November

November

சூடானில் இராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டம் – 18 பேர் வரை சுட்டுக்கொலை செய்த இராணுவம் !

ஆப்பிரிக்க நாடான சூடானில் 1989-ம் ஆண்டு முதல் ஒமர்-அல்-பசீர் அதிபராக இருந்து வந்தார். கடந்த 2019-ம் ஆண்டு இராணுவ புரட்சி நடத்தப்பட்டு அவர் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டார்.அதன்பிறகு இராணுவமே அரசியல் தலைவர்கள், மதத் தலைவர்களை கொண்ட புதிய ஆட்சியை அமைத்தது. அதன் பிரதமராக அப்துல்லா காம்டோக் இருந்து வந்தார்.
கடந்த மாதம் 25-ந்திகதி அந்த அரசையும் இராணுவம் கலைத்தது. நாட்டில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது. இதற்கு சூடான் மக்கள் கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்தனர். வீதியில் இறங்கி போராடினார்கள். அவர்களை ஒடுக்கும் நடவடிக்கையில் இராணுவம் ஈடுபட்டது. ஏராளமானோர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
முக்கிய தலைவர்கள் பலரும் கைது செய்யப்பட்டார்கள். இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக மீண்டும் கலவரம் ஏற்பட்டுள்ளது. தலைநகர் கார்ட்டூம், கசாலா, டோங்கோலா, வாட்மடானி, ஜெனினா உள்ளிட்ட பல்வேறு நகரங்களிலும் கலவரம் வெடித்துள்ளது. அவர்களை ஒடுக்கும் நடவடிக்கைகளில் தொடர்ந்து இராணுவம் ஈடுபட்டுள்ளது. ஆனாலும் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு பொதுமக்களின் போராட்டம் தீவிரம் அடைந்தது.
இதனால் கலவரத்தில் ஈடுபட்டவர்களை ஒடுக்க இராணுவத்தினர் பல்வேறு இடங்களிலும் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இதில் 18 பேர் உயிரிழந்தனர். ராணுவத் தாக்குதலில் 50-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். தொடர்ந்து பல இடங்களிலும் கலவரம் நடந்து வருகிறது.

லண்டனின் தென்கிழக்கில் தீப்பரவல் – இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட நால்வர் பலி !

தென்கிழக்கு லண்டனின், பெக்ஸ்லிஹீத் ஹாமில்டன் சாலை வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு குழந்தைகள் மற்றும் இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளனர். மரணமாணவர்கள் இலங்கையர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விபத்தில் மரணித்தவர்கள் அராலி வடக்கை சேர்ந்தவர்கள் என்றும் திருகோணமலை மற்றும் லண்டனில் வாழ்வதாகவும் சில முகநூல் பதிவுகள் தெரிவிக்கின்றன.

நேற்று வியாழக்கிழமை (18.11.21) லண்டன் நேரம் 20:30 மணியளவில் பெக்ஸ்லிஹீத்தின் ஹாமில்டன் சாலையில் உள்ள  வீட்டின் முதல் மாடியில் இருந்து இரண்டு பெண்கள் மற்றும் இரண்டு கைக்குழந்தைகள் மீட்கப்பட்டனர், ஆனால் நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே மரணித்திருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் காலில் காயம் அடைந்த ஒருவர் உட்பட இருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். தீ விபத்துக்கான காரணம் சந்தேகத்திற்குரியதாக கருதப்படவில்லை என்று காவற்தறையினர் தெரிவித்தனர்.

One of the windows has blackened glass in it while the other has been completely blown out during the horror blaze last night

அக்கம்பக்கத்தினர், குழந்தைகள் அலறுவதைக் கேட்டதாகவும், தீப்பிழம்பில் மூழ்கிய தனி மாடி வீட்டிற்கு வெளியே ஒரு கலக்கமடைந்த நிலையில் ஒருவரைக் கண்டதாகவும் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் இது உண்மையிலேயே ஒரு பயங்கரமான சம்பவம், இது வருத்தத்தையும் அதிர்ச்சியையும் அளிப்பதாகவும், இந்த கடினமான நேரத்தில் தங்கள் எண்ணங்கள் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் உள்ளூர் சமூகத்துடன் உள்ளன என LFB கமிஷனர் அண்டி ரோ குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இந்தத் தீவிபத்தில் மரணமானவர்கள் அராலி வடக்கை பிறப்பிடமாகவும், திருகொணமலை மற்றும் லண்டன வதிவிடமாகக் கொண்டவர்கள் என சமூகவலைத்தளப்பதிவுகள் தெரிவித்துள்ளன. எனினும் தீயில் மரணித்தவர்கள் குறித்து லண்டன் காவற்துறையினர் உத்தியோகபூர்வ தகவல்களை வெளியிடவில்லை.

எரிந்து கொண்டிருக்கும் உலகின் நுரையீரல் !

