26

26

வன்னியிலிருந்து ஒரு வாரத்தில் ஒன்பதாயிரம் பேர் வருகை

_mullai_1.jpg
வன்னியிலிருந்து கடந்த ஒரு வாரத்தில் சுமார் ஒன்பதினாயிரம் பொதுமக்கள் இராணுவக்கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வந்துள்ளதாகவும் இவர்கள் அனைவரும் செட்டிகுளம் நலன்புரிநிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் வவுனியா மாவட்ட செயலக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.  தற்போது வரும் மக்கள் எதுவித மாற்றும் உடைகளுமின்றி வருகின்றார்கள். அவர்கள் மாற்றுவதற்கு உடைகளும் வழங்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர்.

நீண்ட நாட்களாக போசாக்கு உணவு உண்ணாதபடியால் சோர்வான நிலையில் காயங்களுடனும் பயங்கர கோலத்துடனும் இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிக்கு இவர்கள் வருவதாக இராணுவ தரப்பினர் தெரிவித்தனர்.

தினமும் குறைந்தது ஆயிரம் பொது மக்கள் இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசத்தை வந்தடைவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

அ.தி.மு.க. – பா.ம.க. கூட்டணி : பொதுக் குழுவில் முடிவு

26-ramsoss.jpgமக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைப்பது என்று இன்று நடந்த பா.ம.க. பொதுக் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சந்திக்கிறார். அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7 மக்களவைத் தொகுதிகளும் ஒரு ராஜ்யசபா சீட்டும் வழங்கப்படவுள்ளது. பாமகவை கூட்டணிக்குள் கொண்டு வர காங்கிரஸ் மேற்கொண்ட இறுதி முயற்சியும் தோல்வியில் முடிந்து விட்டதையடுத்து பாமக இன்று இந்த முடிவை அறிவித்தது.

மட்டக்களப்பில் விசேட அதிரடிப்படை வீரர் தற்கொலை

மட்டக்களப்பு நகரப் பிரதேசத்தில் வீதிக் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த விசேட அதிரடிப்படைச் சிப்பாயொருவர் இன்று மாலை தனக்குத் தானே வெடி வைத்து தற்கொலை செய்துள்ளார்

ஊறணி விசேட அதிரடிப் படை முகாமில் சேவையாற்றிய பொலிஸ் கான்ஸ்டபிள் யு.எஸ்.பி. திசாநாயக்கா ( வயது 25) என்பவரே இவ்வாறு தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்தவர் என பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வித்தியாதரன் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல்

vithyathara-01.jpgசுடரொளி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் என். வித்தியாதரன் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை உயர் நீதிமன்றத்தில் தனது சட்டத்தரணி ஊடாகத் தாக்கல்செய்துள்ளார்.

சட்டத்திற்குப் புறம்பான முறையில் தம்மை கைது செய்து தடுத்து வைத்திருப்பதாக வித்தியாதரன் தனது அடிப்படை உரிமை மீறல் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

பாதுகாப்பு செயலாளர் கோதபாய ராஜபக்ஷ, கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு பணிப்பாளர் அநுர சேனாநாயக்க , கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு உதவி இன்ஸ்பெக்டர் எ.ஜி.ரி.பி. விஜெரட்ண, பொலிஸ் மா அதிபர் ஜயந்த விக்ரமரட்ண, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ரஞ்சித் குணசேகர, சட்ட மா அதிபர் ஆகியோர் இந்த மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்

இந்தியப் பிரதமரின் தலைமைச் செயலாளர் – ஜனாதிபதி இன்று சந்திப்பு

nayar.jpg இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்தியப் பிரதமரின் கொள்கை அமுல்படுத்தலுக்கான தலைமைச் செயலாளர் ரி.கே.ஏ. நாயிர் இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்துக் கலந்துரையாடினார். ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவின் அழைப்பின்பேரில் ரி.கே.ஏ. நாயிர் நேற்று இலங்கைக்கு விஜயம் செய்தார்.

அலரி மாளிகையில் இடம்பெற்ற இச்சந்திப்பின்போது ரி.கே.ஏ. நாயிரின் பாரியார், ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க,  மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் ஆலோக் பிரசாத் ஆகியோருடன் வெளிவிவகாரம், நிதி, சுகாதாரம், கல்வி அமைச்சு, பெருந்தோட்டக் கைத்தொழில் ஆகிய அமைச்சுக்களின் செயலாளர்களும் கலந்துகொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புலிகள் இப்பொது 21 சதுர கிலோ மீற்றர் நிலப்பரப்பில்! அதில் 20 ச.கி.மீ. பாதுகாப்பு வலயம்!

khegeliya_rampukhala.jpgபுலிகள் இப்பொது 21 சதுர கிலோ மீற்றர் பிரதேசத்துக்குள் முடக்கப்பட்டுள்ளனர். அதில் 20 சதுர கிலோ மீற்றர் அரசினால் அறிவிக்கப்பட்ட பாதுகாப்பு வலயமாகும் என தேசிய பாதுகாப்புக்கான ஊடகப் பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

நாட்டின் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று காலை தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நடைபெற்றபோத அவர் இவ்வாறு கூறினார். இங்கு அமைச்சர் மேலும் கூறியதாவது.

