2009

2009

காயமடைந்த 18 சிவிலியன்கள் புதுமாத்தளன் வைத்தியசாலையில் அனுமதி: பாதுகாப்பு பிரதேசத்தில் உணவு விலைகள் உச்சம்

pokkanai.jpgபாதுகாப்பு பிரதேசத்தில் இன்றும் 18 பொதுமக்கள் காயங்களுடன் புதுமாத்தளன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.இவர்களில் அனேகமானவர்கள் துப்பாக்கிச் சூட்டுக்காயங்களுடன் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் பாதுகாப்பு வலயப் பகுதியில் உணவுப் பொருட்களின் விலைகள் உச்சமடைந்திருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கி்ன்றன. உணவுப் பொருட்களுக்குப் பெரும் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதனால், அங்குள்ள மக்கள் பெரும் கஸ்டத்திற்கு உள்ளாகியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அங்கு சில கடைகளே இருப்பதாகவும் அவற்றில் – ஒரு கிலோ அரிசி 300 ரூபாவுக்கும், ஒரு கிலோ கோதுமை மா 350 ரூபாவுக்கும், சீனி ஒரு கிலோ 2000 ரூபாவுக்கும், வெங்காயம் ஒரு கிலோ 9000 ரூபாவுக்கும், பால் மா பக்கட் ஒன்று (440 கிராம் நிறையுடையது) 2200 ரூபாவுக்கும், மிளகாய் ஒரு கிலோ 9000 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யுத்த நிறுத்தம் தொடர்கின்றது. தாக்குதல்கள் இல்லை என்கிறது இராணுவம்

army-wanni.jpgசித்திரைப் புத்தாண்டையொட்டி அரசாங்கம் அறிவித்த தாக்குதல் நிறுத்த அறிவிப்பையடுத்து, களமுனைகளில் பெரிய அளவில் தாக்குதல்கள் எதுவும் இடம்பெறவில்லை என இராணுவம் தெரிவித்துள்ளது. ஆயினும் பாதுகாப்பு வலயத்தினுள்ளே இருந்து விடுதலைப்புலிகள் இன்று காலை 9 மணியளவில் நடத்திய ஸ்னைப்பர் தாக்குதலில் இராணுவச் சிப்பாய் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாகவும், அவர்கள் நடத்திய எறிகணை தாக்குதலில் மற்றுமொரு இராணுவச்சிப்பாய் காயமடைந்ததாகவும் இராணுவ தலைமையகம் தெரிவித்துள்ளது.

பாதுகாப்பு வலயத்தினுள்ளே சிக்கியுள்ள பொதுமக்கள், இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பாதுகாப்பான பகுதிகளுக்குள் வருவதற்கு வசதியாக சித்திரைப் புத்தாண்டு பண்டிகை தினங்களாகிய இன்றும் நாளையும் (13, 14 ஆம் திகதிகள்) விடுதலைப்புலிகளுக்கு எதிரான தாக்குதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படமாட்டாது என்று அரசாங்கம் அறிவித்திருந்தமை தெரிந்ததே.

ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் அமுலுக்கு வந்துள்ள இந்த தாக்குதல் நிறுத்தத்தை ஐநா சபை அதிகாரிகள் முன்னோடியான நடவடிக்கை என குறிப்பிட்டு வரவேற்றுள்ளார்கள். இந்தப் போர்நிறுத்தத்தின் மூலம் மோதல்கள் நடைபெறுகின்ற பிரதேசத்தில் சிக்கியுள்ள மக்களுக்குத் தேவையான மனிதாபிமான உதவிகள் சென்றடையக் கூடிய வாய்ப்பு ஏற்படும் என்றும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளார்கள். எனினும் அரசாங்கத்தின் இந்த அறிவித்தல் குறித்து விடுதுலைப்புலிகள் தரப்பிலிருந்து அதிகாரபூர்வமான கருத்துக்கள் எதுவும் வெளியாகவில்லை.

