November

November

ஆங் சான் சூகி மீது புதிய குற்றச்சாட்டு பதிவு !

மியன்மாரில் கடந்த பெப்ரவரி மாதம் 1-ந்திகதி அந்த நாட்டு இராணுவம், ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்த்துவிட்டு, ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. அதை தொடர்ந்து, நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி, அதிபர் வின் மைன்ட் உள்பட முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் மூத்த அரசு அதிகாரிகளை இராணுவம் கைது செய்தது.

அப்போது முதல் வீட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ள ஆங் சான் சூகி மீது, தகவல் தொடர்பு சாதனங்களை சட்டவிரோதமாக இறக்குமதி செய்தது, கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை கடைபிடிக்காததன் மூலம் தேசிய பேரிடா் மேலாண்மைச் சட்டத்தை மீறியது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மியன்மாரின் இராணுவ ஆட்சியாளர்கள் ஆங் சான் சூகி மீது புதிய குற்றச்சாட்டை பதிவு செய்துள்ளனர்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஆங் சான் சூகி முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறி அவர் மீது தேர்தல் மோசடி குற்றச்சாட்டை பதிவு செய்துள்ளனர். ஆங் சான் சூகி, மட்டுமின்றி முன்னாள் அதிபர் வின் மைன்ட் மற்றும் மியான்மர் தேர்தல் ஆணையத்தின் முன்னாள் தலைவர் ஆகியோர் மீதும் தேர்தல் மோசடி குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த பொதுத்தேர்தலில் ஆங் சான் சூகி தலைமையிலான ஜனநாயகத்துக்கான தேசிய லீக் கட்சி அமோக வெற்றி பெற்றதும், இதனை ஏற்க மறுத்த ராணுவம் புரட்சி செய்து, ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியதும் குறிப்பிடத்தக்கது.

11 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட அமெரிக்க ஊடகவியலாளர் விடுதலை !

இராணுவ ஆட்சி நடந்து வரும் மியன்மாரில் இணையதள பத்திரிகை ஒன்றில் நிர்வாக ஆசிரியராக பணியாற்றி வந்தவர் அமெரிக்க பத்திரிகையாளரான டேனி பென்ஸ்டா். 37 வயதான இவர் கடந்த மே மாதம் இராணுவ ஆட்சியாளா்களால் கைது செய்யப்பட்டார். அவா் மீது தவறான தகவல்களை பரப்பி வன்முறையைத் தூண்டியது, சட்டவிரோத அமைப்புகளுடன் தொடா்பு கொண்டது, விசா மோசடி போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.

இது தொடா்பான விசாரணையின் முடிவில், டேனி பென்ஸ்டருக்கு 11 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கடந்த 12-ந்திகதி மியன்மார் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மியன்மாரில் கடந்த பெப்ரவரி மாதம் இராணுவம் ஆட்சியை கைப்பற்றியது முதல் அங்கு பத்திரிகை சுதந்திரம் பறிக்கப்பட்டு ஊடகத்தினர் மீது வன்முறை கட்டவிழத்துவிடப்பட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வரும் நிலையில் அமெரிக்க பத்திரிகையாளர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்தநிலையில் மியன்மாரில் இருக்கும் முன்னாள் அமெரிக்க தூதர் பில் ரிச்சர்ட்சன், பத்திரிகையாளர் டேனி பென்ஸ்டரை விடுவிப்பது குறித்து இராணுவ ஆட்சியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார்.

இதில் டேனி பென்ஸ்டரை விடுதலை செய்ய மியன்மார் அரசு ஒப்புக்கொண்டது. அதன்படி சிறை தண்டனை விதிக்கப்பட்ட 3 நாட்களுக்கு பிறகு டேனி பென்ஸ்டர் நேற்று சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். மேலும் அவர் அமெரிக்கா செல்வதற்கும் மியான்மர் அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இணைய வழியில் சந்தித்த உலகின் பொருளாதார வல்லரசுகளின் தலைவர்கள் – பழைய நண்பருக்கு வணக்கம் என ஆரம்பித்த சீனா !

உலகின் இரு வல்லரசு நாடுகளான அமெரிக்கா, சீனா இடையே தற்போது மோதல் போக்கு நிலவி வருகிறது. வர்த்தகம், கொரோனா வைரஸ், ஹாங்காங், தைவான் ஆகிய நாடுகள் மீதான சீனாவின் ஆக்கிரமிப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் இடையே இரு நாடுகளுக்கும் கருத்து வேறுபாடு இருக்கிறது.

