February

February

முரளிதரன் ‘ஒரு நாள் போட்டியி’லும் உலகசாதனை

_murali.jpgஇலங்கை கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரன் ஒரு நாள் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்துவதியவர் என்ற உலக சாதனையை இன்று (05.02.2009) ஏற்படுத்தியுள்ளார்.

இன்று கொழும்பில் இந்தியாவுக்கு எதிரான 4 வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் போது கௌத்தம் கம்பீரின்  விக்கெட்டை கைப்பற்றிய முரளிதரன் பாகிஸ்தானின் வாசிம் அக்ரம் அவர்களின் சாதனையான 502 விக்கெட்டுகள் என்கிற இலக்கைத் தாண்டி 503  விக்கெட்டுகள் பெற்று  புதிய உலக சாதனை சாதனையை ஏற்படுத்தியுள்ளார்.

இன்று தனது 328 ஆவது ஒரு நாள் போட்டியில் விளையாடிய போதே முரளிதரன் இந்த உலக சாதனையை ஏற்படுத்தியுள்ளார்.

உலக அளவில் டெஸ்ட் போட்டிகளிலும் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ள வீரர் என்கிற பெருமையும் முரளிதரனையே சாரும். 125 டெஸ்ட் போட்டிகளில் அவர் 769 விக்கெட்டுகளை இதுவரை வீழ்த்தியுள்ளார்.

Top-Five Bowlers 

Player                  Team          Matches       Wkts 

M Muralitharan      SL                 328                   503 
Wasim Akram         Pak               356                   502 
Waqar Younis         Pak                262                   416 
C Vaas                      SL                  322                   401 
SM Pollock               SA                 302                   391 

வன்னிப்பகுதியிலுள்ள மக்கள் வவுனியாவுக்கு வரும்பட்சத்தில் சகல அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படும். – அமீர் அலி

ameerali.jpgஅரச கட்டுப்பாடற்ற வன்னிப்பகுதியிலுள்ள மக்கள் அரச கட்டுப்பாட்டு பகுதியான வவுனியாவுக்கு வரும்பட்சத்தில் தேவையான நடவடிக்கையெடுக்கப்படும். இவர்களுக்கென இராமநாதன் சுதந்திரபுரம், அருணாச்சலம் விடுதலைபுரம் மற்றும் கதிர்காமர் எழுச்சிக்கிராமம் ஆகிய மீள் குடியேற்ற கிராமங்கள் உருவாக்கப்படவுள்ளது.  இக்கிராமங்கள் ஒவ்வொன்றிலும் 8000 வீடுகள் அமைக்கப்படவுள்ளதுடன் பாடசாலை, வீதி, குடிநீர் மற்றும் மின்சாரவசதி உட்பட சகல அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படும்.  தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அனர்த்த சேவைகள் அமைச்சர் அமீர் அலி பேசுகையில் கூறியதாவது;

அவர்களுக்கு தேவையான உணவுப்பொருட்கள் களஞ்சியப்படுத்தப்பட்டிருப்பதுடன் மருத்துவ வசதியும் செய்து கொடுக்கப்படவுள்ளது. ஊடகங்கள் எண்ணிக்கையையே பார்க்கின்றது. அரசு தரமான தேவையை அம்மக்களுக்கு வழங்க காத்திருப்பதை மறந்துவிடுகின்றது. இது தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் தெரிவிக்கப்படுகின்றது. நாம் மக்களுக்கு செய்யவேண்டியதை எந்தவித தாமதமுமின்றி உடனடியாக நிறைவேற்றுவோம். இதற்கு தன்னார்வ மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் உதவவேண்டும். சகல மனிதாபிமான சேவைகளையும் அரசு உறுதியாக செய்ய காத்திருக்கிறது என்றார்.

உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட 40 பேர் மயக்கமடைந்து வைத்தியசாலையில் அனுமதி

பொத்துவில் பிரதேச செயலகம் முன்பாக கடந்த மூன்று நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 40 பேர் மயக்கமடைந்த நிலையில், நேற்று புதன்கிழமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  கடந்த ஆறு மாதத்திற்கு முன்னர் பொத்துவில் காட்டுப் பிரதேசத்தில் விறகு வெட்டச் சென்றபோது கைது செய்யப்பட்ட 30 முஸ்லிம்கள் வழக்கு விசாரணை எதுவுமின்றி தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டுள்ளமை தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களின் மனைவி, பிள்ளைகள், உறவினர்கள் காலவரையறையற்ற உண்ணாவிரத போராட்டத்தை திங்கட்கிழமை காலை 8 மணிக்கு பொத்துவில் பிரதேச செயலகத்தின் முன் ஆரம்பித்தனர்.

