March

March

வள்ளம் அனுப்பினேன்…… ஹெலி அனுப்பினேன்……. : ஈழமாறன்

Pirabakaran_Vஎங்கு பார்த்தாலும் ஒரு குடையின் கீழ் அணி திரளுங்கள். இரண்டு குடையின் கீழ் அணி திரளுங்கள் என்று ஒரே அவியல். ஐபிசியில என் ரி ஜெகன் அண்ணன் தொப்புள்கொடி அறுநாக்கொடி என்று அறுவை தாங்க முடியேல்ல. மூலைக்கு மூலை சங்கம். நாட்டுக்கு நாடு கோசம். பிரபாகரனைக் காப்பற்றுவதற்காக வன்னி மக்கள் என்ற முலாம் பூசிக் கொண்டு, சன்னி பிடித்தலையும் கூட்டத்தை பார்த்து சிரிப்பதற்கு கூட மனமில்லாத துயர் மனதை வாட்டுகிறது. (இடைக்காடர் கொஞ்ச நாள் குடை பிடித்தார். இடையிலை காடர் ஒட இப்ப புது கோஸ்ரி கிளம்பியிருக்கு)

தலைப்புக்கு வருவோம். றீடஸ் டஜஸ்ற் (Readers Digest) என்ற புத்தகத்தில் சில வருடங்களுக்கு முன் வாசித்த ஒரு சிரிப்பு பகுதி. ‘ஒரு நாட்டில் வெள்ளம் பெருக்கெடுத்து வருகிறது. அந்த நாட்டு அரசு மக்களை பொது இடங்களில் கூடுமாறு பணிக்கிறது. அப்போதுதான் இலகுவாக பாதுகாப்பான இடங்களுக்கு மக்களை நகர்த்தலாம் என்பது திட்டம். மக்கள் அல்லோகலப் பட்டு பக்கத்தில் இருந்த பாடசாலைக்கு ஓட ஒரு யேசுவின் மீது அதீத அன்பு கொண்ட பக்தன் மட்டும் வீட்டில் இருந்து வெளியேற மறுத்து விடுகிறான். வெள்ளம் பெருக்கெடுக்கிறது. அந்தச் சமயம் ஒரு வள்ளம் வந்து ஏறிக் கொள் என்று கேட்க மறுத்து விடுகிறான் பக்தன். வெள்ளம் கூரையை மூடுகிறது. பக்தன் கூரைமேல் ஏறி நிற்கிறான். மீண்டும் ஒரு வள்ளம். மறுத்து விடுகிறான் பக்தன். உங்களுக்கு கடவுளில் நம்பிக்கை இல்லாவிட்டால் செல்லுங்கள். எனக்கு நம்பிக்கை இருக்கிறது. என்னைக் கடவுள் காப்பாற்றுவார். இப்போது வெள்ளம் கூரையையும் தாண்டி அவன் கழுத்துக்கு வருகிறது. அந்த வேளையில் ஒரு ஹெலி ஏணியை இறக்கி ஏறும்படி வற்புறுத்த மறுத்து விடுகிறான் பக்தன். பின் மரணம். கடவுளிடம் செல்லும் அவன் சாதாரண மக்கள் முன்னால் என் அன்பை கொச்சைப் படுத்தி என்னை ஏமாற்றி விட்டாயே ஆண்டவா. நான் மரணித்தது கூட கவலையில்லை நீ தக்க தருணத்தில் உதவி உன்னை நம்பியவர்களை காப்பாற்றியிருக்க வேண்டாமா என்று கேட்கிறான்.

அமைதியாக பொறுமையாக பதட்டமில்லாமல் இருக்கும் கடவுள் சொல்கிறார். “பக்தா இரண்டு வள்ளம் அனுப்பினேன். ஒரு தடவை ஹெலி கூட அனுப்பினேன். நீ எதிலுமே ஏற மறுத்து விட்டு தற்போது என்னைக் குறை சொல்வது என்ன நியாயம்.”’

ஏக பிரதிநிதித்துவம் என்ற பிசாசு பிடித்து தலைமைப் பதவி என்ற மாயக் கண்ணாடியைப் போட்டுக் கொண்டு எதிரே நின்றவர்கள் எல்லாரையும் எதிரி என்று சுட்டுவிட்டு குடை, படை என்று ஒப்பாரி வைக்கிறீர்களே நீங்கள் எல்லோரும் புலம்பெயர்ந்த சில வால்கள் உட்பட தமிழர்களுக்குச் செய்த பாதகச் செயலுக்காக தார்மீகப் போராட்டத்தை தர்பார் சண்டித்தனமாக ஆக்கி விட்டு ஒரு குடையின் கீழ் வாருங்கள் என்று கூவுவதற்க்கு பதிலாக பெற்றோல் ஊத்தி மற்றவன் கொழுத்த நீங்கள் மறத் தமிழன் பட்டம் கொடுக்கிறதை விட்டுவிட்டு உங்களுக்கு நீங்களே பெற்றோல் ஊத்திக் கொழுத்தலாமே. லண்டனிலை பெற்றோல் ஸ்ரேசன் முழுக்க நம்மட ஆக்கள் தானே. இலவசமா வாங்கலாம்.

பிரபாகரன் என்ற தழிழீழ பக்கதனுக்கு அதனை அடைவதற்கு எத்தனையோ வள்ளங்கள் வந்து நின்றன. எத்தனையோ ஹெலிகள் வந்து நின்றன. அத்தனையிலும் ஏற மறுத்து விட்டு ஒரு குடையின் கீழ் அணிதிரளுங்கள் என்று கூச்சலிடுகிறீர்களே தமிழ் பேரவை என்ற போர்வையைப் போத்திக் கொண்டு சில புலத்து ‘மா’க்களே உங்களுக்கு என்ன தமிழன் கேணயன் என்ற நினைப்பா? புலம்பெயர் சூழலிலும் பிளேன் விளையாட்டுக் காட்டுகிறீர்களா?

சித்திரா அச்சகத்தில சுந்தரத்தில தொடங்கினியல். (அன்றைக்கு கூட இருந்தனியல் உதுகளைப் பற்றி ஏதும் சொல்லலாமே.) கள்ளக் காதலியிடம் தமிழீழ உணர்வு தலைக்கேறி ஒளித்து ஒளித்து செல்கையில் கைக்குண்டு வீசி காலை உடைத்து விட்டு 70க்கும் மேற்பட்ட சக அமைப்பு போராளிகளை ஒரு அறையினுள் பூட்டி வைத்து கொன்றபோது உங்கள் ஒரு குடையின் கம்பி உடைந்து போனது தெரியாதா புலத்து ‘மா’க்களே? மட்டக்களப்பில் இருந்து வந்து, பயிற்சி முடித்துவிட்டு தமிழீழக் கனவில் படுத்திருந்த ரெலோ போராளிகளை நாயைச் சுடுவது போல சுட்டு தெருத் தெருவா ரயர் போட்டு எரித்தீர்களே. அன்று சோடா உடைத்து கொடுத்து விட்டு, இன்று சொகுசா வெளி நாடுகளிலே வாழும் புலத்து ‘மா’க்களே அப்போது இரண்டாவது கம்பி உடைகிறதே என்று சொன்ன போது ஏக பிரதிநிதித்துவ பித்தம் தலைக்கேறி தலைகால் தெரியாமல் வென்ற யுத்தம் எல்லாம் வேலுப்பிள்ளையின் மகன் பிரபாகரன் செய்தது. தோத்ததெல்லாம் பால்ராஜ் செய்தது என்று கொண்டாடிவிட்டு இன்று எங்கிருந்து கொண்டு வந்தீர்கள் உங்கள் குடையை.

முள்ளிக் குளத்தில் முகாம் இட்டிருந்த புளட் இயக்கப் போராளிகளை சுற்றிவளைத்து சுட்டு விட்டு அறிக்கை விட்டபோது சிவாஸ்றீகல் அடித்து விட்டு சந்தோசப்பட்ட புலத்து ‘மா’க்களுக்கு திடீரென குடைபிடிக்கும் எண்ணம் வருவதற்கு காரணம் என்ன?

காத்தான் குடியில் பள்ளிவாசலில் ”அல்லா எங்களைக் காப்பாற்று” என்று கதறக் கதற கர்ப்பிணிப் பெண்கள் என்று கூடப் பார்க்காமல் வெட்டித் தள்ளிய போது உங்கள் குடையின் இன்னொரு கம்பி முறிந்து போனது. பின் அனுராதபுரத்தில் அப்பாவி மக்களைச் சுட்டபோது, 24 மணி நேரத்தில் முஸ்லிம் மக்களை விரட்டியடித்தபோது, பாடசாலை அதிபர்கள், புத்திஜீவிகள், சகபோராளிகள், பக்கத்து நாட்டுத் தலைவன் என்று உங்கள் ஏகத்தலைவன் ஏகப்பட்ட மக்களின் அவலங்களுக்கு, அழிவுக்கு காரணமாக இருந்தபோது மேதகு என்று பட்டம் சூட்டி பச்சை குத்தித் திரிந்த இந்தச் சில புலத்து ‘மா’க்கள் அமைதியாக இருந்து விட்டு இப்போது கொக்கரிக்கிறீகளே கொழுத்தினவனுக்கு விழா எடுக்கிறீர்களே இப்போது எங்கிருந்து வந்தது இந்த ஞானம்.

ஊரில் சொலவார்கள் ‘அடியைப் போல அண்ணன் தம்பி உதவாது’ என்று. அரசியலால் வென்றிருக்க வேண்டிய போராட்டத்தை வெறும் ஆயுத்ததால் வெல்லப்போன தம்பிக்கு அடிவிழும் போது வந்திருக்கின்ற இந்த ஞானம் வேடிக்கையான ஞானம். அண்ணைக்கு மரணப்பயம் என்பது இப்போதுதான் புரிகிறதோ. பொட்டன் வைத்த பொட்டுக்கெல்லாம் இப்போதுதான் ஞானம் பிறக்கிறதோ. மாத்தையா என்ற போராளியை குறைந்த பட்ச கவுரவம் கூட கொடுக்காமல் சுட்டுத் தள்ளிய திமிரில் கருணா அம்மானுக்கு ஆப்பு வைக்க போன போது புரியாத தெரியாத சர்வதேச சமூகம் திடீரென தெரிந்திருக்கென்றால் அண்ணைக்கு அடி கொஞ்சம் பலமோ. அழுகை அழுகையா வருதோ?

