்நெற் இணையத்தில் ஓகஸ்ட் 13 முதல் “களுதாவளையிலிருந்து பாரிஸ் வரை ஓர் அரசியல் போராளியின் வாழ்வின் பயணம்!” என்ற தலைப்பில் தொடர்ச்சியாக வெளியாகி வரும் நேர்காணல் தொடர்பில் நேர்காணலை மேற்கொண்ட தம்பிராஜா ஜெயபாலனின் முகநூல் கடந்த ஒரு வாரமாக முழுமையாக முடக்கப்பட்டு உள்ளது. குறிப்பிட்ட நேர்காணலை வழங்கிய அசோக் யோகன் கண்ணமுத்துவின் முகநூல் பக்கத்திலும் குறிப்பிட்ட நேர்காணல் மட்டும் முடக்கப்பட்டது.

பெஸ்புக் – என்ற இந்த முகநூல் சமூகவலைத்தளத்தில் ஒரு போட்டியற்ற முற்றிலும் சர்வதிகார நிறுவனமாக வளர்ந்துவிட்டதன் எதிரொலியாக தன்னிச்சையாக முகநூல்களை தடைசெய்து வருகின்றது. இந்த தடைசெய்யும் முடிவுகள் பெரும்பாலும் மனிதர்களால் மேற்கொள்ளப்படுவதில்லை. மாறாக இம்முடிவுகளை கணணிகளே மேற்கொள்கின்றன. படங்களை அடையாளம் காணும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தியும், சொற்களை அடையாளப்படுத்தும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தியும் பதிவுகளை நீக்கியும் முகநூல்களைத் தடை செய்தும் வருகின்றனர். பெஸ் புக் பாவனையாளர்களின் பதிவுகளை வைத்து பல மில்லியன் லாபமீட்டும் இந்நிறுவனம் இப்பதிவுகளை கண்காணிப்பது தொடர்பிலோ அல்லது மற்றையவர்களுக்கு தீங்கு இழைப்பது தொடர்பிலோ குறிப்பிடத்தக்க கவனம் செலுத்தவில்லை என பெஸ்புக் பற்றிய பல்வேறு உள்வீட்டுத் தகவல்களையும் பொது மக்களுக்குக் கொண்டு வந்த பிரான்ஸஸ் ஹூயுஹன் தெரிவித்துள்ளார்.

முகநூல்களில் முதலாளித்துவம் எழுதினால் என்ன சோசலிசம் எழுதினால் என்ன தூஷணம் எழுதினால் என்ன அதன் மூலம் அந்நிறுவனம் வருமானத்தை ஈட்டிக்கொண்டிருக்கிறது. எமது பதிவுகளே அவர்களுடைய மூலதனம். ஆனால் எமது பதிவுகளை கண்காணிக்கும் வடிகட்டல்களில் அளவுக்கு மிஞ்சிய ஓட்டைகளை பெஸ்புக் கொண்டுள்ளது. கொலை மிரட்டல்களையும் தற்கொலைத் தூண்டுதல்களையும் தூஷணங்களையும் தங்குதடையின்றி பிரசுரிக்க அனுமதிக்கும் பெஸ்புக் சீருடையுடன் பிரபாகரனினதும் மாத்தையாவினதும் படத்தைக் கண்டால் துப்பாக்கிகளுடன் போராளிகளைக் கண்டால் அப்பதிவுகளை தடுக்கிறது முகநூல்களை முடக்குகிறது.

பெஸ்புக் உற்பத்தி சாதனங்களை தன் கையகப்படுத்திய இராட்சத நிறுவனம். அமெரிக்க ஜனாதிபதியையே தீர்மானிக்கின்ற வல்லமை பெஸ்புக்கிற்கு உண்டு. அரசுகளை ஆட்டிப்படைக்கின்ற அளவுக்கு எங்களைப் போன்றவர்களின் தரவுகளையும் பதிவுகளையும் வைத்து பெஸ்புக் வருமானத்தைப் பெருக்கிக் கொண்டுள்ளது. அரசுகளே அடிபணியும் போது தம்பிராஜா ஜெயபாலன் போன்றவர்கள் அற்பப்பதர்கள். உலகின் 20 சதவீதமான மக்கள் அண்ணளவாக 2 பில்லியன் பேர் பெஸ்புக்கை பயன்படுத்துகின்றனர். ஆகையால் உங்கள் பதிவுகளை பேஸ்புக்கை மட்டும் நம்பி பதிவிடவேண்டாம். உங்கள் முகநூல் முடக்கப்படும் போது உங்கள் பதிவுகளையும் நீங்கள் இழக்க வேண்டிவரும். அதிஸ்ட்ட வசமாக என்னுடைய பதிவுகள் பெரும்பாலும் தேசம்நெற் இணையத்தில் வெளியிடுவதால் எனது பதிவுகளை நான் இழக்கவில்லை. எனது பேஸ்புக் தேசம்நெற் இணையத்தை விளம்பரப்படுத்தவே.