பிரேசில் நாட்டில் உள்ள அமேசன் மழைக்காடுகள் கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, அதிக பரப்பளவில் அழிக்கப்பட்டுள்ளதாக தேசிய விண்வெளி ஆய்வு அமைப்பு புள்ளிவிவரத்தை வெளியிட்டுள்ளது. அதாவது முந்தைய ஆண்டை விட அழிந்த அமேசான் மழைக்காடுகளில் விகிதம் 22 சதவீதம் ஆகும். 2006க்கு பிறகு அதிகபட்சமாக, 2020-21ம் ஆண்டில் 13,235 சதுர கிமீ மழைக்காடுகள் அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.நா பருவநிலை உச்சிமாநாட்டின் போது 2030 ஆம் ஆண்டிற்குள் காடு அழிப்பை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு உறுதியளித்த பல நாடுகளில் பிரேசிலும் ஒன்று. இந்த வாக்குறுதியில் இருந்து பின்வாங்குவதையே, இந்த காடு அழிப்பு புள்ளிவிவரம் காட்டுகிறது.
அமேசன் காடுகளில் சுமார் மூன்று மில்லியன் வகையான தாவரங்கள், விலங்குகள் மற்றும் ஒரு மில்லியன் பழங்குடியின மக்கள் உள்ளனர். புவி வெப்பமடைதலின் வேகத்தை குறைப்பதில் அமேசான் காடுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆனால், பிரேசிலின் அதிபராக போல்சனரோ பதவியேற்ற பிறகே இவ்வளவு அழிப்பு ஏற்பட்டிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து சுற்றுச்சூழல் மந்திரி ஜோகிம் லீட் கூறுகையில், இந்த தரவு நமக்கு முன் உள்ள சவாலை உணர்த்துவதாகவும், இந்த குற்றங்கள் தொடர்பாக நாம் இன்னும் தீவிரமாக செயல்பட வேண்டும் என்றும் தெரிவித்தார். அதேசமயம், கடந்த சில மாதங்களின் நிலைமையை இந்த தரவு சரியாக பிரதிபலிக்கவில்லை என்றும் குறிப்பிட்டார்.
போல்சனரோ ஆட்சியின் கீழ் அமேசான் காடுகளை அழிப்பது அதிகரித்துள்ளது. மழைக்காடுகளில் விவசாயம் மற்றும் சுரங்க நடவடிக்கைகளை போல்சனரோ ஊக்குவிக்கிறார் எனவும் சமூக ஆர்வலர்கள் குற்றம்சுமத்தி வருகின்றனர்.

விவசாயிகளின் ஒரு வருட போராட்டத்தின் முன்பு அடிபணிந்தது இந்திய அரசு – மீளப்பெறப்பட்ட வேளாண்சட்டங்கள் !

சர்ச்சைக்குரிய 3 வேளாண் சட்டங்களை மீளப் பெறுவதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

குறித்த சட்டங்களை மீளப்பெறுமாறு வலியுறுத்தி டெல்லி உட்பட இந்தியாவின் பல பகுதிகளில் விவசாயிகள் சுமார் ஓராண்டு காலமாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டத்தின்போது சிலர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், நாட்டு மக்களுக்கு இன்று(19) விசேட உரையாற்றிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, விவசாயிகளின் நலனுக்காகவே 3 வேளாண் சட்டங்கள் கொண்டுவரப்பட்டன.

வேளாண் சட்டங்களின் நலனை ஒரு தரப்பு விவசாயிகளுக்கு எங்களால் விளங்கப்படுத்த முடியவில்லை. எனவே, மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களையும் மீளப்பெற முடிவு செய்துள்ளோம்.

இந்த மாதம் ஆரம்பமாகவுள்ள நாடாளுமன்ற கூட்டத்தொடரில், 3 வேளாண் சட்டங்களையும் மீளப் பெறுவதற்கான நடைமுறையை ஆரம்பிப்போம். எனவே, விவசாயிகள் தங்கள் போராட்டத்தைக் கைவிட வேண்டும்.

டெல்லி எல்லைகளில் போராட்டம் நடத்துவதற்காக கூடியுள்ள விவசாயிகள் வீடுகளுக்குத் திரும்ப வேண்டும் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

600 ஆண்டுகளின் பின்னர் தோன்றும் நீண்டநேர சந்திர கிரகணம் – இலங்கையர்களுக்கு சோகமான தகவல் !

சுமார் 600 ஆண்டுகளின் பின்னர் நீண்டநேர சந்திர கிரகணம் இன்று நிகழவுள்ளது. இதன்போது சந்திரன் 99 சதவீதம் சிவப்பு நிறத்தில் தென்படவுள்ளது.

இந்த சந்திர கிரணம், இலங்கை நேரப்படி இன்று முற்பகல் 11.32 இற்கு ஆரம்பமாகி, 3 மணித்தியாலங்களும், 28 நிமிடங்களும் நீடிக்கும் என நாசா விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

எனினும், இந்த சந்திர கிரணத்தின் முழுமையான காலம் ஆறு மணித்தியாலங்களும், ஒரு நிமிடமுமாகும்.