தமிழ் சிங்கள புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு அறிவிக்கப்பட்டுள்ள போர்நிறுத்தத்தைப் பயன்படுத்தி, விடுதலைப்புலிகள் தாங்கள் தடுத்து வைத்துள்ள பொதுமக்களை அங்கிருந்து வெளியேறவிட வேண்டும் என கேட்டுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இந்தப் புத்தாண்டுப் பண்டிகை சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, விடுதலைப்புலிகள் தமது வன்முறைகளைக் கைவிட்டு, ஆயுதங்களைக் கீழே வைத்து படையினரிடம் சரணடைய வேண்டும் என்றும் பண்டிகைக்கால செய்தியில் கோரிக்கை விடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

உலக நாடுகளை ஏமாற்றவே போர் நிறுத்தம்: விடுதலைப்புலிகள்

nadesan.jpgதமிழகத் தையும், உலக நாடுகளையும் ஏமாற்றவே இலங்கை அரசு போர் நிறுத்தம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது என்று விடுதலைப்புலிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இணையதளம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் நடேசன்,  இலங்கை அரசின் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட பின்பு ராணுவம் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதல்களில் இதுவரை 28 பொதுமக்கள் பலியாகியுள்ளனர். இலங்கை ராணுவம் தாக்குதலை தொடர்ந்து நடத்தி வருகிறது. தமிழகத்தையும், உலக நாடுகளையும் ஏமாற்றவே இலங்கை அரசு போர் நிறுத்த அறிவிப்பு வெளியிட்டுள்ளது. உடையார் கட்டு பகுதியில் உள்ள தொண்டு நிறுவனம் மீதும், புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள மருத்துவமனையின் மீதும் ராணுவம் பீரங்கி தாக்குதல் நடத்தியுள்ளது.

அனைத்துலக சமூகத்தின் ஒத்துழைப்புடன் ஏற்படுத்துகின்ற நிரந்தரமான போர் நிறுத்தமும், அதனுடன் கூடிய அரசியல் பேச்சுவார்த்தையுமே பிரச்சனைக்கு தீர்வாக அமையும் என தமிழ் மக்களும், விடுதலைப்புலிகளும் நம்புவதாக கூறியுள்ளார்.

வைகோவை நாடு கடத்த வேண்டும்: நடிகர் கார்த்திக் ஆவேசம்

india-election.jpgதேனியில் அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் ரமேஷ் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் கட்சியின் தலைவர் நடிகர் கார்த்திக் பேசினார். அப்போது, ’’ இலங்கை பிரச்னையை மையமாக வைத்து பேசிய தலைவர் ஒருவர் தமிழகத்தில் ரத்த ஆறு ஓடும் என்கிறார். இலங்கையில் நடக்கும் பிரச்னைக்கு தமிழகத்தில் ஏன் ரத்த ஆறு ஓட வேண்டும்.

நான் தமிழன் தான், இந்தியன் என்ற எண்ணம் இல்லை என்கிறார். அதுபோன்றவரின் குடியுரிமையை ரத்து செய்து இலங்கைக்கே அனுப்பிவிட வேண்டும்.  அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆளும்கட்சியினருக்கும் தைரியம் இல்லை’’ என்று ஆவேசப்பட்டார்.

மேடை சரிந்தது. கீழே விழுந்து அடிபட்டும் ஜோக் அடித்த லாலு

laluprasat.jpgரெயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ், சாப்ராவை அடுத்துள்ள டெக்னவாஸ் பஜார் என்ற இடத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்யும் போது, திடீரென மேடை சரிந்தது. மேடையில் அமர்ந்திருந்த லாலு பிரசாத் உட்பட அனைவரும் கீழே சாய்ந்தனர்.

அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் காயம் இன்றி தப்பிய லாலுபிரசாத் எந்தவித பதற்றமும் இன்றி காணப்பட்டார். அத்துடன் தனது வழக்கமான நகைச்சுவை பாணியில் `ஜோக்’ அடித்து அனைவரையும் கலகலக்க வைத்தார்.

