2009

2009

ஈராக் பாதுகாப்பை அந்நாட்டு இராணுவம் பொறுப்பேற்றது – அமெரிக்க இராணுவம் முகாம்களுக்குள் முடக்கம்

ஈராக்கின் முக்கிய நகரங்கள், மாகாணங்களின் பாதுகாப்பை ஈராக் அரச படைகள் பொறுப்பேற்றன. தற்போது இங்குள்ள அமெரிக்கப் படைகள் வெளியே செல்லாமல் முகாம்களுக்குள் முடக்கப்பட்டுள்ளன. ஜுன் மாதம் 30 ஆம் திகதியிலிருந்து ஈராக்கிலுள்ள அனைத்து அமெரிக்கத் துருப்பினரும் தங்களது பாதுகாப்பு பொறுப்புகளை ஈராக் அரச படைகளிடம் ஒப்படைத்துள்ளதாக அங்குள்ள அமெரிக்க கட்டளைத் தளபதி தெரிவித்தார்.  

பாரிய குண்டு வெடிப்புகள் வன்முறைகளுக்கு மத்தியிலும் ஈராக் அரசாங்கம் இந்த துணிச்சலான முடிவை எடுத்துள்ளது. எனினும் ஈராக் இராணுவத்துக்குத் தேவையான ஆலோசனைகள், பயிற்சிகள் போன்றவற்றை அமெரிக்க இராணுவம் வழங்கவுள்ளது. இரண்டு நாடுகளிடையே செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையின்படி கடந்த எட்டு மாதங்களாக படிப்படியாக அமெரிக்க இராணுவத்தினர் பாதுகாப்பை ஈராக் இராணுவத்திடம் வழங்கி வருகின்றனர்.

ஈராக்கின் பாதுகாப்பை அந்நாட்டு இராணுவம் முழுமையாக பொறுப்பேற்றுக் கொண்டது. நேற்று ஜூன் 30ம் திகதியுடன் அமெரிக்கப்படைகள் ஈராக்கில் ஆற்றி வந்த பாதுகாப்புப் பணிகள் யாவும் நிறுத்தப்பட்டு ஈராக் இராணுவத்திடம் வழங்கப்பட்டது.

சுமார் 8 மாதங்களாக இவ்வாறு படிப்படியாக ஈராக்கின் பாதுகாப்பு பிரதமர் நூரி அல்மாலிகி தலைமையிலான அரசாங்கத்தின் படையினரிடம் வழங்கப்பட்டு வந்தது. நேற்றுடன் முற்று முழுதாக ஈராக் இராணுவம் தனது நாட்டின் பாதுகாப்பை பொறுப்பேற்றுக் கொண்டது. கட்டம் கட்டமாக மாகாணங்கள் மாவட்டங்கள் நகரங்கள் எனப் பாதுகாப்புகள் கையளிக்கப்பட்டுவந்தன.

அமெரிக்கா, ஈராக்கிடையே செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் பிரகாரம் நேற்று 30ம் திகதியுடன் அமெரிக்கப்படைகள் தங்கள் பணிகளை நிறுத்தி ஈராக்கின் பாதுகாப்பை ஒப்படைக்க வேண்டும் 2010ம் ஆண்டுக்குள் ஈராக்கை விட்டே அமெரிக்கப் படைகள் வெளியேற வேண்டுமென்றும் அந்த ஒப்பந்தம் கூறுகின்றது. இதற்கமைய பாதுகாப்புகளை ஒப்படைத்த அமெரிக்கப்படைகள் முகாம்களுக்குள் முடக்கப்பட்டுள்ளன.

இவர்கள் விரைவில் படிப்படியாக அமெரிக்கா செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளன. அதுவரை ஈராக் இராணுவத்துக்குத் தேவையான இராணுவ ஆலோசனைகள் பயிற்சிகளை வழங்கவுள்ளன. வன்முறைகள் குண்டு வெடிப்புகள் ஈராக்கில் இடம்பெற்று வருகின்ற போது ஈராக் படைகள் பாதுகாப்பை பொறுப்பேற்றமை துணிச்சலான விடயம் எனக் கருதப்படுகின்றது.