இந்த சந்திர கிரகணம் இலங்கையில் தென்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, பொலினிசியா, அவுஸ்ரேலியா மற்றும் வடகிழக்கு ஆசியாவின் பல பகுதிகளிலும் இது தென்படவுள்ளது.

புத்தாக்க அரங்க இயக்கம் 2021 சிறந்த நாடக அமைப்பிற்கான விருதையும் ரூபாய் ஒரு லட்சம் பரிசையும் வென்றது!

சிறந்த தமிழ் நாடக அமைப்பிற்கான 2021 சிவஜோதி ஞாபகார்த்த விருதை புத்தாக்க அரங்க இயக்கம் வென்றெடுத்தது. இவ்விருதுடன் ரூபாய் ஒரு இலட்சம்நிதியும் அவ்வமைப்பின் ஸ்தாபகர்களான எஸ் ரி குமரன் எஸ் ரி அருள்குமரன் சகோதரர்களிடம் கையளிக்கப்பட்டது. இன்று நவம்பர் 18 வயித்தீஸ்வரன் சிவஜோதியின் 50வது பிறந்ததினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட சிவஜோதி ஞாபகார்த்த விருது வழங்கலும் அவருடைய ‘என் எண்ண ஓட்டத்தில் …’ என்ற நூல் வெளியீட்டு நிகழ்விலும் வைத்தே இவ்விருது அறிவிக்கப்பட்டது. இவ்விருது அறிவிப்பை எழுத்தாளர் கருணாகரன் அறிவிக்க நாடகக் கலைஞரும் அருட்தந்தையுமான சி யோசுவா விருதை வழங்கினார்.

ஒரு ஆளுமையை அவனது மறைவுக்குப் பின் நினைவு கூருவதும் அவனின் செயற்பாடுகளைக் கொண்டாடுவதும் தான் அவனுக்கு அளிக்கக்கூடிய உயர்ந்தபட்ச கௌரவம் என்று வ சிவஜோதியின்யின் பள்ளித் தோழனும் லிற்றில் எய்ட் அமைப்பின் ஸ்தாபகருமான த ஜெயபாலன் காணொளியூடாக நிகழ்வில் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில் சிவஜோதி ஒரு பன்முக ஆளுமையாக இருந்தாலும் நாடகத்துறையில் அதீத நாட்டத்தைக் காட்டியமையினால் சிறந்த நாடக அமைப்பிற்கு அல்லது நாகக் கலைஞருக்கு ஆண்டுதோறும் விருது வழங்குவது என்ற தீர்மானத்தை எடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டார். ஒரு சைவப் பாரம்பரியத்தில் இருந்து வந்த வ சிவஜோதி சமூகத்தின் பிற்போக்குத்தனங்களுக்கு எதிராகவும் சமூக நீதிக்காகவும் குரல்கொடுத்து வந்தவன் என்றும் அதேயடிப்படையில் புத்தாக்க அரங்க இயக்கமும் மூடநம்பிக்கைகளுக்கு எதிராகவும் சமூக நீதிக்காகவும் தங்கள் படைப்புகளை உருவாக்கி வருவதால் அவர்களுக்கு இவ்விருதை வழங்குவதில் பெருமைப்படுவதாகக் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் சிவஜோதி எழுதிய கட்டுரைகளை அவருடைய துணைவி ஹம்சகௌரி சிவஜோதி தொகுத்திருந்த ‘என் எண்ண ஓட்டத்தில்…’ என்ற நூலும் வெளியிடப்பட்டது. நூலுக்கான வெளியீட்டுரையை சிவஜோதியின் நண்பனும் சிரேஸ்ட்ட கிழக்கு மாகாண கலை கலாச்சார ஆய்வாளர் குணபாலா வழங்கினார். சிவஜோதியின் தந்தை நூலைப் பெற்றுக்கொண்டார். மதிப்பீட்டுரையை ஆசிரியரும் மக்கள் சிந்தனைக் கழகத்தைச் சேர்ந்தவருமான க விஜயசேகரன் வழங்கினார்.

ஓய்வுபெற்ற கல்விப் பணிப்பாளர் சி இதயராசா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பதில் நீதிபதியும் தேசிய கலை இலக்கிய பேரவையின் முக்கியஸ்தருமான சோ தேவராஜா சிறப்புரை வழங்கினார். சிவஜோதி என்ற ஆளுமையின் உருவாக்கத்தில் சோ தேவராஜாவுடைய தாக்கம் குறிப்பிடத்தக்கது. சமத்துவக் கட்சியின் பொதுச் செயலாளர் மு சந்திரகுமார் சிவஜோதியின் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்.

