04

04

பொசன் நிகழ்வுகள் 6ஆம் திகதி மிஹிந்தலையில் ஆரம்பம் – சகல ஏற்பாடுகளும் பூர்த்தி

poson_s.jpgபொசன் நிகழ்வுகள் அநுராதபுரம்,  மிஹிந்தலையில் எதிர்வரும் 6ஆம் திகதி ஆரம்பமாகின்றன. மூன்று தினங்களாக நடைபெறவுள்ள பொசன் நிகழ்வுகளுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக அநுராதபுர மாவட்ட செயலாளரும் பொசன் குழுவின் தலைவருமான எச்.எம்.கே. ஹேரத் தெரிவித்தார்.

அநுராதபுர மாவட்ட செயலகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற பொசன் நிகழ்வுகள் தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில், பொசன் நிகழ்வுகளை முன்னிட்டு விசேட போக்குவரத்துச் சேவையை வழங்க இலங்கை போக்குவரத்துச் சபை இணக்கம் தெரிவித்துள்ளது. இதுதவிர மூலம் மலசலகூட வசதிகளை வழங்க அநுராதபுரம் மாநகர சபையும் நீர் சுத்திகரிப்பு வேலைகளை மேற்கொள்ள தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையும் இணங்கியுள்ளன.

இதேவேளை,  பொசன் நிகழ்வுகள் நடைபெறும் மூன்று தினங்களிலும் அநுராதபுரம் மற்றும் மிஹிந்தலை நகரங்கள், பௌத்த விகாரைகள் என்பவற்றை மின் விளக்குகளால் அலங்கரிப்பதற்குரிய ஏற்பாடுகளை இலங்கை மின்சார சபை மேற்கொண்டு வருகின்றன.நிகழ்வுக்கு வருகை தரும் பக்தர்களின் பாதுகாப்புக் கருதி அநுராதபுரம் பொலிஸார் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளனர் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். 

அநுராதபுரம் மிஹிந்தலை நகரங்களின் 25 பாடசாலைகளுக்கு இன்று முதல் 9ஆம் திகதி வரை விடுமுறை

students1.jpgபொசன் நிகழ்வுகளை முன்னிட்டு அநுராதபுரம் மற்றும் மிஹிந்தலை ஆகிய இரு நகரங்களிலுமுள்ள 25 பாடசாலைகளுக்கு இன்று முதல் எதிர்வரும் 9ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்படவுள்ளதாக வட மத்திய மாகாண கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அநுராதபுரம் பொலிஸாரும் பொசன் ஏற்பாட்டுக் குழுவினரும் விடுத்த வேண்டுகோளையடுத்தே மாகாண கல்வி அமைச்சு இத்தீர்மானத்தை மேற்கொண்டது.

பொசன் நிகழ்வுகளில் கலந்துகொள்ள வருகை தரும் பக்தர்களின் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படவுள்ள சுமார் 7000 பொலிஸாரையும் சிவில் பாதுகாப்புப் படையினரையும் தங்க வைப்பதற்கு இப்பாடசாலைகளைப் பயன்படுத்தும் நோக்கிலேயே விடுமுறை வழங்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

சமரசிங்க – நவநீதம்பிள்ளை ஜெனீவாவில் சந்திப்பு

mahinda_samarasinghe_.jpgஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் கலந்துகொள்வதற்காக ஜெனீவா சென்றுள்ள மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க ஐ. நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் நவநீதம்பிள்ளையை நேற்றுமுன்தினம் சந்தித்து பேச்சு நடத்தினார்.

ஐ. நா. மனித உரிமைகள் பேரவையின் முதல் மூன்று அமர்வுகளும் முடிவுற்ற நிலையில் வழமையான அமர்வு நேற்றுமுன்தினம் பிற்பகல் ஆரம்பமானது.

இந்த வழமையான அமர்வு ஆரம்பமாவதற்கு சுமார் 2 மணி நேரத்திற்கு முன்னர் ஐ. நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் நவநீதம்பிள்ளையை சந்தித்து பேசியதாக அமைச்சர் மஹிந்த சமரசிங்க ஜெனீவா விலிருந்து தெரிவித்தார்.

