12

12

விரட்டப்பட்ட முஸ்லிம்கள் மீள் குடியேற வழிவகுத்துள்ளது – அமைச்சர் அதாவுல்லா

a-9-road.jpgஏ-9  பாதை திறப்பானது யாழ்ப்பாணத்திலிருந்து புலிகளினால் விரப்பட்ட முஸ்லிம்கள் தமது சொந்த இடங்களில் சென்று குடியேற வழிவகுக்குமென நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சர் ஏ. எல். எம். அதாவுல்லா தெரிவித்தார். ஜனாதிபதி செயலகத்தில் அரசாங்கம் ஏற்பாடு செய்திருந்த செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் அதாவுல்லா; “உண்மையே எப்போதும் வெற்றி பெறும்” என்பதைப் புலிகளின் தோல்வி நிரூபணமாக்கியுள்ளது எனவும் தெரிவித்தார். அமைச்சர் நமதுரையில் மேலும் தெரிவித்ததாவது:-ஆணையிறவு மீட்பும் “ஏ-9” பாதை திறப்பும் வடக்கு மக்களின் வாழ்வில் ஒளியேற்றியுள்ளது. உள்ளூர் உற்பத்தி வளர்ச்சி,

பொருளாதார முன்னேற்றம் என பல வகைகளிலும் அம் மக்களுக்கு நன்மை கிட்டும். மீதமுள்ள சிறு நிலப்பகுதியும் விரைவில் மீட்கப்பட்டு விடும். முழு நாட்டிலும் சுபீட்சம் ஏற்படும். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கொண்டுள்ள காத்திரமான முடிவுகளுக்கு அவருக்கு நன்றி கூற வேண்டும்.

யாழ்ப்பாணத்திலிருந்து புலிகளினால் விரட்டப்பட்ட முஸ்லிம்கள் பெரும் அல்லல்களை சந்திக்க நேர்ந்து ள்ளது. “ஏ-9” பாதை திறப்பானது முஸ்லிம் மக்களும் தமது சொந்த இடங்களில் சென்று குடியேற வழிவகுக்கும். கிழக்கில் மூவின மக்களும் தற்போது மகிழ்ச்சியுடன் வாழ்கின்றனர். இந் நிலை வடக்கிலும் வரவேண்டும்.  அதற்கு “ஏ- 9” வீதி திறப்பு சிறந்த ஆரம்பமாகுமெனவும் அமைச்சர் தெரிவித்தார்.

கட்சிகளுக்கு முன்னுரிமை வேண்டாம் சமூக மேம்பாட்டை கவனத்தில் எடுங்கள்

Estate Workersமலை யக மக்கள் அரசியல் கட்சிகளுக்கு முன்னுரிமை அளிக்காது சமூக மேம்பாட்டைக் கருத்திற்கொண்டு எதிர்வரும் மத்தியமாகாண சபைத் தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

மத்திய மாகாணசபைத் தேர்தலில் ஐ.ம.சு.மு.சார்பில் மாத்தளை மாவட்டத்தில் போட்டியிடும் இ.தொ.கா. வேட்பாளரான எஸ்.சிவஞானத்துக்கு ஆதரவு திரட்டும் பொருட்டு நேற்று சனிக்கிழமை மாத்தளை மாநகர மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோது இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது;  சிறுபான்மை சமூகத்தினரான எமக்கு இந்நாட்டில் தனித்து ஆட்சி செய்யமுடியாது. ஆகையால், அவ்வப்போது பதவிக்கு வரும் அரசுகளுடன் இணைந்து செயல்பட்டே எமது தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள வேண்டியுள்ளது.

அமரர் தொண்டமான் இதனடிப்படையிலேயே செயற்பட்டு மலையகத்திற்கு பல்வேறான அபிவிருத்தி வேலைகளை முன்னெடுத்துள்ளார். அதனடிப்படையிலேயே நாமும் செயற்பட்டு வருகின்றோம். நாம் எமது அரசியல் பலத்தின் மூலம் மாத்திரமே அரசுக்கு அழுத்தம் கொடுத்து எமது தேவைகளை நிறைவேற்ற வேண்டியுள்ளது. நுவரெலியா மாவட்டத்தில் கிடைத்த அரசியல் பலத்தைக் கொண்டே தற்போது பல்வேறு அபிவிருத்தி வேலைகளை முன்னெடுத்துவருகிறோம்.