பதற்றத்துடன் வாழும் இடம்பெயர்ந்த மக்களை காப்பாற்றுங்கள்- ஆனந்த சங்கரி

anan-sangari.jpgஇரா ணுவம் தொடர்ந்து முன்னேறுவதை தடுத்து நிறுத்துங்கள் என என்னால் விடப்பட்ட கோரிக்கைகளுக்கு நீங்கள் செவிசாய்க்காமை எனக்கு மிகுந்த மனவருத்தமளிக்கிறது. யுத்தம் கடைசிக் கட்டத்தை அடைந்துள்ள இவ்வேளை விடுதலைப் புலிகள் மக்களை மனித கேடயங்களாக பாவிப்பதற்காக சூனியப் பிரதேசத்துக்குள் மக்களுடன் கலந்திருப்பதாலும் பாதிப்புக்குள்ளான அப்பாவி மக்களின் எண்ணிக்கை பல மடங்காக உயர்ந்துள்ளது.

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் சூனியப் பிரதேசமாகிய புதுமாத்தளன் பகுதியில் வாழும் இரண்டு லட்சத்துக்கு மேற்பட்ட மக்களின் உயிர் ஊசலாடுகிறது. யுத்த விதிகளுக்கமைய புலிகள் நடப்பார்கள் என்பதை நாம் எதிர்பார்க்க முடியாது. ஆனால் அரச படைகளால் அது முடியும்.

தமது பல தோழர்களை பலிகொடுத்து மிகச் சிரமப்பட்டு மிகக் குறைந்த மக்களின் பாதிப்போடு நற்பெயரை சம்பாதித்ததோடு இந்த யுத்தத்தின் கடைசி கட்டத்தில் சொற்ப நாட்களில் அந்த நற்பெயரை இழக்கக்கூடிய சுழ்நிலை காணப்படுகிறது. மிகமிக இக்கட்டான நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து கொண்டு போகிற இவ் வேளையில் தங்களின் தாமதமற்ற தலையீடு அவசியமாகிறது. ஒரு நாள் இன்று நடப்பனவற்றை உலகம் அறியும்வேளை முழு உலகும் அரசையும் மக்களையும் குற்றம் சுமத்தும்; இவ் ஆலோசனைகளை நான் தனிப்பட்ட இலாபம் கருதி கூறவில்லை என்பதை நம்புங்கள். தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் வீ. ஆனந்தசங்கரி ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவரது கடிதம் இங்கு முழுமையாகத் தரப்படுகிறது.

பல நம்பிக்கையான வட்டாரங்கள் மூலம் கிடைத்த செய்திகளின் படி ஏப்ரல் மாதம் 8ம் திகதி மட்டும் 296 பேர் காயமுற்று ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டவர்களில் 47 பேர் குழந்தைகள் உட்பட இறந்துள்ளனர். இந்த யுத்தத்தில் ஒரேநாளில் இறந்தோரின் மிகக் கூடிய தொகை இதுவாகும். மறுநாள் காயமுற்றோரின் எண்ணிக்கை 200 ஐ தாண்டியது இறந்தவர்கள் 30 இற்கு மேற்பட்டவர்கள். ஆனால் அன்று போயா தினமாகும். வைத்தியசாலைக்கு வராமலேயே பலர் வெளியில் இறந்துள்ளதாக அறியப்படுகிறது. அவற்றிற்கு எதுவித ஆவணங்களும் கிடையாது. இந்த மக்கள் யாருடைய தாக்குதலுக்கு இலக்காகி பலியானார்கள் என சர்வதேச சமூகம் கேட்காது. ஆனால் அரசையே குற்றவாளியாக்கும் சர்வதேச சமூக அமைப்புக்கள் ஒவ்வொன்றும் தாம் விரும்புவது போல் கண்டிப்பது எதிர்பார்த்ததற்கு மாறான பலனையே தரும் மனிதாபிமான அடிப்படையிலும் நாட்டின் நற்பெயரையும் காப்பாற்ற வேண்டுமானால் நீங்கள் எடுக்க வேண்டிய உடனடி நடவடிக்கை பின்வருவனவாகும் என நான் கருதுகிறேன்.

1. உடனடியாக ஷெல் தாக்குதலை அரச படைகள் நிறுத்த வேண்டும்.

2.விடுதலைப் புலிகளின் பிரதேசத்தில் அல்லாது அரச கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் ஒரு இடத்தை யுத்தத்திற்குள் அடங்காத பகுதியாக பிரகடனப்படுத்தி மக்களை அங்கே வர வைக்க வேண்டும்.