படையினரால் புலிகள் இப்போது ஒரு சதுர கிலோ மீற்றருக்குள் மட்டுப்படுத்தப்பட்டாலும் அவர்கள் பாதுகாப்பு வலயத்திலும் ஊடுறுவி அங்கிருந்தும் படையினர் மீது தாக்குதல் நடத்துகின்றனர். நேற்று அவாகள் அங்கிருந்து இலங்கை விமானப்படையின் பெல்  212 ரக ஹெலிகொப்டர்கள் மீது நடத்திய ஏவுகணைத் தாக்குதல் இதற்கான சான்றாகும்.

புலிகளின் செயற்பாடுகள் இப்பொது பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. புலிகளின் கடுமையான எதிர்ப்புக்களை வெற்றிகரமாக சமளித்துக்கொண்டு படையினர் நிதானமாக முன்னேறுகின்றனர்.

புலிகளிடம் சிக்கியுள்ள அப்பாவிப் பொதுமக்களின் நலனில் அக்கரையுள்ள சர்வதேச நிறுவனங்கள் இன்று ஆற்றவேண்டிய முக்கியமான பணி என்னவென்றால். புலிகளின் பிடியிலிருந்து தமிழ் மக்களை விடுவிப்பதற்காக அரசாங்கம் மேற்கொண்டு வரும் மனித நேய மற்றும் நலன்புரி நடவடிக்கைகளுக்கு அரசுடன் இணைந்த ஆதரவு வழங்குவதாகும் என்றும் அமைச்சர் ;கூறினார். 

கோவை, கொச்சினுக்கு இலங்கை விமான சேவை ரத்து

sri-lanka-air-lanka.jpgகோவை, கொச்சின் உள்ளிட்ட நான்கு இந்திய நகரங்களுக்கான விமான சேவையை இலங்கை ரத்து செய்துள்ளது. ஒட்டுமொத்தமாக இந்தியாவுக்கான விமான சேவையை பாதியாக குறைத்துள்ளது.

இலங்கை ஏர்லைன்ஸ் நிறுவனம் கடும் நஷ்டத்தை சந்தித்து வருகிறது. கடந்த நிதியாண்டில் முதல் காலிறுதியில் இந்நிறுவனம் சுமார் ரூ. 250 கோடி டாலர் நஷ்டத்தை சந்தித்தது. அதே நேரத்தில் இந்நிறுவனத்தின் 40 சதவீத பங்குகளை வைத்திருந்த எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் ஒப்பந்தத்தை முறித்து கொண்டது.

இதையடுத்து இந்நிறுவனம் சிக்கன நடவடிக்கையை எடுக்க ஆரம்பித்துள்ளது. அதன் ஒரு பகுதியாக இந்தியாவுக்கு இயக்கப்பட்ட விமானங்களின் எண்ணிக்கையை வாரத்துக்கு 100 எண்ணிக்கையிலிருந்து 50 ஆக குறைத்துள்ளது. கோவை, கொச்சின், கோழிக்கோடு, ஹைதராபாத் ஆகிய நகருக்கான விமான சேவையை ரத்து செய்துள்ளது.

புலிகளின் முக்கிய நான்கு தலைவர்கள் நேற்றைய மோதலில் பலி – பிரிகேடியர் உதய நாணாயக்கார

udaya_nanayakkara_brigediars.jpgபுதுக் குடியிருப்பு கிழக்குப் பிரதேசத்தில் படையினருக்கும் புலிகளுக்குமிடையில் நேற்று நடைபெற்ற கடும் மோதலென்றில் புலிகளின் முக்கிய நான்கு தலைவர்கள் கொல்லப்பட்டனர் என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணாயக்கார தெரிவித்தார்.

நாட்டின் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று காலை தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நடைபெற்றபோத அவர் இவ்வாறு கூறினார். இங்கு பிரிகேடியர் மேலும் கூறியதாவது.

புதுக்குடியிருப்பு கிழக்குப் பிரதேசத்தில் நிலைகொண்டுள்ள படையினர் மீது நேற்று அதிகாலை 5.30 மணியளவில் புலிகள் தீவிர தாக்குதல் நடத்தினர். படையினர் நடத்திய பதில் தாக்குதலில் 30 க்கும் அதிகமான புலிகள் கொல்லப்பட்டனர். இவர்களுள் வரதர் அண்ணன், காதர், சூரியன் மற்றும் ஈழவன் ஆகியோர் அடங்குவர்.

கிழக்கில் வாகரைப் பிரதேசத்தில் படையினர் நேற்று நடத்திய தேடுதல் நடவடிக்கையின்போது 5 கிலோ கிறாம் எடைகொண்ட கிளேமோர் குண்டொன்று மீட்கப்பட்டுள்ளது

புலிகளின் பிடியிலிருந்து இதுவரையில் 55286 பொது மக்கள் இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்கு வந்துள்ளனர். அவர்களுக்குத் தேவையான சகல வசதிகளையும் படையினர் ஏற்பாடு செய்துள்ளனர்.

