30

30

G20 கூட்டமைப்பும் லண்டனில் நடைபெறவுள்ள உச்சி மாநாடும் – (The G20- Part 1) : வி வசந்தன்

G20_Noteகடந்த சனிக்கிழமை (Mar 28, 2009)லண்டன் மாநகரில் பெரிய அளவில் கண்டன ஊர்வலம் ஒன்று “மக்களுக்கு முதலிடம் கொடு” என்னும் வானவில் கூட்டமைப்பினால் நூற்றி ஐம்பதுக்கும் அதிகமான தொழிற் சங்கங்கள், கிறிஸ்த்தவ தளங்கள், அரசு சார்பற்ற ஸ்தாபனங்கள் இணைந்து மிகவும் வெற்றிகரமாக நடாத்தினர். இது போன்று இன்னும் பல கண்டன ஊர்வலங்கள் இனிவரும் தினங்களில் நடாத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதில் சித்திரை முதலாம் நாள் “யுத்தத்தை நிறுத்துவதற்கான கூட்டமைப்பு”, “நிதி அழிவு (Meltdown)”, “மக்களும் கிரகமும்” “சூழல் பாசறை”  போன்ற அமைப்புகள் நடாத்த உள்ள எதிர்ப்பு ஊர்வலங்கள் மற்றும் இவற்றை தவிர சித்திரை இரண்டாம் நாள் பல விதமான ஜனநாயக போரட்டங்களையும் வேறுவேறு அமைப்புகள் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளன. அனைத்து அமைப்புகளும் வேறுவேறு நோக்கங்களுக்காக தங்கள் எதிர்ப்புகளை வெளிப்படுத்தினாலும் அவற்றின் அடிப்படை கோரிக்கையானது “லாபத்தை விட மக்களுக்கு முதலிடம் கொடு” என்பதே. இவ்வாறான ஒட்டுமொத்த எதிர்ப்புக்களையும்,  கண்டனங்களையும் சர்ச்சைகளையும் கிளப்பியிருப்பது சித்திரை இரண்டாம் நாள் நடைபெறவிருக்கும் G20 உச்சி மகாநாடு.
 
இம்மகாநாடு பத்தொண்பது நாடுகள், ஐரோப்பிய ஒன்றியம் (EU), தென் கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பு (ASEAN), ஆபிரிக்க அபிவிருத்திக்கான புதிய கூட்டுறவு (NEPAD), ஐக்கிய நாடுகள் சபை(EN) ஆகியவை பங்கு பற்றுகின்றன. G20 நாடுகளின் மொத்த சனத்தொகை உலக சனத்தொகையின் 67 சதவிகிதமும், இந்நாடுகளின் ஒட்டுமொத்த ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகம் அண்ணளவாக உலக நாடுகளின் 80 சதவிகித வர்த்தகத்திற்கு சமனாகவே உள்ளது. இவைதவிர உலக நாடுகளின் 90 விகித உள்நாட்டு உற்பத்தியை G20 நாடுகளே மேற்கொள்கின்றன. ஆகவே இந்நாடுகள் தமக்கிடையே உள்ள பொதுவான பொருளாதாரம் நிதி உலகமயமாக்கள் போன்ற விடயங்கள் தொடர்பாக தமது கருத்துக்களை பறிமாற்றிக்கொள்ளும் அத்தியாவசியத்தினை உணர்ந்து 1990 நடுப்பகுதியில் ஏற்பட்ட கிழக்காசிய நாடுகளின் அந்நியசெலாவணி நெருக்கடியினால் உந்தப்பட்டு 1999முதல் தொடக்கம் பல சந்திப்புகளை அந்நாடுகளின் அரசுகளின் தலைவர்களும், நிதி அமைச்சர்களும் மத்திய வங்கிகளின் ஆளுநர்களும் நிகழ்த்தியுள்ளனர். ஆனால் இம்முறை நடக்கவிருக்கும் சந்திப்பானது கடந்த ஆறு மாதங்களுக்குள் ஏற்பாடு செய்யப்பட்ட இரண்டாவது மிக முக்கியமான மகாநாடுவாகும்.

