2009

2009

வடக்கில் இடம்பெயர்ந்துள்ள மக்கள் பிச்சைக்காரர்களோ நாடோடிகளோ அல்ல – மனோ எம்.பி.

mono.jpgவடக்கில் இடம்பெயர்ந்துள்ள மக்கள் பிச்சைக்காரர்களோ நாடோடிகளோ அல்ல. தமது பாரம்பரிய பிரதேசங்களில் மிகவும் கௌரவத்துடன் வாழ்ந்தவர்கள். எனவே அவர்களை உடனடியாக மீள்குடியேற்றுமாறு அரசாங்கத்தை கோருகின்றோம்.  இது தமிழர் பிரச்சினை அல்ல. தேசிய பிரச்சினையாகும் என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோகணேசன் தெரிவித்தார்.

தேசிய நூலக மற்றும் ஆவணாக்கல் சபை கேட்போர் கூடத்தில் வியாழக்கிழமை காலை நடைபெற்ற சுதந்திர மேடை அமைப்பின் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மனோகணேசன் எம்.பி. அங்கு மேலும் கூறியதாவது:

அகதிகள் விகவகாரத்தை பிரிவினைவாத பிரச்சினை மற்றும் பயங்கரவாத பிரச்சினை என்று கூறுவதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றது. ஆனால் இது தமிழ் பிரச்சினை அல்ல. தேசிய பிரச்சினை என்பதை தெரிவிக்கின்றோம். இதற்கு பின்னால் அரசியல் நிகழ்ச்சி நிரல் ஒன்று உள்ளதா? என்ற சந்தேகம் நிலவுகின்றது.

நாட்டில் ஊடகங்களின் பங்களிப்பு அளப்பரியது. மக்களின் பிரதிநிதிகளாக நாங்கள் பேசும் விடயங்கள் ஊடகங்கள் வாயிலாகவே வெளியில் செல்கின்றன. நேற்று முன்தினம் நேற்று மற்றும் இன்று நாளை என நிலைமைகள் மாறிக்கொண்டிருக்கின்றன. எமது பயணங்கள் வேகமடைகின்றன.

இடம்பெயர் மக்கள் குறித்து ஜெனீவாவில் பான் கீ மூன் அமைச்சருடன் கலந்துரையாடல்

mahinda_samarasinghe_uno.jpgஇடம் பெயர்ந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பில், ஐக்கிய நாடுகளின் பொது செயலாளர் பான் கீ மூன், ஜெனீவாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்கவுடன் கலந்துரையாடியுள்ளார்.

முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள தமிழ் மக்களின் தற்போதைய நிலைமைகள், மற்றும் அவர்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட வேண்டியதன் அவசியம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இதன் போது கலந்துரையாடப்பட்டதாக ஐக்கிய நாடுகளின் துணை பேச்சாளர் மரியா ஒகாபே தெரிவித்துள்ளார்.  அத்துடன், இடம்பெயர்ந்தோர் முகாம்களில் உள்ள மக்கள் விடுவிக்கப்பட வேண்டியமை மற்றும் முகாம்களுக்குள் தொண்டு பணியாளர்களுக்கும், பொது மக்களுக்குமான நடமாட்ட சுதந்திரம் போன்ற விடயங்கள் குறித்தும் இதன் போது கலந்துரையாடப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

அதேவேளை, இடம்பெயர்ந்தோர் முகாம்களில் இன்னமும் 3 லட்சம் பேர் வரையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறித்துக் கவலையடைவதாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகளின் ஜெனீவா தலைமையகத்தில் வைத்து செய்தியாளர்களைச் சந்தித்து உரையாற்றிய போதே பான் கீ மூன் இதனைத் தெரிவித்துள்ளார்.

முகாம் நடவடிக்கைகள் அபிவிருத்தி செய்யப்படாத நிலையில், எதிர்வரும் பருவப்பெயர்ச்சி மழை காலத்தில் முகம் கொடுக்க வேண்டிய சவால்கள் பற்றித் தாம் அச்சமடைவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழ்க் குடும்பங்கள் விரைவில் விடுவிக்கப்பட்டு, பிளவுபட்ட குடும்பங்கள் ஒன்றிணைக்கப்பட்டு சுதந்திரமாக வாழ்வதற்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் என பான் கீ மூன் தெரிவித்துள்ளார்

யுனிசெவ் தொடர்பாடல் பணிப்பாளரை வெளியேறுமாறு அரசு உத்தரவு

uni4444.jpgஇடம் பெயர்ந்து வவுனியாவில் தங்கியுள்ள மக்களின் அவலநிலை குறித்த தகவல்களை வெளியிட்ட யுனிசெவ் அமைப்பின் தொடர்பாடல் பணிப்பாளரை உடனடியாக நாட்டில் இருந்து வெளியேற இலங்கை அரசு நேற்றுமுன்தினம் உத்தரவிட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது. இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள முகாம்கள் தொடர்பாக பொய்யான தகவல்களை உலகிற்கு இவர் வெளியிட்டுள்ளார் என்று அரசு குற்றம் சுமத்தியுள்ளது.

