11

11

பிரான்ஸின் பல மில்லியன் ரூபா உதவியில் ஏ15 வீதி புனரமைப்பு பணிகள் ஆரம்பம்

trincomalee.jpgஏ15 என அழைக்கப்படும் திருகோணமலை மட்டக்களப்பு நெடுஞ்சாலை புனரமைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பிரான்ஸ் அரசாங்கத்தின் நிதி உதவியின் கீழ் ஒருங்கிணைந்த திருகோணமலை உட்கட்டமைப்பு நிகழ்ச்சித் திட்டத்தின் மூலம் பல மில்லியன் ரூபா இதற்கென ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

திருகோணமலை கொழும்பு வீதியிலுள்ள 4 ஆம் மைல் கல் சந்தியிலிருந்து ஓட்டமாவடியிலுள்ள திருக்கொண்டியா மடு சந்தி வரையான வீதிப் புனரமைப்பும், அதன் கீழ் வருகின்ற 5 பாலங்கள் நிர்மாணமும் இத்திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்படுகின்றன.

தற்போது 4 ஆம் கட்டைச் சந்தியிலிருந்தும், திருக்கொண்டியாமடு சந்தியிலிருந்தும் வீதிப் புனரமைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இறால்குழி பால நிர்மாணத்துக்கான ஆரம்பக் கட்ட வேலைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கிண்ணியா, மூதூர், வெருகல், வாகரை ஊடாகவே ஏ15 நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இந்த அபிவிருத்தித் திட்டம் நிறைவடைந்ததும் இப்பகுதிகள் அதிக வளர்ச்சி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. சைனா ஹாபர் பொறியியல் நிறுவனம் இந்தப் புனரமைப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றது.

சவூதி அரேபியாவைச் சேர்ந்தவர் மருதானை விடுதியில் தற்கொலை

மருதானையிலுள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்த சவூதி அரேபியாவைச் சேர்ந்தவர் ஒருவர் அதிகளவு மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இவரது சடலம் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை மருதானையிலுள்ள விடுதியிலிருந்து மருதானை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சவூதியைச் சேர்ந்த 50 வயதுடைய அல்சாரி இப்ராஹிம் என்பவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டதாகத் தெரியவருகிறது.

இந்தச் சவூதி பிரஜை கடந்த 7 ஆம் திகதி இலங்கைக்கு வந்துள்ளார். தனது பிள்ளைகள் மற்றும் மனைவி தன்னை கொலை செய்ய முயற்சிப்பதால் தான் இலங்கைக்கு வந்ததாக உயிரிழந்த சவூதி அரேபிய பிரஜை தான் தங்கியிருந்த விடுதி அறைக்கு அடுத்த அறையில் தங்கியிருந்த மருத்துவர் ஒருவரிடம் தெரிவித்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அத்துடன் இலங்கையில் பெண்ணொருவரை தேடியே தாம் இங்கு வந்த தாகவும் அவர் கூறியுள்ளார். விடுதி அறையில் சவூதி பிரஜை விழுந்து கிடப்பதைக் கண்ட விடுதி ஊழியர்கள் அது குறித்து பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

இதனையடுத்து பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து மருதானை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அமல் எதிரிமான தலைமையில் விசாரணை நடைபெறுகின்றது.

த.தே. கூட்டமைப்பு எம்.பிக்கள் 4 பேருக்கு மீண்டும் விடுமுறை வழங்க சபையில் எதிர்ப்பு

parliament.jpgதமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் நால்வருக்கு மீண்டும் விடுமுறை வழங்குவதற்கு சபையில் நேற்று (10) எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. சபைக்கு வருகை தராமல் இருப்பதற்கான காரணத்தை ஆராயாமல் விடுமுறை வழங்கக் கூடாதெனத் தெரிவிக்கப்பட்டதால், விடுமுறை கோரிக்கைகளை விசாரணை செய்து பரிசீலிப்பதெனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கூட்டமைப்பு உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மூன்று மாதத்திற்குப் பாராளுமன்றம் வராதிருக்க அனுமதிக்கும் வகையில் அவர் சார்பிலான விடுமுறை கோரிக்கையை சிவசக்தி ஆனந்தன் முன்வைத்தார். இதற்கு உடனடியாகவே ஆளுந்தரப்பு உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் சுகவீனம்போன்ற காரணங்களுக்காக சபைக்கு வருகை தர இயலாத நிலை ஏற்படின், அவருக்கு விடுமுறை வழங்குவதை சம்பிரதாயமாகக் கொண்டுள்ளோம். ஆனால், கூட்டமைப்பு உறுப்பினர்கள் நாட்டுக்கும் அரசியலமைப்புக்கும் எதிராகப் பிரசாரம் செய்வதற்கு வசதியாக விடுமுறை வழங்க வேண்டுமா? என்று ஆளுந்தரப்பு பிரதம கொறடாவான அமைச்சர் தினேஷ் குணவர்தன கேள்வி எழுப்பினார்.

