மருதானையிலுள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்த சவூதி அரேபியாவைச் சேர்ந்தவர் ஒருவர் அதிகளவு மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இவரது சடலம் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை மருதானையிலுள்ள விடுதியிலிருந்து மருதானை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சவூதியைச் சேர்ந்த 50 வயதுடைய அல்சாரி இப்ராஹிம் என்பவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டதாகத் தெரியவருகிறது.
இந்தச் சவூதி பிரஜை கடந்த 7 ஆம் திகதி இலங்கைக்கு வந்துள்ளார். தனது பிள்ளைகள் மற்றும் மனைவி தன்னை கொலை செய்ய முயற்சிப்பதால் தான் இலங்கைக்கு வந்ததாக உயிரிழந்த சவூதி அரேபிய பிரஜை தான் தங்கியிருந்த விடுதி அறைக்கு அடுத்த அறையில் தங்கியிருந்த மருத்துவர் ஒருவரிடம் தெரிவித்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அத்துடன் இலங்கையில் பெண்ணொருவரை தேடியே தாம் இங்கு வந்த தாகவும் அவர் கூறியுள்ளார். விடுதி அறையில் சவூதி பிரஜை விழுந்து கிடப்பதைக் கண்ட விடுதி ஊழியர்கள் அது குறித்து பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.
இதனையடுத்து பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து மருதானை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அமல் எதிரிமான தலைமையில் விசாரணை நடைபெறுகின்றது.