ஈராக்கின் பாதுகாப்பு சொந்த இராணுவத்திடம் வந்த பின்னர் மக்கள் ஆடிப்பாடி மகிழ்ந்தனர். பட்டாசுகளைக் கொளுத்தினர், தேசிய விடுமுறை தினமாக நேற்றுப் பிரகடனம் செய்யப்பட்டது. பல் நாட்டு படைகளின் ஆட்சி முடிவடைந்தமைக்கான அடையாளம் இதுவென அவதானிகள் தெரிவித்தனர். 2003ஆம் ஆண்டு ஈராக் ஆக்கிரமிக்கப்பட்டமையிலிருந்து நான் விசேட பைவங்களில் பங்கேற்றதில்லை.

ஈராக் மக்கள் முழு மையான சுதந்திரத்தை அனுபவித்த மனமகிழ்ச்சியில் காணப்பட்டனர். இச்சந்தர்ப்பத்தில் ஈராக்கின் எதிரிகள் குழப்பம் விளைவிக்கலாம் என்பதால் ஈராக் படைகள் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டன.

விபத்துக்களான யேமன் நாட்டு விமானத்தில் கோளாறு இருந்தது

image-air-team.jpgஇந்தியப் பெருங்கடலில் விழுந்து விபத்துக்குள்ளான ஏமன் நாட்டைச்சேர்ந்த விமானத்தில் கோளாறு இருந்ததாக, 2007 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டதாகவும், குறிப்பிட்ட அந்த விமான நிறுவனம் பிரான்ஸ் நாட்டின் பாதுகாப்புத்துறையின் ரகசிய கண்காணிப்பில் இருந்து வந்ததாகவும் பிரான்ஸ் நாட்டின் போக்குவரத்து அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஆனால், இந்த 310 ரக ஏர் பஸ் விமானம், அதன் தயாரிப்பு நிறுவன அதிகாரிகளின் மேற்பார்வையின் கீழ் கடந்த மேமாதம் முழுமையாக சோதனை செய்யப்பட்டதாகவும் யேமென் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கோமொரோஸ் தீவுகளுக்கு அருகே இந்த விமானம் விபத்துக்குள்ளானபோது அதில் 153 பேர் பயணித்துக் கொண்டிருந்தனர். இவர்களில் ஒரே ஒரு குழந்தை மட்டும் தப்பிப்பிழைத்தது. யெமெனியா விமான நிறுவனம், ஐரோப்பிய ஒன்றியத்தின் தடைசெய்யப்பட்ட விமான நிறுவனங்களின் பட்டியலில் இல்லை என்று தெரிவித்த ஐரோப்பிய ஒன்றியத்தின் போக்குவரத்து அமைச்சர், இந்த பட்டியல் உலகம் தழுவிய அளவில் விரிவாக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

முன்னாள் தமிழ்க் கல்வி அமைச்சர் இணைப்பு இயக்குநராக நியமனம்

முன்னாள் மத்திய மாகாண தமிழ்க் கல்வி அமைச்சரும் தொழிலாளர் விடுதலை முன்னணியின் செயலாளரும் ஆசிரியர் விடுதலை முன்னணியின் தலைவருமான எஸ்.அருள்சாமி ஜனாதிபதியின் இணைப்பு இயக்குனராகக் கடந்த 23 ஆம் திகதி ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார். அலரிமாளிகையில் கடந்த 23 ஆம் திகதி நடைபெற்ற வைபவத்தின் போது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மேற்படி நியமனக் கடிதத்தை அருள்சாமியிடம் கையளித்துள்ளார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளராக அருள்சாமியை ஏற்கனவே ஜனாதிபதி நியமித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

யாழ்.தேர்தல் பணிகளுக்கு டக்ளஸ் தலைமை: வவுனியா நகர சபைக்கு ரிஷாத் பொறுப்பு

susil1111.jpgயாழ்ப் பாண மாநகர சபைத் தேர்தல் பணிகளை முன்னெடுப்பதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் குழுவொன்றும் வவுனியா நகரசபைத் தேர்தல் செயற்பாடுகளை முன்னெடுக்க அமைச்சர் ரிசாத் பதியுதீன் தலைமையில் குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிச் செயலாளரும் அமைச்சருமான சுசில் பிரேம ஜயந்த் தெரிவித்தார்.