லிற்றில் எய்ட் மாணவர்கள் 75 பேருக்கான பள்ளிச் சீருடைகளை சிவஜோதி கல்வி கற்ற விக்ரோரியாக் கல்லூரியின் பழைய மாணவர்கள் சார்பில் சி குணபாலா திருமதி சிவஜோதியிடம் கையளித்தார். கொழும்பு எம் எம் மனேஸ்மன்ற் சேர்விஸஸ் பிரைவேட் லிமிடட் லிற்றில் எய்ட் மாணவர்களுக்கு வேண்டிய அப்பியாசக் கொப்பிகளை வழங்கினர்.

லிற்றில் எய்ட் உடன் இணைந்து மக்கள் சிந்தனைக் கழகமும் ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வை ஆசிரியரும் மக்கள் சிந்தனைக் கழகத்தவருமான ப தயாளன் தொகுத்து வழங்கினார்.

கோவிட் நெருக்கடி காலநிலையிலும் சமூக இடைவெளியைப் பேணி 200 பேர்வைர இந்நிகழ்வில் கலந்துகொண்டு சிவஜோதியின் நினைவுகளை மீட்டனர்.

பாலியல் குற்றங்கள் செய்யும் ஆண்களுக்கு ஆண்மை நீக்கம் – பாகிஸ்தானில் புதிய சட்டம் !

பாகிஸ்தானில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், கற்பழிப்பு சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், இந்த குற்றங்களை கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடும்  குற்றவாளிகளுக்கு இரசாயன முறையில் ஆண்மை நீக்கம் செய்வதற்கான புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பாலியல் குற்றவாளிகளின் தண்டனைகளை விரைவுபடுத்துவதற்கும் கடுமையான தண்டனைகளை வழங்குவதற்கும் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
கற்பழிப்பு குற்றங்களுக்கு எதிராக கடந்த ஆண்டு அவசர சட்டம் கொண்டு வரப்பட்டது. பாலியல் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு ரசாயன முறையில் ஆண்மை நீக்கம் மற்றும் விரைவான விசாரணைகளுக்காக சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க இந்த சட்டம் வகை செய்கிறது. இந்த அவசர சட்டத்திற்கு பிரதமர் ஒப்புதல் அளித்து ஒரு வருடத்திற்குப் பிறகு, பாராளுமன்றத்தில் நேற்று மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
ரசாயன முறையில் ஆண்மை நீக்கம் என்பது பிரதமரால் உருவாக்கப்பட்டு முன்மொழியப்பட்ட விதிமுறைகள் ஆகும். இதன் மூலம் ஒரு நபர் தனது வாழ்நாளின் எந்த காலகட்டத்திலும் உடலுறவு கொள்ள முடியாத நிலைக்கு ஆளாக்கப்படுவார் என மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மசோதாவுக்கு ஜமாத் இ இஸ்லாமி உறுப்பினர் முஷ்டாக் அகமது எதிர்ப்பு தெரிவித்தார். இது இஸ்லாத்திற்கு எதிரானது என்று அவர் வாதிட்டார். பாலியல் பலாத்காரம் செய்பவரை பகிரங்கமாக தூக்கிலிட வேண்டும். ஆனால், ஷரியாவில் ஆண்மை நீக்கம் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை என அவர் கூறினார். எனினும், பெரும்பாலான உறுப்பினர்களின் ஆதரவுடன் மசோதா நிறைவேறியது.

“இதுக்காகவாடி நாங்கள் ஊரில் இருந்து சீதனம் கொடுத்து தாலி வாங்கி வெளிநாடு வந்தோம்” தமிழ் பெருங்குடி’மக்கள் – பாகம் 01

இக்கட்டுரைத் தொடரை எழுதுவது தொடர்பாக சில மாதங்களாகவே எனக்குள் போராடி, ஒரு முடிவுக்கு வந்து இதனை எழுத ஆரம்பிக்கின்றேன். அனுவம் அறிவு. சிலருடைய வாழ்க்கை அனுபவங்களைத் தெரிந்துகொள்வதனூடாக, அதனைப் புரிந்துகொள்வதனூடாக, சிலருடைய வாழ்க்கையில் திருப்பங்களை ஏற்படுத்த முடியும் என நம்புகின்றேன்.

._._._._._.

மேற்கத்தைய ஜாஸ் இசையில் ஆர்வம் உள்ள பலரும் அமி வைன்ஹவுசை (படம்) அறிந்திருக்க முடியும். 1983 இல் இங்கிலாந்தில் பிறந்து 12 வயதிலேயே இசைத்துறையில் நுழைந்து 19 வயதில் தன் பெயரை மேற்கத்தைய இசையுலகை அறிய வைத்தவள். ‘தன்னுடைய இசையைக் கேட்டு ஒரு ஐந்து நிமிடங்கள் மக்கள் தங்கள் சோகத்தை மறக்க வேண்டும்’ என்று விரும்பியவள். ஆனால் 19வது வயதிலேயே மது, போதை, கூத்தும் கும்மாளமும் ஆனது அவள் வாழ்க்கை. புகழின் உச்சியில் இருந்த போதே அவள் வீழ்ச்சிக்கு தயாராகிக் கொண்டிருந்தால். 20,000 ரசிகர்களுக்கு முன்னாள் எந்த நாட்டில் நிற்கின்றோம் என்பதையும் மறந்து பாடலின் சொற்களையும் மறந்து நிறைபோதையில் நின்றாள். யூலை 22, 2011 அவளுடைய மருத்துவருக்கு போன் செய்து “நான் சாக விரும்பவில்லை” என்றவள் அடுத்த 24 மணிநேரத்தில் யூலை 23, 2011இல் அதீத போதை விசமாக மரணித்தாள். தனியாகப்படுத்து இருந்த அவளுடைய கட்டிலில் காலியான வொட்காப் போத்தலும் கிடந்தது.