சீமானுக்கு காசு கொடுத்து நெடுமாறனுக்கு ஆஸ்பத்திரி கட்டிக்கொடுத்து தமிழக மக்களை தெருவுக்கு கொண்டுவந்து புதுக் குடியிருப்பையாவது காப்பாத்த வன்னி மக்கள் என்று முலாம் பூசி நீங்கள் காட்டும் பூச்சாண்டி புரியாமல் போக நாம் ஒன்றும் சாம் பிரதீபன் மாதிரி முகட்டைப் பார்த்துக் கொண்டு புலி வால்பிடிக்க தீபம் தொலைக்காட்சியில் கவிதை வாசிக்கும் நிஜத்தை மறந்த முட்டாள்கள் அல்ல.

ஏக பிரதிநிதித்துவம் என்றால் என்ன? ரெலோ தேவையில்லை. ஈபி தேவையில்லை. புளட் தேவையில்லை. முஸ்லிம்கள் தேவை இல்லை. இவ்வளவேன் எந்தப் புலத்து ‘மா’க்களும் தேவை இல்லை என்று புதுவை ரத்தின துரை எழுதின கவிதையில் வந்த நீங்கள் தேவையில்லை புலி மட்டும், புடுங்கும் என்பது தானே. அப்படி தனிச்சு நின்று புடுங்கப்போறம் என்று ஒரு லட்சம் மக்களைக் காவு கொடுத்த திட்டம் வகுப்பதில் கெட்டிக்காரன் வேலுப்பிள்ளையின் மகனிடம் போய் கேட்கலாமே ஏன் அண்ணை திட்டம் போட்டு சிங்கள ராணுவத்திற்கு பாடம் புகட்டாமல் புதுக் குடியிருப்பு வரை நீங்களே பாடம் கற்றுக் கொண்டு போறியள், இனி எப்பதான் அடிபடப் போறியள் என்று. முல்லைத்தீவு முகாம் விழுந்த போது தலைவர் நேரடி கண்காணிப்பு. ஜெயசிக்குறு ஓடியபோது தலைவர் தலைமையில் ஒப்பறேசன். இப்ப துண்டக் காணம் துணியக் காணம் என்று ஓடும் போது தலைவர் முதல்லேயே ஓடிவிட்டாரா. இல்லை என்றால் ஒரு திட்டத்தை போட்டிருக்கலாமே. 

குழந்தை பிறக்கிறபோது குறிப்பு எழுதுவார்கள். அப்போ ஊர் சாத்திரி சொல்வார். இவருக்கு தரையிலை கண்டம். தண்ணியிலை கண்டம் என்று. அதுபோல மாவிலாறு தண்ணியிலை கை வைக்கும் போது தெரிந்திருக்க வேண்டும் அண்ணைக்கு கண்டம் ஸ்ராட் பண்ணுதெண்டு. பால மோட்டையிலை அடி விழும் போது தலைவர் பொறுமையா இருந்தார். மல்லாவியிலை மரண அடி விழுந்த போது தலைவர் பொறுiமாய் இருந்தார். கிளிநொச்சி வரைக்கும் எத்தினை கதை விட்டீர்கள். உள்ளுக்கை விட்டு அடிப்பார் என்று உள்ளுரக் கனவு கண்டுகொண்டு மன்னாரில் மக்கள் செத்தபோது மட்டக்களப்பில் மக்கள் செத்தபோது வவுனியா வடக்குப் பிரதேச சண்டையில் மக்கள் செத்தபோது மூதூரில் மக்கள் செத்தபோது தாசீசியஸின் பாசையில் மக்கள் எல்லாம் மாடுகள் என்று பேசாமல் இருந்து விட்டு தலைவர் புதுக்குடியிருப்புக் காட்டுக்கை சூடுதின்ற யானைபோல சுழரும்போது வந்திருக்கும் உங்கள் ஞானத்தைப் புரிந்து கொள்ளாமல் போகுமளவுக்கு தமிழ் பேரவையில் வேலை செய்பவர்கள் அல்ல மக்கள். எமக்கு நிஜமும் தெரியும். புலியினால் ஏற்பட்ட வலியும் தெரியும். அதனால் ஏற்பட்ட வடுவும் தெரியும்.

அதால இலங்கை அரசாங்கத்தின்ர ஜில்மால் கோல்மால் தெரியேல்லை என்று நினைக்க வேண்டாம். அதுவும் தெரியும். தம்பி எப்ப போவான் திண்ணை எப்ப காலியாகும் என்று ஒரு கூட்டம் காத்துக் கொண்டிருக்கிறதும் தெரியும். அவைக்கு தனிவிருந்து இருக்கு. அது கிடக்கட்டு இப்ப.

ஜ.நா வுக்கு சொல்லச் சொல்லிறியள். சொல்கெயிமிட்ட சொல்லச் சொல்லிறியள். கருணாநிதியிட்டை சொல்லச் சொல்லிறியள். ஒபாமாவுக்கு கடிதம் போடச் சொல்லிறியள். (ஒபாமா என்ன ஆனந்தசங்கரி என்ற நினைப்பா) பிறவுணுக்கு மனு அனுப்பச் சொல்லிறியள். இது எல்லாத்திற்க்கும் காரணம் வன்னி மக்களைக் காப்பாற்றுவதுதான் என்றால் அண்ணைக்கு ஒரு கடிதம் போட்டிருந்தால்  எல்லாம் முடிந்திருக்குமே. அடைச்சி வைச்சிருக்கிறது அண்ணை. அதுக்குள்ள உள்ள சனத்துக்கு நீங்களும் செல் அடிக்கிறியல். தப்பிப் போற சனத்தையும் சுடுறியல். பிறகு  ஜ.நா வுக்கு மனுக்குடுக்கிறயல்? என்ன எங்களை வைச்சு நீங்கள் காமெடி கீமெடி ஏதும் பண்ணலையே?

முதல் வள்ளம் திம்புப் பேச்சு வார்த்தையில் வந்து நின்றது. பிரபாகரன் ஏறிக்கொள்ளவில்லை. வெள்ளமும் அவ்வளவாக இருக்கவில்லை. மன்னித்து விடலாம். பின்னர் வந்தது இலங்கை இந்திய ஒப்பந்த வள்ளம். இந்த வள்ளத்தைப் பிடிச்சு சாதுரியமாக அரசியல் செய்திருந்தால் ஒரு கரை சேருறதுக்கு வாய்ப்பு இருந்தது. இலங்கை வந்திருக்கும் இந்திய இராணுவத்தோடு ஒத்துழைத்திருந்தால் ஜேவிபி போன்ற இனவாத கட்சிகள் தெற்கில் தலையெடுத்து விரிவடையும் போது தவிர்க்க முடியாதபடி தமிழ் மக்களுக்கு உதவிசெய்து நிரந்தர தீர்வுக்கு இட்டுச் செல்லக் கூடிய அரசியல் சூழலை உருவாக்கியிருக்கலாம்.

அல்லது குமரப்பா புலேந்திரன் உட்பட 11 பேரையும் கொழும்பு கொண்டு செல்ல விட்டிருந்தால் இலங்கை அரசின் ஒப்பந்த முறிப்பைச் சாதகமாக்கி இந்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கலாம். துப்பாக்கியையும், குண்டுகளையும், பொட்டனையும் நம்பும் ஒரு இராஜதந்திர தூரநோக்கற்ற பிரபாகரனிடம் முடிவுகளை ஒப்படைத்துவிட்டு; சோட வாங்கிக் கொடுப்பதிலும், மஞ்சள் சேலையை கட்டிக் கொண்டு, அவற்றை உருவப் படத்தையும் தூக்கிக் கொண்டு, ஊர்வலம் போனால் தமிழீழம் கிடைக்கும் என்று உந்த TNA காரரும், சில கேணைக் கூத்தர்களும் மேடையில் கத்த கடும் குளிரில் நின்று நீங்கள் விசிலடித்ததும் மேளம் அடித்து நடனம் ஆடியதும் வன்னி மக்கள் மீதான கருணையின் நிமித்தம் அல்ல என்பதை புரிந்து கொள்ள நாமும் முகட்டைப் பார்த்துக் கொண்டு கவிதை வாசிக்க வேண்டிய தேவை இல்லை.

கடைசியா மாவீரர் உரை வாசிக்கும் போது தெரியும். இனித் தலைவர் நாயோட்டமும் சில்லறைப் பாச்சலும் தான் என்று. தமிழ்நாட்டில் அணுவாயுத சாலையை வைத்திருக்கும் இந்தியாவுக்கு பக்கத்தில் இருந்து கொண்டு பத்து றாத்தல் குண்டு போடுற மருந்தடிக்கிற பிளேனைக் கொண்டு வந்து என்ன விளையாட்டு. இதுவரைக்கும் விமானம் வைத்து கெரிலா அமைப்புக்கள் போராடாது இருக்கும் போது நாம் செய்தால் உலக வல்லரசுகள் பயப்பிடுமே. இந்தியாவுக்கு கவலை வருமே. இதுக்காகவே பூண்டோடை ஒளிச்சு கைலாயம் அனுப்பிடுவாங்களே என்று கூட யோசிக்காமல் கொண்டைக்கிளாறன் குருவி சைசிலை இரண்டு பிளேன். பத்திறாத்தல் குண்டு. இப்ப படுத்து உறங்க பத்து ஏக்கர் காணி கூட இல்லாத நிலை. ரெண்டு பிளேனையும் ஆமிக்காறன் பிடிச்சிட்டாலும் என்று 14 வயசில இருந்து வளர்த்தெடுத்த பெடியளை குண்டைக் கட்டி அனுப்பிறரே வேலுப்பிள்ளையின் மகன் இதென்ன சூதாட்டமா விட்டுப் பார்க்க. தமிழ் மக்களின் தலைவிதியை தனித்துத் தீர்மானிக்கிறோம் என்று சொல்லிவிட்டு குருட்டுத்தனமா விளையாட்டுக் காட்டினால் என்ன நடக்கும் என்று சிந்தித்து இருக்க வேண்டாமா?

அடுத்து வந்த வள்ளம் சந்திரிகா கப்டன்யாய் இருந்து செலுத்தி வந்த வள்ளம். இயலாமல் போகும் போது யுத்த நிறுத்தம் அறிவிப்பதும் அதனை சாக்காக வைத்து புலத்து மக்களிடம் காலிறுதி அரையிறுதி இனி கடைசியிலும் கடைசி என்று ஏதோ கால்பந்து உலகக்கிண்ண விளையாட்டு மாதிரி திகதி குறித்து புரட்ச்சி செய்யப் புறப்பட்ட புலிகளுக்கு வக்காலத்து வாங்கிய பேரவை போன்ற ஏதிலிகள் அன்று தட்டிக் கேட்காமல் இன்று ஒப்பாரி வைத்தால் என்ன செய்வது.