வழமையான அமர்வின்போது அமைச்சர் மஹிந்த சமரசிங்க இலங்கையின் சார்பில் விசேட அறிக்கையொன்றையும் சமர்ப்பித்தார்.

ஊவா மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து 6ஆம் திகதி முடிவு – பிரபா கணேசன்

sri-lanka-provincial-council.jpgஊவா மாகாணசபை தேர்தலில் பதுளை மாவட்டத்தில் ஜனநாயக மக்கள் முன்னணி போட்டியிடுவது தொடர்பில் கட்சியின் இறுதி முடிவு எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ள மத்தியகுழு கூட்டத்தில் எடுக்கப்படுமென ஜனநாயக மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும். மேல்மாகாணசபை உறுப்பினருமான பிரபாகணேசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் பிரபா கணேசன் மேலும் தெரிவித்துள்ளதாவது.

தலைவர் மனோகணேசன் தலைமையில் எமது மத்தியகுழுக் கூட்டம் எதிர்வரும் சனிக்கிழமை கொழும்பில் நடைபெறவுள்ளது. இதற்கான அழைப்புகள் தற்சமயம் உறுப்பினர்களுக்கு அனுப்பப்படுகின்றன. இக்கூட்டத்தில் நாட்டின் இன்றைய அரசியல் நிலைமை, எமது கட்சி முன்னேடுக்கவேண்டிய நடைமுறைகள், மேல்மாகாண சபைத்தேர்தலில் பெறப்பட்டுள்ள மாபெரும் வெற்றி ஆகிய விவகாரங்கள் ஆராயப்பட்ட உள்ளதுடன், ஊவா மாகாணசபை தேர்தல் தொடர்பாகவும் இறுதி முடிவு எடுக்கப்படும்.

மத்திய, மேல், சப்ரகமுவ மாகாண சபைகளுக்கான நடைபெற்று முடிந்துள்ள தேர்தல்களை தொடர்ந்தும் நடைபெறவுள்ள ஊவா மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட வேண்டுமென பதுளை மாவட்ட ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸின் உறுப்பினர்களும், ஆதரவாளர்களும் கோரிக்கை விடுத்துவருகின்றனர். இது தொடர்பில் கடந்த வார இறுதியில் ஊவா மாவட்ட அங்கத்தவர்கள், ஆதரவாளர்கள் அடங்கிய பிரதிநிதிகள் குழு தலைவர் மனோ கணேசனை சந்திந்து உரையாடியுள்ளது.

எமது கட்சியின் ஏணி சின்னத்தில் தனித்து போட்டியிடுவதா அல்லது ஐக்கிய தேசிய கூட்டணியில் போட்டியிடுவதா என்ற இரண்டு கருத்துகள் கட்சிக்குள்ளே நிலவும் அதேவேளையில் இணைந்து செயற்படுவது தொடர்பில் எமது ஆதரவை ஏனைய சில மலையக கட்சிகள் மற்றும் குழுவினர் கோரியுள்ளனர்.

இவ்வாறு ஆரம்பத்தில் நடைபெற்ற தலைமைக்குழு கூட்ட தீர்மானத்தின் படி இது தொடர்பில் பொது செயலாளர் கலாநிதி என்.குமரகுருபரன், உப தலைவர் பி.ஜெயபாலன். தேசிய அமைப்பாளர் பிரபா கணேசன். நுவரெலிய மாவட்ட அமைப்பாளர் பிரகாஷ் கணேசன், இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளர் ரூபன் பெருமாள், கண்டி மாவட்ட அமைப்பாளரும், ஜ.தொ.கா. நிர்வாக செயலாளருமான அய்யாசாமி இராமலிங்கம், நுவரெலியா மாவட்ட துணை அமைப்பாளர் முரளி ரகுநாதன் ஆகியோர் அடங்கிய குழுவை தலைவர் நியமித்துள்ளார். இக்குழுவின் சிபாரிசுகளின்படி மத்தியகுழு கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படுமெனவும் தெரிவித்துள்ளார்.