3.ஒவ்வொரு பிரஜையையும் பாதுகாக்க வேண்டிய கடமை அரசாங்கத்தினதே. ஆகவே நான் உங்களை வேண்டுவது ஐக்கிய நாடுகள் சபையில் உதவிகளை பெற்றோ அல்லது நட்பு நாட்டின் அல்லது நாடுகளின் உதவியை நாடலாம். அமெரிக்காவும்,  இந்தியாவும் அத்தகைய உதவியளிக்க முன் வந்ததாக அறிகிறோம். அது உண்மையாயின் அவர்களின் உதவியினூடாக மக்களை மீட்டெடுக்கலாம். ஒரு தனி உயிரை காப்பாற்ற பல நாடுகள் பெரும் தொகை பணத்தை செலவழித்துள்ளன.

4. அங்கே மக்கள் பட்டினி சாவை எதிர் நோக்குகின்றனர் என்ற நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்டு, இரண்டு இலட்சத்துக்கு மேற்பட்ட அம் மக்களுக்கு போதிய உணவை அனுப்பி வையுங்கள. தாய்மார் பிள்ளைகளுக்கு பாலூட்ட சக்தியற்றவர்களாக தேநீர் பருக கொடுக்கின்றனர். பிள்ளைகளுக்கு வேண்டிய பால்மா ஆகாயமார்க்கமாக அனுப்பி வைக்கவும்

5. உடனடியாக ஐக்கிய நாடுகள் குழு ஒன்றை அனுப்பி அங்குள்ள மக்களின் எண்ணிக்கை தேவைகளை கண்டறிய வையுங்கள்.

சாள்ஸ் அன்ரனி சிறப்பு படையணியின் தளபதி லெப்.கேணல் அமுதாப் வீரச்சாவு

amuthap.jpgசாள்ஸ் அன்ரனி சிறப்பு படையணியின் தளபதி லெப்.கேணல் அமுதாப் வீரச்சாவைத் தழுவிக்கொண்டுள்ளார் என வன்னியில் இருந்து வெளிவரும் ஈழநாதம் தெரிவித்துள்ளது. கடந்த 31.03.2009 அன்று இவர் மரணமடைந்ததாகவும தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றும் நாளையும் ஊரடங்கு நீக்கம்.

jaffna_a9.jpgபுத்தாண்டை முன்னிட்டு குடாநாட்டில் இன்றும் நாளையும் இரவுநேர ஊரடங்கு நீக்கப்படுவதாக பலாலி படைத்  தலைமையகம்  அறிவித்துள்ளது. புதுவருடத்தை ஒட்டி இந்துக்கள் ஆலயங்களில் இடம்பெறும் பூசை மற்றும் சமய நிகழ்வுகளில் பங்குபற்ற வசதியாக ஊரடங்கு நீக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

அரசாங்கத்தின் அறிவிப்பை ஐ நா வரவேற்றுள்ளது.

un-logo.jpg
அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டுள்ள 48 மணிநேர தற்காலிக மோதல் தவிர்பை ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான்கி மூன் வரவேற்றுள்ளார். இது குறுகிய காலமாக இருந்தாலும் இந்த சந்தர்ப்பத்தை அனைவரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இலங்கையில் சமாதானம் ஏற்படுவதற்கு இது ஒரு சந்தர்ப்பமாக அமையும். இந்த காலகட்டத்தில் பாதுகாப்பு வலயத்தில் உள்ள மக்களை சுதந்திரமாக வெளியேறுவதற்கு புலிகள் இடமளிக்க வேண்டும் என அவர் கேட்டுள்ளார்.

புதுமாத்தளனிலிருந்து 440 பேர் அழைத்துவரப்பட்டனர்

taking-to-green-ocean.jpgபுது மாத்தளன் வைத்தியசாலையில் இருந்து, மேலும் ஒரு தொகுதி காயமடைந்தவர்களும் நோயாளர்களும் புல்மோட்டைக்கு கப்பல் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டனர். கிறீன் ஓசன் கப்பல் மூலமாக காயமடைந்தவர்கள், நோயாளர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் என 440 பேர் இன்று (13.04.2009) புல்மோட்டை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.