1976ஆம் ஆண்டு சுதந்திரக் கட்சி உறுப்பினர் ஒருவர் யாழ். மேயராகத் தெரிவானார். 33 வருடங்களின் பின் மீண்டும் எமது கட்சியைச் சேர்ந்த ஒருவர் மேயராகத் தெரிவாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். மகாவலி நிலையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் மேலும் கூறியதாவது, யாழ். மற்றும் வவுனியா உள்ளூராட்சி சபைத் தேர்தல்களுக்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. யாழ். மாநகர சபைக்கென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையில் குழு நியமிக்கப்பட்டுள்ளதோடு அநுராதபுரம் மற்றும் ஏனைய மாவட்டங்களைச் சேர்ந்த தலைவர்கள் சிலரும் இந்தக் குழுவில் அடங்குவர்.

வவுனியா நகரசபைக்கு அமைச்சர் ரிசாத் பதியுதீன், சுமதிபால அடங்களான குழு நியமிக்கப்பட்டுள்ளன. இரு உள்ளூராட்சி சபைகளிலும் சுதந்திரக்கட்சி, ஈ.பி.டி.பி, டெலோ, ஈரோஸ். அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் அடங்கிய குழு போட்டியிடுகிறது. இந்தத் தேர்தலில் யாழ், வவுனியா மக்களின் கருத்து மிக முக்கியமாகும்.

வவுனியாவில் இயல்பு நிலை காணப்படுகிறது.

யாழ்ப்பாணத்தில் உள்ள இரு பாடசாலைகளுக்கும் நாம் விஜயம் செய்தோம். அங்கு ஆசிரியர் பற்றாக்குறை எதுவும் கிடையாது. தொண்டர் ஆசிரியர்களுக்கு தேர்தலின் பின்னர் நியமனம் வழங்க உள்ளோம். ஏ-9 வீதியினூடாக லொறிகளில் யாழ்ப்பாணத்துக்கு உணவுப் பொருட்கள் எடுத்துச் செல்லப்படுவதால் அங்கு பொருட்களின் விலைகள் குறையும் நிலை ஏற்பட்டுள்ளது.

30 வருடங்களாகக் கிடைக்காத கல்வி, சுகாதாரம், அடிப்படை வசதிகள் வடபகுதி மக்களுக்குத் தற்பொழுது கிடைத்து வருகிறது. அந்த மக்கள் அதிகாரப் பகிர்வு குறித்து எதுவும் கோரவில்லை.

பயங்கரவாதத்தால் நன்மையடைந்தவர்களே நாட்டில் அப்பிரச்சினை இருக்க விரும்புகின்றனர் – அமைச்சர் திஸ்ஸ கரலியத்த

பயங்கரவாதத்தினால் நன்மை பெற்றவர்களே இன்னும் பிரபாகரன் உயிருடன் இருப்பதாகக் கூறுகின்றனர். மேலும் நாட்டில் பயங்கரவாதம் தொடர்ந்தும் இருக்க வேண்டுமென்பதே இவர்களின் எதிர்பார்ப்பாகும் என சுதேச வைத்தியத்துறை அமைச்சர் திஸ்ஸ கரலியத்த தெரிவித்துள்ளார். கலன் பிந்துனுவௌ, படிகார மருவ பகுதியில் வசிக்கும் 780 குடும்பங்களுக்கு இலவச மட்பாத்திரங்கள் பகிர்ந்தளிக்கும் வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்; எமது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நாடு ஒன்றுபடுத்தப்பட்டுள்ளது. நாம் அனைவரும் பேதங்களை மறந்து ஒன்றுபட்டு செயற்படக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது. வடக்கின் வசந்தத்தின் கீழ் வடக்குப் பிரதேசம் அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றது.