இதேபோல ஏனைய மாவட்டங்களிலும் அரசியல் பலத்தைப் பெறவேண்டும். பலமான அரசியல் சக்தியொன்றை உருவாக்குவோமானால் சிறுபான்மையினர் எதிர்நோக்கும் பிரச்சினைகளை இலகுவாக தீர்த்துக் கொள்ளமுடியும். ஒரு சில தோட்டங்கள் அரசியல் வாதிகளுக்கும் அவர்களது நண்பர்களுக்கும் கையளிப்பதற்கு திட்டமிட்டு காடாக்கப்பட்டு வருகிறது. மாதாந்தம் 25 நாட்கள் வேலை வழங்கவேண்டும். அல்லது அதற்கான வேதனம் வழங்கவேண்டும் என்று சட்டம் இருந்தும் அது அமுல்படுத்தப்படவில்லை.

எனவே தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினைகளிலிருந்து விடுபடவேண்டுமானால் மேலும் அரசியல் பலம் பெறவேண்டும். ஆகவே எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலில் மத்தியமாகாணத்தில் போட்டியிடும் இ.தொ.கா. வேட்பாளரை வெற்றி பெறச் செய்து எமக்கு அரசியல் பலத்தை வழங்குவதற்கு மலையக மக்கள் முன்வரவேண்டும்.
 

கிழக்கில் கல்வி அபிவிருத்தியை முன்னெடுக்க வேண்டிய பாரிய வேலைத்திட்டமொன்று அவசியமாகும்

school-2.jpgமாகாண கல்வியமைச்சர் விமலவீர திஸாநாயக்க  “நாட்டில் ஏற்பட்ட அமைதியற்ற சூழ்நிலையினால் கிழக்கு மாகாணத்தின் கல்வித்துறை மிகவும் பின்னடைவான நிலையிலுள்ளது. தற்போது கிழக்கில் அமைதியான சூழ்நிலை ஏற்பட்டு மாகாண சபையும் செயற்படத்தொடங்கியுள்ளது. இந்த நிலையில் கல்வியை அபிவிருத்தி செய்வதற்கு சகலரும் ஒன்றிணைந்து செயல்படுவதற்கு முன்வரவேண்டும்  இவ்வாறு அம்பாறை மாவட்டத்தில் மிகவும் பின் தங்கிய பகுதியிலுள்ள மகாஓயா கரஸ்கல பாடசாலை வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்ட ஆசிரியர் விடுதிக் கட்டிடத்தை கடந்த திங்கட் கிழமை மாகாண கல்வி அமைச்சர் விமலவீர திஸாநாயக்க திறந்துவைத்துப் பேசுகையில் குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்து பேசுகையில் ” கிழக்கு மாகாணத்தில் இயற்கை வளங்கள் அதிகம் இருந்தபோதிலும் கல்வி வளம் சிறப்பாக இல்லாமையினால் பின் தங்கிய நிலையில் இருக்கிறது. இதனை அபிவிருத்தி செய்வதற்கு மாகாணசபையின் இந்த வருட வரவு செலவுத்திட்டத்தில் கூடுதலான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. கரஸ்கல பகுதி போன்ற பின் தங்கிய பாடசாலைகளுக்கு ஆசிரியர்கள் தங்கியிருப்பதற்கான விடுதிகள் அமைக்கப்படவிருக்கிறது. விடுதி வசதிகள் இருந்தால்தான் கஷ்டமான பகுதிகளிலுள்ள பாடசாலைகளில் சேவையாற்றுவதற்கு ஆசிரியர்களும் முன்வருவார்கள்.’

