March

March

1625 தாதியருக்கு இன்று நியமனம்

sri-lanka-hospitals.jpgஅரசாங்க சுகாதார சேவைக்கு 1625 தாதியர் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.  இவர்களுக்கான நிய மனக் கடிதங்கள் சுகாதாரப் பராமரிப்பு, போஷாக்குத்துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் இன்று (23ம் திகதி) கொழும்பில் வழங்கப்படவிருக்கிறது.

மருதானை, எல்பின்ஸ்டன் திரையரங்கில் காலை 10.00 மணிக்கு அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் நடைபெறும் இவ்வைபவத்தில் இத்தாதிரியருக்கான நியமனக் கடிதங்கள் வழங்கப்படவுள்ளன. இன்று நியமனம் பெறுபவர்களில் 110 தாதியர் வடமாகாண ஆஸ்பத்திரிகளிலும், 260 தாதியர் கிழக்கு மாகாண ஆஸ்பத்திரிகளிலும் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

இதேநேரம் 28 வருடங்களின் பின்னர் கிளிநொச்சி ஆஸ்பத்திரிக்கு 25 சிங்கள மொழி தாதியர் கடமைக்கென நியமிக்கப்பட்டிருப்பதாக அமைச்சின் அதிகாரியொருவர் குறிப்பிட்டார்.

சீனாவில் வன்செயல்; திபெத்திய பிக்குகள் கைது

_china_tibet_.gifசீனாவின் வடமேற்கே குயிங்கை மாகாணத்தில் இடம்பெற்ற வன்செயல்களை அடுத்து, திபெத்திய பிக்குகள் 6 பேரை தாம் கைதுசெய்துள்ளதாகவும், வேறு 90க்கும் அதிகமானோரின் சரணடைவதற்கான கோரிக்கையை தாம் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் சீனா கூறியுள்ளது.

பொலிஸ் காவலில் இருந்து திபெத்திய பிரிவினை ஆதரவளர் என்று சந்தேகிக்கப்படும் ஒருவர் தப்பித்ததை அடுத்து, சனிக்கிழமையன்று குறைந்தது 100 பேர் பொலிஸ் நிலையம் ஒன்றை தாக்கியதாக சீன சின்குவா அதிகாரபூர்வ செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

அந்த நபரின் நிலைமை குறித்த வெளியான தவறான வதந்திகளால் அந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏமாந்து விட்டார்கள் என்று பொலிஸார் கூறுகிறார்கள்.ஆனால், ஒரு திபெத்திய பிக்குவான, அந்த நபர் ஒரு ஆற்றில் வீழ்ந்து தற்கொலை செய்துகொண்டதாக வெளிநாடுகளில் தஞ்சமடைந்துள்ள திபெத்தியர்களால் நடத்தப்படும் இணையத்தளம் ஒன்று கூறுகிறது.

மெளலவி ஆசிரியர் நியமனம்: போட்டிப் பரீட்சை முடிவு அடுத்தவாரம்

susil-premaja.jpgமெளலவி ஆசிரியர் நியமனத்திற்கான போட்டிப் பரீட்சை முடிவுகள் அடுத்த வாரம் வெளியிடப்படும் என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த் நேற்று முன்தினம் தெரிவித்தார்.

அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகள் சம்மேளனத்தின் 39வது வருடாந்த மாநாட்டில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். சம்மேளனத்தின் தலைவர் தலைமையில் கொழும்பு, பொரல்லை நகரோதய மண்டபத்தில் நடைபெற்ற இம்மாநாட்டில் அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

மெளலவி ஆசிரியர் நியமனத்திற்கான போட்டிப் பரீட்சை முடிவுகள் அடுத்தவாரம் வெளியிடப்படும். அதனைத் தொடர்ந்து முதற்கட்டமாக 200 பேர் மெளலவி ஆசிரியர்களாக சேர்த்துக்கொள்ளப்ப டுவர்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் தான் முஸ்லிம் மாணவ/ மாணவிகளின் நன்மை கருதி மெளலவி ஆசிரியர் நியமனத்திற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறது. இந் நடவடிக்கை கடந்த இருபது வருடங்களுக்குப் பின்னர் இடம்பெறுகின்றது.