காலம்சென்ற மதிகெட்ட உரைஞ்சர் என்ன சொன்னார் என்று உந்தப் புலத்து ‘மா’க்கள் எல்லாம் மாவீரர் நிகழ்வில் கைதட்டி விசிலடிச்சவை. சந்திரிகாவை தான் வைச்சிருக்கிறதோ தலைவர் வைச்சிருக்கிறதோ என்று சின்ன இழுபறியாம். அந்தாள் அறளைபேந்து ஏதோ உளற இங்க உள்ள விசலடிச்சான் குஞ்சுகள் பட்டபாடு. அது ஏதோ மிசன் ஸ்ரேட்மன் மாதிரியெல்லோ உந்த புலத்து ‘மா’க்கள் துள்ளினவை.

அன்றைக்கு கூட்டணிகாரர் உசுப்பேத்திவிட நீங்களும் தமிழீழம் கேட்டியல். சரி ஆர்வக்கோளாறு நாங்களும் உங்களுக்கு பின்னால வந்தம். ஆனால் கூட்டணிகாரர் எல்லாம் சுத்துறான்கள் என்று சொல்லி கதைக்க வாறம் என்று போட்டு போட்டும் தள்ளிப் போட்டியள்.

ஆனால் சந்திரிகா ஆட்சிக்கு வருகிற போது நிலைமைகள் மாறியிருந்தனவே. அதற்கு ஏற்றால் போல் ஒரு தீர்வை நோக்கி புலிகளும் மாறியிருக்க வேண்டும் அல்லவா? அரசியல் சாணக்கியம் என்பதும் அதுதானே. ஆனா என்ன செஞ்சியல். நீலனை போட்டத் தள்ளினியல். சர்வதேசமே அறிஞ்ச ஒரு ஒரு அரசியல் சட்ட வல்லுனர். அந்தாள் வைச்ச தீர்வு உங்களுக்கு விளங்கேல்லை எண்டா என்ன போட்டுத் தள்ளுறதே.

அது என்ன இயக்கத்தில் ஒருத்தரும் பொம்பிளையளை பார்க்கக் கூடாது. தொட்டும் பாக்கக் கூடாது என்று சட்டம் போடுறியள். தொட்டதுக்காக சுட்டும் போடுறியள். ஆனா உண்ணாவிரதம் இருந்த பெட்டையளைத் தூக்கிக்கொண்டு போறியள்.  மதியை வாட்டசாட்டமா கண்டவுடனை மெதுவா தொட்டும் பாக்கிறியள். மஞ்சள் தண்ணி வேறை ஊத்துறியளாம். பிள்ளையும் பெறுறியள். அதை பிழையென்று நான் சொல்ல வரேல்ல. ஆனா ஒழுக்க விதி என்ற பெயரிலேயே உமாவையும் சுட்டியள். கூட இருந்தவனை சுட்டியள். பிறகு மாற்றத்தின் தேவையை தலைவருக்கு சதி வரும் போது உணர்ந்தீர்கள் தானே.  கால மாற்றத்தைக் கண்டு ஒழுக்க விதியையும் மாத்தினீர்கள் தானே. அதுதானே ஒரு போராட்ட அமைப்புக்கு தேவையான கொள்கையும் கூட. அதே போல சந்திரிகா தலைமையில் வந்த வள்ளத்தில் ஏறியிருந்திருக்க அல்லவா வேண்டும். இது என்ன உங்கள் குடும்பச் சொத்தா? 60000 மக்கள் பலியாகியிருந்த அந்தச் சந்தர்ப்பத்தில் இந்த வள்ளம் வன்னிக் கடலில் நின்றபோது ஏறமறுத்து தமிழ் மக்களின் தலைவிதியை நாசமறுத்து போட்டு ஜ.நா வுக்கு கடிதம் போட்டால் உது என்ன விளையாட்டு.

ரெலோ எதிரி. ஈபி எதிரி. மகிந்த எதிரி. இந்தியா எதிரி. அமெரிக்கா எதிரி. ஜரோப்பா எதிரி. முஸ்லிம்கள் எதிரி. கருணா, பிள்ளையான் எதிரி. புளட் எதிரி. புளியம் பொக்கணை பொன்னம்மாக்கா மகளை அனுப்ப மறுத்ததாலை அவவும் எதிரி. சரி அதை விடுவம். தமிழ் பேரவையையும் தீபம் தொலைக்காட்சி சாமும் மனிசியும் தவிர புலிகளுக்கு யார் நண்பர்கள். யாராவது ஒரு நாடு. ஒரு கட்சி (TNA) ஜோக் அடிக்கக் கூடாது நான் சீரியசா கேக்கிறன். ஒரு சங்கம். ஏன் நீர் மாடுகள் மாதிரி சாய்த்துக் கொண்டுபோய் சுத்திவர விட்டு விட்டு நடுவிலே நின்று உயிர்ப்பிச்சை கேட்கும் வன்னி மக்களில் குறைந்தது 3 பேராவது ஆதரவளித்தால் தமிழீழம் சாத்தியம் என்று நம்பலாம். அதில் எதுவுமே சாத்தியமில்லாமல் பொட்டனையும் நடேசனையும் தவிர இயக்கத்தில் இருந்த அத்தனை திறமை சாலிகளையும் எதிரியாக்கி போட்டு 40 கி.மீ.பரப்பளவுக்குள் ஓடி ஒழிந்து கொண்டு சர்வதேச சமூகம் கண்ணைத் திறக்க வேண்டும் என்று அறிக்கை விட்டால் இது என்னப்பா விளையாட்டு. அரசியல் ஒரு விளையாட்டு அரங்கு என்று இதற்க்குத்தான் சொன்னார்களோ?

ஜயா சர்வதேசத்துக்குள் தான் இந்தியா இருக்கு. இந்தியாவிலை வைச்சு ராஜீவை போட்டியள். சர்வதேசத்துக்குள் தான் பிரான்ஸ் இருக்கு. அங்கு வைத்துத்தான் சபாலிங்கத்தைப் போட்டியள். ஏன் உங்கட நாதனை கஜனைப் போட்டியள். சர்வதேசத்துக்குள் தான் இங்கிலாந்து இருக்கு. இந்த நாட்டுப் பிரசை அதுவும் உங்களுக்கு வாலாட்டிக் கொண்டிருந்த ஒரு அபிமானி பார் என்றால் பளார் என்று அறைந்துவிடும் அளவுக்கு அபிமானி. இந்த பிரித்தானிய பிரைசையைக் கூப்பிட்டு வெளிநாட்டுக் கோவணத்தையும் அவிட்டுப் போட்டு எலியை விட்டா? (இந்த ‘கோவணம்’ அண்ணன் ‘ராசாகரனின்ட மார்க்ஸிச டிக்சனரியில’ இருந்து சுட்டது. அவருக்கு எனது நன்றிகள் உரித்தாகட்டும்.) இது என்ன அம்மண விளையாட்டு. இது ஏதும் கல்தோன்றி மண்தோன்றாக் காலத்து முன்தோன்றிய தமிழர்களின் வீர விளையாட்டுகளில் இதுவும் ஒன்றோ?

சர்வதேசத்திற்குள் தான் கனடா இருக்கு. அங்கை பத்திரிகை ஆசிரியர்களை அடிச்சியள். இப்படி சர்வதேசம் முழுக்க நாசம் பண்ணிப்போட்டு. இப்ப உங்கட கோவணத்தையும் மகிந்த பிறதேர்ஸ் புடுங்கப் போறாங்கள் என்ற உடன ஒபாமாவுக்கு கடிதம் போடுங்கோ. இன்ரநஷனல் கொம்மியூனிற்றை சொல்லுங்கோ எண்டா. எங்கை நீங்கள் அநியாயம் பண்ணாது விட்டீர்கள் நாம் அங்கு சென்று முறையிட. அதென்ன ஜெயதேவனின்ர கோவணத்தைக் கழற்றும் போது ஒருவருக்கும் நீங்கள் கடிதம் போடச் சொல்லேலை. பிரபாகரன்ரை கோவணம் பறிபோகும் போது மட்டும் துள்ளினா இது என்னப்பா நியாயம். வேணும் என்றால் சாம் பிரதீபனிடம் சொல்லி அண்ணையின் கோவணம் என்ற தலைப்பில் ஒரு போன் இன் (Phone in) புறோக்கிறாம் வைக்கச் சொல்லுங்கோ. சந்தா கட்டின ஆக்களை பைத்தியக்காரர் என்று நினைக்கும் தீபம் நிருவாகம் நிச்சயம் அனுமதிக்கும் என்று நினைக்கிறேன். என்னடா GTV, IBC பற்றி வாயே திறக்கிறான் இல்லை என்று யோசிக்க வேண்டாம். அதுதான் திறந்தாலே தெரியுமே.

சரி எல்லா வள்ளத்தயும் விடுவோம். கடைசியாக வந்தது நோர்வேயிலிருந்து ஹெலி. தமிழர்களின் போராட்ட வரலாறில் கவுரவமாக ஒரு தீர்வை அடைவதற்கான கடைசி வழி. இரணைமடுக் குளத்திலை ஏறுறியள். மாலை தீவிலை இறங்கிறியள். தாய்லாந்து போறியள். சரக்கு வேறை பாக்கிறியள். சமஜ்டி முறையிலான ஒரு தீர்வுக்கு கையொப்பம் இட்டு விட்டு நாடு திரும்பின கருணாவை நாட்டை விற்று விட்டு வந்துவிட்டான் என்று நையாண்டி பண்ணிவிட்டு கவுரவமான ஒரு தீர்வுக்கு கிடைத்த ஹெலியை தவறவிட்ட வரலாற்றில் தமிழினம் என்றும் மன்னிக்க முடியாத  தவறை இழைத்திருக்கிறார் பிரபாகரன்.

