07

07

எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் பாரிஸில் படுகொலைக்கு எதிரானதும் தமிழ் – சிங்கள இன ஒற்றுமையைக் கோருகின்றதுமான போராட்டம்! : த ஜெயபாலன்

Paris_Protest_07Mar09இலங்கையில் நடைபெறும் அனைத்துப் படுகொலைகளையும் கண்டிக்கும் கண்டனப் போராட்டம் இன்று பாரிஸில் இடம்பெற்றது. இக்கண்டன ஊர்வலம் பாரீஸ் Place Georges Pompidou இருந்து ஆரம்பமாகி பிரான்ஸ் வெளிநாட்டு அமைச்சு முன்றலில் முடிவுற்றது. 50க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்ட இந்த ஊர்வலத்தில் பிரெஞ் இடதுசாரி அமைப்புகளைச் சேர்ந்த பலர் கலந்துகொண்டிருந்தனர். வழமையாக புலி ஆதரவு அமைப்புகளால் ஏற்பாடு செய்யப்படும் ஆர்ப்பாட்ட ஊர்வலங்களுக்கு மாறுபட்ட வகையில் இந்தக் கண்டன ஊர்வலம் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. Comite’ De de’fence Social – சமூகப் பாதுகாப்பு அமைப்பு ஏற்பாடு  செய்திருந்த இந்த ஊர்வலத்தில் பிரான்ஸில் உள்ள இடதுசாரி அமைப்புகளான FA (Fédération Anarchiste), Bread and Roses, Solidaires Paris (Union Syndicale) ஆகியனவும் கலந்து கொண்டிருந்தன. இலங்கை அரசு மேற்கொள்ளும் ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தை தமிழ் மக்களுக்கு உள்ளேயே வைத்திருந்த நிலையில் இருந்து தாம் நாழும் நாடுகளில் உள்ள பிரதான போராட்ட அரசியல் அமைப்புகளுடன் இணைந்து போராட முற்பட்டதற்கு ஒரு எடுத்துக்காட்டாக இது அமைந்து உள்ளது.

இக்கண்டன ஊர்வலம் பற்றி கருத்துத் தெரிவித்துள்ள தேசம்நெற் வாசகர் சண் இவ்வாறு தெரிவிக்கிறார், ”இந்த நேரத்தில் இப்படியான இந்த ஊர்வலம் இவர்கள் வைக்கும் கோசம் எல்லா கொலைகளையும் கண்டிக்கும் நேர்மை எல்லா கொள்ளைக்கார அமைப்புக்களையும் கண்டிக்கும் துணிவு எங்களுக்கு நம்பிக்கை தருகிறது. பரிசில் இன்னும் இலங்கை அரசுக்கு விலைபோகாத உறுதியான நண்பர்கள் இருப்பது இன்னும் நம்பிக்கை தருகிறது.”

Paris_Protest_07Mar09– இலங்கையில் நடைபெறும் அனைத்து படுகொலைகளையும் வன்முறைகளையும் நிறுத்து!
– இலங்கையில் ஒடுக்கப்படும் அனைத்து மக்களிற்கும் சுகந்திரம் வழங்கு!
– அராஐகம் படுகொலைகள் காணாமல்போதல்களிற்கு எதிராக தமிழ்பேசும் மக்களே சிங்கள மக்களே ஒன்றிணையுங்கள்!
– பெண்கள் சிறார்களுற்கு எதிரான அனைத்து வன்முறைகளையும் நிறுத்து!
– பிரான்ஸ் அரசே! வதிவிட அனுமதியற்ற இலங்கை மக்களிற்கு இங்கு வதிவிட அனுமதி வழங்கு!
– பிரான்ஸ்சிலும் இலங்கையிலும் உள்ள இலங்கை தொழிலாளர்களிற்கு பிரான்ஸ் தொழிலாளர்களின் ஆதரவை வழங்குவோம்!