கடந்த கால ஆட்சியாளர்கள் மெளலவி ஆசிரியர் நியமனத்திற்கு எதுவிதமான நடவடிக்கையையுமே மேற்கொள்ளவில்லை. அரசாங்கப் பாடசாலைகளில் கல்வி கற்கும் முஸ்லிம் மாணவ/ மாணவிகளின் நலன்கள் கருதி மூன்று கட்டங்களில் 640 மெளலவி ஆசிரியர்களை நியமிப்பதற்கு அமைச்சரவை ஏற்கனவே அனுமதி வழங்கியுள்ளது என்றார்.

தலாய் லாமா தென்னாப்பிரிக்கா செல்வதற்கு ‘தடை’

_dalailama.jpgதிபெத் ஆன்மிகத் தலைவர் தலாய் லாமா தென்னாப்பிரிக்காவுக்கு மேற்கொள்ளவிருந்த பயணத்தை ஒத்திப்போடச்சொல்லி தென்னாப்பிரிக்க அரசாங்கம் கோரியிருப்பதாகவும், தலாய் லாமாவுக்கு அது இதுவரை பயண விசா வழங்கியிருக்கவில்லை என்றும் லாமாவின் பிரதிநிதிகள் கூறுகின்றனர்.

2010ஆம் ஆண்டு கால்பந்து உலகக் கோப்பை போட்டிகளை நடத்த தென்னாப்பிரிக்கா தயாராகிவரும் நிலையில், கால்பந்து விளையாட்டைப் பயன்படுத்தி இனத்துவேஷத்துக்கு எதிரான கருத்தைப் பரப்பும் வழிமுறைகள் பற்றி விவாதிப்பதற்காக வரும் வெள்ளிக்கிழமை நடக்கவுள்ள ஒரு மாநாட்டில் கலந்துகொள்வதற்காக தலாய் லாமா அங்கு பயணிக்கவிருந்தார். நொபெல் அமைதிப் பரிசு வென்ற வேறு சில பிரமுகர்களும் அந்த மாநாட்டில் கலந்துகொள்கிறார்கள்.

தலாய் லாமா தென்னாப்பிரிக்கா வருவதை நிறுத்துமாறு தென்னாப்பிரிக்காவிடம் சீன அரசு வலியுறுத்தியிருந்ததாக சீன தூதரக அதிகாரியை மேற்கோள்காட்டி தென்னாப்பிரிக்க நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.

ஐபிஎல் போட்டிகளுக்கு பாதுகாப்பு வழங்க தயார்: நரேந்திரமோடி 23.03/06

_ipl_graphic_.jpgஐபிஎல் போட்டிகளுக்கு பாதுகாப்பு வழங்க தயார் என்று குஜராத் முதல்வர் நரேந்திரமோடி கூறியுள்ளார்.

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் (ஏப்ரல்) 10ந் தேதி முதல் மே 24ந் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் அந்த சமயத்தில் பாராளுமன்ற தேர்தலும் நடப்பதால் பாதுகாப்பு அளிப்பது கடினம் என்று மத்திய அரசு கூறி வருகிறது.
 
இதையடுத்து போட்டி அட்டவணையை மாற்றும்படி அறிவுறுத்தியது. ஆனால் 3 முறை மாற்றப்பட்டும் மத்திய உள்துறை அமைச்சகம் அதை ஏற்க இயலாது என்று கூறியது. இதை தொடர்ந்து இன்று நடந்த கிரிக்கெட் வாரிய கூட்டத்தில் ஐ.பி.எல். போட்டியை இந்தியாவில் இருந்து வெளிநாட்டுக்கு மாற்றுவது என்று முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் ஐபிஎல் போட்டிகளுக்கு பாதுகாப்பு வழங்க தயார் என்றும், இந்தியா போன்ற சக்தி வாய்ந்த நாடு பாதுகாப்பு தர முடியாதது வெட்கக்கேடு. காமன்வெல்த் போட்டிகளுக்கு மட்டும் பாதுகாப்பு தர முடியுமா? என்றும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கூறியுள்ளார். மேலும் நாட்டின் மானத்தை காப்பாற்ற குஜராத் அரசு ஐபிஎல் போட்டிக்கு பாதுகாப்பு தர முடிவு செய்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.