தென்சீன கடல் பகுதியில் சீனா அத்துமீறி செயல்படுவதாக அமெரிக்கா தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. இதற்கு இடையே சமீபத்தில் அமெரிக்காவின் வாஷிங்டனில் அமெரிக்கா- சீனா உறவுகள் குறித்த தேசிய கமிட்டி கூட்டம் நடந்தது.

இதில் அமெரிக்காவுடன் இருக்கும் கருத்து வேறுபாடுகளை களைய சீனா தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் – சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்தநிலையில் இரு நாட்டு தலைவர்களும் காணொலி காட்சி மூலமாக பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது சீன ஜனாதிபதி கூறும்போது, “பழைய நண்பருக்கு வாழ்த்துக்கள்” என்று தெரிவித்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்த பேச்சுவார்த்தையில் இரு நாடுகளின் உறவுகள் மற்றும் கொரோனா தொற்று உள்ளிட்ட சர்வதேச பிரச்சினைகள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்துள்ளனர்.

ஜோபைடன் கூறும்போது, “நாடுகள் இடையேயான போட்டிகள் எளிமையாக, நேரடியானதாக இருக்க வேண்டும். அது மோதலாக மாறாமல் இருப்பதை உறுதி செய்வது சீன-அமெரிக்காவின் தலைவர்கள் என்ற முறையில் நமது பொறுப்பு என்று தோன்றுகிறது” என்றார்.

ஜின்பிங் பேசும்போது, “உங்களுடன் இணைந்து பணியாற்ற நான் தயாராக இருக்கிறேன். நீங்கள் ஒருமித்த கருத்தை உருவாக்க தீவிர நடவடிக்கைகளை எடுத்து சீனா-அமெரிக்காவை அடுத்த கட்டத்துக்கு நகர்த்த வேண்டும் உறவுகள் நேர்மறையான திசையில் முன்னோக்கி செல்கின்றன” என்றார்.

அமெரிக்கா-சீனா இடையே மோதல் போக்கு உள்ள நிலையில் இரு நாட்டு தலைவர்களின் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

தமிழை இந்தியாவின் தேசிய மொழியாக்குங்கள் – மு.க.ஸ்டாலின் கோரிக்கை !

இந்தியாவின் பழம்பெருமை வாய்ந்த அதே நேரம் 2000ஆண்டுகளுக்கு மேலான இலக்கண பாரம்பரியம் உடைய மொழிகளுள் ஒன்றாக தமிழ்மொழி தனிச்சிறப்பு பெறுகின்றது. எனினும் ஆட்சி நடவடிக்கைகள் தொடங்கி பல இடங்களில் தமிழ்மொழிக்கான அந்தஸ்து கிடைப்பதில்லை. இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் “தமிழ் மொழியை இந்தியாவின் ஆட்சி மொழிகளில் ஒன்றாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

திருப்பதியில் நடைபெற்ற 29 ஆவது தெற்கு மண்டல பேரவையின் கூட்டத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் சார்பில், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பங்கேற்றார். இந்திய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் ஸ்டாலினின் உரையை பொன்முடி வாசித்தார்.

மழையால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க வேண்டியிருந்ததால் கூட்டத்தில் பங்கேற்க இயலவில்லை என மு.க.ஸ்டாலின் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.

உலகின் மிகவும் பழமையான மொழிகளுள் ஒன்றான தமிழ் இலங்கை, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் தேசிய மொழியாக இருக்கிறது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே, தமிழ்மொழியை இந்தியாவின் ஆட்சிமொழிகளுள் ஒன்றாக அறிவிப்பதுடன், திருக்குறளையும் தேசிய நூலாக பிரகடனப்படுத்த வேண்டும் என முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார்.

தேசம்நெற் நேர்காணலுக்காக நேர்கண்டவரின் முகநூல் முடக்கப்பட்டது!

தேசம்நெற் இணையத்தில் ஓகஸ்ட் 13 முதல் “களுதாவளையிலிருந்து பாரிஸ் வரை ஓர் அரசியல் போராளியின் வாழ்வின் பயணம்!” என்ற தலைப்பில் தொடர்ச்சியாக வெளியாகி வரும் நேர்காணல் தொடர்பில் நேர்காணலை மேற்கொண்ட தம்பிராஜா ஜெயபாலனின் முகநூல் கடந்த ஒரு வாரமாக முழுமையாக முடக்கப்பட்டு உள்ளது. குறிப்பிட்ட நேர்காணலை வழங்கிய அசோக் யோகன் கண்ணமுத்துவின் முகநூல் பக்கத்திலும் குறிப்பிட்ட நேர்காணல் மட்டும் முடக்கப்பட்டது.

