01

01

இராணுவ விமான நிலையம் முற்றுகை. -கொளத்தூர் மணி உட்பட 250 பேர் கைது

kolathur_mani.jpgதஞ்சை விமானப் படைத்தளத்தில் இருந்து இலங்கை ராணுவத்திற்கு போர்க்கருவிகள் அனுப்பப்படுவதாகக் கூறி தமிழர் ஒருங்கிணைப்பு குழு “விமானப் படைத்தள முற்றுகைப் போராட்டம்” நடத்த அழைப்பு விடுத்திருந்தது.  நேற்று (31) தேசிய பொதுவுடமை கட்சியின் பொதுச்செயலாளர் தஞ்சை.மணியரசன், பெரியார் திராவிட கழக தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் தமிழுணர்வாளர்கள் விமான தளத்தை நோக்கி ஊர்வலம் போனார்கள்.

விமான நிலையத்திற்கு முன்பாக அவர்களை மறித்த தஞ்சை மாவட்ட காவல்துறை போராட்ட குழுவை அதற்கு மேல் செல்ல விடாமல் தடுப்பு வைத்து தடுத்தனர்.தடையை மீறி விமான நிலையத்தை நோக்கி சென்ற குழவினரை போலிஸார் மீண்டும் தடுத்ததால் அங்கேயே உட்கார்ந்து விட்டார்கள். அக்கூட்டத்தில் மணியரசன் பேசும்போது, தமிழர்களை கொல்லும் இந்திய அரசே உடனே போரை நிறுத்து தமிழர்களை கொல்லாதே, ஈழதமிழர்களை கொல்ல ஆயுதம் அனுப்பிய இந்த விமான படைதளத்தை உடனே மூட வேண்டும். இல்லையேல் பொதுமக்களே இந்த விமான படை தளத்தை மூடுவார்கள் என எச்சரித்தார். மணியரசன் பேசும்போதே போலிஸார் அதை தடுக்க போராட்ட குழுவுக்கும் காவல்துறையினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.

உடனே போராட்ட குழவினர் மணியரசன், கொளத்தூர் மணி உட்பட 250க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்து வல்லத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் அடைத்தனர்.  நேற்று மாலை அவர்களில் 244 பேரை ரிமாண்ட் செய்து திருச்சி சிறைக்கு காவல்துறை அனுப்பியுள்ளது.

தற்காலிக யுத்தநிறுத்தமொன்றுக்கு ஐரோப்பிய ஒன்றியம் கோரிக்கை

louis-michel-in.jpgஇலங்கை அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் தற்காலிக யுத்த நிறுத்தம் ஒன்றுக்கு ஐரோப்பிய ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது.
இதுகுறித்து வியாழக்கிழமை ஐரோப்பிய ஒன்றியத்தின் மனிதநேயப் பணிகளின் ஆணையாளர் லூயிஸ் மைக்கல் தெரிவிக்கையில்;

இலங்கை அரசாங்கமும் விடுதலைப் புலிகளும் யுத்தத்திற்குள் அகப்பட்டிருக்கும் பொதுமக்களை அப்பகுதியிலிருந்து பாதுகாப்பான பகுதிக்குள் செல்ல அனுமதிக்க வேண்டும். இந்த யுத்தம் மாபெரும் மனித அவலத்திற்கு வழிகோலும். வடக்கு, கிழக்கில் போரிற்குள் சிக்குண்டிருக்கும் பொதுமக்களின் தற்போதைய நிலைமை மிகவும் கவலையளிக்கிறது.

பொதுமக்கள் இழப்புகளை தவிர்க்கும் வகையில் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். இருதரப்பாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட யுத்தம் நடைபெறாத பகுதிக்குள் பொதுமக்களைப் பாதுகாத்து அவர்களுக்குரிய மனித நேய பணிகளை செய்வதற்கு ஆவன செய்ய வேண்டும். இதற்காக தற்காலிக யுத்த நிறுத்தமொன்று உடனடியாகத் தேவை.

வன்னிப் பகுதியில் பல நூற்றுக்கணக்கானோர் இறந்தும் அநேகமானோர் காயமடைந்தும் போதிய மருத்துவ வசதி இன்மையால் அல்லலுறுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

லண்டன் ஆர்ப்பாட்ட ஊர்வலம் – ஒரு நோக்கு : ரி சோதிலிங்கம்

Protest_UKலண்டன் புலம்பெயர் வாழ்வில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்கள் ஊர்வலங்களில் முன் மாதிரியாகவும் தமிழர்களை ஒன்று சேர்க்கும் பக்குவத்துடனும் BTF-TYO வினால் ஏற்ப்பாடு செய்யப்பட்ட ஊர்வலம் நடந்தேறியது. இந்த ஊர்வலத்தில் 50000 – 100000 பேர் வரை கலந்து கொண்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த ஊர்வலம் கடந்த காலங்களில் புலிகளை முதன்மைப்படுத்தி செய்ய்பபட்ட  நிகழ்வுகள் போலல்லாது பொதுவான வாசக – கோசங்களுடன் நடைபெற்ற போதிலும் புலிகள் தரப்பினர் ஏற்படுத்தும் தவறுகளையோ மனித உரிமை மீறல்களையோ வெளிப்படுத்தி இருந்திருக்கவில்லை. புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்திலிருந்து மக்களை வெளியேற்ற ஜ நா மற்றும் சர்வதேச அமைப்புக்களின் வேண்டுகொள்களை பிரதிபலித்தோ இருக்கவில்லை என்பதும் குறிப்பிட்டேயாக வேண்டும்.