._._._._._.

அப்போது லண்டனில் பொறிபறக்கின்ற அரசியல் செய்தவர்களில் இவனும் ஒருவன். இந்துவின் மைந்தன். புலம்பெயர் அரசியில் கூட்டங்கள், நாடக விழாக்கள், திரைப்பட விழாக்கள் என்று அறியப்பட்ட ஒருவன். ஒரு காலத்தில் இவனுக்கென்று ஒரு பெரும் குடும்ப வட்டம், ஊர் வட்டம், நட்பு வட்டம், பாடசாலை வட்டம், அரசியல் வட்டம், நாடக வட்டம் எல்லாம் இருந்தது.

எனக்கும் அவனில் கணிசமான மதிப்பும் மரியாதையும் இருந்தது. அவனை 1997 முதல் எனக்குத் தெரியும். நானும் அவனோடு அரசியலில் பயணித்துள்ளேன். நல்ல நண்பன். அவனது வீட்டிற்கு வெளியே யாருக்கும் எந்த தீங்கும் செய்ததாக நான் அறியவில்லை. என் பிளைகளுக்கும் சமைத்து சாப்பாடு தந்துவிடுகின்ற நல்ல மனிதன்.

இந்த கொரோனா பரவலுக்கு முன்னதாக 2019 பிற்பகுதியில் ஏதோ வீழ்ந்து மரணத்தின் வாயில்வரை சென்று மூன்று மாதங்களிற்கு மேலாக சிகிச்சை பெற்று மனைவியின் துணையால் மீண்டு வந்தான். அப்போது அவனை மருத்துவமனை சென்று பார்த்த போது அவனிருந்த கோலத்தைப் பார்த்து நான் மயக்கமாகிவிட்டேன்.

2020இல் ஒரு நாள் போன் அடித்து அழுதான். அப்போது தான் அவன் குடிப்பான் என்பதே எனக்குத் தெரியும். அவன் குடிக்கு அடிமையானவன் என்பது 2021இல் தான் தெரியும். அதற்குப் பிறகு நான் அறிந்தவை எதுவும் ஆரோக்கியமானவையல்ல. அவன் முன்னர் வீழ்ந்தது கூட விபத்து அல்ல. போதையால் வீழ்ந்து எழும்பியது என்பதை பின்னர் அறிந்து கொண்டேன்.

கடந்த வாரமும் பார்த்தேன். எழுந்து நடக்கவே திரணியில்லாமல் நின்றான். அவன் அறையில் இருந்து வரும் மணம் சற்று கனதியாக இருந்தது. அவன் பெரிதாக உணவருந்தியதாக தெரியவில்லை. ஆனால் வயிறு சற்று வீங்கி இருந்தது. கட்டிலருகில் ஒரு போத்தல். ஜக் டானியல் அரைப் போத்தல் குடித்து முடித்த நிலையில் கிடந்தது. அவனுடைய கோலத்தைப் பார்த்து எனக்கு பேசுவதற்கோ திட்டுவதற்கோ மனம்வரவில்லை. அன்று காலையும் வெளியே போய் ஒரு போத்தல் ஜக் டானியல் 25 முதல் 30 பவுண் வரை வரும், வாங்கி வந்துள்ளான்.

“எமேர்ஜன்சிக்கு அடித்தியா?” என்று கேட்டால் நீண்ட இடைவெளிக்குப் பின் “அவங்கள் வர மாட்டாங்கள்” என்று புறுபுறுத்தான்.

“நான் அம்புலன்ஸ்க்கு அடிக்கிறன். நீ முதலில் உடுப்பை போடு” என்று உடம்பில் ஒட்டுத் துணியுமின்றி நின்றவனிடம் சொல்லிவிட்டு எமேர்ஜனசிக்கு போன் பண்ணினேன்.

வழமையான கேள்விகள். “சுவாசிக்கின்றாரா? வெப்பநிலை இருக்கின்றதா? இரத்தப்பெருக்கா?” என்றெல்லாம் அடுக்கிக்கொண்டே போனார்கள். ஆனால் அவனால் உடுப்பைக் கூட போட முடியவில்லை. உடுப்பைப் போட உதவி செய்து கட்டிலில் கிடத்தினேன்.