என்னோடு பெஸ்புக்கில் மீண்டும் இணைய விரும்புபவர்கள் Theasm Jeyabalan இந்தப் பெயரில் என்னை அடையாளம் காணலாம்.

“இராணுவத்தளபதி சவேந்திர சில்வாவைத் தடைசெய்யுங்கள்.” – பிரித்தானியா  நாடாளுமன்ற உறுப்பினர் சாரா ஜோன்ஸ் ட்வீட் !

இலங்கை இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவிற்கு எதிராகத் தடைவிதிப்பதற்கு ஆதரவளிக்குமாறு பிரித்தானியா  நாடாளுமன்ற உறுப்பினர் சாரா ஜோன்ஸ் அந்நாட்டு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இராணுவத்தளபதி சவேந்திர சில்வாவைத் தடைசெய்யுங்கள்’ என்ற வாசகத்துடனான பதாகையுடன் சாரா ஜோன்ஸ் அவரது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள காணொளியொன்றிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மக்களே பொறுப்புணர்வுடன் செயற்படுங்கள்! - சவேந்திர சில்வா

தொழிற்கட்சியின் சார்பில் பிரித்தானியாவின் மத்திய க்ரொய்டொன் தொகுதியில் போட்டியிட்டு கடந்த 2017 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்திற்குத் தெரிவான சாரா ஜோன்ஸ், குறிப்பிட்டுள்ள பதிவில்,

தன்னுடைய தொகுதியில் வசிக்கும் தமிழ் சமூகத்தினர் மத்தியில் இலங்கையில் இடம்பெற்ற போரின் வடுக்கள் இன்னமும் இருப்பதை உணரமுடிகிறது. அதுமாத்திரமன்றி உலகில் பல்வேறு பகுதிகளிலும் வாழும் இலங்கைத்தமிழர்கள் தொடர்பில் நீதியும் பொறுப்புக்கூறலும் உறுதிசெய்யப்படவேண்டும்.

‘மனித உரிமைகள் உறுதிசெய்யப்படுவதற்கான தலைமைத்துவத்தை பிரித்தானியா வழங்கவேண்டும். நாம் நீதிக்காகப் போராடவேண்டும். பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதற்கான செயல்வடிவிலான நடவடிக்கைகளே தற்போதைய தேவையாக இருக்கின்றன.

இலங்கையிலும் உலகம் முழுவதிலும் வாழும் தமிழர்களுக்காக நாம் அதனைத் தொடர்ந்து வலியுறுத்த வேண்டும்’ என்று சாரா ஜோன்ஸ் அக்காணொளியில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

வன்முறைகள் காரணமாக சர்வதேச ரீதியில் 84 மில்லியன் பேர் இடம்பெயர்வு !

வன்முறைகள், பாதுகாப்பின்மை மற்றும் காலநிலை மாற்றம் என்பனவற்றின் காரணமாக, சர்வதேச ரீதியில் 84 மில்லியன் பேர் இடம்பெயர்ந்துள்ளதாகத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் அகதிகள் முகவரகத்தினால், கடந்த 11ம்திகதி வெளியிடப்பட்ட புதிய ஆய்வறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

சர்வதேச ரீதியில், குறிப்பாக ஆபிரிக்காவில் உள்ளக மோதல் காரணமாக அதிகளவானோர் தப்பிச் செல்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  எவ்வாறிருப்பினும், கொவிட்-19 தொற்றினால் அமுலாக்கப்பட்டுள்ள எல்லைக் கட்டுப்பாடுகள், பல இடங்களில் புகழிடக் கோரிக்கையாளர்களின் அணுகலைத் தடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வன்முறைகள், துன்புறுத்தல்கள் மற்றும் மனித உரிமை மீறல்களைத் தடுக்க சர்வதேச சமூகம் தவறியுள்ளதாக அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகர் ஃப்ளிப்போ க்ரண்டி தெரிவித்துள்ளார்.

இதனாலேயே, மக்கள் அவர்களது சொந்த இடங்களிலிருந்து வெளியேறுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தாய்வானுக்காக களமிறங்கவுள்ள அவுஸ்ரேலியா – வெளியான பகிரங்க அறிவிப்பு !

தாய்வான் மீதாது சீனா தமது பலத்தைப் பயன்படுத்துமாயின் அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் பதில் நடவடிக்கையை மேற்கொள்ளும் எனவும் தாய்வானை பாதுகாப்பதற்குத் தேவை ஏற்படின் அமெரிக்காவுடன் இணைந்து செயற்பட முடியும் எனவும் அவுஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
 
தாய்வானை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக தமது பலத்தைப் பயன்படுத்துவதைச் சீனா இதுவரையில் நிராகரிக்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
 
எவ்வாறாயினும் சீனா போர் ஏற்படக்கூடும் என்ற கருத்தை மறுத்து வரும் நிலையில் குறித்த விடயத்தில் உண்மையாகவும் நேர்மையாகவும் செயற்பட வேண்டும் என அவுஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.