கடந்த பல வருடங்களாக பொறுப்பற்ற முறையில் உலக நிதியைக் கையாண்ட வங்கிகள், எச்சரிக்கையற்று இருந்த அரசு கட்டுப்பாட்டாளர்கள், பொறுப்பற்ற பொருளாதாரக் கொள்கைகள், நிபந்தனையற்ற எல்லைகளற்ற பணப்பாச்சல்கள், இவையனைத்தும் உருவாக்கியதே இந்த உலகளாவிய நிதியியல் நெருக்கடி. இந்த நெருக்கடியானது கடன் பெறுவதற்கான தட்டுப்பாட்டை ஏற்படுத்தி பொருளாதார தேக்கத்தையும் பின்னடைவையும் மேற்குலக நாடுகள் மட்டுமல்லாது ஏனைய வளர்ச்சியடையும் நாடுகளையும் பாதித்திருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

G20 குழுவின் நோக்கங்களும் கட்டுமாணங்களும்

இக்குழுவானது இதனுள் அங்கம் வகிக்கும் வளர்ச்சியடைந்த நாடுகளுக்கும் வளர்ந்து வரும் சந்தைகளை கொண்டிருக்கும் நாடுகளுக்குமிடையே உலக பொருளாதார திடநிலை தொடர்பாக வெளிப்படையானதும் உருப்படியானதுமான கருத்துப் பரிமாற்றம் செய்யும் கருத்தரங்காகவே ஸ்தாபிக்கப்பட்டது. நாடுகளின் அபிவிருத்தியயையும் அவற்றின் பொருளாதார வளர்ச்சியையும் ஆதரிப்பதும்; இவற்றிற்கு ஆதரவாக உலக நிதிக் கட்டுக்கோப்புக்களையும் பலப்படுத்துவதோடு தேசிய கொள்கைகள், உலகலாவிய ஒத்துழைப்பு, உலக நிதி ஸ்தாபனங்கள் போன்ற விடயங்களில் உரையாடலுக்கான வாய்ப்புக்களையும் ஏற்படுத்திக் கொடுப்பதும் இக்குழுவின் நோக்கமாக கொண்டு ஆரம்பிக்கப்பட்டது.

பேர்லினில் 2004 ஆண்டு கார்த்திகை மாதம் நடைபெற்ற நிதி அமைச்சர்கள் மத்திய வங்கி ஆளுநர்கள் அடங்கிய மகாநாட்டில் சில கொள்கை இணக்கங்கள் காணப்பட்டது. அவையாவன:

•பணம் நிதி ஆகியவற்றின் திடநிலை பேணல் (Stability)

•விலைகளின் திடநிலை பேணல், பணவீக்கத்தை கட்டுப்படுத்தல்

•உள்நாட்டு வரவு செலவுத்திட்ட பற்றாக்குறையை நிரவும் பொதுக்கடனானது அந்நாட்டின் உற்பத்திக்கு பொருத்தமான அளவில் பேணப்படல்.

•உள்நாட்டு நிதியியல் துறையை பலப்படுத்தல்

•அந்நிய செலாவணிக்கான கட்டுப்பாடுகளை கவனமாக தளர்த்தல்
    
•போட்டியை பேணல் (Competiton)

•உள்நாட்டு வெளிநாட்டு வர்த்தகங்கள் மீதுள்ள தடைகளை படிப்படியாக தளர்த்தல்

•நெகிழ்வான தொழிளாளர் சந்தையை உருவாக்குதல்

•சிறிய, மத்திய நிறுவனங்களை ஊக்குவித்தல்

•நேரடி வெளிநாட்டு மூலதனங்களை அனுமதித்தல்
 
•உரிமை கொடுத்தல் (empowerment).

•கல்வி கற்கவும் பயிற்சிகளைப் பெறவும் வசதிகளை செய்து கொடுத்தல்

•சிறிய நிறுவனங்களை ஆரம்பிக்க இலகு முறையில் கடன் பெற வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல்

•சமூக கட்டுமாணங்களான நன்நீர் வசதிகளை தருவது, சுகாதார சூழலை உருவாக்குதல்

  
கடந்த பத்துவருட காலங்களில் இக்குழுவின் சாதனைகள் என பட்டியல் போடப்படுபவை கீழே தரப்படுகின்றன:
•நாடுகளின் பொருளாதார வளர்ச்சி தொடர்பான கொள்கைகளில் இணக்கம்

•நிதி முறைமையை துஸ்பிரயோகங்களை குறைத்தல்

•நிதி நெருக்கடியை கையாள்வது

•பயங்கரவாதத்திற்கு பயன்படும் பண முதலீடுகளுக்கு எதிராக செயல்படல்

•உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட ஏற்புடைக் கோட்பாடுகளை பயன்படுத்தி இறைதிறை கொள்கைகளில் (Fiscal Policy) ஒளிவின்மையை கொணர்தல்

•உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட ஏற்புடைக் கோட்பாடுகளை பயன்படுத்தி பணச்சலவை, பயங்கரவாததிற்கு பயன்படும் பண முதலீடுகளுக்கு எதிராக செயல்படல்

•வரி ஏய்ப்பு, நிதி முறைமையை துஸ்பிரயோகங்கள், சட்டங்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்பான தகவல்களை பரிமாறிக் கொள்வது

•உலக நிதி கட்டுமாணத்தை மறுசீர்அமைப்பது.