தொடர்ந்து மூன்று நாட்களாக இரவு, பகலாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் மயக்கமடைந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து இவர்கள் பொத்துவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 10 மாணவர்களும் அடங்குவர்.

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுபவர்களின் கோரிக்கை அடங்கிய மகஜர் பிரதேச செயலாளர், பிரதேச சபைத் தவிசாளர் உட்பட பலரிடம் கையளிக்கப்பட்ட போதிலும் நேற்று வரை இவர்கள் தொடர்பாக அதிகாரிகளோ அரசியல் வாதிகளோ எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் உறவினர்கள் கடும் விசனம் தெரிவிக்கின்றனர்.

வன்னி மக்களின் பாதுகாப்பை வலியுறுத்தி கொழும்பில் அடையாள உண்ணாவிரதம்

வன்னியில் இன்னல்களை அனுபவித்துவரும் பொதுமக்களின் பாதுகாப்பை வலியுறுத்தி தலைநகர் கொழும்பில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டமொன்றுக்கு சுதந்திர மாணவர் முன்னணி அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பாக சுதந்திர மாணவர் முன்னணி விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

“யுத்த அபாயத்திலிருந்து மக்களைக் காப்பாற்றுங்கள்! எமக்குத் தேவை சமாதானம் மட்டுமே! மக்களை மக்களாக நடத்துங்கள்!’ ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து இந்த உண்ணாவிரதம் இடம் பெறவுள்ளது. இந்த உண்ணாவிரதம் பம்பலப்பிட்டி, இராமநாதன் இந்து மகளிர் கல்லூரிக்கு முன்பாக நாளை வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு ஆரம்பமாகி மாலை 5 மணிக்கு நிறைவடையவுள்ளது.

இலங்கைத் தமிழரை பாதுகாக்க முல்லைத்தீவுக்கு படகுப்பயணம் – தூத்துக்குடி சட்டத்தரணிகள் சங்கம் முடிவு

“இலங் கையில் தமிழர்கள் மீதான தாக்குதலை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் எதிர்வரும் 9 ஆம் திகதி படகு மூலம் முல்லைத்தீவு செல்வோம்’ என தூத்துக்கடி சட்டத்தரணிகள் சங்கம் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இலங்கையில் தமிழர்கள் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்த இந்திய அரசு நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழகம் முழுவதும் சட்டத்தரணிகள், மாணவர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இலங்கைப் பிரச்சினை குறித்து ஆலோசிப்பதற்காக தூத்துக்குடி சட்டத்தரணிகள் சங்கத்தின் அவசர கூட்டம் அதன் தலைவர் பிரபு தலைமையில் நடந்தது. தமிழகத்தில் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் நடத்தும் அனைத்து போராட்டங்களுக்கும் ஆதரவு அளிப்பது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. ரயில் மறியல் மற்றும் 7 ஆம் திகதி நடக்கும் கறுப்புக் கொடி பேரணியில் பங்கேற்பது. அதன் பிறகும் இப்பிரச்சினைக்கு தீர்வு ஏற்படாவிட்டால் எதிர்வரும் 9 ஆம் திகதி தூத்துக்குடியில் இருந்து படகுகள் மூலம் முல்லைத்தீவு நோக்கி செல்வது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இது குறித்து சட்டத்தரணிகள் சங்க தலைவர் பிரபு கூறுகையில்; “இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதியில் கடும் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை கணக்கிட முடியாது. இனியும் தாமதிக்காமல் மத்திய அரசு உடனடியாக இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். படுகாயம் அடைந்துள்ள தமிழர்களை இந்தியா அழைத்து வந்து சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். இதற்காக தமிழக அரசும் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

வவுனியா ஆஸ்பத்திரி உணவக உரிமையாளர் கடத்தப்பட்டார்

வவுனியா பொது வைத்தியசாலை உணவக உரிமையாளர் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இரவு இனந்தெரியாத சிலரால் விசாரணைக்கெனக் கூறி கொண்டு செல்லப்பட்டுள்ளார்.  24 மணிநேரமும் வைத்தியசாலையின் உள்ளேயும் வெளியேயும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு வைத்தியசாலைக்குள் செல்பவர்கள் அடையாள அட்டைகள் உட்பட அனைத்தும் பரிசோதிக்கப்பட்டு அனுமதிக்கப்படும் நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு 8.30 மணியளவில் ஆஸ்பத்திரி உணவக உரிமையாளர் கடத்தப்பட்டுள்ளார்.