மேற்கண்ட கோரிக்கைகளை முன்வைத்து மேற்கொள்ளப்பட்ட இந்தப் போராட்டத்தை புலி ஆதரவாளர்களும் புலி எதிர்ப்பாளர்களும் வேறுபட்ட காரணங்களுக்காகப் புறக்கணித்தனர்.

புலி ஆதரவாளர்கள் அதற்கும் மேலே சென்று இந்த ஊர்வலம் பற்றி ஒட்டப்பட்ட சுவரொட்டிகளை கிழித்ததுடன் சுவரொட்டிகளை ஒட்டிய பிரெஞ்சு மற்றும் தமிழ் ஏற்பாட்டாளர்களை தாக்கவும் முற்பட்டு உள்ளனர். அவர்களை மிகக் கேவலமான வார்த்தைகளால் திட்டித் தீர்த்தும் உள்ளனர். இந்தக் கண்டன ஊர்வலம் பற்றிய சுவரொட்டிகளை நேற்று முன்தினம் லாச்சப்பலில் ஒட்டிவிட்டுத் திரும்பியவர்களை இடைமறித்த சிலர் தங்கள் கைத்தொலைபேசி மூலம் மேலும் பலரை வரவழைத்து 30 – 35 பேர் சுற்றி வளைத்து வசை பாடியதுடன் ஒட்டப்பட்ட சுவரொட்டிகள் அனைத்தையும் கிழித்தெறிந்தனர்.

இன்று ஊர்வலம் ஆரம்பிக்கப்படும் இடத்திலும் கூடிய தங்களை புலி ஆதரவாளர்களாகக் காட்டிக்கொண்டவர்கள் தங்கள் வசைகளைக் கொட்டினர். இவர்களது அடாத்தான செயல்களால் அவ்விடத்தில் வன்முறை நிகழும் என்று அஞ்சிய பலர் ஊர்வலத்தில் கலந்து கொள்ளாமல் திரும்பினர். அவ்வாறு திரும்பிய பெயர் குறிப்பிட விரும்பாத ஒருவர் தேசம்நெற்றுடன் தொடர்பு கொண்ட போது, தான் தனது மனைவியுடனும் பிள்ளைகளுடனும் இந்த ஊர்வலத்தில் கலந்துகொள்ளச் சென்றதாகவும் ஆனால் அங்கு இந்த ஊர்வலத்தை குழப்ப விளைந்த சிலர் தகாத வார்த்தைகளை தமிழிலும் பிரெஞ்சிலும் பேசியதாகவும் நிலைமை பதட்டமாக இருந்ததால் தாங்கள் வீடு திரும்பியதாகவும் தெரிவித்தார். அந்த வார்த்தைகளைக் கேட்கவே காது கூசுவதாகக் கூறிய அவர் அவர்கள் அதனை பலருக்கும் மத்தியில் திருப்பித் திருப்பிக் கூறியதாகக் கூறினார்.

‘தமிழ் மக்களுக்குப் போராட நீங்கள் யார்?’, ‘அதற்குத் தான் நாங்கள் இருக்கிறோம்.’, ‘சிங்களவனோடு சேரச் சொல்லுறியளோ’ என்று ஆரம்பித்து தமிழ், பிரெஞ் மொழிகளில் உள்ள தகாத வார்த்தைகள் அனைத்தும் ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் மீது வசையாகக் கொட்டப்பட்டது.

Paris_Protest_07Mar09நிலைமையை ஏற்கனவே உணர்ந்திருந்த காவல்துறையினர் பல வாகனங்களில் கொண்டு வந்து இறக்கப்பட்டதுடன், சிவில் உடையிலும் பலர் உலாவவிடப்பட்டனர். ஊர்வலத்தில் கலந்த கொண்டவர்கள் மீது வன்முறை பிரயோகிக்கப்படாமல் இருக்க அதனைக் குழப்ப முற்பட்டவர்கள் காவல்துறையினரால் ஓரங்கட்டப்பட்டனர். ஊர்வலத்தில் கலந்துகொண்டவர்களைச் சுற்றி காவல்துறையினர் தொடர்ந்து சென்றனர்.