சிறிது நேரத்தில் முதலில் காரில் ஒரு பராமெடிக் வந்து உடலைச் செக் பண்ணினான். நல்ல காலத்திற்கு கோவிட் என்ற படியால் முகக்கவசம் கையுறை எல்லாம் அணிந்திருந்ததால் அந்த அறையின் மணம் அவருக்கு தெரிந்திராது.

வந்த பராமெடிக் மேலும் சில விசயங்களைக் கேட்டார்: “இரத்தம் சிவப்பாக போகிறதா கருப்பாக இருக்கா? மலம் என்ன நிறத்தில் உள்ளது? குறிப்பாக கருப்பாக தார் நிறத்தில் உள்ளதா?” “வாந்தியோடு சிவப்பாக வருகின்றது. மலம் தார் கருப்பில் இருந்தது” என்று சொன்னேன்.

இதை நானும் ஓரளவு கேட்டறிந்து இருந்தேன். உடம்பினுள் குருதிப் பெருக்கு இருந்தால் அது கருப்பாகி மலத்தோடு வெளியேறும் என்று. ஏற்கனவே ஈரலில் பிரச்சினை. உடம்பின் வடிகட்டல் செயல்முறைகள் எல்லாம் பாதிக்கப்பட்டு பலவீனப்பட்டு இருப்பதால் வயிறும் வீங்கியிருக்க வேண்டும். பரா மெடிக்கிற்கு மேலதிகமாக எதுவும் சொல்ல வேண்டியிருக்கவில்லை. மேலும் நீரிழிவு நோயாளியுமான அவன் வாந்தி எடுப்பதும் சிக்கலானது என பராமெடிக் கூறி உடனடியாக இவரை மருத்துவமனைக்கு இட்டுச்செல்ல அம்புலன்ஸிற்கு அழைப்பு விட சில நிமிடங்களிலேயே அம்புலன்ஸ்ம் வந்து சேர்ந்தது. ஒரு ஆணும் இரு பெண்களுமாக மூவர் வந்திறங்கினர்.

எனக்கோ ஒரு வகையில் மக்கள் வரிப்பணத்தை துஸ்பிரயோகம் செய்கின்றோம் என்ற குற்ற உணர்வு. வந்தவர்களிடம் சொன்னேன்: “என்னை மனித்துக்கொள்ளுங்கள். இவர் ஒரு பெரும் குடிமகன். இவரைச் சுற்றி இருந்த எல்லோருமே இவருடைய இந்தப் பழக்கத்தினால், இவரால் பாதிக்கப்பட்டு கைவிட்டுச் சென்றுவிட்டனர். இனி இவரை திருத்தலாம் என்ற நம்பிக்கையும் எங்களுக்கு இல்லை. எங்களுக்கும் உங்களை அழைப்பதைத் தவிர வேறு வழிதெரியவில்லை. கடந்த மாதமும் குடியை மறப்பதற்கான சிகிச்சையை குழப்பிவிட்டு வந்துவிட்டார்”, என்று புலம்பித் தள்ளினேன்.

அந்த பராமெடிக் மிக நிதானமாகவே, “அதைப்பற்றி நீங்கள் யோசிக்க வேண்டாம். நீங்கள் எப்போது தேவையானாலும் எங்களை அழையுங்கள். அதற்குத் தான் நாங்கள் இருக்கின்றோம்”, என்று சொல்லிய படியே “எத்தனை நாட்கள் மாதங்கள் வருடங்கள் குடிக்கின்றார்” என்று கேட்டார். “மூன்று தசாப்தங்களாகக் குடிக்கின்றார்” என்றேன். “அப்படியானால் நீங்கள் எங்களை அழைப்பது இது கடைசித் தடவையாக இருக்கப் போவதில்லை. இன்றைக்கு சில வேளை எங்களால் இவரைக் காப்பாற்றி அனுப்ப முடியும். அவர் திருப்பியும் குடிப்பார். நீங்களும் திருப்பி எங்களுக்கு போன் பண்ணுவீர்கள். அவராக திருந்தினாலேயொழிய வேறேதும் வழியில்லை”. என்றார் அப்பரா மெடிக். “அரசு ஏன் பலாத்காரமாக இவர்களுக்கு குடியை மறக்கும் சிகிச்சையைச் செய்யக் கூடாது?” என்று என் ஆதங்கத்தை கேட்டேன். புன்சிரிப்பினூடாக அவர்கள் தங்கள் இயலாமையை வெளிப்படுத்திக் கொண்டு, மிக அன்போடும் கனிவோடும் அவனை அழைத்துச் சென்றனர். அவன் சிலோமோசனிலும் மெதுவாக ஒவ்வொரு படியாக இறங்கி வீட்டுக்கு முன் நின்ற அம்புலன்ஸை அடைய பத்து நிமிடங்கள் எடுத்தது.