யார் எதைச் சொன்னாலும் எமது நாட்டில் இருந்து பயங்கரவாதம் முற்றாகத் துடைத்தெறியப்பட்டு விட்டது. இது எமக்குக் கிடைத்த பெரு வெற்றியாகும். தற்போது எமக்கு இருக்கும் பெரும் சவால் பொருளாதாரத்தில் முன்னேற்றம் காண்பதேயாகும்.

இதற்கான திட்டமிடல்கள் முறையாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இன்னும் இரண்டு அல்லது மூன்று வருடங்களில் பொருளாதார ரீதியிலான முன்னேற்றத்தையும் எம்மால் எட்ட முடியும். இதற்காக எம்மாலான உதவிகளையும் நாம் அரசுக்கு வழங்க வேண்டும்.

ஜனாதிபதியின் விசேட பணிப்புரைக்கமைய அநுராதபுர மாவட்ட வாழ் மக்களுக்கு, இலவசமாக மட்பாத்திரங்கள் சுதேச வைத்தியத்துறை அமைச்சினூடாக பகிர்ந்தளிக்கப்பட்டு வருகின்றன. இதுவரையில் அநுராதபுர மாவட்டத்தில் வாழும் எண்பதாயிரம் குடும்பங்களுக்கு மட்பாத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

பயங்கரவாதத்தை நாட்டிலிருந்து துடைத்தெறிந்த எமது ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் தொடர்ந்து நாட்டை அபிவிருத்தி செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றதெனவும் அவர் கூறினார்.

கடும் மழை; மண் சரிவு அச்சுறுத்தல்; மலையகப் பகுதிகளுக்கு 24 மணி நேர முன்னெச்சரிக்கை

images.jpgமலையகப் பிரதேசங்களில் கடந்த சில தினங்களாகத் தொடராக மழை பெய்து வருவதால் மண்சரிவு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் 24 மணி நேர முன்னெச்சரிக்கையொன்றை நேற்று விடுத்தது. இதன் காரணத்தினால் மலையகத்தின் மண்சரிவு அச்சுறுத்தல் மிக்க பிரதேசங்களில் வசிப்பவர்கள் மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் அந்நிறுவனம் மக்களைக் கேட்டிருக்கிறது.

இரத்தினபுரி, கேகாலை, நுவரெலியா மற்றும் களுத்துறை ஆகிய நான்கு மாவட்டங்களிலும் மண்சரிவு அச்சுறுத்தல் மிக்க இடங்களாக எற்கனவே அடை யாளப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் மண்சரிவு ஆபத்து குறித்து முன்னெச்சரிக்கையுடன் இருப்பது அவசியம் எனவும் அந்நிறுவனம் குறிப்பிட்டிருக்கிறது.

நிறுவனத்தின் மண்சரிவு ஆய்வுகள் பிரிவுத் தலைவர் ஆர். எம். எஸ். பண்டார மேலும் குறிப்பிடுகையில் :-மலையகப் பிரதேசங்களில் கடந்த சில தினங்களாகத் தொடராக மழை பெய்து வருகின்றது. இதனால் மலையகப் பிரதேசங்களில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டிருக்கிறது. இப்பிரதேசங்களில் 100 மி. மீட்டருக்கும் மேல் தொடராக மழை பெய்திருப்பதோடு தொடர்ந்தும் மழை பெய்யும் என்றும் வானிலை அவதான நிலையம் அறிவித்திருக்கின்றது.

ஆகவே இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள எலபாத்த, பெல்மடுல்ல, இரத்தினபுரி, எஹலியகொட, கலவான, கஹவத்தை ஆகிய பிரதேசப் பிரிவுகளிலும் கேகாலை மாவட்டத்தில் யட்டியந்தோட்டை, புளத்ஹோபிட்டிய, தெரணியாகல, ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளிலும் நுவரெலியா மாவட்டத்தில் அம்பகமுவ, பிரதேச செயலகப் பிரிவிலும் கினிக்கத்தேன, நோட்டன் பிரிஜ், கெனியன், லக்ஷபான, மஸ்கெலிய பிரதேசங்களிலும், களுத்துறை மாவட்டத்தில் பாலிந்தநுவர, புளத்சிங்கள, மதுகம, அகலவத்த ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளிலும் மண்சரிவு அச்சுறுத்தல் மிக்க பல இடங்கள் உள்ளன.