ஆனந்த குமார சுவாமி நிவாரண கிராமத்தில் மக்களை தங்கவைக்கும் பணிகள் ஆரம்பம்

_mullai_.jpgவன்னி யிலிருந்து வரும் மக்களை தங்க வைப்பதற்கென வவுனியாவில் அமைக்கப்பட்ட இரண்டாவது நிவாரணக் கிராமமான ஆனந்த குமாரசுவாமி நிவாரணக் கிராமத்தில் மக்களை தங்கவைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதோடு இதுவரை 849 குடும்பங்களைச் சேர்ந்த 3215 பேர் அங்கு தங்க வைக்கப்பட்டுள்ளதாக மீள் குடியேற்ற மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிசாட் பதியுதீன் கூறினார். இக்கிராமத்துக்கு நேற்று அமைச்சர் ரிசாட் பதியுதீன் விஜயம் மேற்கொண்டு மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள வசதிகள் மற்றும் தேவைகள் குறித்து ஆராய்ந்தார். இந்த மக்களுக்குத் தேவையான சகல வசதிகளையும் தடையின்றி துரிதமாக வழங்குமாறு அமைச்சர் அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார்.

வவுனியாவுக்கு இதுவரை 40 ஆயிரம் பொதுமக்கள் வந்துள்ளதோடு அவர்கள் தாங்களாகவே சமைப்பதற்குத் தேவையான பொருட்கள் வழங்கும் நடவடிக்கை புதன் கிழமைக்கு முன் பூர்த்தி செய்யப்பட உள்ளன. நிவாரணக் கிராமங்களிலுள்ள மக்கள் புதன்கிழமை முதல் தாங்களாகவே சமைக்க உள்ளதாக வவுனியா அரச அதிபர் திருமதி சாள்ஸ் தெரிவித்தார். இதேவேளை வவுனியா வந்துள்ள மக்களுக்கு தேவையான வசதிகள் குறித்து ஆராயும் உயர்மட்ட மாநாடு அமைச்சர் ரிசாட் பதியுதீனின் தலைமையில் வவுனியா கச்சேரியில் நடைபெற்றது.

வன்னியிலிருந்து அடுத்த சில தினங்களில் மேலும் அதிகளவான பொதுமக்கள் இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசத்திற்கு வருவார்கள் என நாம் அறிகின்றோம். இடைத்தங்கல் முகாம்களில் வசதிகள் மேலும் விஸ்தரிக்கப்பட வேண்டிய தேவை உள்ளது என அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இங்கு தெரிவித்தார்.

கடந்த இரு தினங்களில் மட்டும் மூவாயிரத்திற்கு மேற்பட்டவர்கள் வந்துள்ளார்கள். இவர்களை நான் சனிக்கிழமை சந்தித்தபோது அவர்கள் நீண்ட தூரம் நடைபவனியாக வந்து இராணுவத்திடம் சரண் அடைந்துள்ளார்கள் என்பதை அறிந்ததாகவும் அமைச்சர் கூறினார்.

இந்த உயர்மட்ட மகாநாட்டில் குடிநீர், சுகாதாரம், உணவு விநியோகம், மின்சாரம், தொடர்பான விடயங்களுக்கு பொறுப்பான அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.ஆனந்த குமார சுவாமி கிராமத்தில் உள்ள சில நோயாளர்களுக்கு மேலதிக சிகிச்சையளிக்க தேவையேற்படின் அவர்களை மன்னார் வைத்திய சாலைக்கு உடன் அனுப்பு வற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் பாதுகாப்பு பிரிவினருக்கு அமைச்சர் உத்தரவு பிறப்பித்தார்.

இதேவேளை அங்கவீனமுற்ற வர்களுக்கான சக்கர நாற்காலிகள், ஊன்றுகோல்கள் என்பனவற்றை யும் அமைச்சர் வழங்கி வைத்தார். இதேவேளை அரச சார்பற்ற நிறுவன பிரதிநிதிகளையும் அமைச்சர் சந்தித்தார். நிவாரணக் கிராமங்களில் உள்ள மக்களுக்கு வழங்க வேண்டிய வசதிகள் குறித்து இங்கு ஆராயப்பட்டது. மக்களுக்கு இதன்போது குடிநீர் வசதி அளிப்பதற்கென 2 பவுசர்கள் வழங்க அரச சார்பற்ற நிறுவனமொன்று இணக்கம் தெரிவித்துள்ளது.

இதேவேளை மூன்றாவது நிவாரணக் கிராமம் அமைப் பதற்கான பணிகள் ஆரம்பிக்க ப்பட்டுள்ளதோடு இந்த பணிகளை துரிதப்படுத்துமாறு அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

புதியதொரு நாட்டை கட்டியெழுப்புவதே ஜனாதிபதியினதும் அரசினதும் நோக்கம் – அமைச்சர் டளஸ்

நாட்டினதும் மக்களினதும் தேவைக் கேற்ப புதியதொரு நாட்டை கட்டியெழு ப்புவதே ஜனாதிபதியினதும், அரசாங்கத்தினதும் பிரதான நோக்கமாகும் என்று போக்குவரத்து அமைச்சர் டளஸ் அழகப் பெரும தெரிவித்தார்.