“இரத்துச் செய்யப்பட்ட பாடநெறிகளை மீண்டும் ஆரம்பிக்க பிரதிக் கல்வியமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்’

teacher.jpgபத்தனை ஸ்ரீபாத கல்வியியல் கல்லூரியில் குறிப்பிட்ட மூன்று பாடநெறிகள் இரத்துச் செய்யப்பட்டதனால் இவ்வாண்டில் இக்கல்லூரியில் 150 ஆக இருந்த பெருந்தோட்டத்துறை சார்ந்த ஆசிரிய பயிலுநர்கள் எண்ணிக்கை 47 பேராக மட்டுப்படுத்தப்பட்டிருக்கின்றமை பெருந்தோட்ட ஆசிரிய பயிலுநர்களைப் பாதிக்கும் செயலென முன்னாள் ஊவா மாகாணசபை உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணியின் ஊவா மாகாணப் பொறுப்பாளருமான அ.அரவிந்குமார், பிரதிக் கல்வி அமைச்சர் எம். சச்சிதானந்தனுக்கு அனுப்பியுள்ள அவசரக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இக்கல்லூரியில் தமிழ், ஆரம்பக்கல்வி, சமூகக்கல்வி போன்ற பாடநெறிகளை இவ்வாண்டு முதல் இரத்துச் செய்யத் தாங்களே காரணமாக இருப்பதாகவும் கூறப்பட்டு வருகின்றது. இக்கல்லூரி பெருந்தோட்டத்துறை சார்ந்த இந்திய வம்சாவளித் தமிழர்களுக்கே உருவாக்கப்பட்டது. ஆனால், காலப்போக்கில் ஏனைய சமூகத்தவர்களையும் இக்கல்லூரியில் அனுமதிக்கும் நிலை ஏற்பட்டது. அனுமதி பெற்றவர்களின் உள்ளக பயிற்சிகளைப் பெறும் வகையில் பத்தனைப் பகுதியின் ஐந்து பாடசாலைகள் அபிவிருத்தியும் செய்யப்பட்டன.

எமது சகோதர சமூகமான முஸ்லிம் சமூகம் இன்றைய நிலையில் கல்வியில் உயர்வதற்கு அமைச்சராக இருந்த அமரர் பதியூதீன் முகம்மத்தே காரணமாக இருந்திருக்கின்றார். அவரது தொலைநோக்குப் பார்வையின் பிரகாரம் தரம் 8 இல் சித்தியடைந்தவர்களுக்கு ஆசிரிய நியமனங்கள் வழங்கப்பட்டதை இங்கு குறிப்பிடவிரும்புகின்றேன். எமது நாட்டின் தேசிய கல்லூரிகளில் இக்கல்லூரி மாத்திரமே அதிகளவிலான எமது சமூகம் சார்ந்த ஆசிரியர் பயிலுனர்கள் உள்வாங்கப்படுகின்றனர். இதன் பிரகாரம் ஆண்டுதோறும் இக்கல்லூரியில் அனுமதிக்கப்படும் 200 பயிலுநர் ஆசிரியர்களில் 150 பேர் பெருந்தோட்டத்துறை சார்ந்த இந்திய வம்சாவளியினர். இக்கல்லூரியின் ஆரம்பந்முதலே தமிழ்மொழி, ஆரம்பக்கல்வி, சமூகக்கல்வி, கணிதம், விஞ்ஞானம், நாடகம், சங்கீதம், தகவல் தொழில்நுட்பம் போன்ற பாடநெறிகள் கடந்த வருடம் வரை பயிற்றப்பட்டு வந்தன.

க.பொ.த. உயர்தரத்தில் கலை, வர்த்தகப்பிரிவுகளில் அதிகமான பெருந்தோட்டத்துறை சார்ந்த மாணவர்கள் சித்தியடைவதால் பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி பெறாமல் கல்வியியல் கல்லூரிகளில் அனுமதிக்கப்படுகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் பத்தனை ஸ்ரீபாத கல்வியியல் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டு வந்தனர். இவர்கள் மூன்று ஆண்டு பயிற்சியின் பின்னர் டிப்ளோமாப் பட்டம் பெற்று ஆசிரியர்களாக வெளியேறுகின்றனர். மலையகத்தில் கணிதம், விஞ்ஞானம் போன்ற துறைகளில் உயர்தரம் கற்கப் போதிய பாடசாலைகள் இல்லாமையினால், எமது மாணவ சமூகத்தினர் கலை மற்றும் வர்த்தகத்துறை பாடநெறிகளில் விரும்பியோ விரும்பாமலோ தொடர நிர்ப்பந்திக்கப்படுகின்றனர்.