பெஸ்புக் – என்ற இந்த முகநூல் சமூகவலைத்தளத்தில் ஒரு போட்டியற்ற முற்றிலும் சர்வதிகார நிறுவனமாக வளர்ந்துவிட்டதன் எதிரொலியாக தன்னிச்சையாக முகநூல்களை தடைசெய்து வருகின்றது. இந்த தடைசெய்யும் முடிவுகள் பெரும்பாலும் மனிதர்களால் மேற்கொள்ளப்படுவதில்லை. மாறாக இம்முடிவுகளை கணணிகளே மேற்கொள்கின்றன. படங்களை அடையாளம் காணும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தியும், சொற்களை அடையாளப்படுத்தும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தியும் பதிவுகளை நீக்கியும் முகநூல்களைத் தடை செய்தும் வருகின்றனர். பெஸ் புக் பாவனையாளர்களின் பதிவுகளை வைத்து பல மில்லியன் லாபமீட்டும் இந்நிறுவனம் இப்பதிவுகளை கண்காணிப்பது தொடர்பிலோ அல்லது மற்றையவர்களுக்கு தீங்கு இழைப்பது தொடர்பிலோ குறிப்பிடத்தக்க கவனம் செலுத்தவில்லை என பெஸ்புக் பற்றிய பல்வேறு உள்வீட்டுத் தகவல்களையும் பொது மக்களுக்குக் கொண்டு வந்த பிரான்ஸஸ் ஹூயுஹன் தெரிவித்துள்ளார்.

முகநூல்களில் முதலாளித்துவம் எழுதினால் என்ன சோசலிசம் எழுதினால் என்ன தூஷணம் எழுதினால் என்ன அதன் மூலம் அந்நிறுவனம் வருமானத்தை ஈட்டிக்கொண்டிருக்கிறது. எமது பதிவுகளே அவர்களுடைய மூலதனம். ஆனால் எமது பதிவுகளை கண்காணிக்கும் வடிகட்டல்களில் அளவுக்கு மிஞ்சிய ஓட்டைகளை பெஸ்புக் கொண்டுள்ளது. கொலை மிரட்டல்களையும் தற்கொலைத் தூண்டுதல்களையும் தூஷணங்களையும் தங்குதடையின்றி பிரசுரிக்க அனுமதிக்கும் பெஸ்புக் சீருடையுடன் பிரபாகரனினதும் மாத்தையாவினதும் படத்தைக் கண்டால் துப்பாக்கிகளுடன் போராளிகளைக் கண்டால் அப்பதிவுகளை தடுக்கிறது முகநூல்களை முடக்குகிறது.

பெஸ்புக் உற்பத்தி சாதனங்களை தன் கையகப்படுத்திய இராட்சத நிறுவனம். அமெரிக்க ஜனாதிபதியையே தீர்மானிக்கின்ற வல்லமை பெஸ்புக்கிற்கு உண்டு. அரசுகளை ஆட்டிப்படைக்கின்ற அளவுக்கு எங்களைப் போன்றவர்களின் தரவுகளையும் பதிவுகளையும் வைத்து பெஸ்புக் வருமானத்தைப் பெருக்கிக் கொண்டுள்ளது. அரசுகளே அடிபணியும் போது தம்பிராஜா ஜெயபாலன் போன்றவர்கள் அற்பப்பதர்கள். உலகின் 20 சதவீதமான மக்கள் அண்ணளவாக 2 பில்லியன் பேர் பெஸ்புக்கை பயன்படுத்துகின்றனர். ஆகையால் உங்கள் பதிவுகளை பேஸ்புக்கை மட்டும் நம்பி பதிவிடவேண்டாம். உங்கள் முகநூல் முடக்கப்படும் போது உங்கள் பதிவுகளையும் நீங்கள் இழக்க வேண்டிவரும். அதிஸ்ட்ட வசமாக என்னுடைய பதிவுகள் பெரும்பாலும் தேசம்நெற் இணையத்தில் வெளியிடுவதால் எனது பதிவுகளை நான் இழக்கவில்லை. எனது பேஸ்புக் தேசம்நெற் இணையத்தை விளம்பரப்படுத்தவே.

என்னோடு பெஸ்புக்கில் மீண்டும் இணைய விரும்புபவர்கள் Theasm Jeyabalan இந்தப் பெயரில் என்னை அடையாளம் காணலாம்.

