“சண்டே லீடர்’ ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை மற்றும் மகாராஜா தொலைக்காட்சி நிறுவனம் மீதான தாக்குதல் சம்பவங்களை இந்தியாவும் அமெரிக்காவும் கடுமையாகக் கண்டித்துள்ளன. லீடர் குழும வெளியீடுகளின் ஆசிரியரின் மறைவையிட்டு கடும் அதிர்ச்சியும் ஆழ்ந்த கவலையும் அடைந்துள்ளதாக கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் நேற்று வெள்ளிக்கிழமை விடுத்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இலங்கையில் ஊடக அமைப்புகள், ஊடகத்துறை சார்ந்தோர் மீது தொடர்ச்சியாக அதிகரித்துவரும் தாக்குதல்களின் மத்தியில் துயரகரமான இச்சம்பவமும் இடம்பெற்றுள்ளது. அண்மையில் மகாராஜா தொலைக்காட்சி கலையகம் மீதான குண்டுத் தாக்குதல் சம்பவமும் இந்தத் தொடர்ச்சியான தாக்குதல்களில் ஒன்றாகும். எந்தவொரு ஜனநாயகத்துக்கும் ஊடக சுதந்திரம் அத்தியாவசியமான விடயமாகும். இந்த மாதிரியான தாக்குதல்கள் இலங்கையில் ஜனநாயக ரீதியான சுதந்திரத்தை பாதிப்புக்குள்ளாக்கும். இந்தத் தாக்குதல்கள் தொடர்பாக பூரணமான விசாரணைகளை மேற்கொண்டு குற்றவாளிகளை சட்டத்தின் முன்நிறுத்த வேண்டுமென இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம் என்று இந்திய தூதரகம் விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சண்டே லீடர் பத்திரிகை ஆசிரியர் படுகொலை, தொலைக்காட்சி நிலையம் மீதான தாக்குதல் என்பன கவலைக்குரிய நடவடிக்கைகள் என்றும் இலங்கையிலுள்ள சுயாதீனமான குரல்களை மௌனமாக்குவதை நோக்கமாகக் கொண்டவையெனவும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் ரொபேர்ட் வூட் தெரிவித்துள்ளார்.