கடந்த காலத்தையும் கடந்த காலத்தில் நடைபெற்ற தவறுகளையும் பற்றி பேசிக் காலத்தை கழிப்பதைவிட சிறந்ததொரு எதிர்காலத்திற்காக திட்டமிடுவது காலத் தின் கட்டாயத் தேவையாகும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் www.sandanaya.lk என்ற தேர்தல் இணையத்தளம் ஆரம்பித்து வைக்கும் பிரதான வைபவம் கடந்த வெள்ளிக் கிழமை பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் நடை பெற்றது. அலரி மாளிகையிலிருந்தவாறே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ செய்மதி ஊடாக இணையத் தளத்தை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

அமைச்சர் டளஸ் அழகப்பெரும இங்கு மேலும் உரையாற்றுகையில் :- வீணான செலவுகளை தவிர்த்து இந்த இணையத் தளத்தின் ஊடாக எமது சகல பிரசார நடவடிக்கைகளையும் மேற்கொள்ள திட்ட மிட்டுள்ளோம். எங்களது சகலவிதமான புதிய திட்டங்களையும் எமது ஆதரவாளர்களுக்கு இதன் மூலம் தெளிவுபடுத்தவுள்ளோம்.

பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக் கைகள், பொருளாதார அபிவிருத்தி திட்டம், அரசியல் மேம்பாடு என்ற பல வேலைத் திட்டங்களை ஜனாதிபதி தலை மையிலான அரசாங்கம் தற்பொழுது வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்கிறது என்றும் தெரிவித்தார்.

மடகாஸ்கர் அதிபராக அண்ட்ரி ரஜோலீன் பதவியேற்பு

andry.jpgமட காஸ்கர் தலைநகரின் முன்னாள் மேயரான அண்ட்ரி ரஜோலீன், நாட்டின் அதிபராகப் பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.  நாட்டின் முக்கிய விளையாட்டு மைதானத்தில் நடந்த பதவியேற்பு வைபவத்தில், தனது ஆதரவாளர்கள் முன்னிலையில் ரஜோலீன் பதவியேற்றார்.

வெளிநாட்டுப் பிரமுகர்கள் பலர் இந்த வைபவத்தில் கலந்துகொள்வதை புறக்கணித்திருக்கிறார்கள். அதிபர் மார்க் ரவலொமனானிடம் இருந்து நான்கு நாட்களுக்கு முன் ரஜொலீன் ஆட்சியைக் கைப்பற்றியிருந்ததை சர்வதேச நாடுகள் கண்டித்துள்ளன. இது ஒரு சட்டவிரோத ஆட்சிக் கவிழ்ப்பு என்று அவை கூறுகின்றன.

மடகாஸ்கரின் உறுப்புரிமையை ஆப்பிரிக்க ஒன்றியம் இடைநிறுத்தியுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் தவிர்ந்த ஏனைய உதவிப் பொருட்கள் மடகாஸ்கருக்குச் செல்வதை அமெரிக்காவும் நோர்வேயும் நிறுத்தியுள்ளன.

இந்தியாவில் தேர்தல்; இன்று முதல் 30 வரை வேட்பு மனு

india_.jpgஇந்தியா வின் 17 மாநிலங்களிலுள்ள 124 பாராளுமன்றத் தேர்தல் தொகுதிகளுக்கு ஏப்ரல் மாதம் 16ம் திகதி நடைபெறவிருக்கும் முதல் கட்ட தேர்தலுக்கு இன்று திங்கட் கிழமை முதல் எதிர்வரும் 30ம் திகதி வரை வேட்பு மனுத் தாக்கல் நடைபெறவிருக்கின்றது.

வேட்பு மனுக்களைப் பரிசீலனை செய்யும் தினமாக மார்ச் 31ம் திகதியும் வேட்பு மனுக்களை வாபஸ் பெறும் தினமாக ஏப்ரல் 2ம் திகதியும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஏப்ரல் 16ம் திகதி வாக்களிப்பு இடம்பெறும். இதன் நிமித்தம் வேட்பு மனுக்களை தயாரிப்பதிலும், வேட்பாளர்களைத் தெரிவு செய்வதிலும் தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகள் தீவிர கவனம் செலுத்தி வருகின்றன.