கடந்த கால ஈழப் போராட்ட வரலாற்றில் ஏற்பட்ட பல அரசியற் தவறுகளை, சந்தர்ப்பம் கிடைக்கும் போது அவற்றை  புலிகள் தமிழர்கள் பிரதேச சுயாட்ச்சியை  ஏறப்படுத்தும் மைல்கற்களாக பயன்படுத்தாமல் போனது பற்றி பலரிடமும் விமர்சனங்கள் உள்ள போதிலும் நேரிடையாக இன்று வரை புலிசார்பு ஊடகங்கள் அதனை வெளிப்படுத்தவில்லை. இதை ஒரு சுய விமர்சனமாகக் கூட பார்க்கப்படவில்லை என்பது பலரின் ஆதங்கமாக உள்ளது.

இந்த ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் அரசுக்கெதிரான கோசங்களும் யுத்த நிறுத்தம் கோரிய கோசங்களும் இந்திய ஆதரவு கோசங்களும் முன்வைக்கப்பட்ட அதேவேளை புலிகளின் தவறுகள் எதுவும் சுட்டிக்காட்டப் படவில்லை.

கடந்த சில வாரங்களாக ஜரோப்பாவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் எடுத்து வரப்பட்ட புலிக் கொடி, பிரபாகரனின் படம் போன்றவைகள் இம்முறை லண்டன் ஊர்வலத்தில் முன்வைக்கப்படாமல் இருந்தது மிகவும் வரவேற்க்கத்தக்கதே. இது எதிர்காலதில் சரியான வழிவகைகளை தேட உதவி செய்யும்.

லண்டன் ஊர்வலத்தில் எடுத்து வரப்பட்ட பல முக்கிய பதாகைகளில் யுத்தத்தை நிறுத்து; தமிழர்களை கொல்லாதே; பேச்சு வார்த்ததையை ஆரம்பி போன்ற கோசங்களுடன் இந்தியாவே தமிழர்கள் உனது நண்பன் என்ற பதாகை தாங்கப்பட்டதும் குறிப்பிட்டாக வேண்டும். இலங்கை -இந்திய ஒப்பந்தத்தின் பின்னர் இந்திய இராணுவத்துடன் ஏற்படுத்தப்பட்ட முறுகல் முற்றி சமாதானப் படை கொடூரப்படையாகியது. இன்று இலங்கைத் தமிழர்கள் இந்தியாவின் எதிரி அல்ல என்ற பதாகையுடன் நிற்கின்றனர்.

இதே போல BBC க்கு எமது போராட்டத்தில் அக்கறை செலுத்தும் படியான பதாகைகள் தாங்கியிருந்ததும் குறிப்பிடத்தக்கதே. ஆர்பபாட்டங்களில் ஆளும் அரசகளுக்கு எதிராக பதாகைகள் வருவது வழமையே ஆனால் கடந்த வாரம் BTF-TYO வினர் பிபிசி அலுவலகத்திற்கு எதிரான ஓர் ஆர்ப்பாட்டத்தை செய்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. பொது ஊடகங்கள் தமிழர் போராட்டங்களை பாராமுகமாக இருப்பதற்கான காரணங்களை அறிந்து அவற்றின் ஊடாக அந்த ஊடகங்களின்  கவனத்தை ஈர்ப்பதே சரியானது. அதைவிடத்து அந்த BBC க்கு எதிராக போர்க்கொடி ஏந்தி பலவந்தமாக பாடம் கற்பிக்கும் தன்மைக்கு எப்படியான பதில் கிடைக்கும் என இனிவரும் காலங்களில் அறிந்து கொள்ளலாம்.

BTF ன் முக்கிய உறுப்பினர் சுரேந்திரன் SKY ற்கு கருத்தப்பரிமாறிய போது  தமிழர்களின் பிரதிநிதி புலிகள் என்றும் புலிகளுடன் அரசு யுத்தத்தை நிறுத்தி பேச்சுவார்த்தை செய்யவேண்டும் என்றும் கூறியிருந்தார். இதன் மூலம் BTF தமிழர்களின் ஏகபோக பிரதிநிதி புலிகள் மட்டுமே என்ற கருத்தை வெளிப்படுத்துவதாகவே தெரிகிறது. கடந்த சில வருடங்களாக இலங்கையில் வட – கிழக்கு பிரதேசங்களில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்களை BTF சுரேந்திரன் புரிந்து கொள்ள தவறிவிட்டார் என்றே தோன்றுகிறது.

ஏதிர்பார்த்ததைவிட மிக அதிகமானோர் ஊர்வலத்திற்கு வந்திருந்ததாலும், லண்டன் பொலீசாரின் இக்கட்டான நிலைமைகளினாலும், ஊர்வலத்தில் பங்கு பற்றிய ஒரு பகுதியினர்க்கு சில அசௌகரியங்கள் ஏற்பட்டதும் அந்த குளிரிலும் அந்த அசௌகரியங்களை தமிழர்கள் பொறுமையாக ஒத்தழைத்ததை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.

ஊர்வலத்தின் இறுதியில் 5000 பேர் வரையிலானவர்கள் பாராளுமன்றதின் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன்  பாராளுமன்றத்தில் மகஜர் கையளித்தனர். கையளிக்கப்பட்ட மகஜருக்கு பதில் ஓரிரு தினங்களில் தருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரம் 4ம் திகதி இலஙகையின் சுதந்திர தின நாளை கரி நாளாக அறிவித்து போரட்டம் ஒன்றை BTF-TYO ஒழுங்கு செய்துள்ளனர்.