இதற்கு முன்பும் ஓர் உறுப்பினருக்கு கடந்த மார்ச் 19 ஆம் திகதி விடுமுறை கோரியபோது இந்த விடயத்தைச் சுட்டிக்காட்டியதை நினைவு கூர்ந்த அமைச்சர் குணவர்தன சம்பிரதாயத்துக்காகச் சமர்ப்பிக்கப்படும் கடிதமொன்றுக்காக விடுமுறை வழங்கிவிடுவதா என்பதைத் தீர்மானிக்க வேண்டும் என்று கூறினார்.

இவரின் கருத்தை தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச, அமைச்சர்கள் ஹேமகுமார நாணயக்கார, ஜகத் புஷ்பகுமார ஆகியோரும் ஆதரித்துப் பேசினர். எனினும், கூட்டமைப்பினரோ, எதிர்க்கட்சியினரோ எந்தப் பதில் கருத்தையும் தெரிவிக்கவில்லை.

இதன் போது, சபையின் தீர்மானத்துக்கமையவே தம்மால் எதனையும் தீர்மானிக்க முடியுமென சபாநாயகர் டபிள்யூ. ஜே. எம். லொக்கு பண்டார தெரிவித்தார். இறுதியாக, இந்தப் பாராளுமன்ற அமர்வுக்குள், விடுமுறை விண்ணப்பங்கள் தொடர்பில் விசாரணை செய்து விடுமுறை வழங்குவதா, இல்லையா என்பதைத் தீர்மானிக்கலாம் என சபை தீர்மானித்தது.

செல்வம் அடைக்கலநாதனைப் போன்று செல்வராசா கஜேந்திரன், சேனாதிராசா ஜெயானந்தமூர்த்தி, பத்மினி சிதம்பரநாதன் ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் விடுமுறை கோரப்பட்டது. நால்வர் தொடர்பிலும் அதே அணுகுமுறை பின்பற்றப்படுமென சபாநாயகர் அறிவித்தார். மேற்குறிப்பிடப்பட்ட உறுப்பினர்கள் ஏற்கனவே விடுமுறை பெற்று வெளிநாடுகளில் தங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதியின் பதவிக்காலத்தை நீடிக்க கோரி தம்புள்ள பிரதேச சபையில் ஏகமனதாக தீர்மானம்

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் உத்தியோக பூர்வமான ஆட்சிக் காலத்தை மேலும் ஆறு வருடங்களுக்கு ஜனாதிபதி தேர்தலோ, பொதுசன அபிப்பிராய வாக்கெடுப்போ இன்றி நீடிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றிய தம்புள்ள பிரதேச சபையின் தலைவர் உட்பட அரச தரப்பு மற்றும் எதிர்க்கட்சித் தரப்பு உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் நேற்று தெரிவித்தார்.

நேற்று புதன்கிழமை தம்புள்ள பிரதேச சபையின் விசேட கூட்டம் ஒன்று அதன் தலைவர் கே.ஜீ.சோமதிலக்கவின் தலைமையில் பிரதேச சபைக் கேட்போர் கூடத்தில் நடைபெற்று முடிந்த பின் சபை உறுப்பினர்களையும் குழுமியிருந்தோர் மத்தியில் விளித்துப் பேசுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அங்கு அமைச்சர் கருத்து தெரிவிக்கையில் கூறியதாவது;

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலம் நிறைவடைவதற்கு இன்னும் இரண்டு வருடங்களே உள்ள நிலையில் ஜனாதிபதி தேர்தலோ அன்றி பொது சன அபிப்பிராய வாக்கெடுப்போ இல்லாமல் மேலும் ஆறு வருடங்களுக்குத் தொடர்ந்தும் அவரையே ஜனாதிபதியாக வைத்திருக்க மக்கள் பிரதிநிதிகள் இங்கு தீர்மானம் நிறைவேற்றியுள்ளமை சிறந்த முன்மாதிரியாகும். இது காலத்தின் தேவையுமாகும்’.

“இத்தகைய தீர்க்க தரிசனம் மிக்க தீர்மானங்களை நாட்டின் பல்வேறு தாபனங்களும் மேற்கொள்ளும் என்பதும் எனது எதிர்பார்ப்பாகும். இன்று தம்புள்ள பிரதேச சபையால் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட வரலாற்றுப் புகழ்மிக்க இத்தீர்மானம் தொடர்பாக இச்சபையின் எதிர்க்கட்சித் (ஐ.தே.க.) தலைவர் ஏ.ஜீ.சிறிசேன எதிர்ப்புத் தெரிவிப்பார் அல்லது மாற்றுக் கருத்துகளை முன்வைப்பார் என்று எதிர்பார்த்தேன். எனினும், தாய் நாட்டின் சுபிட்சம் கருதி அவரும் ஐ.தே.க. உறுப்பினரான கே.ஜீ.ரணசிங்ஹ பண்டாரவும் இத் தீர்மானத்திற்குத் தமது முழுமையான ஆதரவைத் தெரிவித்திருப்பது நாட்டிற்கு நல்ல சகுனமாகும்.