•இவ்வருடம் பங்குனி 14 திகதி வெளிட்ட அறிக்கையில், இன்றைய நிதி குழப்ப நிலையிலிருந்து விடுபட நாடுகள் கூட்டாக செயல்பட வேண்டிய அவசியத்தினை வலியுறுத்தி மத்திய வங்கிகளின் ஆளுநர்கள், நிதி தொடர்பான விதிகளையும் அவற்றின் நிர்வாகத்தையும் செம்மைப்படுத்துவதன் மூலமே உலக நிதிச்சந்தையை சீராக்க முடியும் என ஏற்றுக்கொண்டனர்.

தேர்தலைவிட இலங்கை பிரச்சனைதான் முக்கியம்: சோனியா

sonia-gandhi.jpgகாங்கிரஸ் தலைவி சோனியாகாந்தி, தேர்தலை விட இலங்கை தமிழர் பிரச்சனைதான் முக்கியம்.  அப்பிரச்சனைக்கு நடவடிக்கை  எடுப்பதுதான் முக்கியம் என்று சொன்னதாக முதல்வர்  கருணாநிதி தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று  நடந்த திமுக சொற்பொழிவாளர்கள் கூட்டத்தில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

லாகூர் தாக்குதல் முடிவடைந்தது : 31 பேர் பலி

pakistan_attack.jpgலாகூருக்கு அருகே உள்ள மனாவான் பகுதியில் செயல்பட்டு வரும் காவலர் பயிற்சி மையத்தின் மீது திடீர் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளில் 6 பேரை பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர்.மேலும் 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து பிணையக் கைதிகளாக இருந்த பயிற்சிக் காவலர்கள் மீட்கப்பட்டனர்.

இன்று காலை 7.30 மணியளவில் காவலர்கள் போல் உடையணிந்த 10 பயங்கரவாதிகளைக் கொண்ட குழு, மனாவான் காவலர் பயிற்சி மையத்திற்குள் நுழைந்து கையெறி குண்டுகளை வீசியும், துப்பாக்கிச்சூடு நடத்தியும்,அங்கிருந்த 500க்கும் அதிகமான காவலர்களை பிணையக் கைதிகளாகப் பிடித்து வைத்தது.

இதையடுத்து பயங்கரவாதிகளை பிடிக்க மனாவான் காவலர் பயிற்சிப் பள்ளியில் ராணுவ வீரர்ர்கள் குவிக்கப்பட்டனர். ராணுவ ஹெலிகாப்டர்களும் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. பயிற்சி மையத்திற்குள் அதிரடியாக நுழைந்த ராணுவ வீரர்களுக்கும், உள்ளே இருந்த பயங்கரவாதிகளுக்கும் நீண்ட நேரம் சண்டை நீடித்தது.

இந்நிலையில், இன்று மாலை 4 மணியளவில் பயங்கரவாதிகளில் 6 பேரை ராணுவம் கைது செய்ததாகவும், மீதமுள்ள 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் அந்நாட்டு தொலைக்காட்சிகள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன் காரணமாக சுமார் ஏழு மணி நேரம் நீடித்த காவலர் பயிற்சி மையத் தாக்குதல் முடிவுக்கு வந்துள்ளது.இத்தாக்குதலில் 31 காவலர்கள் உயிரிழந்ததாகவும், 90 க்கும் அதிகமானோர் காயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த தாக்குதலுக்கு எந்த ஒரு பயங்கரவாத இயக்கமும் பொறுப்பேற்கவில்லை என்ற போதிலும், லஸ்கர் – இ – தயீபா அல்லது ஜெய்ஷ் – இ – முகமது காரணமாக இருக்கலாம் என சந்தேகிப்பதாக பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரெஹ்மான் மாலிக் தெரிவித்துள்ளார்.