‘தாங்கள் பல்வேறு ஒடுக்கப்பட்ட சமூகங்களின் போராட்டங்களிலும் கலந்துகொண்டதாகக் குறிப்பிட்ட பிரெஞ்சுத் தோழர் ஒருவர், இது தங்களுக்கு புதிய அனுபவம்’ எனக் குறிப்பிட்டதாக இந்தக் கண்டன ஊர்வல ஏற்பாட்டாளர்களில் ஒருவரான அசோக் யோகன் கண்ணமுத்து தேசம்நெற்றுக்குத் தெரிவித்தார். இந்த ஊர்வலத்தில் தமிழ் – சிங்கள மக்கள் இணைய வேண்டும் என்ற கோசத்தை புலி ஆதரவாளர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று குறிப்பிட்ட அவர், அவர்கள் தங்களை மீறி யாரும் குரல் கொடுப்பதை தடுப்பதாகக் குறிப்பிட்டார்.

புலி எதிர்ப்பாளர்களான EPDP, PLOTE, TELO, TMVP போன்ற ஆயுதக் குழுக்கள் இலங்கை அரசின் இராணுவத்தினருடன் இணைந்து செயற்படுவதாக குற்றம்சாட்டப்பட்டு இருந்ததால் அவர்களும் இந்தக் கண்டன ஊர்வலத்தை புறக்கணித்ததாக அசோக் தெரிவித்தார். இன்னும் சில ‘மாற்றுக்கருத்து’, ‘ஜனநாயகம்’ பேசும் சிலர் வேடிக்கை பார்த்துவிட்டுச் சென்றதாகவும் கூறினார்.

வன்னி மக்களின் மனித அவலம் மிகமோசமடைந்த நிலையிலும் புலம்பெயர்ந்த மக்கள் தங்களுடைய குழுவாத அரசியலில் இருந்து விடுபடாதவர்களாகவே உள்ளனர். புலி ஆதரவாளர்களைப் பொறுத்தவரை வன்னி மக்களின் இழப்பைக் கொண்டு புலிகளின் அரசியல் பேரம்பேசலுக்கான இறுதி முயற்சியாக இதனைப் பயன்படுத்துகின்றனர்.  புலி எதிர்ப்பாளர்களைப் பொறுத்தவரை வன்னி மக்களின் இழப்பைப் பொருட்படுத்தாமல் எப்படியாவது புலிகளுக்கு முடிவு கட்ட வேண்டும் என்பதிலேயே கவனமாக உள்ளனர்.

இந்த இரு முக்கிய அணிகளுக்கு அப்பால் மக்களது நலன்சார்ந்த போராட்டங்கள் மிகவும் பலவீனமானமதாகவே உள்ளது. அவர்களுடைய குரல்களையும் பல்வேறு வகையில் அடக்குவதற்கான முயற்சிகளே பெருமளவில் மேற்கொள்ளப்படுகிறது. Key Board புரட்சியாளர்களைத் தாண்டி இவ்வாறான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டிய மிக முக்கியமாக கலகட்டம் இது. இவ்விடத்தில் தேசம்நெற் கருத்தாளர் நாதனுடைய குறிப்பை இங்கு மீளப்பதிவிடுவது பொருத்தமாக இருக்கும்.

Paris_Protest_07Mar09”இந்த போராட்டமானது உலகில் வாழும் உழைக்கும் மக்களின் ஒத்துழைப்புடன் நடைபெற வேண்டியதாகும். இதற்கான வழிமுறைகளையும் செயற்பாடுகளையும் மேற்கொள்ள வேண்டியது இலங்கைப் பாட்டாளிவர்க்கத்தின் தலையில் சுமத்தப்பட்டுள்ளது.