இதன் பிரதான காரணம் கணிதம் , விஞ்ஞானம் போன்ற பாடநெறிகளில் பயிற்சிகளை மேற்கொள்வதற்கு மலையகப் பாடசாலைகளில் இருந்து 150 பயிலுநர்களைத் தேர்ந்தெடுக்க முடியாமல் போனதேயாகும். இந்நிலையில் 103 பயிலுநர்களுக்கான வெற்றிடங்களை ஏனைய சமூகத்தைச் சார்ந்தவர்களால் நிரப்பப்படுகிறது. ஆரம்பக்கல்வி, தமிழ்மொழி, சமூகக்கல்வி போன்ற பாடநெறிகளுக்கு இனிமேல் புதிதாக ஆசிரியர்கள் தேவையில்லையென்ற நிலைப்பாடே இம்முடிவிற்கு காரணமென்று கருதப்படுகின்றது.

போதியளவு பயிலுநர்களை கணிதம் மற்றும் விஞ்ஞானப் பாடநெறிகளில் உள்வாங்க தொலைநோக்குப் பார்வையோடு அதனை அதிகரிப்பதற்கான ஆக்கபூர்வமான எந்தவொரு நடவடிக்கைகளும் இல்லாத நிலையில் வருடத்திற்கு 150 கணித, விஞ்ஞானப் பயிலுநர்களை முழுமையாக எப்போது தயார்ப்படுத்தப் போகின்றோமென்ற கேள்விக்கு சரியான பதில் இல்லை. எமக்குக் கிடைத்திருக்கும் இவ் அரியவாய்ப்பினை ஏனையவர்களுக்கு தாரைவார்த்துக் கொடுக்கும் நிலையினை நாமே ஏற்படுத்தியிருக்கின்றோம்.

நிறுத்தப்பட்டிருக்கும் பாட நெறிகளில் போதியளவு ஆசிரியர்கள் மலையகப் பாடசாலைகளில் பற்றாக்குறை நிலவும் இவ்வேளையில், குறிப்பிட்ட பாடநெறிகளை இரத்துச் செய்வதை எவ்வகையிலும் நியாயப்படுத்த முடியாது. ஆகவே, தாங்கள் இதுவிடயத்தில் கூடிய கவனம் செலுத்தி இரத்துச் செய்யப்பட்ட பாடநெறிகளை மீளவும் ஆரம்பிப்பதுடன், எமது சமூகத்திற்கென்று ஆரம்பிக்கப்பட்ட இக்கல்வியியல் கல்லூரியையாவது பாதுகாத்துத் தரும்படி கேட்டுக்கொள்கின்றேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

இரத்மலானை பலாலி விமான சேவை வன்னியூடாக நடைபெறும்

airplane.jpgஇரத் மலானை விமான நிலையத்திற்கும் பலாலி விமான நிலையத்துக்குமிடையான பயணிகள் விமான சேவையின் பாதையில் மாற்றம் செய்யப்படவுள்ளது. இதுவரை காலமும் இரத்மலானையில் இருந்து புறப்பட்ட விமானங்கள் கொழும்பு புத்தளம்மன்னார் கடல் வழியாக சென்று குடா நாட்டில் தீவுகளையும் தாண்டி பலாலி விமான நிலையத்தை சென்றடைந்தன. இதனால், அதிகளவு நேரம் பயணம் இடம்பெற்றுவருகிறது.  அதேபோல, பலாலியில் இருந்தும் இதே பாதையூடாகவே இரத்மலானை விமான நிலையத்தை விமானங்கள் வந்தடைந்தன.