நீங்கள் காலில் விழுந்து கதறியழுது, செஞ்சிக் கூத்தாடி, பிச்கைச கேட்டு கடிதப் போட்டு, மண்டியிட்டு, தமிழினம் வரலாற்றில் காணாதா அவமானங்களையும், இழிவுகளையும் சந்திக்க வைத்து, இன்று புதுக்குடியிருப்பு காட்டுக்குள் புடையன் பாம்புகள் போல வெடிபட்ட கரடிகள் போல வெந்து துடிக்கிறீர்களே ஒரு வேளை பிரபாகரனும் பொட்டனும் சக பாடிகளும் இந்த இறுதி அழிவிலருந்து தப்பித்துக் கொண்டாலும் தமிழினத்தின் மரியாதை கௌரவம் நியாயமான தீர்வு என்று அத்தனையையும் குழி தோண்டிப் புதைத்ததற்காக வரலாறு உங்கள் மீது காறி உமிழும் என்பதை மறந்து விடவேண்டாம்.

எத்தனை வள்ளம் வந்தது. எத்தனை ஹெலி வந்தது. எத்தனை தடவை எங்கள் மக்கள் கவுரவமாக வாழக் கூடிய சந்தர்ப்பம் வந்தது. அத்தனையையும் போட்டு நொருக்கி விட்டு ‘உள்ளே விட்டு அடிப்பார்’ என்ற கனவில் இருந்த புலத்து ‘மா’க்களிடம் கேட்பது இதுதான். காப்பாற்றப்பட வேண்டியது வன்னி மக்களும் அவர்களது வாழ்வும். அது உங்கள் உள்ளங்களை உறுத்தினால் ஊர்வலம் செல்லுங்கள். வன்னி மக்களை விடுவிக்கும்படி. உண்ணாவிரதம் இருங்கள். உயிர்களைக் காப்பாற்றும் படி. எண்ணை ஊற்றி உங்களை நீங்களே கொழுத்துங்கள். பிரபாகரனே உனது முட்டாள் தனத்திற்கு ஒரு எல்லை இருக்கு. போதும் பிளளைகளைக் கூட்டிக்கொண்டு எங்காவது தொலைந்து விடும்படி. தமிழர்கள் இனி தங்கள் தலைவிதியை ஏகப்பட்ட பிரதிநிதிகளிடம் கொடுத்து நிர்ணயித்துக் கொள்ளட்டும்.

தேர்தல் அறிவிப்புடன் புது வேகத்தில் நகரும் ஈழ ஆதரவுப் போராட்டங்கள் : தினக்குரல்

vaiko-black-flag.jpgஈழத்தில் தொடரும் தமிழினப் படுகொலையை கண்டித்தும் யுத்தநிறுத்தத்தை வலியுறுத்தியும் தமிழகத்தில் நடக்கும் போராட்டங்கள் இந்திய நாடாளுமன்றத் தேர்தல் “புயலில்’ சிக்கி தொய்வு ஏற்பட்டு விடுமோ என்று தமிழுணர்வாளர்கள் மத்தியில் ஏற்பட்ட அச்சத்துக்கு மாறாக போராட்டங்கள் புதுவடிவம் பெற்று முழுவீச்சில் வீறுகொண்டுள்ளதுடன் நடக்கப்போகும் நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தில் இலங்கைத் தமிழர் பிரச்சினையை அரசியல் ஆக்குவோம் என்று தேசிய, மாநில அரசியல் கட்சிகள் போர்க்கொடி உயர்த்தியிருப்பது மக்களைச் சிந்திக்க வைத்துள்ளது.

கடந்த வாரம் “தமிழீழ விடுதலை ஆதரவு கூட்டமைப்பின்’ சார்பில் இருபத்து ஐந்து அமைப்புகள் சென்னையிலுள்ள இலங்கை துணைத் தூதரகத்தின் முன்பாக “தூதரகத்தை இழுத்து மூடும்’ போராட்டத்தை ஒருபுறம் நடத்த, மறுபுறம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பாக ஐம்பது கிலோ மீற்றர் தூர “நாம் தமிழர் நடைப்பயணம்’ அறுநூறு குழுக்களாக மாவட்டம் தோறும் பிரிந்து செயல்பட மாநிலக் கல்லூரி மாணவர்கள் சென்னையில் தடையை மீறி போராட்டம் நடத்தி சிறை நிரப்பியுள்ளனர்! இத்தனைக்கும் நடுவே, அ.தி.மு.க.பொதுச் செயலாளர் ஜெயலலிதா திடீரென அறிவித்திருக்கும் ஈழத் தமிழருக்கான உண்ணாவிரதப் போராட்டம் சிகரம் வைப்பதுபோல் அமைந்துவிட்டது.

தமிழகத்தில் தலைதூக்கியுள்ள மும்முனைப் போராட்டங்களில் மக்கள் இன்று திக்குமுக்காடிக் கொண்டிருக்கின்றனர். ஒருபக்கம் வழக்கறிஞர்கள், பொலிஸார் மோதல் விவகாரம்; மறுபக்கம் நாடாளுமன்றத் தேர்தலின் எதிரொலி. நடுவே இருபக்கங்களையும் இணைக்கும் ஈழத் தமிழருக்கான ஆதரவுப் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள்!

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் கடந்த மாதம் 19ஆம் திகதி வழக்கறிஞர்களுக்கும் பொலிஸாருக்குமிடையே மூண்ட பயங்கரமோதலைத் தொடர்ந்து இருசாராருக்கும் ஆதரவாக அங்குமிங்கும் உண்ணாவிரதப் போராட்டங்களும் கறுப்புக்கொடி ஏந்திய ஆர்ப்பாட்டங்களும் தொடர்ச்சியாக நடைபெற்றுவரும் நிலையில் வழக்கறிஞர்கள் நீதிமன்றங்களைப் புறக்கணித்து வருகின்றனர். சில மாவட்டங்களில் நீதிமன்ற உள்ளிருப்பு போராட்டம் நடக்கிறது. விழுப்புரம் நீதிமன்றத்தில் கடந்த வாரம், வழக்காட முயற்சித்த தி.மு.கழக ஆதரவு வழக்கறிஞர்களுக்கும் நீதிமன்றப் புறக்கணிப்பு செத அ.தி.மு.கழக ஆதரவு வழக்கறிஞர்களுக்குமிடையில் மூண்ட மோதல், பின்னர் திண்டிவனம் நீதிமன்றத்திலும் தொடர்ந்து வன்செயலில் முடிந்தது. தி.மு.கழக வழக்கறிஞர்கள் ஜெயலலிதா உருவ பொம்மையையும் அ.தி.மு.க. வழக்கறிஞர்கள் கலைஞர் கருணாநிதி உருவ பொம்மையையும் எரிக்கமுயன்று தடுக்கப்படவே இவர்கள் ஜெயலலிதா, கருணாநிதி, ஸ்டாலின் பதாகைகளை தீயிட்டுக் கொளுத்தினர்.

சென்னையில் ஐநூறுக்கும் அதிகமான வழக்கறிஞர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டனர். சில மாவட்ட தலைநகரங்களில் வாயில் கறுப்புத் துணி கட்டி வழக்கறிஞர்கள் மௌன ஊர்வலம் நடத்தினார்கள். சென்னை உயர் நீதிமன்ற மோதல் குறித்து விசாரணை நடத்திய நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா, (டில்லி) உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணனிடம் அறிக்கை தாக்கல் செதிருந்த போதிலும் இதனை எழுதிக் கொண்டிருக்கும் வரை மேற்படி அறிக்கை மீதான உச்ச நீதிமன்றத் தீர்ப்பு உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை. ஆனாலும், மோதலுக்கு காரணமான பொலிஸார் மீது நடவடிக்கை எடுக்கும்வரை நீதிமன்றப் புறக்கணிப்புப் போராட்டம் தொடரும் என்றும் அந்த நடவடிக்கையும் வெறும் இடமாற்றம் என்றில்லாமல் இடைநீக்கம் ஒன்று இருக்க வேண்டும் என்றும் வழக்கறிஞர்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.

பொலிஸ் வழக்கறிஞர்கள் மோதல் பின்னர் வழக்கறிஞர்களுக்கிடையே மோதலாக மாறி, இப்பொழுது கட்சி ஆதரவு வழக்கறிஞர்கள் மோதலாக முடிந்திருக்கிறது. இவர்கள் மோதலினால் நீதிமன்றங்களே இயங்கமுடியாதிருக்கிறது.

நாடாளுமன்றத் தேர்தல் நிலைமை

கட்சியைக் கட்டிக் காப்பதிலும் கூட்டணி உருவாக்குவதிலும் கடந்தவாரம் முழுவதும் கணக்குப் பார்த்த அரசியல் தலைவர்கள், நாளை முதல் தங்கள் பலத்தை வெளிப்படையாகக் காட்டத் தொடங்குவார்கள். இன்றைய நிலையில் காங்கிரஸ் தி.மு.க.கூட்டணி என்றும் பாரதிய ஜனதா கூட்டணி என்றும் இடதுசாரிக் கட்சிகள் தலைமையில் எட்டுக் கட்சிகள் அங்கம் வகிக்கும் மூன்றாவது அணி என்றும் மூன்று முக்கிய அணிகள் தேர்தல் களத்தில் குதித்துள்ளன. எதிர்வரும் பன்னிரண்டாம் திகதி உதயமாகும் மூன்றாவது அணியில் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்ஸிய கம்யூனிஸ்ட், பார்வார்ட் புளக், புரட்சிகர சோஷலிஸ்ட், தெலுங்கு தேசம், தெலுங்கானா ராஷ்டிரியசமிதி, மதசார்பற்ற ஜனதாதளம் அ.தி.மு.க. காங்கிரஸுக்கு அழைப்பு விடுத்து, அழைப்பு புறக்கணிக்கப்பட்ட நிலையில் “நான் விடுத்தது அழைப்பல்ல, வெறும் ஆலோசனை’ என்று ஜெயலலிதா இப்பொழுது விளக்கம் அளித்திருப்பதன் மூலம் மூன்றாம் அணியில் அ.தி.மு.கழகம் இணைவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தே.மு.தி.க.தலைவர் நடிகர் விஜயகாந்த் தனது நிலைபற்றி வாதிறக்காவிட்டாலும் அவருக்கு காங்கிரஸ் தி.மு.க.கூட்டணியில் ஐந்து தொகுதிகள் ஒதுக்கப்பட்டுவிட்டதாக டில்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேநேரம், இக்கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கும் ஒரு இடம் கிடைத்திருப்பதாக தகவல். தொல்.திருமாவளவனுக்கு எதிராக காங்கிரஸ் தலைவர்கள் பலர் கடும் எதிர்ப்புத் தெரிவித்த போதிலும் அ.தி.மு.க. கூட்டணியில் வைகோ இருப்பதையும் உரத்தகுரலில் புலி ஆதரவு எழுப்பியும் “அம்மா’ கண்டுகொள்ளாமல் இருப்பதையும் காரணம் காட்டி வெற்றி ஒன்று மட்டும்தான் குறிக்கோளாக இருக்க வேண்டும் என்று “டில்லி அம்மா’ கூறி வாயை அடைத்துவிட்டாராம். “நான் தி.மு.க. கூட்டணிக்காரன். காங்கிரஸ் கூட்டணியில் நான் இல்லை’ இது திருமா மந்திரம். இதுமட்டுமல்ல, “ஈழத்தமிழன் தமிழினம் இதுதான் எனது குறிக்கோள். இலட்சியம். தேர்தல், பதவி எல்லாம் இரண்டாம் பட்சம்தான்!’ என்று அடிக்கடி கூறுகிறார் தொல்.திருமாவளவன்.