நாம் எமது மக்களுக்காக போராட வேண்டுமென்றால் எமக்கு தார்மீக ஆதரவு பெறவேண்டுமென்றால் நாம் இந்த நாட்டவர்களுடன் சேர்ந்து இங்குள்ள பிரச்சனைக்களுக்காக போராடுவதன் மூலமே புலம்பெயர்ந்த நாடுகளின் பூர்வீக மக்களை ஆதரவாக இணைத்துக் கொள்ள முடியும். தொழிற்சங்கம் போராட்டம், இனவாதத்திற்கெதிரான போராட்டம், ஒடுக்கப்பட்ட மக்களுக்காக நடத்தப்படுகின்ற போராட்டம், புலம்பெயர்ந்த நாடுகளில் நடைபெறும் போராட்டத்தில் பங்குபற்றுதல் வேண்டும்.”

29 டொலருக்கு மசகு எண்ணெயினை கொள்வனவு செய்யும் அரசு பெற்றோலை 120 ரூபாவுக்கு விற்கின்றது – ரவி எம்.பி.

ravi-karunanayaka.jpgஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக் காலத்தின் போது 43 டொலர்களுக்கு மசகு எண்ணெய் கொள்வனவு செய்யப்பட்டு ஒரு லீற்றர் பெற்றோல் 75 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால், இன்று 29 டொலர்களுக்கு மசகு எண்ணெய் இறக்குமதி செய்யப்படுகின்ற போதிலும் பெற்றோல் ஒரு லீற்றர் 120 ரூபாவுக்கே விற்பனை செய்யப்படுகின்றது.

அரசாங்கம் ஏன் மக்களுக்கு இவ்வாறான அநீதியை இழைக்கின்றது என்று ஐக்கிய தேசிய கட்சி எம்.பி. ரவி கருணாநாயக்க நேற்று சபையில் கேள்வி எழுப்பினார். எரிபொருள் தொடர்பான சிறிய கேள்விக்கு பதிலளிப்பதற்காக அமைச்சர் உலகத்தையே சுற்றிவருவதாகவும் ரவி எம்.பி. பரிகாசம் செய்தார். பாராளுமன்றம் நேற்று வெள்ளிக்கிழமை காலை 9.30 க்கு சபாநாயகர் வி.ஜே.மு. லொக்கு பண்டார தலைமையில் கூடியது. பிரதான நடவடிக்கைகள் நிறைவடைந்த பின்னர் வாய்மூல வினா விடைக்கான நேரத்திலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

ரி.எம்.வி.பி. அமைப்பு இன்று அரசிடம் ஆயுதங்கள் கையளிப்பு

pullayaan.jpgதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் தமது அமைப்பிலுள்ள இராணுவ பிரிவை கலைப்பது என்று ஏற்கனவே எடுத்த முடிவின் பேரில் இன்று உத்தியோகபூர்வமாக தம்மிடமிருந்த ஆயுதங்களை பாதுகாப்பு தரப்பினரிடம் கையளித்துள்ளது. மட்டக்களப்பு வெபர் விளையாட்டு மைதானத்தில் நடை பெற்ற இது தொடர்பான வைபவத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் தரப்பில் அந்த அமைப்பைச் சேர்ந்த 2 பேர் கிழக்கு பிராந்திய இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தம்பத் பெர்னான்டோவிடம் உத்தியோகபூர்வமாக கையளித்தனர்

இந் நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் கிழக்கு மாகாண பிரதிபொலிஸ் மா அதிபர் எட்வின் குனத்திலக்கா,மட்டக்களப்பு பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த வீரசூரிய ,மாநகர முதல்வர் சிவகீத்தா பிரபாகரன் ,மாகாண சபை உறுப்பினர் எட்வின் சில்வா கிருஸ்னானந்தராஜா ,தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் செயலாளர் எட்வின் சில்வா கைலேஸ்வரராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்