சாலை தெற்குப் பிரதேசத்தில் படையினரின் பயன்பாட்டுக்கான பாலமொன்றை அமைக்கும் பணியில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர். இதன் அமைப்புப் பணிகள் விரைவில் முடிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது என்றும் பிரிகேடியர் கூறினார்

வரிகுறைப்பினால் அரசாங்கத்துக்கு ஆயிரம் கோடி ரூபா நஷ்டம் – அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா

axman-yappa.jpg உலகளாவிய ரீதியில் பொருளாதார நெருக்கடி நிலவிய போதிலும் மக்கள் நலன் கருதி அத்தியவசிய உணவுப்பொருட்களுக்கான வரிகளை குறைத்ததால் அரசாங்கத்தக்கு ஆயிரம் கோடி ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

தகவல் ஊடகத்துறை அமைச்சில் இன்று முற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். அவர் தொடர்ந்து கூறுகையில்:

மக்களுக்கு ஏற்படும் சுமையைத் தவிர்ப்பதற்கு பொருட்களின் விலை அதிகரிக்காமல் இருக்கச்செய்ய 13 வகையான அத்தியவசிய உணவுப்பொருட்களுக்கான வரியை அரசாங்கம் குறைத்தது. பால்மா ஒரு கிலோவுக்கு அறவிடப்பட்டு வந்த 96 ரூபா வரி ஐந்து ரூபாவாக குறைக்கப்பட்டது. பருப்பு ஒரு கிலோவுக்கு அறவிடப்பட்ட 36 ரூபா ஆறு ரூபாவாக குறைக்கப்பட்டது. இவ்வாறான வரி குறைப்பினால் அரசாங்கத்துக்கு ஆயிரம் கோடி ரூபா நஷ்டம் ஏற்பட்டது.

உலகளாவிய ரீதியில் பொருளாதார நெருக்கடி நிலவும் வேளையிலேயே அரசாங்கம் இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தேயிலை உரம், உரமானியம் மற்றும் சமுர்தி போன்ற நிவாரண உதவிகளையும் தொடர்ந்து வழங்கியும் வருகின்றோம். இதனால் இலங்கை நடுத்தர நிலையிலான ஒரு நாடாகத் திகழ்கின்றது.

பணம் இருந்தாலும் தேவையானபோது தேவையான பொருளை கொள்வனவு செய்யமுடியாது  என்ற நிலையை உணர்ந்ததால் விவசாய உற்பத்தியில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டது. அதன் பயனாக தற்போது நாட்டுக்கு எட்டு மாதங்களுக்குத் தேவையான அரிசி கையிறுப்பில் உள்ளது.

இவ்வாறான நிலையில் எதிர்க் கட்சிகள் பொருட்களின் விலை அதிகரிக்கப் போவதாக பொய்யான பிரசாரத்தை செய்து வருகின்றன. சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து 3.2 பில்லியனை கடனாகப்பெற உரிமை இருக்கின்றுது. கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக அந்த நிதியத்திடமிருந்து கடன் எதுவும் பெறப்படவில்லை. உலக நாடுகள் மத்தியில் நிலவும் பொருளாதார நெறுக்கடியை கவனத்தில் கொண்டே இந்தக்கடனை எடுக்க முற்படுவதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

புதுவருடத்தை முன்னிட்டு முல்லைத்தீவுக்கு 1000 மெ. தொன் உணவுப் பொருட்கள்!

sb_diwarathnass.jpg தமிழ், சிங்கள புதுவருடத்தை முன்னிட்டு அடுத்த வார இறுதியில் முல்லைத்தீவு பிரதேசத்துக்கு 1000 மெற்றிக் தொன் உணவுப் பொருட்கள் அனுப்பப்படவுள்ளதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் எஸ்.பி. திவாரத்ன தெரிவித்தார்.

இவை கப்பல் மூலம் அனுப்பி வைக்கப்படவுள்ளதோடு முல்லைத்தீவு பிரதேசத்துக்கு ஒரே தடவையில் அனுப்பப்படும் ஆகக் கூடுதலான அளவு உணவுப் பொருள் தொகுதி இதுவாகும். இதேவேளை, யாழ். குடாநாட்டுக்கு ஏ-9 வீதி ஊடாக அத்தியாவசிய உணவுப் பொருட்களை எடுத்துச் செல்லும் இரண்டாவது வாகனத் தொடரணி நேற்று கொழும்பிலிருந்து புறப்பட்டுச் சென்றது.

உணவு மற்றும் துணி வகைகள் அடங்கிய 300 மெற்றிக் தொன் அளவான இந்தப் பொருட்கள் 20 லொறிகளில் நேற்று அனுப்பி வைக்கப்பட்டதாகவும் அதற்கு முன்னர் அப்பிரதேசத்துக்குத் தேவையான மருந்துப் பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.