இதையடுத்து நேற்று ஆஸ்பத்திரி உணவகம் திறக்கப்படாததால் வார்ட்களில் தங்கியிருந்து சிகிச்சை பெறும் பெருமளவு நோயாளிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். தனது கணவன் கடத்தப்பட்டது தொடர்பாக மனைவி பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

ஈரான் தனது முதல் செயற்கைக் கோளை வெற்றிகரமாக விண்ணிற்கு ஏவியது

_grab_.jpgஈரானால் தயாரிக்கப்பட்ட முதல் செயற்கைக்கோள் ரொக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணிற்கு ஏவப்பட்டுள்ளது.  இச் செயற்கைக்கோள் வெற்றிகரமாக செலுத்தப்பட்டதை அந்நாட்டு ஜனாதிபதி மஹ்மூட் அகமதி நிஜாட் தொலைக்காட்சியில் அறிவித்தார்.  தொலைதூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளை ஈரான் ஏற்கெனவே செலுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது செயற்கைக்கோளை செலுத்தும் திறனைப் பெற்றுவிட்டதால் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் அதிர்ச்சி அடைந்துள்ளன.

அணு ஆயுதம் தயாரிக்க ஈரான் முயற்சித்து வருகிறது. எனவே ஈரானில் உள்ள அணு உலைகளை சர்வதேச முகாமை மூலம் சோதனையிட அனுமதிக்க வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது. ஆனால் அணு சக்தியை அமைதிப் பணிகளுக்கே பயன்படுத்துகிறோம் என்று ஈரான் கூறி வருகிறது.  இந்த நிலையில் ஈரான் செயற்கைக் கோளை செலுத்தும் ரொக்கெட் திறன் பெற்றிருப்பது அமெரிக்காவுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. ஏவுகணைகளில் அணு குண்டுகளைப் பொருத்தி நீண்ட தொலைவுக்குத் தாக்க முடியும் என்பதால் ஈரான் மீது உலக நாடுகளின் கவனம் திரும்பி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஈரானின் செயற்கைக்கோள் குறித்து மேற்குலக நாடுகள் கடும் விசனம்
 
ஈரான் தனது முதலாவது செயற்கைக்கோளை விண்ணுக்கு ஏவியது தொடர்பாக மேற்குலக நாடுகள் அதிக கவலை வெளிப்படுத்தியுள்ளது. ஆராய்ச்சி மற்றும் தொலைத்தொடர்பு சேவைகளுக்கு பயன்படுத்துவதாகக் கூறி ஈரான் தனது முதலாவது செயற்கைக் கோளை விண்ணில் ஏவியுள்ளது.

ஆனால், கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைப் பரிசோதனையின் அபிவிருத்திக்காகவே இச் செயற்கைக் கோளைப் பயன்படுத்தப்போவதாக அமெரிக்கா,பிரான்ஸ்,பிரிட்டன் ஆகிய நாடுகள் குற்றம் சாட்டியுள்ளன. ஈரானின் அணு நிகழ்ச்சித் திட்டம் தொடர்பாக கலந்துரையாடுவதற்கு ஆறு மேற்குலக நாடுகள் திட்டமிட்டுள்ள நிலையிலேயே இவ்வாறு குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஆனால், ஈரான் அணுகுண்டு தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக மேற்குலக நாடுகள் கருதுவதால் ஐ.நா.வின் தடைகளை எதிர்கொள்ளும் நிலையில் ஈரான் உள்ளது. இந்நிலையில் மேற்குலக நாடுகளின் குற்றச் சாட்டை மறுத்துவரும் ஈரான் தமது சக்தித் தேவை கருதியே அணுநிகழ்ச்சித் திட்டத்தை முன்னெடுப்பதாக கூறிவருகின்றது. ஈரான் தன்னுடைய யுரேனியம் செறிவூட்டலை இடைநிறுத்தினால் அதன் அணு நிகழ்ச்சித் திட்டம் தொடர்பான பேச்சுகளில் ஈடுபட முடியுமென ஜேர்மன், பிரான்ஸ், அமெரிக்கா, சீனா, பிரிட்டன், ரஷ்யா ஆகிய நாடுகள் வலியுறுத்துகின்றன.

பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சர் டேவிட் மிலிபன்டுடனான பேச்சுக்களைத் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அமெரிக்க வெளிவிவகாரச் செயலர் ஹிலாரி கிளின்டன்;  ஜேர்மனியின் பிராங்பட் நகரில் பேச்சுகளில் ஈடுபட்டு வரும் அமெரிக்கப் பிரதிநிதிகள் ஈரானுடன் பேச்சுகளில் ஈடுபடுவதற்கான அணுகுமுறைகள் தொடர்பான பேச்சுகளிலும் ஈடுபடுவர். சர்வதேச சமூகத்தில் ஈரானும் ஒரு அங்கத்துவ நாடாகுவதற்குரிய வாய்ப்புகள் உள்ளமை தெளிவாகவுள்ளது. ஈரானுடன் கைகுலுக்குவதற்கு நாம் தயாராக இருந்தாலும் எமது கொள்கைகளை கைவிடப்போவதில்லையெனத் தெரிவித்தார். இதேவேளை, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை அபிவிருத்தியில் ஈரான் ஈடுபடுவதற்கு சாத்தியமாக இருந்தாலும் அது குறித்து அதிக கவனம் செலுத்தப்படுமென அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள அதிகாரி றொபேட் வூட் தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஈரானின் செயற்கைக்கோள் தொடர்பாக அதிக கவனம் செலுத்தப்படுமென பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் எரிக் செவாலியர் தெரிவித்தார்.

இலங்கை பிரச்சனை-நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க வேண்டும் – விஜயகாந்த் : புறக்கணிக்க மாட்டோம் – தா.பாண்டியன்

vijayakanth.jpgஇலங்கையில் நடைபெறும் தமிழின படுகொலையை மத்திய அரசு தடுக்க தவறினால் தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சியினரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட போவதில்லை என்று முடிவு எடுக்க வேண்டும் என்று விஜயகாந்த் கூறியுள்ளார். இது குறித்து தே.மு.தி.க. நிறுவன தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இலங்கை தமிழர் பிரச்சினை எதிர்பாராத வகையில் ஒரு பெரிய நெருக்கடியை எதிர் நோக்கியுள்ளது. சிங்கள அரசின் முப்படைகளும், தமிழர் பகுதிகளை தாக்கியதன் விளைவாக இன்று முல்லைத்தீவின் ஒரு சிறிய பகுதியில் சுமார் 2   1/2 லட்சம் தமிழர்கள் போரில் சிக்கியுள்ளனர். எந்த நேரத்திலும் அவர்களுக்கு எதுவும் நேரலாம் என்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. சிங்கள அரசோ பாதுகாப்பு மண்டல பகுதிகள் என்று ஒரு சில பகுதிகள் வரையறுக்கப்பட்டுள்ளதாகவும், போர் முனையில் சிக்கியுள்ள தமிழர்கள் அந்த பகுதிகளில் வந்து பாதுகாப்பாக தங்கிக்கொள்ளலாமென்றும் அறிவித்துள்ளது.

சிங்கள அரசின் பாதுகாப்பு மண்டல பகுதிக்கு தமிழர்கள் சென்றால், வயதானவர்கள், குழந்தைகள் தவிர, மீண்டும் தீவிரவாதிகள் உருவாக கூடாது என்று சொல்லி சிங்கள போர் படையினர் தமிழ் வாலிபர்களை கொன்று விடுகின்றனர். பெண்களையும் மானபங்கப்படுத்தி அழித்து விடுகின்றனர். சிங்கள அரசின் பாதுகாப்பு மண்டலங்கள் என்பது தமிழர்களின் மரணப்படுகுழிகள் தான் என்பதை சிங்கள அரசு வேண்டுமென்றே மறைத்து வருகிறது. சிங்கள அரசின் இத்தகைய போக்கின் காரணமாக அங்குள்ள தமிழர்கள் சிங்களர்கள் கையில் சிக்கி சாவதை விட அவர்களை எதிர்த்து போராடி செத்து மடிவதே மேல் என்ற நிலைக்கு ஆளாகி விட்டனர். இந்த சூழ்நிலையில் சிங்கள அரசு போரை மேலும் நீடித்தால் பல லட்சக்கணக்கான தமிழர்கள் பேரழிவையே சந்திக்க வேண்டியிருக்கும். இதை அனுமதிப்பது நாகரீக உலகிற்கு எவ்விதத்திலும் சரியல்ல.