கிழக்கு மாகாணம் 8063 சதுர கிலோ மீற்றர் பரப்புள்ள மூன்று மாவட்டங்களைக் கொண்ட பிரதேசம். இந்தப் பிரதேசத்தில் பின் தங்கிய கிராமங்கள்தான் அதிகமாக உள்ளது. இங்குதான் கல்வியை அபிவிருத்தி செய்யவேண்டும். கிழக்கில் 985 பாடசாலைகளும் 27 தேசிய பாடசாலைகளும் செயற்பட்டுவருகிறது. இவற்றில் 382,088 மாணவர்கள் கல்வி பயின்று வருகிறார்கள். இவர்களில் சிங்கள மொழிமூலம் கல்வி கற்கும் மாணவர்கள் 76,669. தமிழ்மொழி மூலம் கல்வி கற்பவர்கள் 305,415 மாணவர்கள். ஆனால், முக்கிய பாடங்களான ஆங்கிலம், கணிதம், விஞ்ஞானம், தொழில்நுட்ப பாடங்கள் கற்பிப்பதற்கு போதுமான ஆசிரியர்கள் இல்லாதுள்ளது. இவற்றை நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டியிருக்கிறது.

அமைதியற்ற சூழ்நிலையினால் மூடப்பட்ட பாடசாலைகளில் 33 பாடசாலைகள் இன்னும் இயங்காது இருக்கிறது. வறுமையின் காரணமாக அதிகமான சிறார்கள் ஆரம்பக் கல்வியைக்கூட கற்றுக்கொள்ள முடியாது இருக்கிறார்கள். இவர்களை கண்டுபிடித்து கல்வியை கற்பிக்கவேண்டும். கிழக்கு மாகாணத்தில் 107 அநாதை சிறுவர் இல்லங்கள் செயல்படுகிறது. இவர்களின் கல்வியும், எதிர்காலம் பற்றியும் நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டும். கிழக்கில் 30 வயதுக்கு குறைந்த 33 ஆயிரம் இளம் விதவைகள் உள்ளனர். இவர்களின் 68 ஆயிரம் சிறுவர்கள் வறுமை காரணமாக கல்வியை கற்க முடியாதவர்களாக இருக்கிறார்கள். இவ்வாறான நிலையில் கிழக்கில் கல்வி அபிவிருத்தியை முன்னெடுக்க வேண்டிய பாரிய வேலைத்திட்டமொன்றையும் உருவாக்கவேண்டியிருக்கிறது என்றார்.’

பிரபாகரனை சிங்கள இராணுவத்தால் ஒருநாளும் பிடிக்க முடியாது: யாழ். எம்.பி் பத்மினி

patmini.jpgபறவைகள் சரணாலயம்’ என பொருள்தரும் கிளிநொச்சியை புலிகளிடம் இருந்து கைப்பற்றியபின் உற்சாகத்தின் உச்சியில் இருக்கிறது சிங்கள இராணுவம். `விரைவில் பிரபாகரனையும் பிடித்து விடுவோம்’ என்று கொக்கரித்துள்ளார், இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்ஷ. ஆனால், “ஈழத்தமிழர்களின் தலைவராக இருக்கும் பிரபாகரனை சிங்கள இராணுவத்தால் ஒருநாளும் பிடிக்கமுடியாது” என்கிறார், யாழ்ப்பாணத் தமிழ் எம்.பி.யான பத்மினி சிதம்பரநாதன்.

சில நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக சென்னை வந்திருந்த அவர் நமக்களித்த பிரத்தியேக பேட்டி.

ஈழத்தில் தற்போதைய போர் நிலவரம் என்ன?

“இலங்கை நாடு சிங்களவர்களுக்கு மட்டும்தான் என்ற அடிப்படையில் ஓர் இனத்தையே (தமிழ் இனத்தையே) சிங்கள அரசு அழித்து வருகிறது. கிளிநொச்சி பகுதியிலுள்ள அனைத்து தமிழர்களையும் அது புலிகளாகவே பாவிக்கிறது. யாழ்ப்பாணத்தில் முழத்திற்கு முழம் சோதனைச் சாவடிகளை அமைத்து தமிழ் மக்களிடம் சோதனை நடத்தி வருகிறது. ஈழப்போரில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உதவ நினைக்கும் சமூக சேவகர்களை இலங்கை இராணுவம் கடத்துகிறது. ஈழத் தமிழர்கள் `செயலற்றவர்களாக’ இருக்க வேண்டும் என்பதே சிங்கள அரசின் ஆசை.