இம்மாதத்தின் துவக்கத்தில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க லாகூர் வந்த இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய பரபரப்பு முற்றிலுமாக அடங்குவதற்கு முன்பாகவே, லாகூர் புறநகர்ப் பகுதியில் உள்ள காவலர் பயிற்சி மையத்தின் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

விஜயகாந்துக்கு எதிராக நடிகர் வடிவேலு பிரச்சாரம்?

vadivelu.jpgநடிகர் வடிவேலுக்கும் விஜயகாந்துக்கும் மோதல் இருந்து வருகிறது. வடிவேலு வீட்டின் முன் கார் நிறுத்தியது தொடர்பாக தேமுதிக தொண்டர்களுக்கும் வடிவேலுக்கும் இடையே 2007-ம் ஆண்டு தகராறு ஏற்பட்டது. தலைவர் படத்தில் நடிக்க மறுக்கிறாய், இப்போது எதிர்த்து வேறு பேசுகிறாயா என்று கேட்டு தன்னை விஜயகாந்தின் ஆட்கள் தாக்கியதாக போலீசில் புகார் செய்தார் வடிவேல்.

இதைத் தொடர்ந்து விஜயகாந்த், வடிவேல் சண்டை பூதாகரமானது. இந்நிலையில் வடிவேலு வீட்டின் மீது ஒரு கும்பல் கற்களை வீசி மிரட்டி சென்றது. இதனால் கோபத்தின் உச்சிக்கு சென்றார் வடிவேலு.

இந்த சம்பவத்துக்கு விஜயகாந்த்தான் காரணம் என்று சொன்னார். ஆனால் விஜயகாந்த் இதை மறுத்தார். எனினும் வடிவேலு சமாதானம் அடையவில்லை. திருமங்கலம் இடைத்தேர்தலில் விஜயகாந்த் காணாமல் போய்விடுவார் என்று வடிவேலு கூறினார். மக்களவை தேர்தலில் அவர் எந்த தொகுதியில் நின்றாலும் அவரை எதிர்த்து போட்டியிடுவேன் என்றும் விஜயகாந்துக்கு சவால் விட்டார். நகைச்சுவை நடிகனை அழவைத்து வேதனைப்படுத்தியவருக்கு தகுந்த பாடம் புகட்டுவேன் என்றும் வடிவேலு சொல்லி வந்தார்.

தற்போது தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், வடிவேலு – விஜயகாந்த் விவகாரமும் சூடு பிடித்துள்ளது. 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ள விஜயகாந்த் எல்லோருக்கும் முன்னதாக வேட்பாளர்கள் பட்டியலையும் வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில் தேமுதிகவுக்கு எதிராக வடிவேலு பிரசாரத்தில் குதிக்க தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து வடிவேலு இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடவில்லை.

5 ஆண்டு வேட்டி துவைப்பார்-5 ஆண்டு சேலை துவைப்பார் – விஜயகாந்த்

vijayakanth1.jpgஜெயலலிதாவுக்குப் பின்னால் ரோபோ போல நிற்கிறார் பாமக நிறுவனர் ராமதாஸ். அவர் ஐந்து ஆண்டுகளுக்கு வேட்டி துவைப்பார். ஐந்து ஆண்டுகளுக்கு சேலை துவைப்பார் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் நக்கலடித்துள்ளார். தூத்துக்குடி தேமுதிக வேட்பாளர் எம்.எஸ்.சுந்தரை ஆதரித்து நேற்று காலை செய்துங்கநல்லூரில் பிரசாரம் செய்தார் விஜயகாந்த்.அப்போது அவர் கூறுகையில்,

கூட்டணி வைத்துக் கொண்டால் சுதந்திரமாக செயல்பட முடியாது என்பதால் நான் மக்களோடும், தெய்வத்தோடும் மட்டும் கூட்டணி வைத்துள்ளேன். நான் உங்களை நம்புகிறேன். நீங்கள் என்னை நம்புங்கள்.மூப்பனார் உயிரோடு இருந்திருந்தால் நிச்சயம் அவர் சொல்லை நான் கேட்டிருப்பேன். காலையில் ‘டிவி’ பார்த்துக்கொண்டிருந்தேன். அப்போது அம்மா (ஜெ.,) முன்பாக ஒருவர் விரைப்பாக நின்றுகொண்டிருந்தார்.

