18

18

தேர்தலை சிறந்த முறையில் நடத்த அரசு ஒத்துழைப்பு வழங்கும்

vote.jpgநீதியானதும், நியாயமானதுமான தேர்தலை நடத்தி முடிப்பதற்கு தேவையான சகல நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொண்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளரும், தகவல், ஊடகத்துறை அமைச்சருமான அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தலை சிறந்த முறையில் நடத்துவதற்கு தேவையான ஒத்துழைப்புக்களை தேர்தல் ஆணையாளருக்கு வழங்க தயாராகவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். அமைச்சரவை தீர்மானங்களை ஊடகங்களுக்கு அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் மாநாடு நேற்று பிற்பகல் அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. அமைச்சர் இங்கு மேலும் உரையாற்றுகையில் :- கடந்த காலங்களிலும் சிறந்த தேர்தல்களை நடத்துவதற்கான ஒத்துழைப்புக்களை அரசாங்கம் எல்லா சந்தர்ப்பங்களிலும் வழங்கியுள்ளது.

புனித முஹர்ரம் மாத ஆரம்பம்

வியாழன் மாலை மஃரிப் தொழுகையை தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளி வாசலில் நடைபெற்ற பிறைக்குழு மாநாட்டில் புனித முஹர்ரம் மாதத்தின் தலைப்பிறை வியாழன் மாலை தென்பட்டதற்கான தகவல்கள் கிடைக்கப்பெறாமையினால் துல்ஹிஜ்ஜஹ் மாதத்தை முப்பதாக பூர்த்தி செய்து வெள்ளி மாலை சனி இரவு புனித முஹர்ரம் மாதத்தை ஆரம்பிப்பதென தீர்மானிக்கப்பட்டது.

இம் மாநாட்டில் கலந்துகொண்ட உலமாக்கள், கதீப்மார்கள், அகில இலங்கை ஜம்இயதுல் உலமா, ஷரீஆ கவுன்சில், அன்ஜுமன் பாயிஸ் இ. ரஸா (மேமன் சங்கம்) முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் ஜும்ஆ பள்ளி வாசல்கள், ஸாவியா, தக்கியா நிருவாகிகள் ஆகியோரால் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது. இதன் பிரகாரம் ‘புனித ஸபர்’ மாதத்தின் தலைப்பிறை பார்க்க வேண்டிய நாள் (புனித முஹர்ரம் 29) 16.01.2010 சனி பின்னேரம் ஞாயிறு இரவு எனவும் முடிவு செய்யப்பட்டது.

அமைச்சர்களின் எண்ணிக்கையை குறைப்பது நடைமுறைச் சாத்தியமற்றது -அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா

anura-priya.jpgபாராளு மன்றத்தில் அரசாங்கத்துக்கு பெரும்பான்மைப் பலம் இல்லாத நிலையில் அமைச்சர்களின் எண்ணிக்கையை குறைப்பது நடைமுறைச்சாத்தியமற்றது என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான அநுர பிரியதர்ஷன யாப்பா கூறினார் .

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று காலை அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றபோது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு அமைச்சர் மேலும் கூறியதாவது,

நாட்டைக் கட்டியெழுப்பும் நோக்கில் அரசாங்கத்துக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆதரவு வழங்க முன்வரும்போது அவர்களுக்கு அமைச்சுப் பொறுப்புகள் வழங்குவது சரியானதே. இதற்காக அரசாங்கம் புதிய அமைச்சுக்களை உருவாக்கவில்லை. ஏற்கனவே இருந்த அமைச்சுக்களுக்கே அமைச்சர்களாக புதியவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

முன்னாள் ஜனாதி ஜே.ஆர். ஜெயவர்தனாவின் ஆட்சிக் காலத்தில் 1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பின்படி நூற்றுக்கும் அதிகமான அமைச்சர்கள் நியமிக்கபட்டனர் என்பது அனைவரும் அறிந்ததே.

பொது மக்களிடமிருந்து அறவிடப்படும் வரிகள் அமைச்சர்களுக்கு மட்டும் செலவிடப்படுவதில்லை. அவற்றில் பெருந்தொகைப் பணம் நாட்டின் இலவசக் கல்வி மற்றும் சுகாதார சேவை என்பனபோன்றவற்றுக்குச் செலவிடப்படுகின்றன. உலகில் இலவசக் கல்வியும் மருத்துவ வசதிகளும் வழங்கப்படும் ஒரே நாடு எமது இலங்கையே என்றும் அமைச்சர் கூறினார்.

புதிய நியமனங்கள் இடமாற்றங்கள் பதவி உயர்வுகள் இடை நிறுத்தம்;!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு தேர்தல் ஆணையாளரின் உத்தரவுக்கு மதிப்பளிக்கும் வகையில் புதிய நியமனங்கள் இடமாற்றங்கள் பதவி உயர்வுகள் என்பவற்றை இடைநறுத்த உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எனினும் சுகாதார சேவை போன்ற அத்தியவசிய சேவைகளில் இதற்கு விதிவிலக்களிக்கப்பட வேண்டும் என அமைச்சரவையால் முடிவு செய்யப்பட்டுள்ளது.