அவன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு இன்று நவம்பர் 18, 2021 ஒரு வாரமாகிவிட்டது. இன்று அவனுடைய வாழ்க்கை ஆண்டுகள், மாதங்கள், வாரங்கள் என்று கேள்விக்குறியாகி நிற்கின்றது. இன்று அவனைச் சுற்றி எந்த வட்டமும் கிடையாது. கடமைக்காக கட்டியவள் மட்டும் சென்று பார்த்து வருகின்றாள். இதில் யாரையும் குற்றம் சொல்வதற்கில்லை.

உளவியல் எடுகோளின்படி ஒன்பது பேரில் எட்டுப் பேர் வாழ்வா சாவா என்று மரணத்தின் விளிம்பில் நிற்கின்ற போதும் நிதானித்து, தீர்க்கமாக முடிவெடுப்பதில்லை. அசட்டுத்தனமான நம்பிக்கையின் அடிப்படையில் தங்களுடைய நிலையை உணர்ந்துகொள்ள முடியாமல் தான் முடிவுகளை எடுக்கின்றனர். நாம் இயலுமானவர்களாக இருக்கின்ற போது எதிர்காலம் பற்றிய எவ்வித சிந்தனையும் இல்லாமல், எஞ்சி இருக்கின்ற காலமும் இவ்வாறே இருந்துவிடலாம் என இவர்கள் நினைக்கின்றார்களா என்று தெரியவில்லை. இதன் விளைவுகள் மிகப் பாரதூரமாக அமைந்துவிடுகின்றது.

கற்றறியும் வன்அறிவிலும் (hard skill) எமது இயல்புசார்ந்த மென்அறிவு (soft skill) மிக முக்கியமானது. தன்னை மாற்றிக்கொள்ளக்கூடிய (ability to change) என்ற மென் அறிவு ஒவ்வொருவருக்கும் மிக முக்கியமானது. ஆனால் கணிசமான மனிதர்கள் மத்தியில் இது காணப்படுவதில்லை. அவர்கள் மிகத் திறமையானவர்களாக மிகச் சிறந்த அறிவாளிகளாக இருந்த போதும் தன்னை மாற்றிக் கொள்ளக்கூடிய இந்த மென்அறிவைக் கொண்டிராதவர்கள் ஒரு கட்டத்தில் தடம்புரள்வது தவிர்க்க முடியாதது.

மாற்றம் ஒன்றைத்தவிர எதுவுமே நிரந்தரமில்லை. அந்த அடிப்படையில் மாற்றங்களை உள்வாங்கி எம்மை மாற்றிக்கொள்ளத் தவறினால் தடம்புரள்வது தவிர்க்க முடியாதது. மனித நடத்தை கொள்கையாளர்களின் படி அறிவு என்பதே நாங்கள் எங்கள் இயல்புகளை மாற்றிக்கொள்வது தான். நாங்கள் எங்களை மாற்றிக்கொள்ள முடியாதவர்களானால் ஒவ்வொரு கணமும் மாறிக்கொண்டுள்ள புறச்சூழலில் வாழ்வதற்கான தகமையை நாங்கள் இழந்துவிடுகின்றோம்.

அவனும் அரசியல் பேசினான், சமூக விடுதலை பேசினான், பெண் விடுதலை பேசினான், முற்போக்கு பேசினான். எங்கும் எப்போதும் தன்னையும் ஒரு புள்ளியாக்கிக் கொண்டிருந்தான். ஆனால் அது எல்லாமே அவன் தன்னை மறைக்க போர்த்திக்கொண்ட போர்வைகளோ என்றே எண்ணத் தோன்றுகிறது. அவன் பேசிய அரசியலுக்கும் அவன் வீட்டினுள் நடந்து கொண்டதற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. இவ்வாறு தான் எம்மத்தியில் பலர் உலாவருகின்றனர்.

“இதுக்காகவாடி நாங்கள் ஊரில் இருந்து சீதனம் கொடுத்து தாலி வாங்கி வந்தோம்” என்று ஒருத்தி தன் சினேகிதியோடு குமுறி அழுதாள். ஐந்து மாதக் கர்பிணிப் பெண்ணாக தனது இரண்டாவது குழந்தையை சுமந்து கொண்டு; போதைக்கு அடிமையான கணவன் உடலில் ஒட்டுத்துணியில்லாமல் கட்டிலில் மலம்சலம் கழித்துக் கிடக்க, குழந்தையையும் சுமந்தபடி அதனைத் துப்பரவு செய்வது தான் அவளின் நாளாந்த கடமைகளில் ஒன்று. வயிற்றில் சுமந்த குழந்தையை அவள் பெற்றொடுத்த போது அவன் உயிருடன் இல்லை.