அவர், ஐந்து ஆண்டுகள் வேட்டி துவைப்பார்; அடுத்த ஐந்து ஆண்டுகள் சேலை துவைப்பார். அவரது பெயரை நான் சொல்லாமலே உங்களுக்குப் புரியும். அந்த அளவுக்கு எல்லாம் நான் தன்மானத்தையும், சுயமரியாதையையும் விட்டுக் கொடுக்க மாட்டேன்.

அவரைப்போல நான் யார் முன்னும் நிற்க விரும்பவில்லை; மக்களாகிய உங்கள் முன் நிற்கிறேன். கருணாநிதியின் பின் நின்றுகொண்டு காங்கிரசார் எப்படி காமராஜர் ஆட்சியை ஏற்படுத்தமுடியும். எம்.ஜி.ஆர்., காலத்தில் பிரபலமான ஒரு கோஷத்தை நாள் கேள்விப்பட்டுள்ளேன். மகன், ‘பிள்ளையோ பிள்ளை’ என நடிக்கிறான். அப்பன், ‘கொள்ளையோ கொள்ளை’ என அடிக்கிறான் எனச் சொல்வர். அந்தக் கொள்ளை தற்போதும் தொடர்கிறது. தமது பிள்ளைகளுக்காக தமிழகத்தையே துண்டாடிவிட்டார்.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வோம் என்பது முக்கியமல்ல. மக்களாட்சியை கொண்டு வருவோம். மக்களின் ஆசி பெற்ற வேட்பாளர் என்று எனது வேட்பாளரை அறிவிக்கிறேன். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் திராவிடக் கட்சிகள் ஏமாற்றி வருகின்றன. எனக்கு பின்னால் அவர்கள் பிரசாரத்திற்கு வருவார்கள். எதை நம்ப வேண்டும், எதை நம்பக் கூடாது என்று உங்களுக்கு தெரியும்.

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி சபைக் கூட்டம் இன்று அமைச்சர் அமீர் அலி தலமையில்…

2009ம் ஆண்டுக்கான மட்டக்களப்பு அபிவிருத்தி சபைக் கூட்டம் இன்று அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அமீர் அலி தலமையில் மட்டக்களப்பு கேட்ப்போர் கூடத்தில் நடைபெற்றது.

இக் கூட்டத்திக்கு அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் மற்றும் கிழக்கு மாகாண ஆளுனர் லயன் நொகான் விஜய விக்கிரம ஆகியோரின் இணைத் தலமை வகித்திருந்தார்கள். அமைச்சர் முரளிதரன் நல்லிணக்க மறுசீரமைப்பு அமைச்சராக பதவியேற்று பங்குகொள்ளும் முதலாவது அபிவிருத்தி சபைக் கூட்டம் இதுவாகும்

யாழ்தேவி ரயில் சேவையை தாண்டிக்குளம் வரை நீடிக்க நடவடிக்கை

bati-trnco.jpgமதவாச் சிக்கும் கொழும்புக்கும் இடையே நடைபெற்று வரும் யாழ்தேவி ரயில் சேவையை, வவுனியாவுக்கு வடக்கே சுமார் 3 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ள தாண்டிக்குளம் வரையில் நீடிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக ரயில்வே திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இடம்பெயர்ந்தோருக்கு சிகிச்சையளிக்க அமெரிக்க அரசு மருந்துப் பொருட்கள் அன்பளிப்பு

us_donates_medical_.jpgவடக்கிலுள்ள வைத்தியசாலைகளில் இடம்பெயர்ந்த மக்களுக்கு சிகிச்சையளிக்க அமெரிக்க அரசாங்கம் 77 ஆயிரம் அமெரிக்க டொலர் பெறுமதியான மருந்துப் பொருட்களை வழங்கியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

சுகாதார அமைச்சில் இன்று காலை இடம்பெற்ற வைபத்தின்போது இலங்கைக்கான பிரதி அமெரிக்கத் தூதுவர் ஜேம்ஸ் ஆர். மோர் சுகாதார அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவிடம் இந்த மருந்துப் பொருட்களைக் கையளித்தார். இந்த வைபத்தில் உரையாற்றிய அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, வடக்கிலிருந்து இடம்பெயர்ந்தோரின் நலன் தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூடிய கரிசனை கொண்டுள்ளார். விடுவிக்கப்படாத பிரதேசங்களில் உள்ள மக்களுக்கு மருந்துப் பொருட்கள் உட்பட அத்தியவசியப் பொருட்களை அரசாங்கம் அனுப்பி வைத்துள்ளது. பொதுமக்களுக்காக அனுப்பி வைக்கப்படும் இப்பொருட்களை புலிகள் சூரையாடுவதாக அறிக்கைகள் குறிப்பிடுகின்றன எனக் கூறினார்.