யுனிசெவ் அமைப்பின் தொடர்பாடல் பணிப்பாளர் ஜேம்ஸ் எல்டர், இடம்பெயர்ந்த மக்கள் பட்டினியால் இறக்கின்றனர் எனவும் குழந்தைகள் போஷாகின்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்திருந்தார்.

இவர் தெரிவித்த விடயங்கள் உண்மைக்கு புறம்பானவை எனவும், அவர் பொய்யான செய்தியை ஐராப்பா உள்ளிட்ட உலக நாடுகளுக்கு வெளியிட்டுள்ளர் எனவும் அரசு குறிப்பிட்டுள்ளது. இதனையடுத்தே யுனிசெப் பணிப்பாளரை நாட்டிலிருந்து வெளியேறுமாறு இலங்கை அரசு பணித்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏ9 வீதி லொறிகளுக்கு அனுமதி ரத்தானது

2009_sep_04.jpgஏ9 பாதையூடாகப் போக்குவரத்து செய்வதற்காக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் லொறிகளுக்கு வழங்கிய அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது. ஏ9 வீதியின் ஊடாக போக்குவரத்து செய்வதற்கு 854 லொறிகளுக்கு அனுமதிப் பத்திரம் வழங்கப்பட்ட போதிலும் அவற்றில் போக்குவரத்து நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை எனக் குறிப்பிடப்படுகிறது.

ஜூன் மாதம் ஏ9 வீதி திறக்கப்பட்ட தன் பின்னர் இதுவரை குறித்த லொறிகள் எவ்வித போக்குவரத்தையும் மேற்கொள்ளவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. ஒரு தடவை போக்குவரத்தில் ஈடுபடுவதற்கு லொறி உரிமையாளர்கள், ஒரு லட்சம் ரூபாவை கட்டணமாகக் கோருகின்றனர் என அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார். எனவே, எவரும் இந்த லொறிகளை வாடகைக்கு அமர்த்த முன்வருவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நீர்மூழ்கிகளுக்கான சுரங்கப் பாதையைக் கட்டியமைக்க ஜப்பான் நிபுணர்கள் குழு புலிகளுக்கு உதவியது.

2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆழிப்பேரலையினால் ஏற்பட்ட பேரழிவைத் தொடர்ந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளுக்குச் செல்வதற்கு அனுமதிக்கப்பட்ட ஜப்பானிய நிபுணர்களின் குழு ஒன்றே நீர்மூழ்கிக் கப்பல்களைப் பயன்படுத்துவதற்கான சுரங்கப்பாதை ஒன்றைக் கட்டியமைப்பதற்கான உதவிகளைச் செய்தது என கொழும்பில் இருந்து வெளிவரும் ஆங்கில நாளேடு ஒன்று இன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கடனட்டை மோசடி சந்தேக நபர்களை 9ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு

கடனட்டை மோசடி தொடர்பிலான இரண்டு கைதிகளை எதிர்வரும் 9 ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க, கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது. போலியான ஆவணங்களை சமர்ப்பித்து கடனட்டைகளை பெற்று, நிதி மோசடிகளை பெற்றதாக, வீரதுங்க ருவான் சுஜீவ மற்றும் ருமேஷ் கிரிஷ்டோ பெர்ணான்டோ ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களுக்கு எதிராக ஹட்டன் நெசனல் வங்கி மேற்கொண்ட முறைபாட்டை அடுத்து, குற்றப் புளனாய்வு பிரிவினர் தாக்கல் செய்த அறிக்கையை அடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் போலியான ஆவனங்களை சமர்ப்பித்து, 1.2 மில்லியன் ரூபாய் நிதி மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

