வடக்கிலுள்ள வைத்தியசாலைகளில் இடம்பெயர்ந்த மக்களுக்கு சிகிச்சையளிக்க அமெரிக்க அரசாங்கம் 77 ஆயிரம் அமெரிக்க டொலர் பெறுமதியான மருந்துப் பொருட்களை வழங்கியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
சுகாதார அமைச்சில் இன்று காலை இடம்பெற்ற வைபத்தின்போது இலங்கைக்கான பிரதி அமெரிக்கத் தூதுவர் ஜேம்ஸ் ஆர். மோர் சுகாதார அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவிடம் இந்த மருந்துப் பொருட்களைக் கையளித்தார். இந்த வைபத்தில் உரையாற்றிய அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, வடக்கிலிருந்து இடம்பெயர்ந்தோரின் நலன் தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூடிய கரிசனை கொண்டுள்ளார். விடுவிக்கப்படாத பிரதேசங்களில் உள்ள மக்களுக்கு மருந்துப் பொருட்கள் உட்பட அத்தியவசியப் பொருட்களை அரசாங்கம் அனுப்பி வைத்துள்ளது. பொதுமக்களுக்காக அனுப்பி வைக்கப்படும் இப்பொருட்களை புலிகள் சூரையாடுவதாக அறிக்கைகள் குறிப்பிடுகின்றன எனக் கூறினார்.
இடம்பெயர்ந்த மக்களுக்கு உதவிகள் வழங்கியமைக்காக அமெரிக்க அரசாங்கத்துக்கு தனது பாராட்டுக்களைத் தெரிவிப்பதாகவும் அமைச்சர் இங்கு மேலும் குறிப்பிட்டார்.
இங்கு கருத்துத் தெரிவித்த அமெரிக்க பிரதித் தூதுவர், விடுவிக்கப்படாத பிரதேசங்களில் சிக்கியுள்ள மக்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்துகொடுப்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை பாராட்டினார் எனவும் அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.