தமது அமைப்பிலுள்ள இராணுவ பிரிவு இன்றுடன் கலைக்கப்பட்டு விட்டதாக முன்னதாக இங்கு உரையாற்றிய அந்த அமைப்பின் ஊடக பேச்சாளரான ஆசாத் மௌலானா கூறினார் இதன் பின்னர் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளினால் ஏற்பாடு செய்யப்பட்ட பத்திரிகையாளர் மகாநாடொன்று நகர சபை மண்டபத்தில் நடை பெற்றது. இம் மகாநாட்டில் ஐ.நா வின் புலம் பெயர்ந்தவர்கள் தொடர்பான சர்வதேச அமைப்பின் உள்ளுர் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்

இலங்கையில் தமிழ் ஆயுத அமைப்பொன்று இலங்கை அரசாங்கத்திடம் நேரடியாக ஆயுதங்களை கையளிக்கும் முதலாவது நிகழ்வு இதுவாகும். 1987 ம் ஆண்டு இலங்கை இந்தியா ஒப்பந்தத்தின் படி விடுதலைப் புலிகள் மற்றும் ஈரோஸ் ஆகிய அமைப்புகள் ஆயுதங்களை கையளித்திருந்தாலும் அந்த கையளிப்பானது இந்திய இராணுவம் ஊடாகவே இலங்கை பாதுகாப்பு தரப்பிடம் கையளிக்கப்பட்;டது  இக் காலப்பகுதியில் ஆயுதப் போராட்டத்தில் இல்லாத போதிலும் டெலோ ,ஈ.பி.ஆர்.எல்.எப். ,புளொட் ஆகிய அமைப்புகளும் வைபவ ரீதியாக ஏற்கனவே தம் வசமிருந்த ஆயுதங்களை இப்படி கையளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சி சபைத் தேர்தலில் போட்டியிட்டு தமிழ் பிரதேசங்களில் சகல சபைகளையும் கைப்பற்றியதோடு நடைபெற்று முடிந்த மாகாண சபைத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனியுடன் இனைந்து போட்டியிட்டு தமது கட்சியைச் சேர்ந்த சிவனேசதுரை சந்திரகாந்தன் முதலமைச்சராக தெரிவாகும் வாய்ப்பை பெற்றிருந்தது. மட்டக்களப்பில் இன்று நடை பெற்ற தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் ஆயுத கையளிப்பின் போது 56 துப்பாக்கிகள் ,சுமார் 6000 துப்பாக்கி ரவைகள் உட்பட பல்வேறு வகையான ஆயுதங்கள் கையளிக்கப்பட்டுள்ளன.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் மற்றும் பாதுகாப்பு தரப்பிலிருந்து வெளியாகிய தகவல்கள் மூலம் இது தெரியவந்துள்ளது. கையளிக்கப்பட்ட ஆயுதங்கள் தொடர்பான விபரங்கள் வருமாறு :

ரி 56 ரக துப்பாக்கிகள் 52 அதற்கான மகசீன் 168, மற்றும் ரவைகள் 2106
எஸ்.எம்.ஜி. ரக துப்பாக்கி 01, ரி 81 ரக துப்பாக்கி 01, ஏ.கே.எல்.எம். ஜி. ரக துப்பாக்கிகள் 02, ஆர்.பி.ஜி. உட்பட ஷெல்கள் 46, வெளிச்ச குண்டுகள் 16
பி.கே. ரவுன்டஸ் 4650, கைக் குண்டுகள் 02 உட்பட பல்வேறு வகையான ஆயுதங்கள் கையளிக்கப்பட்டன.