‘மக்கள் ஓரணி திரண்டால் என்னால் வழிகாட்ட முடியும்’ – அமைச்சர் டக்ளஸ்

epdp.jpgபதின் மூன்றாவது திருத்தச் சட்டம் நடைமுறைக்கு வருமானால் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு 60 வீத தீர்வு கிட்டும். மக்கள் ஓரணி திரண்டால் இதற்குத் தம்மால் வழிகாட்ட முடியுமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

ஆனந்த சங்கரியுடன் தமக்கு எந்தவித கோபமுமில்லையெனத் தெரிவித்த அமைச்சர், தமிழ் மக்களின் பிரச்சினைக்கு விரைவான தீர்வொன்றைக் காண்பதற்கு ஒரு இணக்கப்பாட்டுக்கு வருமாறு அவருக்கு அழைப்பு விடுப்பதாகவும் தெரிவித்தார்.

13வது திருத்தம் மூலம் தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியுமென நம்பிக்கை தெரிவிக்கும் அமைச்சர் ஜனாதிபதியும் அதனை ஆதரிப்பதாகவும் தெரிவித்தார். சமூக சேவை, சமூக நலன்புரி அமைச்சில் நேற்று இடம்பெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டின் போது இது குறித்து கருத்துத் தெரிவித்த அமைச்சர் தேவானந்தா மேலும் தெரிவிக்கையில்;

அரசியல் வரலாற்றினை நோக்கும்போது இலங்கை- இந்திய ஒப்பந்தத்திற்குப் பின்னர் அரசாங்கங்களில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டன. ஜனாதிபதி பிரேமதாசவிலிருந்து இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வரை தமிழ் மக்களின் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. எனினும் புலிகள் இவை எதனையும் ஏற்கவில்லை.

திம்பு பேச்சுவார்த்தை கூட தமிழ் மக்களின் அபிலாஷைகளையும் உரிமைகளையும் வெளிக்கொணரும் ஒன்றாகவே அமைந்திருந்தது. எனினும் அன்று அதற்குத் தலைமை தாங்கிய தலைவர்களே இன்றில்லை.

இலங்கை- இந்திய ஒப்பந்தம் தமிழ் மக்களின் பிரச்சினைத் தீர்வுக்கு ஒரு பொன்னான வாய்ப்பாகும். அதனைத் தமிழ்த் தலைவர்கள் தவறவிட்டுவிட்டனர். இந்த விடயத்தில் நான் இந்தியப் படையையோ இலங்கைப் படையினரையோ குறைகூறமாட்டேன். புலிகள் தாமும் அழிந்து தமது மக்களையும் அழியவிட்டுள்ளனர்.  புலிகளின் பிரச்சினை வேறு, தமிழ் மக்களின் பிரச்சினை வேறு எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

விஜய்க்கு எதிராக கண்டன போஸ்டர்கள்

rahul_vijay.jpgநடிகர் விஜய்-க்கு எதிராக ஈரோடு,  நாமக்கல், கரூர், கோவை போன்ற மாவட்டங்களில் பல இடங்களில் கண்டன போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

விஜய் அரசியலுக்கு வரப் போவதாக அவரே கூறியுள்ளார்.  அவரது தந்தையும், அவரும் சேர்ந்து மக்கள் இயக்கம் என்ற ஒன்றை ஆரம்பித்துள்ளனர். காங்கிரஸ் கட்சியில் சேரப் போவதாக கூறப்படுகிறது. இதற்காக ராகுல் காந்தியையும் விஜய் சமீபத்தில் சந்தித்துப் பேசினார். இளைஞர் காங்கிரஸ் பதவியைத் தந்தால் சேரத் தயார் என அவர் நிபந்தனை விதித்துள்ளதாகவும் ஒரு பேச்சு உள்ளது.

விஜய்யின் அரசியல் பிரவேசம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதைப் போலவே அவருக்கு கடும் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. இந்த நிலையில், ஈரோடு , நாமக்கல், கரூர், கோவை போன்ற மாவட்டங்களில் பெரியார் திராவிடர் கழகம் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

அதில், இளைய தளபதியே நம்பி வந்த ரசிகர்களுக்கு துரோகமா என்ற தலைப்பில், பல்லாயிரம் ரசிகர்களை திரட்டி ஈழத் தமிழர்களுக்காக போரடிய நடிகர் விஜய் அவர்களே தமிழன படுகொலைக்கு துணை போன கங்கிரஸ் கட்சியுடன் நட்புக்கரமா மனசாட்சியுடன் சிந்திப்பீர் என வாசகங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த போஸ்டர்கள் விஜய் ரசிகர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

ஆஸ்திரேலியா-இங்கிலாந்து இன்று மோதல்

eng0000.jpgஆஸ்தி ரேலியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் இன்று நடக்கிறது. 7 ஒரு நாள் போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதல் போட்டி இது என்பது குறிப்பிடத்தக்கது.