இவைகள் எதுவுமே கற்பனைகள் அல்ல. எங்களோடு பயணித்துக்கொண்டிருக்கும் சக மாந்தர்களின் இதயத்தை கனக்க வைக்கும் வாழ்க்கைப் பதிவுகள். உண்மைகளைப் புறக்கணித்து வாழ முடியாது. எமது சமூகத்தில் உள்ள பிரச்சினைகளை நாங்கள் முதலில் ஏற்றுக்கொண்டு அதற்கான தீர்வுகளையும் தேட வேண்டும்.

(இன்னும் வரும்.)

உலகின் பொருளாதார வளம் நிறைந்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்காவுக்கு அதிர்ச்சி கொடுத்த சீனா !

உலகின் பொருளாதார வளம் நிறைந்த நாடுகளின் பட்டியலை மெக்கன்சி அண்ட் கோ நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில் உலகின் மொத்த சொத்து மதிப்பு கடந்த 20 ஆண்டுகளில் மூன்று மடங்கு வளர்ச்சி அடைந்து இருக்கிறது.

உலகின் மொத்த சொத்து மதிப்பு 2000-ம் ஆண்டு 156 லட்சம் கோடி டொலராக இருந்தது. அது 2020-ம் ஆண்டில் 514 லட்சம் கோடி டொலராக உயர்ந்துள்ளது. இதில் மூன்றில் ஒரு பங்கு வளர்ச்சிக்கு சீனா காரணமாக இருந்துள்ளது.

இதன் மூலம் சீனா நாட்டின் சொத்து மதிப்பு அதி வேகத்தில் அதிகரித்து இருக்கிறது. உலக வர்த்தக நிறுவனத்தின் உறுப்பினராக சீனா ஆவதற்கு முன்பு 2000-ம் ஆண்டில் அந்நாட்டின் சொத்து மதிப்பு 7 லட்சம் கோடி டொலராக இருந்தது.

2020-ல் சீனாவின் சொத்து மதிப்பு 120 லட்சம் கோடி டாலராக உயர்ந்துள்ளது. இதனால் உலக பணக்கார நாடுகளின் பட்டியலில் அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி சீனா முதலிடத்தை பிடித்துள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் அமெரிக்காவின் சொத்து மதிப்பு இரண்டு மடங்கு உயர்ந்து 90 லட்சம் கோடி டாலராக உள்ளது. உலகின் மொத்த வருமானத்தில் 60 சதவீதத்துக்கு மேல் 10 நாடுகளிடம் மட்டுமே உள்ளது.

மேலும் உலகின் பணக்கார நாடுகளான சீனா, அமெரிக்கா ஆகியவற்றின் சொத்துக்களில் மூன்றில் இரண்டு மடங்கு 10 சதவீத குடும்பத்தினரிடம் மட்டுமே உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

உலகின் சொத்து மதிப்பில் 68 சதவீதம் ரியல் எஸ்டேட்டில் உள்ளது. மற்றவைகள் உட்கட்டமைப்பு, இயந்திரங்கள், சாதனங்கள் மற்றும் மிகக் குறைவாகவே அறிவு சார் சொத்துக்கள், காப்புரிமைகளில் உள்ளன.

பிரித்ததானியாவில் மனைவியை குத்திக்கொலை செய்த இந்தியவம்சாவளி நபர் – நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு !

பிரித்தானியாவில் மனைவியைக் குத்திக் கொலை செய்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நபருக்கு அந்நாட்டு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

இந்தியாவைச் சேர்ந்த அனில் கில் (47) மற்றும் அவரது மனைவி ரஞ்சித் கில் (43) ஆகியோர் பிரித்தானியாவின் மில்டன் கினிஸ் நகரில் வசித்து வந்துள்ளதுடன், இருவருக்கும் மதுபானம் மற்றும் போதைப் பொருள் பயன்படுத்தும் பழக்கம் இருந்துள்ளது.

இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் இருவரும் ஒன்றாக போதைப்பொருள் பயன்படுத்தும்போது, போதைப் பொருள் வழங்கும் ஆண் நபருக்கும், தனக்கும் உள்ள தொடர்பு குறித்து ரஞ்சித் கில், அவரது கணவரிடம் கூறியுள்ளார். இதனால் கோபமடைந்த அனில் கில், கூரிய ஆயுதத்தைப் பயன்படுத்தி அவரது மனைவியை சரமாரியாக தாக்கியுள்ளார்.

இதில் அவரது மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், அவரின் சடலத்தைப் போர்வையில் சுற்றி அருகில் உள்ள குப்பை கொட்டும் இடத்தில் அவர் வீசி சென்றிருந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இது குறித்து அயலவர்கள் அளித்த முறைப்பாடுக்கமைய, அனில் கில்லை காவல்துறையினர் கைது செய்தனர்.

மேலதிக விசாரணையில் மனைவியைக் கொலை செய்ததை அவர் ஒப்புக் கொண்டார். இந்தக் கொலை வழக்கு தொடர்பில் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்ததுடன், அதில் அனில் கில் குற்றவாளி என்பது உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

அதற்கமைய, குற்றவாளியான அனில் கில் குறைந்தபட்சம் 22 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.