தற்போது இம்மாவட்டங்களுக்கு தொடராக அதிக மழைவீழ்ச்சி கிடைக்கப்பெறுகின்றது. அதனால் மண்சரிவு அச்சுறுத்தல் மிக்க பிரதேசங்களில் வசிப்பவர்கள் மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் நடந்துகொள்ளுவது மிக அவசியம். இதனடிப்படையில் தான் இந்த 24 மணி நேர முன்னெச்சரிக்கை விடப்பட்டிருக்கிறது என்றார்.

இணைய தளங்களை கட்டுப்படுத்த சீனாவில் புதிய விதிகள்

_dam-afp.jpgசீனாவில் அனைத்து புதிய கணினிகளிலும், இணையத் தளங்களுக்கான வசதிகளை கட்டுப்படுத்துவதற்கான மென்பொருள் பொருத்தப்பட்டிருக்க வேண்டும் என்று வலியுறுத்தும் புதிய விதியை அறிமுகம் செய்வதை சீனா தாமதப்படுத்துகிறது.  அந்த விதி அமலுக்கு வரவிருந்தது.

இந்த தாமதத்துக்கு எந்த விதமான காரணமும் கொண்டு வரப்படவில்லை. ஆபாச மற்றும் வன்செயல் படங்களை இளைஞர்கள் பார்ப்பதை தடுக்கும் நோக்கிலேயே, Green Dam Youth escort என்ற இந்த மென்பொருள் வடிவமைக்கப்பட்டதாக, அதிகாரிகள் கூறுகிறார்கள்.

ஆனால், இந்த மென்பொருள், அரசியல் ரீதியாக பிரச்சினைக்குரிய இணையத் தளங்களை சீன அரசாங்கம் தடை செய்ய உதவும் என்று பேச்சு சுதந்திரத்துக்காக போராடுபவர்கள் கூறுகிறார்கள்.

க.பொ.த. உ/த பரீட்சை வெட்டுப்புள்ளி நாளை

பல்கலைக் கழகங்களுக்கு 2009ஆம் ஆண்டில் மாணவர்களை அனுமதிப்பதற்கான க. பொ. த. உயர்தரப் பரீட்சை வெட்டுப்புள்ளிகள் நாளை வியாழக்கிழமை வெளியிடப்படும்.

இவ்வருடம் 20 ஆயிரம் மாணவர்களுக்கு பல்கலைக்கழக அனுமதி வழங்கப்படும். அத்துடன் சகல பல்கலைக்கழகங்களிலும் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதல் 2009 ஆம் ஆண்டுக்கான பாடவிதானங்கள் ஆரம்பிக்கப்படுமெனவும் பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசி ரியர் காமினி சமரநாயக்க தெரிவித்துள்ளார்.

‘தமிழ் மக்களுடைய எதிர்ப்புணர்வு இலங்கை அரசுக்கு எதிரானதே அன்றி சிங்கள மக்களுக்கு எதிரான வன்மமாக அமையக் கூடாது’ கொமன்வெல்த் முன்பான ஆர்ப்பாட்டத் தொகுப்பு : த ஜெயபாலன்

Robin_Speech_at_the_Protestபுலம்பெயர் தமிழ் அரசியல் சூழல் மிகவும் குழப்பகரமானதாகவே இருந்து வந்துள்ளது. இன்னமும் அவ்வாறே உள்ளது. இங்கு முன்னெடுக்கப்படும் அரசியல் நடவடிக்கைகள் தாயகத்தில் உள்ள மக்களைப் பலப்படுத்துவதற்குப் பதிலாக அம்மக்களை தங்கள் எஜமானர்களுக்குப் பணிய வைப்பதாகவே இருந்து வந்துள்ளது. பிரித்தானிய தமிழர் பேரவை மற்றும் புலி ஆதரவு அமைப்புகளானாலும் சரி, கிழக்கிலங்கை – தலித் – ஜனநாயக முன்னணிகள் போன்ற பெயரளவில் அல்லது பெயரில் மட்டும் ஜனநாயகத்தைக் கொண்டுள்ள புலி எதிர்ப்பு அமைப்புகளானாலும் சரி தாயகத்தில் உள்ள மக்களுக்கு தாங்களே குரல் கொடுப்பதாக கூறிக்கொண்டாலும் உண்மையில் அவர்கள் அம்மக்களின் குரல்களை இருட்டடிப்புச் செய்து தங்கள் அரசியல் நலன்களைத் தக்க வைக்கவே முயன்று வந்துள்ளனர்.