ஈழத்தின் வன்னிப் பகுதியில் அகதிகளாக இடம் பெயர்ந்த மக்கள் ஓலைக்கீற்றுகளால்தான் குடில் அமைத்துத் தங்க வேண்டும் என்று சிங்கள அரசு நிர்ப்பந்தப்படுத்துகிறது. மேற்கூரைக்கு பிளாஸ்டிக் அல்லது சிமெண்ட் ஷீட் பயன்படுத்த அவர்களுக்கு அனுமதியில்லை. தமிழ் அகதிகளுக்காக தமிழக அரசு உணவுப் பொருள்களைக் கொடுத்தனுப்பியதால், உலக உணவுத்திட்டம் (டபிள்யூ.எஃப்.பி) கொடுத்தனுப்பிய உணவுப் பொருள்களை இலங்கை அரசு திருப்பியனுப்பி, அதன் மூலம் அந்நியச் செலாவணியைச் சம்பாதித்துள்ளது.

தமிழர் வாழும் பகுதிகளில் தினமும் ஆயிரம் கிலோ எடை கொண்ட வெடிகுண்டுகளை சிங்கள இராணுவம் வீசுகிறது. அவை சில இடங்களில் முப்பதடி ஆழம் வரை பள்ளம் தோண்டி அதனால் நிலத்துக்கடியிலிருந்து தண்ணீர்கூட வந்து விடுகிறது. இதுபோக சர்வதேச அளவில் தடைசெய்யப்பட்ட கிளஸ்டர் (கொத்து) குண்டுகளையும் இலங்கைப்படை வீசுகிறது. இந்தக் குண்டுவீச்சுகளுக்குப் பயந்து தங்கள் சொந்த இடங்களை விட்டு வெளியேறிய தமிழர்கள் நான்கு இலட்சத்து அறுபதாயிரம் பேர் இன்று நான்கு ஊர்களில் மிகநெருக்கமாக வாழும் நிலை உள்ளது. இதுதான் இலங்கைப் போரின் இப்போதைய நிலை.”

கிளிநொச்சியை சிங்கள இராணுவம் கைப்பற்றியது புலிகளுக்குப் பின்னடைவுதானே?

“அப்படிச் சொல்ல முடியாது. தங்கள் தற்காப்புக்காக புலிகளும், மக்களும் கைவிட்டுச் சென்ற இடங்களைத்தான் சிங்கள இராணுவம் கைப்பற்றியுள்ளது. கிளிநொச்சியில் இருந்து புலிகள் பின்வாங்கிச் சென்றது, அவர்களின் போர்த்தந்திரமாக இருக்கலாம்.”

மக்களை கேடயமாகப் பயன்படுத்தத்தான் பிரபாகரன் அவர்களை முல்லைத்தீவுக்கு அழைத்துச் சென்றிருப்பதாக குற்றம் சாட்டுகிறார்களே?

“அப்படியெதுவும் இல்லை. கிளிநொச்சிப் பகுதி தமிழர்களின் அடையாள அட்டையை வைத்து, அவர்களை புலிகளாகவே சிங்கள இராணுவம் பார்க்கிறது. அத்தியாவசிய மருந்துகளை வாங்க அருகிலுள்ள பகுதிகளுக்குக் கூட மக்கள் நிம்மதியாகச் சென்று வர முடியாத நிலை உள்ளது.

மன்னார் பகுதியில், சிங்கள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள தமிழர்களின் நிலை என்ன? அவர்கள் கிட்டத்தட்ட இராணுவக் கட்டுப்பாட்டில் சிறைக்கைதிகள் போலத்தான் உள்ளனர். முள்வேலிகளுக்கு நடுவில் அவர்கள் வைக்கப்பட்டுள்ளனர். ஈழத் தமிழர்களுக்கு சிங்கள இராணுவம் உரிய பாதுகாப்பு, சுதந்திரம் தந்தால் அவர்கள் ஏன் புலிகளுடன் செல்ல வேண்டும்?”

ஈழப்பிரச்னையில் இந்திய அரசு எந்த விதத்தில் உதவ வேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள்?