டெஸ்ட் தொடரை இழந்த ஆஸ்திரேலிய அணி அதை தொடர்ந்து பங்கேற்ற இரண்டு 20 ஓவர் கிரிக்கெட் போட்டியும் மழையால் நடைபெறாமல் போனதால் ஒரு நாள் தொடரை வென்று தரவரிசையில் தங்களது இடத்தை தக்கவைக்க போராடுவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

இந்த நிலையில் ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 7 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் முதலாவது ஒரு நாள் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் இன்று பகல்-இரவு ஆட்டமாக நடைபெறுகிறது.

பாண்டிங்குக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இருப்பதால் ஆஸ்திரேலிய அணி மைக்கேல் கிளார்க் தலைமையில் களம் இறங்குகிறது. ஆஷஸ் தொடரை இழந்ததால் அதற்கு பழிதீர்க்கும் முனைப்புடன் ஆஸ்திரேலிய வீரர்கள் தயாராகி வருகிறார்கள். ஆஷஸ் போட்டியில் வாய்ப்பு கிடைக்காத வேகப்பந்து வீச்சாளர் பிரெட்லீ, தனது இடத்தை உறுதிசெய்ய இதில் தனது முழுவேகத்தையும் காட்டுவார் என்று நம்பலாம்.

அதே சமயம் ஸ்டிராஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி ஆஷஸ் வெற்றி உற்சாகத்துடன் களம் காணுகிறது. காயத்தால் பிளின்டாப் ஆட முடியாமல் போனது அந்த அணிக்கு சற்று பின்னடைவு தான். நேற்று பயிற்சியில் ஈடுபட்டிருந்த அந்த அணியின் புதுமுக தொடக்க ஆட்டக்காரர் ஜோ டென்லிக்கு மூட்டில் காயம் ஏற்பட்டது. இதனால் அவர் முதலாவது ஆட்டத்தில் ஆடமாட்டார் என்று தெரிகிறது.

இரு அணியும் இதுவரை 93 ஒரு நாள் போட்டிகளில் நேருக்கு நேர் மோதி உள்ளன. இதில் 52-ல் ஆஸ்திரேலியாவும், 37-ல் இங்கிலாந்தும் வெற்றி பெற்றிருந்தன. 2 ஆட்டம் `டை’ ஆனது. 2 போட்டியில் முடிவு கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

கலப்பு இரட்டையர், மகளிர் இரட்டையர் போட்டிகளில் சானியா இணை வெற்றி

sania3333.jpgநியூ யார்க்கில் நடைபெறும் யு.எஸ்.ஓபன் டென்னிஸ் கிராண்ட் ஸ்லாம் தொடரில் ஆண்/பெண் இரட்டையர் பிரிவிலும், மகளிர் இரட்டையர் பிரிவிலும் சானியா/டேனியல் நெஸ்டர் இணையும், சானியா மிர்சா/ஷியாவோன் இணையும் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினர்.

மகளிர் இரட்டையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில் தனது புதிய இத்தலிய கூட்டாளியான ஷியாவோனுடன் களமிறங்கிய சானியா மிர்சா 5- 7, 7- 5, 6- 1 என்ற செட் கணக்கில் பெலாரஸ்/செக். இரட்டையர் இணையான ஸெஹாலேவிச்- ரெனெடா வொரசொவா இணையை வெற்றி பெற்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினர்.

ஆண்/பெண் இரட்டையர் பிரிவில் கனடா வீரர் டேனியல் நெஸ்டருடன் ஜோடி சேர்ந்துள்ள சானியா மிர்சா முதல் சுற்று ஆட்டத்தில் உஸ்பெகிஸ்தான்/ஆஸ்ட்ரிய இணையை 6- 3, 6- 1 என்ற செட் கணக்கில் வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினர்.

மற்றொரு ஆண்/பெண் இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் 2ஆம் தர நிலையில் உள்ள இந்திய/ஜிம்பாப்வே இணையான லியாண்டர் பயஸ்-காரா பிளாக் இணை சுவிஸ்./தென் ஆப்பிரிக்க இணையான பேட்டி ஸ்னைடர்-வெஸ்லி மூடி இணையை 6- 4, 3- 6, 11- 9 என்ற செட்களில் போராடி வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.