போராட்டம் தொடரும் – வக்கீல்கள்

hc-clash.jpgசென்னை உயர்நீதிமன்ற வக்கீல்கள் மற்றும் போலீஸாருக்கு இடையே நடந்த மோதலில் இரு தரப்பினருக்குமே தொடர்பு உள்ளது என்று கூறியுள்ள ஸ்ரீகிருஷ்ணா அறிக்கையை நிராகரிப்பதாக வக்கீல்கள் தெரிவித்துள்ளனர். தங்களது கோரிக்கைகள் ஏற்கப்படும் வரை போராட்டம் தொடரும் எனவும் அவர்கள் அறிவித்துள்ளனர்.

சென்னை உயர்நீதிமன்ற கலவரம் குறித்து விசாரித்த நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா, இந்த கலவரத்திற்கு முக்கிய காரணம் வக்கீல்களே. அதேபோல போலீஸாரும் எல்லை மீறி நடந்து கொண்டு விட்டனர் என்று கூறியுள்ளார்.

இந்த அறிக்கையைத் தொடர்ந்து இதுதொடர்பான வழக்கை சென்னை உயர்நீதி மன்றத்திற்கே மாற்றி உச்சநீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. இந்த நிலையில், ஸ்ரீகிருஷ்ணாவின் அறிக்கை பாரபட்சமாக இருப்பதாக கூறி அதை வக்கீல்கள் நிராகரித்துள்ளனர்.

ஐரோப்பிய பங்குச் சந்தைகள் வீழ்ச்சி!

market-share.jpgகடந்த 12 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு படுமோசமான வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது ஐரோப்பிய பங்குச் சந்தைகள். ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரம் முற்றாகவே சரிவுக்குள்ளாகியிருப்பதைத் தொடர்ந்து, கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையின்மை விகிதம் அதிகரித்துள்ளது. குறிப்பாக வங்கித் துறை கடும் வீழ்ச்சியைச் சந்தித்து வருகிறது.

எச்எஸ்பிசி, பிஎன்பி பாரிபஸ், ஐஎன்ஜி போன்ற வங்கிகளில் ஒருபக்கம் வேலையிழப்பும், மறுபக்கம் பங்குகள் சரிவும் தொடர்ந்த வண்ணம் உள்ளன. அமெரிக்காவின் ஒவ்வொரு அசைவும் ஐரோப்பாவில் எதிரொலிக்கும் என்பதால், அந்நாட்டின் நிலைமையை உற்று நோக்கி வருகிறார்கள் ஐரோப்பிய பொருளியல் நிபுணர்கள்.

பொருளாதார வீழ்ச்சி துவங்கிய பிறகு அமெரிக்காவில் மட்டும் 44 லட்சம் பேர் ஜனவரி வரை பணியிழந்தனர். கடந்த ஜனவரியில் மட்டும் 550,000 பேர் வேலையிலிருந்து நீக்கப்பட்டனர். இதன் எதிரொலியாக ஐரோப்பிய சந்தைகளின் பங்கு வணிகமும் அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. இந்த மார்ச் மாதம் மட்டும் ஐரோப்பாவில் வேலையிழப்புக்கு உள்ளாகும் பணியாளர் எண்ணிக்கை 5 லட்சத்தைத் தாண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

கிழக்கு பல்கலைக்கழகம் கல்வி நடவடிக்கைகளுக்காக 16ம் திகதி திறக்கப்படும்

eastern-university.jpgகிழக்கு பல்கலைக்கழகத்தின் கலை வர்த்தக முகாமைத்துவம் விஞ்ஞானம் மற்றும் விவசாயம் ஆகிய பீடங்களின் கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 16ஆம் திகதி திங்கட்கிழமை மீண்டும் ஆரம்பிக்கப்பட உள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.
 
 

மேலும் 406 பேர் திருகோணமலைக்கு அழைத்துவரப்பட்டனர்.

ship.jpgமுல்லைத் தீவு புதுமாத்தளன் பகுதியிலிருந்து ஒன்பதாவது தடைவையாக 406 பேர் நேற்று (06.03.2009) இரவு திருகோணமலைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் பேச்சாளர் சரஸி விஜயரட்ண தெரிவித்துள்ளார்.