போன உயிர்களை மீண்டும் தருவது யாராலும் முடியாது. ஆகவே உயிர்கள் போவதை தடுக்க மனிதாபிமானமுள்ள உலகம் அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும். இத்தகைய மனிதகுலப் பேரழிவு ஏற்படும் அபாயக்கட்டத்தில், உலகில் பல்வேறு நாடுகளில் ஐ.நா.மன்றம் தலையிட்டுள்ளது. அது போல ஐ.நா.மன்றம் இந்த பிரச்சினையிலும் தலையிட்டு உடனடியாக போர் நிறுத்தம் செய்யவும், அதை கண்காணிக்கவும், உணவு, மருந்து போன்ற அத்தியாவசிய பொருள்களை வழங்கவும் ஏற்பாடு செய்ய வேண்டும்.

தமிழினப் பேரழிவை தடுக்க ஐ.நா.மன்றத்தில் எழுப்ப இந்திய அரசால் தான் முடியும். அண்டை நாட்டின் உள் விவகாரங்களில் தலையிட முடியாது என்று சொல்வது சரியல்ல. மனிதாபிமான அடிப்படையிலும், அண்டை நாட்டில் ஏற்படும் பிரச்சினையால் தங்கள் நாட்டின் அமைதிக்கு பங்கம் எற்படுமென்றாலும் நிச்சயமாக ஒரு அரசு தலையிட கடமைப்பட்டுள்ளது. இந்திய அரசு தமிழினப்படுகொலை தடுக்க தவறுமானால், தமிழ்நாட்டிலுள்ள அரசியல் கட்சிகள் தேசிய அரசில் பங்கு பெறுவதில் அர்த்தமில்லை. ஆகவே வரும் பாராளுமன்ற தேர்தலில் அனைத்து கட்சியினரும் போட்டியிட போவதில்லை என்று முடிவு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

சாதாரணமாக தங்கள் ஊரில் உள்ள குறைகளை செய்து கொடுக்காததற்கே அந்த ஊர் மக்கள் தேர்தலை புறக்கணிக்கிறார்கள் என்றால், அரசு ஓடோ டி சென்று அந்த மக்களின் குறைகளை தீர்க்க உறுதி கொடுத்து அவர்களை தேர்தலில் ஈடுபட வைக்கிறது. அப்படியிருக்க இலங்கையில் தமிழினமே படுகொலைக்கு ஆளாகும் சூழ்நிலையில், தமிழ்நாடு பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்க முடிவெடுத்தால் அப்பொழுதாவது இந்திய அரசு தமிழ்நாட்டு மக்களின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காதா என்பதே நம்முடைய எதிர்பார்ப்பு.

தேர்தல் புறக்கணிப்பு முடிவு எடுக்கப்படுமானால், தே.மு.தி.க.வை பொறுத்தவரை முதலாவதாக இடம் பெறும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். சிங்களராணுவத்தின் அநீதியை தடுத்து நிறுத்த தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும், மக்களும் ஒருமித்த கருத்தோடு எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்க ஒன்றுப்பட வேண்டும் என்பதே என் வேண்டுகோள். இவ்வாறு விஜயகாந்த் கூறியுள்ளார்.

புறக்கணிக்க மாட்டோம்:

இதுபற்றி கருத்து கூறிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் தா.பாண்டியன்,

இலங்கைப் பிரச்சனைக்காக வரும் நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்ற கருத்து ஏற்புடையதல்ல என்றும், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இலங்கைப் பிரச்சனையை முன் வைக்க மாட்டோம் என்றும் கூறினார்.
அதிமுக கூட்டணியில் மேலும் சில கட்சிகள் விரைவில் சேர உள்ளன. தேர்தலை சந்திப்பது குறித்து கூட்டணி கட்சிகள் அனைத்தும் விரைவில் கூடி ஆலோசனை நடத்துவோம். அதிமுகவுடனான தொகுதி பங்கீடு குறித்து இம்மாத இறுதியில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றார்.