சில மாநிலங்களில் தொகுதி பங்கீடு தொடர்பாக கட்சிகளிடையே இழுபறி நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்நிலைமைகளுக்கு அடுத்துவரும் சில தினங்களுக்குள் தீர்வு காணப்படலாமென அரசியல் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஐந்து கட்டமாகத் தேர்தல் நடாத்தப்படவிருக்கிறது.

முதற்கட்டத் தேர்தல் ஆந்திரமாநிலத்தில் 22 தொகுதிகளிலும், கேரளா மாநிலத்தில் 20 தொகுதிகளிலும் உத்தரப் பிரதேச மாநிலத்தில் 16 தொகுதிகளிலும் மராட்டிய மாநிலத்தில் 13 தொகுதிகளிலும், பீகார் மாநிலத்தில் 13 தொகுதிகளிலும், சதீஷ்கார் மாநிலத்தில் 11 தொகுதிகளிலும் ஒரிஸ்ஸா மாநிலத்தில் 10 தொகுதிகளிலும், ஜார்க்கண்ட் மாநிலத்தில் 06 தொகுதிகளிலும், அஸாம் மாநிலத்தில் 3 தொகுதிகளிலும், அருணாசலம் பிரதேச மாநிலத்தில் 2 தொகுதிகளிலும், மேகாஸா மாநிலத்தில் 2 தொகுதிகளிலும், அந்தமான் நிக்கோபார் தீவுகள் மாநிலத்தில் ஒரு தொகுதியிலும், லட்சத்தீவு மாநிலத்தில் ஒரு தொகுதியிலும், மிசோரம் மாநிலத்தில் ஒரு தொகுதியிலும், நாகலாந்து மாநிலத்தில் ஒரு தொகுதியிலும், மணிப்பூர் மாநிலத்தில் ஒரு தொகுதியிலும், காஷ்மீர் மாநிலத்தில் ஒரு தொகுதியிலும் நடைபெற விருக்கிறது.

இதேவேளை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்க ளிலுள்ள 40 தொகுதிகளுக்கும் எதிர்வரும் மே மாதம் 13ம் திகதி நடைபெறவிருக்கிறது.  இந்தத் தொகுதிகளுக்கான வேட்பு மனுக்கள் ஏப்ரல் மாதம் 17ம் திகதி முதல் 24ம் திகதி வரை ஏற்றுக் கொள்ளப்பட விருக்கிறது.

தெற்கில் புலிகள் தாக்குதல் நடத்தலாம் பொதுமக்கள் எச்சரிக்கையாயிருக்க வேண்டும் – அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேயவர்தன

l-yaappa-abayawardana-01.jpgபுலிகள் தமது வசமிருக்கும் சிறிய பிரதேசத்தையும் எதிர்வரும் நாட்களில் இழக்கக் கூடிய சூழ்நிலையில் அவர்கள் தெற்கில் தாக்குதலை நடத்தலாமென ஊடக அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேயவர்தன தெரிவித்தார். இந் நிலையில் உயிர் இழப்பையும் சொத்துகள் சேதமடைவதையும் தவிர்க்கும் பொருட்டு எச்சரிக்கையாக இருக்குமாறும் ஏதேனும் சந்தேகமான நடமாட்டங்கள் மற்றும் பொருட்கள் குறித்த தகவலை பொலிஸாருக்கு அறிவிக்குமாறும் கேட்டுள்ளார்.

தகவல் திணைக்களத்தில் சனிக் கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு பேசுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் பேசுகையில்; தற்போது புலிகளிடமுள்ள சிறியளவு பகுதியையும் எதிர்வரும் சில தினங்களில் கைப்பற்றிவிட முடியுமென பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் விரக்தியடைந்த புலிகள் தெற்கில் அழிவையேற்படுத்தும் வகையில் தாக்குதலை நடத்தலாம். எனவே பஸ்கள் மற்றும் பொது இடங்களில் சந்தேகமான நடமாட்டங்கள் மற்றும் பொருட்கள் காணப்படின் உடனடியாக பொலிஸாருக்கும் முப்படையினருக்கும் அறிவிப்பதுடன் அவதானமாக இருக்குமாறும் பொதுமக்களைக் கேட்டுள்ளார்.