“இந்தியாவில் உள்ள தமிழர்களுக்கும், ஈழத் தமிழர்களுக்கும் தொப்புள்கொடி உறவு உள்ளது. இதனால்தான் அங்கே துப்பாக்கிச் சத்தம் கேட்டால், இங்குள்ள தமிழர்கள் துடிக்கிறார்கள். தமிழகத்தில் உள்ள தமிழர்கள், ஈழ மக்களுக்காக பல்வேறு போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகிறார்கள். அவர்கள் இந்திய அரசுக்கு மேலும் அழுத்தம் தந்து ஈழத் தமிழர்களின் சுய உரிமைகளையும், அவர்களுக்கான அங்கீகாரத்தையும் இந்திய அரசின் மூலம் பெற்றுத்தர வேண்டும். அவர்களால்தான் அது முடியும்.”

`பிரபாகரனைப் பிடித்து இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும்’ என காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் வீரப்ப மொய்லி கூறியிருக்கும் போது, இந்தியஅரசிடம் இருந்து ஆதரவு கிடைக்கும் என்று எப்படி எதிர்பார்க்கிறீர்கள்?

“ஈழத் தமிழர்களுக்குச் சுதந்திரம் கிடைத்தால்தான் அவர்களால் சுதந்திரமாக சுவாசிக்க, யோசிக்க, முடியும். உலக ரீதியாக சுதந்திரத்தை மதிப்பவர்கள் யாரும் ஈழ மக்களின் சுதந்திரத்தையும் மறுக்க முடியாது. அந்த அடிப்படையில் பார்த்தால், ஈழ மக்களுக்கு சுதந்திரம் பெற்றுத்தரும் வல்லமை உடைய அமைப்பு விடுதலைப்புலிகள் அமைப்புதான். எனவே ஈழத்து மக்களின் அபிலாஷையை நிறைவேற்ற இந்தியாதான் உதவி புரிய வேண்டும்.”

தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியை இலங்கைக்கு அனுப்ப பிரதமர் ஒப்புக்கொண்டார். தற்போது பிரணாப் முகர்ஜி வருவதை இலங்கை விரும்பவில்லை. இந்தநிலையில் அழையா விருந்தாளியாக அவர் எப்படி இலங்கை செல்வது என மத்திய அரசு கூறியுள்ளதே?

“கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு எங்களது அழைப்பை ஏற்று பிரணாப் முகர்ஜி இலங்கை வர இருக்கிறார் என்று இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ரோகித பொகொல்லகம அறிவித்திருந்தாரே!”

தமிழர் பகுதியில் சிங்கள இராணுவத்தின் முன்னேற்றத்துக்கு புலிகளிடம் இருந்து பிரிந்து சென்ற கருணா அமைத்துக் கொடுக்கும் வியூகமும் ஒரு காரணம் என்று நினைக்கிறீர்களா?

“அப்படி நினைக்கவில்லை. ஏழை நாடான இலங்கைக்கு சர்வதேச அளவில் பல நாடுகள் உதவி புரிகின்றன. இலங்கைக்கு பாகிஸ்தான் ஆயுத சப்ளை செய்கிறது. சிங்கள இராணுவத்திற்கு இந்திய அரசும் தொழில்நுட்ப உதவி புரிவதாகக் கூறப்படுகிறது.”

பிரபாகரனை எப்படியும் பிடித்துவிடுவோம் என்று சிங்கள ராணுவம் கூறிவருகிறதே?

“கடந்த முப்பது வருடங்களாக சுதந்திர தாகத்தோடு சிங்கள இராணுவத்தினரை எதிர்த்து புலிகள் போராடி வருகிறார்கள். மக்களும் அவர்களது அனுபவ தந்திரத்தால் சிங்கள இராணுவத்தின் குண்டுமழையில் இருந்து தப்பித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த குண்டுவீச்சு இலட்சக்கணக்கான தமிழர்களை இன்று ஒரே இடத்தில் குவித்துள்ளது. புலிகளின் தலைவராக உள்ள பிரபாகரனை ஒருநாளும் பிடிக்க முடியாது.”என்றார் பத்மினி சிதம்பரநாதன்.
 
நன்றி:குமுதம்