“இராணுவத்தளபதி சவேந்திர சில்வாவைத் தடைசெய்யுங்கள்.” – பிரித்தானியா  நாடாளுமன்ற உறுப்பினர் சாரா ஜோன்ஸ் ட்வீட் !

இலங்கை இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவிற்கு எதிராகத் தடைவிதிப்பதற்கு ஆதரவளிக்குமாறு பிரித்தானியா  நாடாளுமன்ற உறுப்பினர் சாரா ஜோன்ஸ் அந்நாட்டு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இராணுவத்தளபதி சவேந்திர சில்வாவைத் தடைசெய்யுங்கள்’ என்ற வாசகத்துடனான பதாகையுடன் சாரா ஜோன்ஸ் அவரது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள காணொளியொன்றிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மக்களே பொறுப்புணர்வுடன் செயற்படுங்கள்! - சவேந்திர சில்வா

தொழிற்கட்சியின் சார்பில் பிரித்தானியாவின் மத்திய க்ரொய்டொன் தொகுதியில் போட்டியிட்டு கடந்த 2017 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்திற்குத் தெரிவான சாரா ஜோன்ஸ், குறிப்பிட்டுள்ள பதிவில்,

தன்னுடைய தொகுதியில் வசிக்கும் தமிழ் சமூகத்தினர் மத்தியில் இலங்கையில் இடம்பெற்ற போரின் வடுக்கள் இன்னமும் இருப்பதை உணரமுடிகிறது. அதுமாத்திரமன்றி உலகில் பல்வேறு பகுதிகளிலும் வாழும் இலங்கைத்தமிழர்கள் தொடர்பில் நீதியும் பொறுப்புக்கூறலும் உறுதிசெய்யப்படவேண்டும்.

‘மனித உரிமைகள் உறுதிசெய்யப்படுவதற்கான தலைமைத்துவத்தை பிரித்தானியா வழங்கவேண்டும். நாம் நீதிக்காகப் போராடவேண்டும். பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதற்கான செயல்வடிவிலான நடவடிக்கைகளே தற்போதைய தேவையாக இருக்கின்றன.

இலங்கையிலும் உலகம் முழுவதிலும் வாழும் தமிழர்களுக்காக நாம் அதனைத் தொடர்ந்து வலியுறுத்த வேண்டும்’ என்று சாரா ஜோன்ஸ் அக்காணொளியில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

வன்முறைகள் காரணமாக சர்வதேச ரீதியில் 84 மில்லியன் பேர் இடம்பெயர்வு !

வன்முறைகள், பாதுகாப்பின்மை மற்றும் காலநிலை மாற்றம் என்பனவற்றின் காரணமாக, சர்வதேச ரீதியில் 84 மில்லியன் பேர் இடம்பெயர்ந்துள்ளதாகத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் அகதிகள் முகவரகத்தினால், கடந்த 11ம்திகதி வெளியிடப்பட்ட புதிய ஆய்வறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

சர்வதேச ரீதியில், குறிப்பாக ஆபிரிக்காவில் உள்ளக மோதல் காரணமாக அதிகளவானோர் தப்பிச் செல்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  எவ்வாறிருப்பினும், கொவிட்-19 தொற்றினால் அமுலாக்கப்பட்டுள்ள எல்லைக் கட்டுப்பாடுகள், பல இடங்களில் புகழிடக் கோரிக்கையாளர்களின் அணுகலைத் தடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வன்முறைகள், துன்புறுத்தல்கள் மற்றும் மனித உரிமை மீறல்களைத் தடுக்க சர்வதேச சமூகம் தவறியுள்ளதாக அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகர் ஃப்ளிப்போ க்ரண்டி தெரிவித்துள்ளார்.

இதனாலேயே, மக்கள் அவர்களது சொந்த இடங்களிலிருந்து வெளியேறுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தாய்வானுக்காக களமிறங்கவுள்ள அவுஸ்ரேலியா – வெளியான பகிரங்க அறிவிப்பு !

