பாராளு மன்றத்தில் அரசாங்கத்துக்கு பெரும்பான்மைப் பலம் இல்லாத நிலையில் அமைச்சர்களின் எண்ணிக்கையை குறைப்பது நடைமுறைச்சாத்தியமற்றது என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான அநுர பிரியதர்ஷன யாப்பா கூறினார் .
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று காலை அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றபோது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு அமைச்சர் மேலும் கூறியதாவது,
நாட்டைக் கட்டியெழுப்பும் நோக்கில் அரசாங்கத்துக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆதரவு வழங்க முன்வரும்போது அவர்களுக்கு அமைச்சுப் பொறுப்புகள் வழங்குவது சரியானதே. இதற்காக அரசாங்கம் புதிய அமைச்சுக்களை உருவாக்கவில்லை. ஏற்கனவே இருந்த அமைச்சுக்களுக்கே அமைச்சர்களாக புதியவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
முன்னாள் ஜனாதி ஜே.ஆர். ஜெயவர்தனாவின் ஆட்சிக் காலத்தில் 1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பின்படி நூற்றுக்கும் அதிகமான அமைச்சர்கள் நியமிக்கபட்டனர் என்பது அனைவரும் அறிந்ததே.
பொது மக்களிடமிருந்து அறவிடப்படும் வரிகள் அமைச்சர்களுக்கு மட்டும் செலவிடப்படுவதில்லை. அவற்றில் பெருந்தொகைப் பணம் நாட்டின் இலவசக் கல்வி மற்றும் சுகாதார சேவை என்பனபோன்றவற்றுக்குச் செலவிடப்படுகின்றன. உலகில் இலவசக் கல்வியும் மருத்துவ வசதிகளும் வழங்கப்படும் ஒரே நாடு எமது இலங்கையே என்றும் அமைச்சர் கூறினார்.