வன்னியில் யுத்தம் முடிவுற்றதையடுத்து தற்போது இரத்மலானை விமான நிலையத்திலிருந்து நாட்டின் தரைப்பகுதியூடாக வன்னிப்பகுதியால் வடக்கே விமானங்கள் செல்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதிய பாதையின்படி இச்சேவை நடைபெற்றால் பயணநேரமும் சுமார் 20 நிமிடநேரம் குறையும் எனவும் சம்பந்தப்பட்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

யுத்தத்தின் பின்னரான உண்மை நிலையை வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களுக்கு தெளிவுபடுத்த ஏற்பாடு

susil_prem_minister.jpgயுத்தத்தின் பின்னரான உண்மை நிலையை வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களுக்குத் தெளிவு படுத்தும் தொடர் கருத்தரங்குகளை சர்வதேச ரீதியில் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன் முதலாவது கருத்தரங்கு எதிர்வரும் வாரத்தில் அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளதுடன் ஜூன் 10ம் திகதி முதல் 14ம் திகதி வரை “மெல் பேர்னில் இலங்கை வாரம்” என்ற தொனியில் தொடர் நிகழ்வுகள் பலவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இதன் ஒரு அம்சமாக மெல்பேர்ன் பாராளுமன் றத்தில் நடைபெறும் விசேட செயலமர்வில் கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த சிறப்புரையாற்றவுள்ளார்.

“இலங்கையின் தற்போதைய நிலைவரமும் மஹிந்த சிந்தனை அபிவிருத்தித் திட்டமும் என்ற பொருளில் அமைச்சர் உரையாற்றவுள்ளார்.

அவுஸ்திரேலியாவில் வாழும் இலங்கையர்களின் சமூக அமைப்புகள் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்நிகழ்வுகளில் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, மனோ விஜேரத்ன, ஜனாதிபதியின் ஆலோசகர் ரவீந்ரரந்தெனிய, இலங்கை முதலீட்டுச் சபையின் தலைவர் தம்பிக்க பெரேரா அவுஸ்திரேலியாவுக்கான இலங்கைத் தூதுவர் சேனக வெல் கம்பாய ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

இது தொடர்பான செய்தியாளர் மாநாடொன்று கொழும்பு ஹில்டன் ஜெய்க் ஹோட்டலில் நடைபெற்றது. பிரதமர் அலுவலகம் ஏற்பாடு செய்திருந்த இம் மாநாட்டில் கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த, அவுஸ்திரேலிய நிகழ்வுகளுக்கான ஏற்பாட்டுக் குழு உறுப்பினர் சுசந்த கடுகம்பொல, ஜனாதிபதியின் ஆலோசகர் ரவீந்ர ரந்தெனிய ஆகியோர் கலந்து கொண்டு விளக்கமளித்தனர்.

அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த இது தொடர்பில் விளக்குகையில், இலங்கையின் தற்போதைய சூழ்நிலை மற்றும் மஹிந்த சிந்தனை அபிவிருத்தித் திட்டம் தொடர்பாக அவுஸ் திரேலியாவில் வாழும் இலங்கையர்களுக்குத் தெளிவுபடுத்துவதே ”மெல்பேர்னில் இலங்கை வாரம்” நிகழ்ச்சியின் நோக் கமாகும்.

இந்நிகழ்வுகளில் இலங் கையின் வர்த்தக, உல்லாசப் பிரயாண துறையை ஊக்குவிக்கும் வகையிலான சந்திப்புகளும், இலங்கை தொடர்பான புகைப்படக் கண்காட்சி, கலாசார நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

மெல்பேர்னில் ஒரு இலட்சம் இலங்கையர்கள் வாழ்கின்றனர். பயங்கரவாதத்திற்குப் பின்னரான இலங்கையின் சிறந்த சூழல் தொடர்பில் அவர்களுக்கு தெளிவுபடுத்த வேண்டியுள்ளது. மெல்பேர்ன் பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ள விசேட நிகழ்வில் இலங்கை தொடர்பாக  சிறப்புரையாற்றவுள்ளதுடன் அந்நாட்டின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொள்ளவுள்ளனர். இது போன்ற நிகழ்வுகளை ஏனைய நாடுகளிலும் நடாத்துவதற்கு வெளிநாட்டமைச்சு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