தேர்தலில் குதிக்கும் சமத்துவ கட்சித் தலைவர் சரத்குமார் தனித்துப் போட்டியிட தயாரில்லை. ஏதாவது ஒரு அணியின் பச்சை விளக்கை எதிர்பார்த்திருக்கிறார்.

ஈழத் தமிழர் ஆதரவு

நாடாளுமன்றத் தேர்தலினால், பிரசாரத்தினால்,ஈழத் தமிழர் ஆதரவுப் போராட்டங்களில் தொவு ஏற்பட்டுவிடுமோ என்று தமிழ் உணர்வாளர்கள் அச்சப்பட அவசியமில்லாத அளவுக்கு உணர்வுத் தீ எரிந்து கொண்டே இருக்கிறது. கல்லூரிகள் முழு அளவில் திறக்கப்படாதபோதிலும் மாணவர்களின் பங்களிப்பு நீடிக்கிறது. பல்வேறு போராட்டங்களை அவர்கள் தொடர்ச்சியாக நடத்தி வருகின்றனர். கட்சிகள் தரப்பில் மட்டுமன்றி தமிழ் அமைப்புகள் கூட மாவட்டங்கள் தோறும் ஆர்ப்பாட்டங்கள் நடத்திவருகின்றன.

கடந்த திங்கட்கிழமை இருபத்து ஐந்து தமிழ் அமைப்புகள் ஒன்றுகூடி, சென்னையிலுள்ள இலங்கை துணைத் தூதரகத்தை இழுத்து மூடக்கோரும் போராட்டத்தை நடத்தின. “தமிழ் மக்களே அணிதிரள்வோம்’ “ஈழத்து இனப்படுகொலையைத் தடுத்து நிறுத்துவோம்’ என்று முழக்கமிட்டு பல்வேறு கோஷங்களை எழுப்பினர். தமிழீழ விடுதலை ஆதரவுக் கூட்டமைப்பு ஆதரவில் நடைபெற்ற இப்போராட்டத்தில் சுமார் முந்நூறு பேர் கைதாகி விடுதலை செயப்பட்டனர். ஈழத் தமிழின விடுதலைக்கும் ஆதரவுக்கும் உரமேற்றும் வகையில் தமிழ்நாடு முழுவதும் உள்ள கல்லூரிகளின் மாணவர்களைக் கொண்டு “தமிழ் மாணவர் பேரவை’ என்ற வலுவான அமைப்பையும் அழிவிலிருந்து இனத்தையும் மொழியையும் காப்பாற்ற அரசியல் கடந்து பணியாற்ற “தமிழ் இளைஞர் பேரவை’யும் தொடக்க விழா சென்னையில் கடந்த வாரம் நடைபெற்றது. தொல். திருமாவளவன், கவிஞர் காசி ஆனந்தன், பாவாணன், இயக்குநர் மணிவண்ணன், உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் பால்.கனகராஜ், வணிகர்சங்க பேரவைத் தலைவர் வெள்ளையன், தமிழ்நாடு மீனவர் பேரவைத் தலைவர் அன்பழகனார், மு.பாலகுரு, பேராசிரியர் அறிவரசு உட்பட பலர் எழுச்சி உரை நிகழ்த்தினார்கள்.

கட்சி சார்பற்ற தமிழ் இன உணர்வாளர்களை ஒன்றுசேர்ப்பதில் தீவிரமாக ஈடுபட்டுவரும் இயக்குநர் விஜ டி.ராஜேந்தர், “”தமிழ் இன பாதுகாப்பு முன்னணி’ எனும் அமைப்பை ஆரம்பித்து ஈழத்தில் நடக்கும் இனப்படுகொலைக்கு எதிராக குரல் கொடுத்துள்ளார். தமிழினப் படுகொலையை சர்வதேச மட்டத்தில் கொண்டுவர எல்லா முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்று அறிவித்துள்ளார்.

இனப்படுகொலையைக் கண்டித்து தமிழகத்தின் முக்கிய நகரங்களில் தொடர்ச்சியாக கண்டனக் கூட்டங்களையும் ஐ.நா.வுக்கான மனுவில் இரண்டு கோடி கையெழுத்து வேட்டையும் நடத்திவரும் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்திவருகிறது.

வழக்கறிஞர்கள் பொலிஸ் மோதல் மற்றும் பாராளுமன்றத் தேர்தல் பிரசாரம் களைகட்டியபோதிலும் ஈழத் தமிழருக்கு ஏற்பட்ட கொடுமைக்கு எதிர்ப்பும் கண்டனமும் தெரிவிக்கும் போராட்டங்கள் எதுவுமே வலுவிளக்கவில்லை. மாறாக கொளுந்து விட்டெரிந்து தேர்தல் முடிவுகளையே மாற்றும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. தமிழக மக்களை பெரிதும் பாதித்துவிட்ட ஈழத் தமிழர் பிரச்சினை எதிர்வரும் தேர்தலில் நிச்சயம் எதிரொலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாரதிய ஜனதாக் கட்சி இதற்கு உடனடியாகவே பச்சை விளக்கு காட்டிவிட்டது!

பாராளுமன்றத் தேர்தலில் இலங்கை இனப் படுகொலையைத் தடுக்க மத்திய அரசு தவறிவிட்டதை முன்வைத்து பா.ஜ.கட்சி பிரசாரம் செயும் என்று பா.ஜ.க. தமிழ் மாநிலத் தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், “இலங்கை இனச் சிக்கலில் தமிழர்களுக்கு மத்திய அரசு இரண்டகம் செய்துவிட்டது. பொறுப்பும் கடமையும் இருந்தும் செய்ய வேண்டியதை செய்யாமல் செய்யக்கூடாததை இந்திய மத்திய அரசு செய்திருக்கிறது.

தமிழர் படுகொலையை தடுத்து நிறுத்தவோ போர் நிறுத்தத்தை ஏற்படுத்தவோ நடவடிக்கை எடுக்கவில்லை. விடுதலைப் புலிகளை ஒழிக்கின்றோம் என்ற பெயரில் அங்கு அப்பாவித் தமிழர்கள் கொன்று குவிக்கப்படுகிறார்கள். நாகர் கோவிலில் அத்வானியால் தொடங்கிவைக்கப்படும் பா.ஜ.கட்சியின் தேர்தல் பிரசாரத்தில் இலங்கை இனப்பிரச்சினையே முக்கிய சிக்கலாக முன்நிறுத்தப்படும். மக்களவைத் தேர்தலில் பா.ஜ.கட்சி வெற்றிபெற்று ஆட்சிக்கு வந்தால் இலங்கை இனப்பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வு காணப்படும்’ என்று இல.கணேசன் சூளுரைத்தார்.

இதே கருத்தை இயக்குநர் தங்கர் பச்சானும் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார். சிறையில் அடைக்கப்பட்ட சீமானைப் பார்த்துவிட்டுவந்த தங்கர்பச்சான் செதியாளர்களிடம், “தமிழர் அணி எனும் பெயரில் ஒரு புதிய அமைப்பு உருவாக வேண்டும். இளைஞர்கள், வழக்கறிஞர்கள் உள்ளிட்ட தமிழ் உணர்வுமிக்க அனைவரும் கட்சியே தங்களைத் துறந்து இதில் திரள வேண்டும். இந்த அமைப்பின் அரங்கேற்றமாக இயக்குநர் சீமான் ஒரு தொகுதியில் போட்டியிட வேண்டும்’ என்று வலியுறுத்தினார்.

இயக்குநர் மணிவண்ணன் தமிழகத்தில் நடைபெறும் பல்வேறு கூட்டங்களில் கலந்துகொண்டு இலங்கை போர்நிறுத்தத்தை வலியுறுத்தியும் அங்கு தமிழினத்தை அழிவிலிருந்து காப்பாற்றுமாறும் குரல் கொடுத்து வருகின்றார். தமிழக சஞ்சிகை ஒன்றுக்கு மணிவண்ணன் அளித்த சிறப்புப் பேட்டியில் அவர் போட்ட “கணக்கு’ இது.

இலங்கையின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிட முடியாது என்று அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறுகிறார். ஆனால், இலங்கையில் சார்க் மாநாடு நடந்தபோது பிரணாப் முகர்ஜி அங்கு போகவில்லை. ரணிலும் சந்திரிகாவும் டில்லி வந்து பிரணாப் முகர்ஜியை சந்தித்துள்ளனர். விடுதலைப் புலிகள் வசம் இரண்டரை லட்சம் தமிழர் சிக்கியிருப்பதாக சிங்கள அரசு சில வாரங்களுக்கு முன்னர் அறிவித்தது. ஆனால், இப்போது வெறும் 75,000 தமிழர்கள் மட்டுமே இருப்பதாக அதே அரசு அறிவித்துள்ளது. இதே எண்ணிக்கையைத்தான் ரணிலும் சந்திரிகாவும் இப்போது சொல்கிறார்கள். பிரணாப் முகர்ஜியும் 75,000 தமிழர்கள்தான் உயிருடன் இருக்கிறார்கள் என்று உறுதிப்படுத்துகின்றார். அப்படியானால் இரண்டரை லட்சம் தமிழர்களின் எண்ணிக்கை 75,000 ஆக மாறியது எப்படி? மீதமுள்ளவர்கள் எங்கே போனார்கள்? இரண்டரை லட்சம் தமிழர்களை 75,000 ஆகக் குறைக்க சிங்கள அரசுடன் அந்நாட்டு எதிர்க்கட்சிகளும் சதித்திட்டம் தீட்டியிருக்கின்றன. அதையொட்டித்தான் முன்கூட்டியே தமிழர்களின் எண்ணிக்கையை குறைத்துக் காட்டுகிறார்கள். இந்த நிலையில் இலங்கைத் தமிழர் இனப்படுகொலையை மறைத்து அல்லது ஈழத் தமிழருக்கான வெளிப்படை ஆதரவைக் குறைத்து மதிப்பிடும் அரசியல் கட்சிகள் நிச்சயம் அதன் பலனை அனுபவித்தே ஆக வேண்டும் என்பது அரசியல் அவதானிகள் கருத்து.

