11

11

15 இலங்கை மீனவர்கள் இந்திய காவல் படையினரால் கைது

handcuff.jpgஇந்திய கடல் எல்லையில் மீன் பிடித்த இலங்கை மீனவர்கள் 15 பேரை கடலோர காவல் படையினர் வியாழக்கிழமை கைது செய்தனர். அவர்கள் வந்த இரு படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இலங்கை தலைமன்னார் பகுதியைச் சேர்ந்த 15 மீனவர்கள் இந்திய கடல் எல்லையில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக இந்திய கடலோர காவல் படையினர் ஹோவர் கிராப்ட் கப்பலில் ரோந்து சென்ற போது அவர்களைக் கைது செய்து மண்டபம் கடலோர காவல்படை அலுவலகத்துக்கு கொண்டு வந்தனர். அவர்கள் வந்த இரு படகுகளையும் , அதில் இருந்த என்ஜின்களையும் பறிமுதல் செய்தனர். அங்கு கியூ பிரிவு பொலிஸாரும் இலங்கை மீனவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். கைது செய்யப்பட்ட 15 பேரும் மண்டபம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர

பயண மார்க்கங்களை தடை செய்தமைக்கு எதிராக சட்ட நடவடிக்கைக்கு ஆலோசனை

leadimg.jpgசில பயண மார்க்கங்களுக்கான தனியார் பஸ் சேவையினை, தேசிய போக்குவரத்து ஆணைக்குழு இடைநிறுத்தியுள்ளமைக்கு எதிராக, சட்ட நடவடிக்கையில் ஈடுபடுவது குறித்துத் தாம் ஆலோசித்து வருவதாக தனியார் பஸ் கம்பனிகளின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. சுமார் 50 இற்கும் மேற்பட்ட பயணமார்க்கங்களின் தனியார் பஸ் சேவை இடைநிறுத்தப்பட்ட விவகாரத்தில் அரசாங்கம் தலையிடத் தவறும் பட்சத்தில், சட்ட நடவடிக்கையில் தாம் இறங்க நேரிடுமெனவும் பஸ் கம்பனிகளின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

எரிபொருள் விலை குறைப்பை அடுத்து போக்குவரத்து அமைச்சும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவும் கூட்டாக அறிவித்திருந்த புதிய பஸ் கட்டண விபரங்களை அமுல்படுத்த சில தனியார் பஸ் ஊழியர் சங்கங்கள் தவறியதை அடுத்து, இவற்றின் பயண மார்க்கங்களில் பஸ் சேவையை நடத்துவதற்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தடைவிதித்திருந்தது. இதேசமயம், பஸ் கட்டணங்களைக் குறைப்பது தொடர்பாக பஸ் நடத்துநர்களுடன் ஆராயப்படாமையால் இந்தப் பஸ் கட்டண குறைப்புக்கு பஸ் நடத்துநர்கள் சம்மதிக்கவில்லை என ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்த தனியார் பஸ் கம்பனிகள் கூட்டமைப்பின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பஸ் வண்டிகளுக்கான ரயர், ரியூப் என்பவற்றின் விலைகள் அதிகரித்துள்ள நிலையில், அவற்றைக் குறைப்பது பற்றி பஸ் நடத்துநர்கள் தமது கவனத்துக்குக் கொண்டு வந்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இது விடயமாக, அரசாங்கம் தம்முடன் கலந்தாலோசிக்குமாயின் பஸ் கட்டணங்களை 4.3 வீதத்தில் இருந்து 8 வீதம் வரை குறைக்க தாம் எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இதேவேளை, கடந்த செவ்வாய்க்கிழமை முதல் அறிவிக்கப்பட்ட பஸ் கட்டண குறைப்பு அறிவிப்பை நடத்தத் தவறியதுடன், கூடுதல் கட்டணங்களைப் பயணிகளிடம் அறவிட்டதாக தெரிவித்து மேல் மாகாணத்தில் 67 தனியார் பஸ் பயண மார்க்கங்களின் சேவைகளை ஆணைக்குழு தடை செய்திருந்தது. இதனிடையே புதன்கிழமை தனியார் பஸ் கட்டணங்கள் குறைவடையுமென எதிர்பார்த்திருந்த நிலையில் அதற்கு முரணாக பஸ் கட்டணங்கள் கூடுதலாக அறவிடப்பட்டதாக சில தனியார் பஸ் பயணிகள் தெரிவித்தனர்.

நிலைமை இவ்வாறிருக்க புதன்கிழமை முதல் இந்த அறிவிப்பு அமுலுக்கு வருவது தொடர்பாக, பஸ் நடத்துநர்கள் மற்றும் பயணிகள் மத்தியில் குழப்பமான கருத்துகளும் எழுந்துள்ளன. பஸ் கட்டணங்களை குறைக்குமாறு கோரிய சமயம் பஸ் நடத்துநர்களால் தாக்குதல் அச்சுறுத்தலை தாம் எதிர்நோக்கியதாகவும் பஸ் பயணிகள் தெரிவித்தனர