தாய்வான் மீதாது சீனா தமது பலத்தைப் பயன்படுத்துமாயின் அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் பதில் நடவடிக்கையை மேற்கொள்ளும் எனவும் தாய்வானை பாதுகாப்பதற்குத் தேவை ஏற்படின் அமெரிக்காவுடன் இணைந்து செயற்பட முடியும் எனவும் அவுஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
 
தாய்வானை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக தமது பலத்தைப் பயன்படுத்துவதைச் சீனா இதுவரையில் நிராகரிக்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
 
எவ்வாறாயினும் சீனா போர் ஏற்படக்கூடும் என்ற கருத்தை மறுத்து வரும் நிலையில் குறித்த விடயத்தில் உண்மையாகவும் நேர்மையாகவும் செயற்பட வேண்டும் என அவுஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மியன்மாரில் இராணுவப் புரட்சியை விமர்சித்த அமெரிக்க ஊடகவியலாளருக்கு நேர்ந்த கதி !

அமெரிக்க ஊடகவியலாளர் ஒருவருக்கு மியன்மார் இராணுவ நீதிமன்றம் 11 வருட சிறைத்தண்டனை விதித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Myanmar court sentences American journalist to 11 years in prison

37 வயதான அமெரிக்கப் பத்திரிகையாளர் டன்னி ஃபின்ஸ்டர், மியன்மாரில் இராணுவப் புரட்சியை விமர்சித்த இணையத்தளத்தில் பணியாற்றினார்.

குடியேற்ற சட்டங்களை மீறியதாகவும், தவறான நடத்தை மற்றும் இராணுவ ஆட்சிக்கு எதிராகப் பேசியதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

“யாரையும் சும்மா விடக்கூடாது.” – ஆசிரியரின் பாலியல் கொடுமையால் பள்ளி மாணவி தற்கொலை !

தமிழ்நாடு கோவையில் பாலியல் தொல்லை கொடுத்ததால் பிளஸ்-2 மாணவி தற்கொலை செய்து கொண்டார். ஆசிரியர் மீது போக்சோவில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. கோவையை சேர்ந்த 17 வயது மாணவி,  ஆர்எஸ் புரம் பகுதியில் உள்ள தனியார் மேல் நிலைப்பள்ளி ஒன்றில் பிளஸ் 2  படித்து வந்தார்.

நேற்று மாணவி திடீரென தற்கொலை செய்து கொண்டார். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உள் பக்கமாக கதவை தாழ்ப்பாள் போட்டு கொண்ட மாணவி, பேனில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து உக்கடம் போலீசாருக்கு மாணவியின் பெற்றோர்கள் புகார் அளித்தனர்.

தற்கொலைக்கு முன்பு மாணவி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் “யாரையும் சும்மா விடக்கூடாது.. ரீத்தா ஓட தாத்தா, எலிசா சாரோட அப்பா, இந்த சார், யாரையும் விடக் கூடாது” என்று கைப்பட எழுதியுள்ளார்..

போலீசார் விசாரணையில் மாணவிக்கு ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி என்பவர் பாலியல் தொல்லை கொடுத்து வந்தது தெரியவந்து உள்ளது. இதை தொடர்ந்து போலீசார்   ஆசிரியர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்துள்ளனர். கோவையில் தற்கொலை செய்து கொண்ட பள்ளி மாணவியின் உடலை வாங்க மறுத்து மாணவியின் வீட்டின் முன்பாக மாணவர்கள், பல்வேறு அமைப்புகள், சக மாணவர்களுடைய பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது தொடர்பாக போராட்டக்காரர்கள், ”மாணவி புகார் கொடுத்தும் பா,லியல் அத்துமீறலுக்கு எதிராக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல், மாணவியை மிரட்டி அக்குரூரத்தை மூடிமறைப்பு செய்து மாணவி தற்கொலை செய்ய முக்கிய காரணமாக இருந்த பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் கைது செய்யப்படும் வரை மாணவி உடலை பெற்றுக்கொள்ளாமல் போராட்டம் தொடர்ந்து நடத்தப்படும்” என்று தெரிவித்தனர். 12 மணி வரை கைது நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்றால் உக்கடம் சாலையில் மறியல் போராட்டத்தை தொடங்க இருப்பதாக போராட்டக்காரர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் இந்த வழக்கில் மாணவிக்கு பாலியல் தொல்லை, தற்கொலைக்கு தூண்டியதாக ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
கோவை மாணவியின் மரணம் மனதை வருந்தச் செய்துள்ளது. சில மனித மிருகங்களின் வக்கிரமும் வன்மமும் ஒரு உயிரைப் பறித்துள்ளது. பாலியல் வன்செயல்கள் நடக்காமல் பள்ளி நிர்வாகங்கள் உறுதி செய்ய வேண்டும். குற்றவாளிகளைக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவோம்; பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வோம்! என பதிவு செய்துள்ளார்.