தமிழகத்திலிருந்து கே.ஜி.மகாதேவா

நன்றி: தினக்குரல் 08.03.2009

சிலாபம், பள்ளமயில் கோர விபத்து; ஐவர் பலி; பத்துப் பேர் படுகாயம்

van-accidents-images.jpgசிலாபம், பள்ளம, மண்டலான பிரதேசத்தில் நேற்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உட்பட ஐவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளனர். இவர்களில் இருவர் சிறுவர்கள் என்று சிலாபம் தள வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. இச் சம்பவத்தில் பத்துப் பேர் படுகாயமடைந்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் அவ்வட்டாரங்கள் கூறின.

இச் சம்பவத்தில் உயிரிழந்துள்ள ஐவரும் நீர்கொழும்பு பெரியமுல்லையைச் சேர்ந்தவர்கள் என்றும், இச் சம்பவத்தில் பெரியமுல்லையைச் சேர்ந்த எட்டுப்பேர் படுகாயமடைந்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் முஸ்லிம்கள் எனவும் அவ்வட்டாரங்கள் குறிப்பிட்டன. இச்சம்பவத்தில் ட்ரக் வண்டியின் சாரதியும், நடத்துனரும் படுகாயமடைந்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் வட்டாரங்கள் கூறின.

இச் சம்பவத்தில் உயிரிழந்த முஹம்மத் ஈஸான் (வயது 38), பாத்திமா நஸ்மியா (வயது 28), முஹம்மத் அல்தாப் (வயது இரு வருடங்களும் ஆறு மாதங்களும்) பாத்திமா அன்ஜிலா (வயது ஏழு மாதங்கள்) ஆகியோரே ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்று குறிப்பிட்ட பெரியமுல்லை வாசியொருவர் பாத்திமா பாத்திலா (வயது 50) இவர்களது அயல் வீட்டவர் என்றும் கூறினார். ஆனமடுவ, சங்கட்டிகுளத்தில் திருமண வைபவமொன்றுக்குச் சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்த பெரியமுல்லைவாசிகள் பயணம் செய்த வானும், ட்ரக் வண்டியுமே நேற்று மாலை 5.15 மணியளவில் மோதுண்டு இவ்விபத்து ஏற்பட்டதாக பள்ளம பொலிஸார் கூறினர்.

ஆரியர் – திராவிட உறவும் யூத பெருமையும்: நாதன் (தேசம்நெற் கருத்தாளர்)

நாம் யூதர்களின் வரலாற்றை அறிந்து கொள்ளாது யூதர்களை எமக்கு உதாரணமாக எடுத்துக் கொள்வதால் மிகபெரும் வரலாற்றுத் தவறைப் புரிகின்றோம். வரலாறு பற்றிய பிரச்சனைகளுக்கு சில கருத்துக்கள் கூறவேண்டிய தேவையுள்ளது. குறிப்பாக யூதர்களை உதாரணம் காட்டுவதையும், ஆரிய திராவிட மோதல்கள் பற்றிய கருத்துக்கள் பல வரலாற்றுத் தவறுகளை உள்ளடக்கியதாக இருக்கின்றுது. இவற்றை வரலாறு பற்றி தவறான புரிதலை போக்க வேண்டியதும் அவசியமான தேவையாக இருக்கின்றது. இறுதிக் கட்டம் என்று புலம்பெயர் புலிகளால் பிரச்சாரம் செய்யப்படுகின்ற வேளையில் ஆரிய திராவிட முரண்பாடு என்பது 3500 வருட வரலாறு கொண்டதாக பிரச்சாரப்படுத்தப் படுகின்றது. இதுபற்றி புரிதல் சமூகத்தில் இல்லை. இவ்வாறான வேளையில் வரலாற்று திரிபுகள் சமூகத்தில் பல வேண்டாத பிரச்சனைகளைக் கொண்டு வந்துவிடும்.

திராவிட ஆரிய சிந்தனையை தற்பொழுது முதலில் கிளறிவிட்டது சிறிலங்கா இராணுவ அதிகாரியாகும். இவரே தற்பொழுது இலங்கை சிங்களவருக்கே சொந்தம் எனக் கூறினார். இவரின் வரலாற்றுக் கூறு கண்டிக்கப்பட வேண்டியதே. இத்துடன் இவர்களின் ஆரிய திராவிட இனக்கூறு பற்றிய மிகைப்படுத்தல் பற்றிய வெளிப்பாடு என்பது சிங்கள மக்கள் மத்தியில் ஊறியிருப்பதும் இனப்பிரச்சனை தீர்ப்பதற்கு பாதக இருக்கின்றது. ஆயுதங்களை விட ஆபத்தானது விசமத்தனமாக கருத்துக்களாகும். இவ்வகையாக விசக் கருத்துக்களை பல்முனைச் செயற்பாடுகள் மூலமே எதிர்த்துப் போராட முடியும்.

இன்று எம்மக்கள் மத்தில் இருக்கின்ற ஆரியச் சிந்தனை அல்லது ஆரியவகை உலகக் கண்ணோட்டம், சமஸ்கிருத மயமாதல் இவைகளை எமது சமூத்தில் இருந்து எதிர்கொள்வதும், இலங்கையில் இருக்கின்ற சிங்களவர்கள் எல்லோருமே ஆரிய இனத்தின் வழித்தோன்றல்கள் என்ற கருத்தியலையும் எதிர்க் கொள்வதானது போராடும் சமூகமாகிய எமக்கு அவசியமானதாகும். இவை மாத்திரம் அல்ல யூதச் சிந்தனை எமது மக்கள் மத்தியில் மதம் மூலமாக எம்மிடையே ஆழ வேர் ஊண்றியுள்ளது.

யூதர்களே தமிழர்களின் உதாரணம்?

யூதர்கள் எவ்வாறு ஒரு தேசத்தை உருவாக்கினார்கள் என்பது பற்றிய வரலாற்றுப் பார்வையை இங்கு முழுமையாக கொடுக்கவில்லை எனினும் சில சாரம்சத்தை இங்கு தருகின்றறேன். யூதர்கள் சர்வதேசத்தின் உதவியுடன் ஒரு தேசத்தை உருவாக்கிக் கொண்ட உண்மையைத் தான் நாம் தெரிந்து வைத்திருக்கின்றேம். அதற்கு பின்னால் இருக்கும் வரலாற்றை எம்மவர் தெரிந்து வைத்திருப்பதில்லை.

யூதர்களின் இஸ்ரேல் -பலஸ்தீன வரலாறு
யூதர்களின் உலகக் கண்ணோட்டும் எவ்வகையானது
அவர்களின் வாழ்க்கை முறை
யூதர்கள் புலம்பெயர்ந்த நாடுகளின் வரலாறு

சமகால அரசியல் (எவ்வாறு கிறிஸ்தவ நெறியை பின்பற்றும் ஏகாதிபத்திய உலகத்தின் பாதுகாப்பு அரணின் கீழ் யூததேசம் இருக்கின்றது என்பதையும், யூததேசம் எவ்வாறு மத்தியகிழக்கில் ஏகாதிபத்திய நலனைப் பாதுகாக்கின்றது என்பதை தெரிந்திருத்தல் வேண்டும்) இவைகளை அறிவதன் மூலமே யூதர்களின் உண்மையான வரலாற்றை அறிந்து கொள்ள முடியும்.

விவிலியத்தில் யூதரின் வரலாறு பற்றி பல ஆகமங்களாக பிரிக்கப்பட்டும், பல ஆசிரியர்களை எழுத்தாளர்களாக் கொண்டும் உள்ளது. வரலாற்றினை தொகுத்த போது முன்னுக்குப் பின்னாக வரலாறு கூறப்படுவதினால், அதன் காலமும் மாற்றம் கொண்டுள்ளது.

கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள்
கடவுள் வாக்களித்த தேசம் என தமது மேலான்மைக் கருத்தை முன்வைக்கின்றனர்.

காயின் ஆபேல் ஆகிய சகோதரர்களுக்கிடையேயான முரண்பாடு கூட இரண்டு வகை சமூகத்தின் உலகக் கண்ணோட்டத்திற்கும் இடையில் இடம்பெற்ற முரண்பாடுகளை பிரதிபலிக்கின்றது. மக்கள் பொருளாதார வளர்ச்சியடைந்த பிற்பாடு ஏற்பட்ட மாற்றாத்தினால் ஏற்படும் வர்க்க வர்க்க வளர்ச்சியினால் கீழ் நிலைக்கு வருகின்றனர்.

இவற்றிற்கு எகிப்து தேசத்தில் உருவாகிய நிலப்பிரபுத்துவச் சமூதாயத்தின் அரசியல் பொருளாதார அமைப்பானது யூதர்களின் இருப்பை கேள்விக் குறியாக்கியது.

‘எந்த நாட்டில் நீ புகுவாயோ, அந்த நாட்டுக் குடிகளை எல்லாம் கலங்கடித்து, நீ வரக் கண்டவுடன் உன் பகைவர் எல்லோரும் புறமுதுகுகாட்டியோடச் செய்வோம். நீ அவர்களுடைய நாட்டில் புகுவதற்கு முன்னர், நாம் பெரிய குளவிகளை அனுப்பி ஏனையரையும் கானானையரையும் ஏத்தையரையும் துரத்தி விடுவோம். அந்த நாடுகள் பாழாய்ப் போகாதபடியும், காட்டு விலங்குகள் பல்கி உன்னைத் துன்புறுத்தாதபடிக்கும், நாம் ஒராண்டிற்குள்ளே உன் முன்னின்று அவர்களைத் துரத்திவிடமாட்டோம். நீ பெருகி அந் நாட்டை உரிமையாக்கிக் கொள்ளும் வரை, அவர்களைச் சிறிது சிறிதாய் உன் முன்னிலையினின்று துரத்தி விடுவோம்.