68 மருத்துவ அதிகாரிகள் பிரிவுகள் டெங்கு பரவும் பிரதேசமென பிரகடனம்

mosquito_preventionss.jpgடெங்கு காய்ச்சல் தீவிரமாகப் பரவும் பிரதேசங்களாக 68 மருத்துவ அதிகாரிகள் பிரிவு (எம். ஓ. எச்) கள் அடையாளப்படுத்தப் பட்டிருப்பதாக சுகாதாரப் பராமரிப்பு, போஷாக் குத்துறை அமைச்சின் பொது சுகாதாரத்துறையின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டாக்டர் பாலித மஹீபால நேற்றுத் தெரிவித்தார்.

அதேநேரம் நுளம்புகள் பெருகுவதற்கு ஏதுவான சுற்றாடலைக் கொண்டிருப்பவர்கள் தொடர்பாக 0112665329 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு பிரதம பொது சுகாதாரப் பரிசோதகருக்கு அறியக் கொடுக்குமாறு சுகாதார அமைச்சு கேட்டுள்ளது.

இதேவேளை டெங்கு நுளம்பு ஒழிப்பு நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் சிவில் பாதுகாப்பு படைவீரர்கள் ஆயிரம்பேருக்கு விசேட பயிற்சி அளிக்கப்படவிருக்கின்றன. இவர்களுக்கான பயிற்சி இன்று 4 ஆம் திகதி கொழும்பில் ஆரம்பிக்கப்படவிருக் கிறது. கடந்த ஜனவரி முதலாம் திகதி முதல் ஜூன் மாதம் இரண்டாம் திகதி வரையும் டெங்கு காய்ச்சல் காரணமாக 90 பேர் உயிரிழந்துள்ளனர். 7110 பேர் இக்காய்ச்சலுக்கு இக் காலப் பகுதியில் உள்ளாகியுள்ளனர் என்றும் டாக்டர் மஹீபால குறிப்பிட்டார்.

கண்டி, கொழும்பு, களுத்துறை, குருணாகல், கேகாலை, கம்பஹா, திருமலை, மட்டக்களப்பு, ஹம்பாந்தோட்டை, மாத்தறை ஆகிய மாவட்டங்களிலுள்ள 68 மருத்துவ அதிகாரிகள் பிரிவுகளே டெங்கு காய்ச்சல் தீவிரமாக பரவும் பிரதேசங்களாக அடையாளப்படுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

இப் பிரதேசங்களில் நுளம்புகளின் பெருக்கத்தை கட்டுப்படுத்தவென பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்ட அவர், நுளம்புகளின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காகச் சுற்றாடலை சுத்தமாகவும் உலர் நிலையிலும் வைத்து கொள்ள உதவுமாறு பொது மக்களைக் கேட்டுக்கொண்டார்.

நுளம்புகள் பெருகக் கூடிய சுற்றாடலைக் கொண்டிருப்பவர்களுக்கு எதிராக ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. 2007 ஆம் ஆண்டின் 11ம் இலக்க நுளம்புகள் பெருகுவதைத் தவிர்ப்பதற்கான சட்டத்தின் கீழ் இந்நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.

இதற்கேற்ப, சுகாதாரத் திணைக்கள மருத்துவ அதிகாரிகள், பொது சுகாதார பரிசோதகர்கள், நகர சபைகளின் பிரதம மருத்துவ அதிகாரிகள், மாகாணமட்ட பொது சுகாதார பரிசோதகர்கள் போன்றோருக்கு விசேட சுற்றறிக்கைகள் நேற்று அனுப்பி வைக்கப்பட்டன.

20-20 உலகக் கோப்பை போட்டிகளுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

t20-world-cup.jpgஇங்கி லாந்தில் நடைபெறவுள உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளின் போதான பாதுகாப்பு நடவடிக்கை, கிரிக்கெட் விளையாட்டு சரித்திரத்தில் மிகப்பெரிய பாதுகாப்பு ஏற்பாடுகளாக இருக்கக் கூடும் என்று கூறப்படுகிறது.