இவற்றுக்கு அப்பால் மக்கள் நலன் சார்ந்து முன்னெடுக்கபடும் போராட்டங்கள் மிக அருமையாகவே நடைபெறுகிறது. இது மிகக் குறைந்தளவினருடன் மேற்கொள்ளப்பட்ட போதும் அப்போராட்டங்கள் அரசியல் ரீதியில் தங்கள் நியாயத்தை உறுதிப்படுத்தி விடுகின்றன. அந்த வகையில் தமிழ் சொலிடாரிற்றி – தமிழ் ஒருங்கிணைப்பு அமைப்பினால் யூன் 24 அன்று ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டம் குறிப்பிடத்தக்கது. கொமன்வெல்த் அலுவலகத்திற்கு முன் நூறுக்கும் உட்பட்டவர்கள் பங்கேற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு சமூகங்களையும் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். அதில் கலந்துகொண்ட தமிழர்களுக்கு இணையாக பிற சமூகத்தவர்களும் கலந்துகொண்டதுடன் அவர்களே ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

Serra_Leading_the_Protestஒரு ரூபாயோ ஒரு பெனியோ மகிந்த ராஜபக்ச அரசுக்கு கொடுக்கப்படாது!
வழங்கப்பட்ட நிதிக்கு கணக்குகள் காட்டப்பட வேண்டும்!
வன்னியில் உள்ள முகாம்கள் உடனடியாக மூடப்பட வேண்டும்!

போன்ற கோசங்கள் அங்கு ஓங்கி ஒலித்தது. Stop Slaughter of Tamils என்ற சர்வதேசப் போராட்டத்தை முன்னெடுத்தவர்களே தமிழர் ஒருங்கிணைப்பு என்ற தலைப்பில் தற்போதைய போராட்டங்களை தற்போதைய நிலைமைகளுக்கு ஏற்ப முன்னெடுக்கின்றனர். பிரித்தானியாவில் உள்ள இடதுசாரி அமைப்பான Committee for Worker’s International என்ற அமைப்பே இப்போராட்டங்களின் உந்து சக்தியாகச் செயற்படுகின்றது. முக்கியமாக ‘த சோசலிஸ்ட’ பத்திரிகையின் ஆசிரியர்களில் ஒருவரான Sarah இப்போராட்டத்தில் முன்னின்று கோசங்களை வைத்தார். ஏனையவர்களும் ஈடுபட்டனர்.

இடையிடையே கலந்துகொண்டவர்கள் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தவும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. பல்வேறு சமூகப் பிரிவுகளைச் சேர்ந்தவர்களும் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தினர். அவர்கள் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் நெருக்கடி நிலையை சுட்டிக்காட்டி அதற்காக தாங்கள் தார்மீக அடிப்படையில் குரல் கொடுக்க வேண்டிய அவசியத்தை சொல்லிச் சென்றனர்.