 கிறீன் ஓசன் கப்பல் மூலம் அழைத்துவரப்பட்டுள்ளவர்களில் நோயாளர்கள் காயமடைந்தோர் மற்றும் அவர்களின் உறவினர்கள் அடங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதுவரையில் 2700 பேருக்கு மேற்பட்டோரை கட்டுப்பாடற்ற பகுதிகளிலிருந்து கடல் மார்க்கமாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் திருகோணமலைக்கு அழைத்து வந்துள்ளதாக தெரிவித்துள்ள அவர் இவர்கள் அனைவரும் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றதாகவும் தெரிவித்துள்ளார்.

பஸ் சாரதிக்கு கௌரவம் அளிக்க ஜனாதிபதி முடிவு.

20090302.jpgபயங்கர வாதிகளின் தாக்குதலிலிருந்து இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களை காப்பாற்றிய பஸ் சாரதியை இலங்கைக்கு அழைத்து பாராட்டு தெரிவிப்பதற்கு ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ தீர்மானித்துள்ளதாக தெரியவருகின்றது. பாக்கிஸ்தான் சாரதியை அழைத்து பாராட்டுவிழா நடாத்துமாறு ஜனாதிபதி விளையாட்டுத்துறை அமைச்சருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். இதற்கு அமைய வெகு விரைவில் அவர் இலங்கைக்கு வரவழைக்கப்பட்டு கௌரவிக்கப்படவிருப்பதாக தெரிகிறது.

திஸ்ஸநாயகம் விடுதலை செய்யப்பட வேண்டும். ஊடக, மனித உரிமை அமைப்புக்கள்

tissanayagam.jpgபயங்கர வாதச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஒரு வருடத்திற்கும் மேலாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள ‘சண்டே டைம்ஸ்’ பத்திரிகையின் பத்தி எழுத்தாளர் ஜே. எஸ். திஸ்ஸநாயகம் விடுதலை செய்யப்பட வேண்டும் என, உலகின் முன்னணி ஊடக மற்றும் மனித உரிமைகள் அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன.9 அமைப்புக்களின் பிரதிநிதிகள் நேற்று வெள்ளிக்கிழமை இலங்கை அரசிடம் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளன. எனினும் அரச தரப்பில் இருந்து இதுவரை எந்தவித பதிலும் வழங்கப்படவில்லை.

அனைத்துலக மன்னிப்புச்சபை, எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு, ஊடகவியலாளர்களைப் பாதுகாக்கும் கூட்டமைப்பு, அனைத்துலக ஊடக சம்மேளனம் போன்ற அமைப்புக்களை உள்ளடக்கிய ஊடக, மற்றும் மனித உரிமை அமைப்புக்களே இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளன.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான படையினரின் தாக்குதலை விமர்சித்துப் பத்தி எழுதிய திஸ்ஸநாயகம் தொடர்ந்தும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அவர் பார்வை மற்றும் உடல் நலக்குறைவினால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த அமைப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