இடம்பெயர்ந்த மக்களுக்கு உதவிகள் வழங்கியமைக்காக அமெரிக்க அரசாங்கத்துக்கு தனது பாராட்டுக்களைத் தெரிவிப்பதாகவும் அமைச்சர் இங்கு மேலும் குறிப்பிட்டார்.

இங்கு கருத்துத் தெரிவித்த அமெரிக்க பிரதித் தூதுவர், விடுவிக்கப்படாத பிரதேசங்களில் சிக்கியுள்ள மக்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்துகொடுப்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை பாராட்டினார் எனவும் அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

“ஏ9′ வீதியூடாக வாகனத் தொடரணி குடா நாட்டில் பொருட்களின் விலை வீழ்ச்சி

a9-food.jpgஏ9 பாதையூடாக தனியார் துறையினரும் பொருட்களை எடுத்துவர அரசாங்கம் ஏற்பாடுகளைச் செய்துள்ளமையால், குடாநாட்டில் பொருட்களின் விலை வெகவாக வீழ்ச்சியடைந்துள்ளன.  கடந்த வியாழக்கிழமை யாழ். மாவட்டத்துக்கு உப உணவுப்பொருட்கள் பழவகைகள் மென்பானங்கள், பிஸ்கட், பட்டர், மாஜரின், மருந்துவகைகள் என்பன பதினெட்டு லொறிகளில் எடுத்துவரப்பட்டமையால், கடந்த மூன்று வருடங்களின் பின்னர் நாற்பதுசதவிகித விலை வீழ்ச்சியேற்பட்டுள்ளது.

ஒன்றரை லீற்றர் மென்பானம் முன்னர் 220 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று முதல் இதனை 160க்கு வாங்கமுடிகின்றது. மருந்துவகைகள், பிஸ்கட், மாஜரின், பட்டர், போடப்பட்டவிலையில் ஐந்துசதவீத அதிகரிப்பில் விற்பனையாகின்றன.

அத்தியாவசிய உணவுப் பொருட்களான சீனி, பருப்பு, அரிசி, டின்மீன், நவதானியம் என்பன கொழும்பு விலைக்கு விற்பனையாகின்றன. கொழும்பிலிருந்து குடாநாட்டுக்கு ஏ9 பாதையூடாக பொருட்களை எடுத்துவர நூற்றுக்கணக்கான வர்த்தகர்கள் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளருக்கு விண்ணப்பம் செய்துள்ளனர்.

கப்பல்களில் பொருட்கள் வராவிட்டால் பதுக்கல் நடவடிக்கையில் ஈடுபட்ட வியாபாரிகளும் அதனைக் கைவிட்டு பதுக்கிய பொருட்களை சந்தைக்கு விடத்தொடங்கியுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

எதிர்வரும் சித்திரைப்புத்தாண்டை முன்னிட்டு ஏ9 பாதையூடாக பொருட்களை எடுத்துவர பல வர்த்தகர்கள் அத்தியாவசிய தேவைகள் ஆணையாளருக்கு விண்ணப்பித்துள்ளனர். சுமார் 100 லொறிகளில் சித்திரை புத்தாண்டுக்கு அத்தியாவசிய பொருட்களை அரசு அனுப்பவுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதேவேளை கொழும்பில் உள்ள சில தனியார் நிறுவனங்களும் தமது உற்பத்தி பொருட்களை குடாநாட்டுக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுத்துவருகின்றன. உடு பிடவைகள், பாதணிகள், வீட்டு உபகரணங்கள் போன்றவையும் குடாநாட்டுக்கு ஏ9 பாதையூடாக எடுத்துவரப்படவுள்ளன.

இன்று ஐரோப்பிய ஆணைக் குழுவின் தூதுவர் ஜனாதிபதி சந்திப்பு

euro_comm_.jpg
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐரோப்பிய ஆணைக் குழுவின் தூதுவர் இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

அலரி மாளிகையில் இடம்பெற்ற இச்சந்திப்பின்போது வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம,  ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் வெளிவிகார அமைச்சின் செயலாளர் கலாநிதி பாலித கொஹன ஆகியோரும் கலந்துகொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.