(மேலும்) செங்கடல் தொடங்கிப் பிலித்தியரின் கடல் வரையிலும், பாலைநிலம் தொடங்கி ஆறு வரையிலும், உன் எல்லைகளை உங்கள் கைகளில் ஒப்படைப்போம். அவர்களோடும் அவர்களின் தெய்வங்களோடும் நீ உடன்பட வேண்டாம். அவர்கள் உன்னை எமக்கு எதிராகப் பழிசெய்யும்படி து}ண்டாவண்ணம், அவர்கள் உன் நாட்டிலேயே குடியிருக்க வேண்டாம்” (யாத்தியர் ஆகமம் 23-27-33)

பொருளாதார வளர்ச்சியினால் உயர் வர்க்கத்தின் (ஆழுமை கொண்ட இனத்தின்) தாக்குதல்களுக்கு ஈடு கொடுக்க முடியாத காரணத்தினால் போராட தொடங்குகின்றனர். மக்களை ஒன்றுதிரட்டிப் போராடுவதற்கு உண்மை எனக் கொள்ளக் கூடிய கருத்துருவத்தை உருவாக்க வேண்டியது அன்றைய காலத்தில் தேவையாக இருந்திருக்கலாம். இவ்வாறாக உருவாக்கப்பட்டதாக இவ்விரண்டு சின்னங்கள் இருந்திருக்கலாம். இந்த இரண்டு கருத்துக் கொண்ட சின்னங்கள் யூத, கிறிஸ்தவத்திலும் முக்கிய இடம் பெறுகின்றது. இந்த இரண்டு முக்கிய கருத்துக்கள் தமிழ் மக்களை மாத்திரம் அல்ல மற்றைய இனங்கள் எதனையும் சமத்துவமான இனவகை என்பதை ஏற்றுக் கொள்ளவில்லை.

புறவினத்தாரிடம் சென்று நற்செய்தியைப் போதியுங்கள் என்ற கோட்பாட்டுக்கமைய தமது கருத்துருவாக்கத்தை பரப்பி மற்றைய மக்களின் உலகக் கண்ணோட்டத்தை அழித்து தமது உலகக் கண்ணோட்டத்தை பரப்பு வதன் மூலம் தமது மேலாதிக்கத்தை ஏற்படுத்துகின்றனர். இதனை தமிழ் தேசிய வாதிகள் எவ்வாறு ஏற்றுக் கொள்கின்றார் என தெரியவில்லை. யூதர்களின் இனவெறி மிருகத்தனமானதாக உருவெடுத்துள்ளது.

வாக்களிக்கப்பட்ட தேசம், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் என்ற கருத்தியலின் காரணமாக இஸ்ரேல் நாட்டவருக்கும் பலஸ்தீனர்களுக்கும் இடையிலே ஒரு (வல்லரசுகளால் திணிக்கப்பட்ட) சமாதான தீர்வை நடைமுறைப்படுத்த முடியாமல் இருக்கின்றது. இஸ்ரேலிய நாட்டவரின் எதேர்ச்சாதிகாரத்தை நிலைகொள்ள வைப்பது அமெரிக்க, ஐரோப்பிய தேசத்தவர்களுடன், கிறிஸ்தவ உலகத்தவர்களின் உதவிகளேயாகும். ஒரு இனத்தினை தாழ்த்தி, தம்மை உயர்த்திக் கொள்ளும் தேசிய உணர்வுகள் ஏற்றுக் கொள்ளப்படக் கூடியவையா என்பதை நவீன உலகில் உழைக்கும் மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டுமா என்ற கேள்வி எழுப்புகின்றது. கிறஸ்தவ இறையியலைக் கொண்டு ஏன் பல நூற்றாண்டுகளாக தொடரும் யூத -பலஸ்தீனப் பிரச்சனையைத் தீர்க்க முடியவில்லை?

யூதரின் வரலாற்றை மாத்திரமே உண்மை எனக் கொண்டு அதனை ஏற்றுக் கொள்வதுடன், மற்றவர்களிடத்தில் வலியுறுத்துவதை இன்னும் சாதாரண மக்கள் மத்தியில் மாத்திரம் அல்ல, படித்த மக்களிடத்திலும் ஆழமாக ஊன்றியிருக்கின்றது. பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் தாம் வாழ்ந்த பூமியைத் தவிர மற்றைய தேசங்கள், இடங்கள் பற்றி அறிவு இருந்திருக்க நியாயம் இல்லை.

உலகின் ஒவ்வொரு முனைகளிலும் இருந்த மக்கள் தமக்கேயுரித்தான வரலாற்றைக் கொண்டு தான் இருந்திருக்கின்றனர். நாம் ஒவ்வொரு கண்டத்தை எடுத்துக் கொண்டாலும் பழமையான வரலாற்றைக் கொண்டிருப்பதை அறியலாம்.

யூதர்கள் தங்கள் முன்னோர்கள் பற்றி கூறும் போது ”இவ்விதமாய் உண்டான தலைமுறைகளெல்லாம் ஆபிரகாமிற்கு தாவீது வரைக்கும் பதினாலு தலைமுறைகளும், தாவீது முதல் பாபிலோனுக்கு சிறைப்பட்டுப் போன காலம் வரைக்கும் பதினாலு தலைமுறைகளும், பாபிலோனுக்கு சிறைப்பட்டுப் போன காலம் வரைக்கும் முதல் கிறிஸ்து வரைக்கும் பதினாலு தலைமுறைகளுமாம்.” (பக்கம் 1.மத்தேயு 1. அதிகாரம். 17 வசனம்)

நாம் யூதர்களின் வரலாற்றை அறிந்து கொள்ளாது யூதர்களை எமக்கு உதாரணமாக எடுத்துக் கொள்வது மிகபெரும் வரலாற்றுத் தவறை நாம் புரிகின்றோம்.

சியோனிசச் சிந்தனை இவ்வாறே வாக்களிக்கப்பட்ட தேசம் என்ற கருத்தமைவில் ஒரு தேசத்தை உருவாக்கிக் கொள்ளும் சிந்தனை உருவாகியது. யூத உலகக் கண்ணோட்டம், இனப்பாதுகாப்பு, வாக்களிக்கப்பட்ட தேசத்தை உருவாக்கிக் கொள்வது, தேர்த்தெடுக்கப்பட்ட மக்கள் கூட்டம் இவைகள் உள்ளடக்கியதே சியோனிச சிந்தனையாகும். இந்த சியோனிசச் சிந்தனையாது இஸ்ரேலிய தேசத்தை பலஸ்தீனத்தில் உருவாக்கிக் கொள்வதாக சியோனிச கொங்கிரஸ் தீர்மானம் கொள்ளவில்லை. ஆனால் இன்று உருவாகியிருக்கும் இஸ்ரேல் தேசம் என்பது மேற்கு உலகினால் கருத்திக்கப்பட்ட ஒரு சிசுவாகும்.

உலக மக்கள் யூதர்கள் மீது கொண்ட அனுதாபம் நாசிச அழிவின் எதிர்வினையாக உருவாகியது. இதனால் யூதர்களை தமது தேசங்களில் வைத்திருப்பதை தவிர்த்துக் கொள்ளும் பொருட்டு அன்று பிரித்தானியாவசம் இருந்த பலஸ்தீனத்தை துண்டாக்கி இஸ்ரேல் தேசத்தை உருவாக்கிக் கொண்டனர். இவர்கள் இன்று பலஸ்தீனர்களை உலகின் பலபாகங்களுக்கும் அகதிகளாக செல்ல காரணமாகி இருக்கின்றது.

திராவிடத்தின் வரலாறு 5500 வருடங்கள் பழமையானது சிந்து வெளி நாகரீகத்தினை உருவாக்கி பெருமையுடன் வாழ்ந்த இனம். தமிழினம் தன்னை கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தில் முன் தோன்றிய மூத்தகுடி என பெருமைப்பட்டுக் கொள்கின்றது. லெமூரியா கண்டத்தில் பிறந்த மனித இனம் என்று பெருமை கொள்கின்றது. விவிலியம் பரவுவதற்கு முன்னரே இயக்கர், நாகர் ஆகிய இனங்கள் இலங்கையில் இருந்ததாக வரலாறு கூறுகின்றது. அவர்கள் தமக்கென தனியான கலாச்சாரத்தைக் கொண்டு இருந்திருக்கின்றனர்.

யூதர்களின் சிந்தனையே மதமாற்றுத்திற்கு உட்பட்ட சமூகத்தில் புரையோடிப் போய் உள்ளது. எம்மவர்கள் தமது சொந்த சரித்திரத்தை தெரிந்து வைத்திருப்பதிலும் பார்க்க யூதர்களின் வரலாற்றை பக்கம் பக்கமாக தெரிந்து வைத்துள்ளனர். கிறிஸ்தவ உலகத்தின் சிந்தனை மேலேhடி இருப்பதினால் பலஸ்தீனர்களின் அலவத்திற்கான காரணம் விவிலியத்தில் இருந்து பெறப்பட்டது என்பதை அறிய முயற்சிக்காது இருக்கின்றனர். பலஸ்தீனத்தின் அவலம் இன்னும் தொடர்ந்த வண்ணமாக இருக்கின்றது. ஏன் சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற நோட்டே நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் மட்டத்தில் நடைபெற்ற கூட்டத்தொடரில் இஸ்ரேலின் பாதுகாப்பிற்கும், அவர்களின் செயற்பாட்டிற்கும் ஆதரவைத் தெரிவுத்துக் கொண்டது கிறிஸ்தவநாடுகளைக் கொண்ட நோட்டே அமைப்பு. இதேவேளை கமாஸ் தனது ஆயுதப் போராட்டத்தை கைவிட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டது.

புலிகளின் ஆதரவாளர், ஆய்வாளர் எனக் கூறிக் கொள்ளும் பிரேம் என்பவர் ஜிரிவியில் மக்கள் மீது குற்றம் சுமத்துகின்றார். அதாவது கடந்த காலத்தில் தனியே இராணுவ வெற்றிகளை இட்டு சந்தோசமடைந்தவர்கள். (இதற்கு யூதர்களைப் போல மூலதனத்தைப் பெருக்கி பெரும் பணக்காரர்கள் ஆகி, மேற்கு அரச யத்திரத்தை அசைக்கும் அளவிற்கு பொருளாதாரத்தில் வளரும் படி தீர்வை முன்வைத்தார்.)