இலங்கையில் போர் நிறுத்தம் கோரி பந்த் இயல்பு வாழ்க்கை பாதிப்பு இல்லை

cennai.jpgதமிழகத்தில் நேற்று நடந்த பந்த் காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை என்று தலைமை செயலாளர் ஸ்ரீபதி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் நேற்று பந்த் அறிவிக்கப்பட்டது. 85 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மாநிலம் முழுவதும் நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பஸ், ரயில்கள் வழக்கம் போல் ஓடின. அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் செய்வதில் எந்த பாதிப்பும் இல்லை. விமான போக்குவரத்திலும் பாதிப்பில்லை. பள்ளிகள் திறந்திருந்தன. சென்னையில்  பெரும்பாலான இடங்களில் கடைகள் திறந்திருந்தது. புறநகரில் பல இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

பாமக, விடுதலை சிறுத்தைகள் ஆதரவாளர்கள் அதிகம் உள்ள காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், வேலூர் மாவட்டங்களில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. வேலூர், கோவை, ஓசூர், சிவகங்கை, மானாமதுரை, பட்டுக்கோட்டை, கும்பகோணம், பழனி ஆகிய இடங்களில் பஸ்கள் கல் வீசி தாக்கப்பட்டன.

தர்மபுரியில் எல்ஐசி அலுவலகம், டாஸ்மாக் அலுவலகம் தாக்கப்பட்டது, வேலூரில் காங்கிரஸ் எம்எல்ஏ ஞானசேகரன் அலுவலகம் மீது கல்வீசப்பட்டது. அதைத் தவிர அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடக்கவில்லை.

தமிழக பந்த் குறித்து  தலைமைச் செயலாளர் ஸ்ரீபதி கூறியதாவது:

பந்த் காரணமாக தமிழ்நாட்டில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை. அசம்பாவிதம் எதுவும் நடக்கவில்லை. சில இடங்களில் கல் வீச்சு போன்ற சம்பவங்கள் நடந்தன. பஸ், ரயில், விமான போக்குவரத்தில் எந்த பாதிப்பும் இல்லை. கடலூரில் ஆட்டோ ரிக்ஷா போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டது. கடைகள் பெருமளவில் திறந்திருந்தன.கோவை, விழுப்புரம், நாகை, கடலூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் கடைகள் ஓரளவு அடைக்கப்பட்டிருந்தன. மற்ற மாவட்டங்களில் 80 சதவீத கடைகள் திறந்திருந்தன. தொழிற்சாலைகள் வழங்கம்போல இயங்கின. அரசு ஊழியர்கள் 99 சதவீதம் பேர் வருகை தந்திருந்தனர். இவ்வாறு ஸ்ரீபதி கூறினார்.

டிஜிபி ஜெயின் வெளியிட்டுள்ள அறிக்கை: சட்டம் ஒழுங்கு பராமரிக்க அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் காவல்துறையினர் செய்திருந்தனர்.

திருத்துறைப்பூண்டி எம்எல்ஏ உலகநாதன் தலைமையில் ரயில் மறியலில் ஈடுபட்ட 50 பேரும், மாநிலத்தில் சில இடங்களில் கடைகள், பள்ளிகளை மூட வற்புறுத்தியவர்கள் மற்றும் பேருந்துகள் மீது கற்கள் வீசி சேதப்படுத்தியவர்கள் 99 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பிரபாகரனின் உருவில் இன்னுமொருவர்

praba.jpgகடந்த வாரம் வன்னிப் பகுதியில் விடுதலைப் புலிகளின் தலைவர் தங்கியிருந்ததாகக் கருதப்படும் சொகுசு பதுங்குக் குழியொன்றை கண்டுபிடித்துள்ளதாக படைத் தரப்பினர் அறிவித்திருந்தமை தெரிந்ததே. அப்பதுங்குழியிலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட புகைப்படங்களுள் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை ஒத்த இன்னுமொருவருடன் பிரபாகரன் எடுத்துள்ள புகைப்படமொன்றினையும் படைத் தரப்பு வெளியிட்டுள்ளது.

இப்படத்திலுள்ளவர் பிரபாகரனை ஒத்த உருவம் கொண்டவர். இவருக்கு பிரபாகரனுக்குக் காணப்படுவதைப் போல மேல் மீசை காணப்படுவதில்லை என்றும், இவர் பிரபாகரனைவிட சுமார் 6 அங்குலங்கள் உயரமுள்ளவராக இருப்பாரென்றும் படைத் தரப்பு தெரிவிக்கின்றது.  

praba.jpg