முன்னைய ஆட்சியாளர் பலரும் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்குப் பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்த போதிலும் 30 வருட காலம் நிலவிய கொடூர யுத்தத்தை மூன்றே வருடங்களில் முடிவிற்குக் கொண்டு வந்த பெருமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையே சாரும்.  இனி நாட்டின் அபிவிருத்தியையும் பொருளாதார மேம்பாட்டையும் மேற்கொள்வதற்கும் சர்வதேச நாடுகளின் தலையீடுகளையும் அழுத்தங்களையும் சமாளிப்பதற்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலம் நிறைவுறும் 2010 ஆம் ஆண்டிலிருந்து மேலும் ஆறுவருடங்களுக்கு நீடிக்கப்படுவது இன்றைய தேவையாகும்.

இதேவேளை, நாட்டில் ஜனாதிபதித் தேர்தல் ஒன்றோ அல்லது பொது சன அபிப்பிராய வாக்கெடுப்பு நிகழ்வொன்றோ நடத்தப்படுமாயின் அதற்கென பல கோடி ரூபா நிதியை வீண் விரயம் செய்து பின்னர் மகிந்த ராஜபக்ஷவையே மீண்டும் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்க வேண்டும். எனவே, தேர்தலுக்குச் செலவாகும் கோடிக்கணக்கான நிதியை நாட்டின் அபிவிருத்தியின் பொருட்டு பயன்படுத்தலாம் அல்லவா? மக்களின் சேம நலன்களை மேம்படுத்தலாம் அல்லவா.

இதுதவிர, இன்றைய காலகட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவோ போட்டியில் வெற்றி கொள்ளவோ எவரும் இல்லை என்பதாலும் அவ்வாறு எவரும் போட்டியிடும் பட்சத்தில் வரலாற்றுச் சாதனை மிக்க பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று ஜனாதிபதி ராஜபக்ஷவே வெற்றி பெறுவார் என்பதும் யதார்த்தமாகும்.

எனவே, ஜனாதிபதியின் எஞ்சியுள்ள இரண்டு வருட ஆட்சிக் காலத்துடன் மேலும் ஆறு வருடங்கள் என மொத்தமாக எட்டு வருடங்கள் போட்டியெதுவுமின்றி ஜனாதிபதியாக சேவை செய்ய வேண்டும் என்ற தீர்மானத்தை முழுமனதுடன் வரவேற்கின்றேன்’ என்றார்.

வவுனியா அகதி முகாம்களில் 60 ஆயிரம் மாணவர்கள், 1956 ஆசிரியர்கள் – சபையில் கல்வி அமைச்சர் சுசில்

06arliament.jpgவவுனி யாவிலுள்ள அகதிமுகாம்களில் 60 ஆயிரம் மாணவர்களும் 1956 ஆசிரியர்களும் உள்ளதாக தெரிவித்த கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, அகதிமுகாம்களாகவுள்ள 17 பாடசாலைகள் இன்னும் இரு வாரங்களில் விடுவிக்கப்படுமெனவும் கூறினார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற அவசரகாலச் சட்ட நீடிப்பு விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது;

தமிழ் மக்கள் இன்று அகதிகளாக முகாம்களில் வாழும் நிலை ஏற்பட்டதற்கு பிரபாகரனே காரணம். அரசு அந்த மக்களுக்கு மீண்டும் இயல்பு வாழ்வை ஏற்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மிகத்துரிதமாக எடுத்துவருகின்றது.

வவுனியாவிலுள்ள அகதிமுகாம்களில் 60 ஆயிரம் மாணவர்கள் உள்ளனர். இவர்களில் 337 பேர் உயர்தரப் பரீட்சை எழுதவுள்ள மாணவர்கள்.

இந்த மாணவர்களுக்கு தேவையான பாடசாலை உபகரணங்களை வழங்கியுள்ளோம். அவர்கள் கல்வியைத் தொடருவதற்காக கொழும்பிலிருந்து தமிழ் மொழி மூல ஆசிரியர்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். அங்குள்ள 12 முகாம்களில் 60 ஆசிரியர்கள் கல்வி கற்பிக்கின்றனர்.

இந்த முகாம்களில் இடம்பெயர்ந்த 1956 ஆசிரியர்கள் உள்ளனர். இவர்களுக்கான சம்பளத்தை வழங்கி வருகின்றோம்.