லண்டனில் நடைபெறவுள்ள உலக் கோப்பை 20-20 கிரிக்கெட் போட்டிகளுக்கான பயிற்சி ஆட்டத்தில் இந்தியாவும் பாகிஸ்தானும் புதன்கிழமை மாலை மோதின.

இந்தப் போட்டிக்கான அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்துவிட்டன. நடைபெறவுள்ள இந்த உலகக் கோப்பை போட்டிகளின் போது பாதுகாப்புக்கே மிக அதிக அளவில் முன்னுரிமை அளிக்கப்படுவதாக போட்டி ஏற்பாட்டாளர்கள் கூறுகிறார்கள்.

இரண்டு மாதங்களுக்கு பாகிஸ்தானுக்கான விஜயத்தினை மேற்கொண்டிருந்த இலங்கை கிரிக்கெட் அணியினர் லாகூர் நகரிலுள்ள விளையாட்டு மைதானத்துக்கு சென்று கொண்டிருந்த போது துப்பாக்கிதாரிகளால் தாக்கப்பட்டனர். கிரிக்கெட் வீரர்களை குறிவைத்து நடத்தப்பட்ட முதல் தாக்குதல் அதுதான்.

இதில் ஆறு போலீசார் பலியாயினர், ஏழு வீரர்கள் காயமடைந்தனர். இதையடுத்து பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன, குறிப்பாக மிக முக்கியமான போட்டிகள் என்று கருதப்படும் போட்டிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பங்கேற்கும் போட்டிகள் இப்படி பட்டியலிடப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு மும்பையில் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலுக்கு பின்னரும், லாகூரில் கிரிக்கெட் வீரர்கள் மீதான தாக்குதல் நடைபெற்ற பின்னரும், இந்தியாவும் பாகிஸ்தானும் முதல் முறையாக ஒரு போட்டியில் சந்தித்தன.

இங்கிலாந்தில் நடைபெறவுள்ளள இந்த 20-20 உலகக் கோப்பை போட்டிகள் வெள்ளிக்கிழமைதான் தொடங்குகின்றன என்றாலும் போட்டிகளுக்கான பாதுகாப்பு தொடர்பில் அதிக கவனம் செலலுத்தப்படுவததாக போட்டிகளுக்கான இயக்குநர் ஸ்டீவ் எல்வொர்த்தி தெரிவிக்கிறார்.

மத்திய கிழக்கு பகுதிக்கு அமெரிக்க அதிபர் விஜயம்

usa-sa.jpgஅமெரிக் காவுக்கும் உலகெங்கிலும் வாழும் முஸ்லீம்களுக்கும் இடையே ஒரு பேச்சுவார்த்தையை தொடங்கும் நம்பிக்கையுடன் , அமெரிக்க அதிபர் ஒபாமா மத்தியக்கிழக்குப் பகுதி நாடுகளுக்கு விஜயம் ஒன்றைத் தொடங்கியுள்ளார்.

சௌதி அரேபியாவின் மன்னர் அப்துல்லாவுடன், தலைநகர் ரியாத் அருகே ஒபாமா பேச்சு வார்த்தைகளைத் தொடங்கியுள்ளார்.

வியாழக்கிழமை அவர் எகிப்துக்கு சென்று, முஸ்லீம் நாடுகளுடன் அமெரிக்கா கொண்டுள்ள உறவை மறுபடி வரையறுக்கும் நோக்கிலான ஒரு உரையை ஆற்றுவார்.

ஒபாமா சௌதி அரேபியாவுக்கு வருகை தந்த அதே நேரத்தில், அல் கயீதா அமைப்பின் தலைவர் ஒஸாமா பின் லாடன், அவர் வெறுப்பின் விதைகளை விதைப்பதாக குற்றம் சாட்டினார்.

அதிபர் ஒபாமா அவருக்கு முன்பிருந்த அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் அடிச்சுவட்டிலேயே செல்வதாகவும், அமெரிக்கர்கள் இதன் பின் விளைவுகளை எதிர்கொள்ளத் தயாராக இருக்கவேண்டும் என்றும், அல் ஜசீரா தொலைக்காட்சிக்கு அனுப்பி வைத்த ஒரு ஒலிநாடா மூலம் ஒசாமா பின் லாடன் கூறினார்.