Robin_Speech_at_the_Protestகுறிப்பபாக ரொபின் என்பவரது கருத்துக்கள் தமிழ் மக்களது போராட்டங்கள் தொடர்பான மதிப்பீடாக அமைந்திருந்தது. நடந்த சம்பவங்கள் தொடர்பில் இலங்கை அரசு மீது மிகுந்த கண்டனத்தை தெரிவித்த ரொபின் இது சிங்கள பொது மக்களுக்கு எதிரான வன்மமாக அமையக் கூடாது என்பதைத் தெளிவுபடுத்தினார். இங்கு லண்டனில் சிலர் பௌத்த விகாரைக்கு தீயிட்டதையும் லோட்ஸ் மைதானத்தில் யூன் 21 அன்று இலங்கை – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியைப் பார்க்க வந்த சிங்கள இளைஞர்கள் தாக்கப்பட்டதையும் சுட்டிக்காட்டிய ரொபின் இவ்வாறான சிங்கள மக்களுக்கு எதிரான வன்மங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். சிங்கள மக்கள் தமிழ் மக்களுடைய எதிரிகள் அல்லர் அரசாங்கத்திற்கு எதிராகவே செயற்பாடுகள் அமைய வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இலங்கை – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான கிரிக்கட் போட்டியில் தமிழர்கள் சிலர் பாகிஸ்தானின் வெற்றியை எதிர்பார்த்து நின்றதையும் பாகிஸ்தானுக்காக குரல் கொடுத்ததையும் புரிந்துகொள்ள முடியவில்லை என்று குறிப்பிட்ட ரொபின் கடைசியாக இடம்பெற்ற யுத்தத்தில் பாகிஸ்தான் முழுமையான இராணுவ ஒத்துழைப்பை இலங்கைக்கு வழங்கி இருந்ததையும் பாகிஸ்தான் விமான ஓட்டிகள் நேரடியாக யுத்தத்தில் ஈடுபட்டதையும் சுட்டிக்காட்டினார். உண்மையில் தமிழர்களுடைய எதிர்ப்புணர்வு பாகிஸ்தான் அரசுக்கு எதிராகவும் அன்று அமைந்திருக்க வேண்டும் என்றும் ரொபின் கூறினார்.

இலங்கைத் தமிழ் மக்களுக்கான போராட்டம் வெறும் தமிழர்களுடைய போராட்டமாக அல்லாமல் பிற சமூகங்களையும் இணைத்து போராட வேண்டியதன் அவசியத்தை விளக்கிய ரொபின் ஏனைய ஒடுக்கபட்ட மக்களுக்காகவும் புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் குரல்கொடுக்க வேண்டும் என்றும் பரஸ்பரம் புரிந்துணர்வு வளர்த்துக் கொள்ளப்பட வேண்டும் என்று சுட்டிக்காட்டினார். தமிழர்களுடைய பிரச்சினை மட்டுமல்ல பாலஸ்தீனியர்களுடைய பிரச்சினை காஸ்மீரியரின் பிரச்சினை எல்லாம் ஒரே வகையினதே என்று கூறிய ரொபின் இம்மக்களுடனும் இணைந்து போராட்டங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என இறுதியாகத் தெரிவித்தார்.

இலங்கை அரசும் சர்வதேச நாடுகளும் தங்கள் நிலைப்பாடுகளை மாற்றிக் கொள்ளும்வரை தங்கள் போராட்டங்கள் தொடரும் என்ற உறுதியுடன் ஆர்ப்பாட்டம் முடிவுக்கு வந்தது.

மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்களை வழங்கமுடியாத நிலை: மஹிந்த சமரசிங்க

mahinda-samarasinha.jpgமாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்களை வழங்கமுடியாத நிலை காணப்படுகிறதென இடர்முகாமைத்துவம் மற்றும் மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

13வது திருத்தம் அமுல்படுத்தவேண்டும் என்பதில் இணக்கப்பாடு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இதற்கான நடவடிக்கைகளில் இலங்கை அரசாங்கம் ஈடுபட்டிருப்பதாகக் கூறிய அமைச்சர், எனினும், 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதில் சிக்கலொன்று காணப்படுவதாகவும் தெரிவித்தார்.

அந்த வகையில், நாட்டின் தற்போதைய சூழ்நிலைக்கேற்ப, மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்களை வழங்கமுடியாத நிலையிருப்பதுடன், இலங்கை போன்ற சிறிய நாட்டில் பொலிஸ் அதிகாரம் மத்திய அரசாங்கத்தின் கீழேயே இருக்கவேண்டுமென்ற கருத்தியலொன்று நிலவுவதாகவும் மஹிந்த சமரசிங்க சுட்டிக்காட்டினார்.