அகதிமுகாம்களாகவுள்ள 17 பாடசாலைகள் இன்னும் இரு வாரங்களில் விடுவிக்கப்படும். நான் அண்மையில் அந்த அகதிமுகாம்களுக்குச் சென்று மாணவர்கள், ஆசிரியர்களுடன் கலந்துரையாடல்களை நடத்தினேன்.

அவர்களின் கல்விக்குத் தேவையான சகல விடயங்களும் அரசினாலும் எனது அமைச்சினாலும் செய்துகொடுக்கப்படும்.

ராஜீவ்காந்தியுடன் பலியான பொலிசாருக்கு நினைவு தூண்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டபோது, பாதுகாப்புப் பணியில் இருந்த 9 பொலீசாரும் இறந்தனர்.

அவர்களுக்கு ராஜீவ் காந்தி நினைவிடம் அருகில் 7 லட்சத்தில் நினைவு தூண் அமைக்கப்பட்டு வருகிறது. நினைவுத்தூணில்,  பலியான எஸ்பி முகமது இக்பால், இன்ஸ்பெக்டர்கள் ராஜகுரு, எட்வர்ட் ஜோசப், தமிழக சப் இன்ஸ்பெக்டர் எத்திராஜ், டெல்லி சப் இன்ஸ்பெக்டர் குப்தா மற்றும் பொலிஸ்காரர்கள் தர்மன், முருகன், ரவி, பெண் காவலர் சந்திரா ஆகிய 9 பேரின் பெயர்கள் பதிக்கப்படுகின்றன.

9 இராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறைப்பிடிப்பு

fishing.jpgஇரா மேஸ்வரத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற 9 மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் சிறைப்பிடித்திருப்பதால் பரபரப்பு ஏற்பட்டது.

இராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் சிலர் திங்கட்கிழமை கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். அவர்கள் அனைவரும் நேற்று கரை திரும்ப வேண்டும். ஆனால், அவர்களில் 9 பேர் கரை திரும்பவில்லை. அவர்கள் 9 பேரையும் இலங்கைக் கடற்படையினர் பிடித்துச் சென்றிருப்பதாகவும், அவர்கள் சென்ற 2 படகுகளை பறிமுதல் செய்திருப்பதாகவும் கரை திரும்பிய மீனவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து இராமேஸ்வரம் மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியும் பரபரப்பும் ஏற்பட்டுள்ளதாக இணையத்தள செய்திகள் தெரிவித்தன.

நான்கு பேரும் குற்றவாளிகள்

விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்கள், வெடிபொருட்கள் சப்ளை செய்ததாக கூறி நான்கு தமிழ் அமெரிக்கர்களை அந்நாட்டு போலீஸார் கைது செய்து அவர்கள் மீது வழக்கும் தொடரப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் பெயர்கள் – கருணா என்கிற கருணாகரன் கந்தசாமி, ராஜ பார்த்தீபன் என்கிற பார்த்தீபன் தவராசா (தம்பி சாம்ப்ராஸ், ஸ்டீபன் என்ற பெயர்களும் இவருக்கு உண்டு), டாக்டர் மூர்த்தி, விநாயகமூர்த்தி முருகேசு என்ற பெயர்களில் அழைக்கப்படுகிற முருகேசு விநாயகமூர்த்தி மற்றும் சந்துரு என்கிற விஜயசந்தர் பத்மநாதன்.

இவர்களில் கந்தசாமி, விடுதலைப் புலிகள் அமைப்பின் அமெரிக்க கிளையின் இயக்குநராகப் பணியாற்றி வந்தார். தமிழர் புனரமைப்புக் கழகம் உள்ளிட்ட பல்வேறு அறக்கட்டளைகள் மூலம் விடுதலைப் புலிகள் பணம் திரட்டி வந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து அரசு வக்கீல் பென்டன் கேம்ப்பல் கூறுகையில், இலங்கையில் விடுதலைப் புலிகள் தோற்கடிப்பட்ட சில வாரங்களில் அமெரிக்காவில் செயல்பட்டு வந்த விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரை நாங்கள் நீதியின் முன் நிறுத்தியுள்ளோம்.

பல கோடி பணத்தைத் திரட்டி அதைப் பயன்படுத்தி விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்கள், வெடிபொருட்களை வாங்கி அனுப்ப இவர்கள் உதவியுள்ளனர் என்றார். ஐக்கிய மாவட்ட தலைமை நீதிபதி ரேமான்ட் டீரி முன்னிலையில் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டது. இதில் நான்கு பேரும் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து இவர்களுக்கான தண்டனை விரைவில் அறிவிக்கப்படும். அதிகபட்சமாக 20 ஆண்டு தண்டனை இவர்களுக்குக் கிடைக்கும் எனத் தெரிகிறது.