வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம வியட்நாமுக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். வியட்நாமின் பிரதி பிரதம அமைச்சரினதும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சரினதும் அழைப்பின் பேரில் வியட்நாமுக்கான இருநாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.
வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் போகொல்லாகமவுக்கும் வியட்நாம் பிரதி பிரதம அமைச்சருக்கும் வியட்நாம் வெளிநாட்டலுவல்கள் அமைச்சருக்குமிடையே இடம்பெற்ற உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைகளின் போது இரு நாடுகளுக்குமிடையே நிலவும் அதி சிறந்த இருபக்க தொடர்புகளின் நடைமுறை விடயங்களை ஆலோசித்தனர். இரு தரப்பு வர்த்தகத்தை அதிகரிப்பதன் பொருட்டு வியாபார நிபுணர் குழுக்களை பரிமாறிக் கொள்வதன் மூலம் இரு நாடுகளுக்குமிடையிலான கூட்டுறவுத்துறைகளுக்கிடையில் நெருக்கமான இணைப்புகளை அதன்மூலம் உருவாக்குவதற்கு அமைச்சர்கள் உடன்பட்டுள்ளனர்.
மேலும், பாதுகாப்பு விடயங்களிலும் புதிய உட்வேகத்தை கொடுத்து பாரம்பரிய ஒத்துழைப்பை விரிவாக்குவதற்கும் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. இலங்கையில் தூதரகம் ஒன்றை நிறுவுவதற்கான விருப்பத்தை வியட்நாமிய தரப்பினர்கள் தெரிவித்துள்ளனர். 1982 ஆம் ஆண்டில் மூடப்பட்ட வியட்நாம் தூதரகத்தை மீளத்திறப்பதற்கான வியட்நாமின் தீர்மானத்தை இலங்கை வரவேற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.