பாதுகாப்பு குறித்து சர்வதேச தொண்டர் அமைப்புகள் ஆராய்வு – சந்திப்பில் ஐ.நா. விசேட தூதுவரும் பங்கேற்பு
இலங்கையிலுள்ள சர்வதேச தொண்டர் அமைப்புகளின் பாதுகாப்பு தொடர்பாக வெள்ளிக்கிழமை கொழும்பில் அந்த நிறுவனங்கள் கூடி ஆராய்ந்துள்ளன.
இலங்கை வந்துள்ள ஐ.நா. செயலாளரின் விசேட பிரதிநிதியான சாம்ராட் சாமுவேலும் இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில் சகல அரச சார்பற்ற நிறுவனங்களினதும் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் கொழும்பு தலைமையகம் மீது வெள்ளிக் கிழமை பிற்பகல் இடம்பெற்ற தாக்குதல் மற்றும் கடந்தவாரம் சர்வதேச தொண்டர் அமைப்புகளுக்கு எதிராக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் விடுத்த எச்சரிக்கைகளை அடுத்தே இந்த அவசர கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது. இதன்போது, எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அதற்குரிய பாதுகாப்பு உத்தரவாதத்தை இலங்கை அரசிடம் பெறுவது தொடர்பாகவும் சந்திப்பின்போது ஆராயப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.