யூதர்கள் பொருளாதாரத்தில் வலிமையாக இருந்தார்கள், இருக்கின்றார்கள். இவர்கள் போல தமிழர்களின் மூலதனம் வளர முடியுமா? இதற்கு பொருளாதார அமைப்பு இடம் கொடுக்குமா? சரி இன்றைக்கு தமிழ் முதலாளிகள் இருக்கின்றார்கள். இவர்கள் கொடுக்கும் சம்பளம் எவ்வாறு கணிக்கப்படுகின்றது. தமிழ் முதலாளிகளே தமிழ் தொழிலாளிகளை சுரண்டுவதை அனுமதிகக் கோருகின்றனர்.

தமிழ் மக்களிடையேயும், சிங்கள மக்களிடையேயும் இருக்கும் வரலாற்று உண்மைகள் பற்றி மயக்கம் என்பது ஆழ வேர் ஊன்றி இருக்கின்றது. இவற்றினை போக்குவது என்பது ஆழமாக சிந்தித்து உருவாக்கப்படும் வேலை முறைகளின் மூலமே இனங்களுக்கிடையிலான ஒற்றுமையை உருவாக்க முடியும்.

இதேவேளை அன்னிய வரலாறே மனித குலத்தின் வரலாறாக கற்பிக்கும் கிறிஸ்தவ, யூத வரலாற்றை தமிழ்தேசியம் எவ்வித கேள்வியும் முன்வைக்கவில்லை.இதேபோல ஆரியக் கடவுள்கள் திராவிடக் கடவுகள்களை அகற்றிவிட்டு முன்வருவதையும் தமிழ் தேசியத்தைப் போற்றுபவர்கள் புரிந்து கொள்ளவில்லை.

ஆரியச் சிந்தனையாகிய வண்ணாசிரமச் சிந்தனை எம்மீது ஆழவேர் ஊண்றியுள்ளது. இன்று இராம வழிபாட்டின் மூலமாக ஆரியச் சிந்தனை மென்மேலும் ஆழமாக வேர் ஊன்றுகின்றது. இவ்வாறு எம்மிடம் எமது வரலாற்றைத் தவிர மற்றைய சிந்தனைகளை உள்வாங்கி இருக்கின்றோம். இந்த சிந்தனையில் எதுவும் முற்போக்கானதாக இருக்கின்றதா?

முரளிதரனை சார்ந்தோர் தற்போது ஆயுதங்களை கையளிக்க மாட்டார்கள் பேச்சாளர் தெரிவிப்பு

karuna.jpgதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் தமது ஆயுதங்களை கழைந்தாலும் பாராளுமன்ற உறுப்பினர் கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளீதரனை சார்ந்தவர்கள் தமது ஆயுதங்களை தற்போதைக்கு கழைய மாட்டார்கள் என தெரிய வருகின்றது.

“தங்களைச் சார்ந்த சுமார் 3000 பேர் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொள்ளவிருப்பதாகவும் ,அவர்கள் உறுப்பினர்களாக அங்கத்துவம் பெறும் வரை ஆயுதங்களை வைத்திருப்போம்” என்றும் அவர்களைச் சார்ந்த பேச்சாளரான தட்சணாமூர்த்தி கமலநாதன் தெரிவிக்கின்றார்.

“அச்சுறுத்தல்கள் இருக்கும் போது ஆயுதங்களை கையளிக்க முடியாதுள்ளது.கிழக்கிலும் ஏனைய பகுதிகளிலும் செயல்படும் சில குழுக்களினால் இன்னும் அச்சுறுத்தல்கள் இருக்கின்றன.இதன் காரணமாகவே தற்போதைக்கு ஆயுதங்களை கழையக் கூடிய சூழ்நிலை இல்லை “என்றும் அவர் குறிப்பிட்டார். 

கண்ணிவெடியகற்றும் பணி தொடர்ந்து முன்னெடுப்பு

jaffna.jpgயாழ். மாவட்டத்தில் கண்ணிவெடியகற்றும் பணி இதுவரை கண்ணிவெடி அகற்றாமல் இருக்கும் எஞ்சியுள்ள ஒன்பது இடங்களில் அப்பணி ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருவதாக யாழ்ப்பாண செயலகத்தில் இயங்கி வரும் கண்ணிவெடியகற்றும் செயற்பாட்டு செயலகம் தெரிவித்துள்ளது.  “ஹலோ ரஸ்ட்’ மிதிவெடி அகற்றும் நிறுவனம் சங்கத்தானை கல்லூரி வீதி, சங்கத்தானை கோவிலடி, நுணாவில் கிழக்கு பிரதேசங்களில் மிதிவெடிகளை அகற்றும் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

டெனிஸ் கண்ணிவெடி அகற்றும் நிறுவனம் ஊர்காவற்றுறை, கரம்பொன், செம்மணிக்குளம், புத்தூர் மேற்கு, சங்கத்தானை ஆகிய இடங்களிலும் மிதிவெடி அகற்றும் பணியினை மேற்கொண்டு வருகின்றன. இவ்வாண்டுக்குள் யாழ்.குடாநாடு கண்ணிவெடியற்ற பிரதேசமாகுமெனவும் அதிகாரிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

அரச கட்டுப்பாடற்ற பகுதிகளிலுள்ள மக்களை வெளியேற்றுவது தொடர்பில் அமெரிக்கா ஆராய்ந்து வருகின்றது -பௌவுச்சர்

richard-boucher.jpgபுலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் சிக்கியுள்ள மக்களை வெளியேற்றும் வழிமுறைகள் தொடர்பாக அமெரிக்கா ஆராய்ந்து வருவதாக தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி ராஜாங்க செயலர் ரிச்சர்ட் பௌச்சர் தெரிவித்துள்ளார்.

மக்கள் வெளியேறுவதற்கு விரும்பும்போதும் அச்சுறுத்தல் சூழல்நிலை காரணமாக அவர்கள் வெளியேறுவது தடைப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். வாஷிங்டனில் தெற்காசிய ஊடகவியலாளர்கள் குழுவொன்றை சந்தித்து பேசியபோது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

“வடக்கு, தெற்கு என்றில்லாமல் சகலரும் ஐக்கியத்துடன் செயற்படமுன்வர வேண்டும்’

அரசாங்கம் பெண்களுக்கான குறைந்தபட்ச உதவியையேனும் பெற்றுக்கொடுப்பது பொறுப்பும் கடமையுமாகுமென்று ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துக்கோரள தெரிவித்துள்ளார். எதிர்கட்சித், தலைவரின் அலுவலகத்தில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மகாநாட்டில் கலந்துகொண்டு பேசுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் பேசுகையில்;

நாட்டில் பொருட்களின் விலைகள் என்றுமில்லாதவாறு அதிகரித்து வாழ்க்கைச் செலவை தாங்கிக் கொள்ள முடியாது பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசாங்கம் பொறுப்பற்ற விதத்தில் செயற்படுவதால் நாளுக்கு நாள் பெண்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இது தொடர்பில் குறைந்த பட்ச பாதுகாப்பையேனும் பெற்றுக்கொடுப்பது அரசின் பொறுப்பும் கடமையாகும். எமக்கு இதனால் இத்தருணத்தில் மகிழ்ச்சியடைய முடியாது.

வடக்கு, தெற்கு என்றில்லாமல் சகல இன மக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மகளிர் தினத்தன்று அணைவரும் வரும் வன்முறைக்கு எதிராக ஒன்றிணைந்து போகின்ற போது பெண்களை பாதுகாப்பது அரசின் பொறுப்பாகுமெனவும் தெரிவித்தார்.

95 நோயாளர்கள் திருமலையிலிருந்து மன்னார் பொது வைத்தியசாலைக்கு மாற்றம்

trico.gif
திருகோணமலை வைத்தியசாலையிலிருந்து மேலும் 95 நோயாளர்கள் நேற்று சனிக்கிழமை மாலை மன்னார் பொது வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைகளிற்காக அழைத்து வரப்பட்டுள்ளனர். அப்பியுலன்ஸ் வண்டிகள் மற்றும் தனியார் பேரூந்துகள் மூலம் இவர்கள் திருகோணமலை வைத்தியசாலையிலிருந்து மன்னார் பொது வைத்தியசாலைக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.

அழைத்துவரப்பட்டவரப்பட்டவர்களிற்கான உதவிகளை அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் மேகொண்டு வருகின்றன. இதுவரையில் வன்னியில் இடம்பெற்ற மோதல்கள் காரணமாக 822 பேர் மன்னார் பொது வைத்தியசாலைக்கு சிகிச்சைகளிற்காக அழைத்து வரப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. 

வெளிவிவகார அமைச்சர் வியட்நாம் விஜயம் இலங்கையில் தூதரகம் திறக்க அந்நாடு விருப்பம்

rohitha-sir-john.jpgவெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம வியட்நாமுக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். வியட்நாமின் பிரதி பிரதம அமைச்சரினதும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சரினதும் அழைப்பின் பேரில் வியட்நாமுக்கான இருநாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் போகொல்லாகமவுக்கும் வியட்நாம் பிரதி பிரதம அமைச்சருக்கும் வியட்நாம் வெளிநாட்டலுவல்கள் அமைச்சருக்குமிடையே இடம்பெற்ற உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைகளின் போது இரு நாடுகளுக்குமிடையே நிலவும் அதி சிறந்த இருபக்க தொடர்புகளின் நடைமுறை விடயங்களை ஆலோசித்தனர். இரு தரப்பு வர்த்தகத்தை அதிகரிப்பதன் பொருட்டு வியாபார நிபுணர் குழுக்களை பரிமாறிக் கொள்வதன் மூலம் இரு நாடுகளுக்குமிடையிலான கூட்டுறவுத்துறைகளுக்கிடையில் நெருக்கமான இணைப்புகளை அதன்மூலம் உருவாக்குவதற்கு அமைச்சர்கள் உடன்பட்டுள்ளனர்.

மேலும், பாதுகாப்பு விடயங்களிலும் புதிய உட்வேகத்தை கொடுத்து பாரம்பரிய ஒத்துழைப்பை விரிவாக்குவதற்கும் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. இலங்கையில் தூதரகம் ஒன்றை நிறுவுவதற்கான விருப்பத்தை வியட்நாமிய தரப்பினர்கள் தெரிவித்துள்ளனர். 1982 ஆம் ஆண்டில் மூடப்பட்ட வியட்நாம் தூதரகத்தை மீளத்திறப்பதற்கான வியட்நாமின் தீர்மானத்தை இலங்கை வரவேற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.