உடனடியாக மோதலை நிறுத்த ஐ.நா. மீண்டும் கோரிக்கை

ban-ki-moon.jpgஇலங்கைப் படையினருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் மோதல் இடம்பெறும் பகுதிகளில் பொதுமக்களின் இழப்புகள் அதிகரித்துள்ளதையிட்டு வியாழக்கிழமை கடும் கவலை தெரிவித்திருக்கும் ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன், உடனடியாக சண்டையை நிறுத்துமாறு மீண்டும் அழைப்பு விடுத்திருக்கிறார்.
வன்னிப் பிராந்தியத்தில் போர் வலயத்திலுள்ள மக்களின் நிலைமை தொடர்பாக வியாழனன்று அறிக்கை விடுத்திருக்கும் மனிதாபிமான விவகாரங்களுக்கான ஒத்துழைப்பு நடவடிக்கைகளுக்கான ஐ.நா. அலுவலகம் கடந்த மாதம் நிலைமை மோசமடைந்திருப்பதாக தெரிவித்துள்ளது. பெப்ரவரியில் மோதல் வலயம் 58 சதுர கிலோமீற்றர் பரப்பளவாக சுருங்கியுள்ளது. 1 இலட்சத்துக்கும் 2 இலட்சத்துக்கும் இடைப்பட்ட எண்ணிக்கையான பொதுமக்கள் 14 சதுர கிலோமீற்றர் புதிய பாதுகாப்பு வலயப் பகுதிக்குள் புகலிடம் அடைந்திருப்பதாக ஐ.நா. அலுவலகம் தெரிவித்துள்ளது.

மோதல் பகுதிகளிலிருந்து பொதுமக்கள் வெளியேறவும் அவர்களுக்கு மனிதாபிமான உதவிகள் உடனடியாக சென்றடைவதற்கும் இலங்கை அரசும் புலிகளும் சண்டையை இடைநிறுத்த வேண்டுமென்று மீண்டும் பான் கீ மூன் அழைப்பு விடுத்திருப்பதாக அவரின் பேச்சாளர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். அத்துடன், பொதுமக்கள் பலர் உள்ள இடத்திலிருந்து தமது ஆயுதங்களையும் போரிடுவோரையும் அகற்றுமாறும் மனிதாபிமான நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் சிறுவர்களை படையணிக்கு சேர்ப்பதை முடிவுக்கு கொண்டு வருமாறும் பான் கீ மூன் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

மனிதாபிமான விவகாரங்களுக்கான ஒத்துழைப்பு நடவடிக்கைகளுக்கான ஐ.நா. அலுவலகத்தின் தகவலின் பிரகாரம், பொதுமக்கள் யுத்த வலயத்திற்குள்ளும் பாதுகாப்பு வலயத்திற்குள்ளும் தொடர்ந்து உயிரிழப்புகளை எதிர்கொண்டு வருவதாகவும் ஷெல் தாக்குதலால் பாதிப்படைவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. நிவாரணப் பணியாளர்கள் செல்வதற்கு முடியாமல் இருப்பதால் எண்ணிக்கையை ஐ.நா.வால் உறுதிப்படுத்த முடியாமலுள்ளது. ஆனால், ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டும் காயமடைந்தும் இருப்பதாக மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.

பாதுகாப்பு வலயமென அறிவிக்கப்பட்ட பகுதியில் அதிக சனச் செறிவு ஏற்பட்டுள்ளது. அங்கு உணவு தட்டுப்பாட்டால் மக்கள் இறப்பதாக ஐ.நா.வுக்கு தகவல் கிடைத்துள்ளது. அங்குள்ள நிலைமைகள் மலேரியா, சின்னமுத்து, பொக்குளிப்பான் போன்ற நோய்கள் மோசமாக பரவ வழிவகுக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், இந்நோய் பரவுவது தொடர்பாக ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டுள்ளது.

யுத்த வலயத்திலிருந்து பொதுமக்கள் வெளியேறுவதை புலிகள் தடுத்துள்ளதாக ஐ.நா. அலுவலகம் தெரிவித்தது.  இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதிகளில் மோதலில் சிக்கியுள்ளோர் மற்றும் இடம்பெயர்ந்தோருக்கு உதவ 155 மில்லியன் டொலர்கள் தேவையென ஐ.நா. கோரிக்கை விடுத்துள்ளது. மோதலுக்கான பிரதான காரணங்களுக்கு தீர்வு காண்பதற்கான முயற்சிகளை அதிதீவிரமாக மேற்கொள்ள வேண்டும் என்று ஐ.நா. செயலாளர் நாயகம் வலியுறுத்தியுள்ளார்.