2009

2009

பழம்பெரும் நடிகை எஸ் வரலட்சுமி காலமானார்.

230909varalakshmi.jpgபழம் பெரும் நடிகை எஸ். வரலட்சுமி சென்னையில் செவ்வாய்க்கிழமை இரவு காலமானார். அவருக்கு வயது 84. கடந்த ஆறுமாதங்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். சென்னை மகாலிங்கபுரத்தில் வசித்து வந்த அவருக்கு, காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு நடக்க முடியாத நிலை ஏற்பட்டது.

செவ்வாய்க்கிழமை பிற்பகல் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு, சிகிச்சை பலனின்றி இரவு 8.20 மணிக்கு காலமானார்.

1938-ம் ஆண்டு முன்னோடி இயக்குநர் கே. சுப்பிரமணியம் (நடன கலைஞர் பத்மா சுப்பிரமணியத்தின் தந்தை) தயாரித்த “சேவாசதனம்’ படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் எஸ். வரலட்சுமி. இவர் மிகச் சிறந்த பாடகியும் கூட.  சக்கரவர்த்தி திருமகள், வீரபாண்டிய கட்ட பொம்மன், ராஜராஜ சோழன், கந்தன் கருணை, நீதிக்குத் தலைவணங்கு, பூவா தலையா, குணா உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தெலுங்கிலும் நிறைய படங்களில் நடித்தவர் எஸ் வரலட்சுமி.

இவர் பாடிய ‘இந்தப் பச்சைக் கிளிக்கொரு செவ்வந்திப் பூவில் தொட்டிலைக் கட்டிவைத்தேன்….’ என்ற பாடல் மிகப் புகழ்பெற்றது, கேட்போரை உருகவைப்பது.

கலைமாமணி, கலைவித்தகர், கண்ணதாசன் விருது  உள்ளிட்ட விருதுகளை பெற்ற இவர், தான் நடித்த அனைத்து படங்களிலும் சொந்தக் குரலிலேயே பேசி, பாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது. மறைந்த எஸ். வரலட்சுமிக்கு முருகன் என்ற மகனும், நளினி என்ற மகள், ஒரு பேரன், ஒரு பேத்தி உள்ளனர். இறுதிச் சடங்கு புதன்கிழமை (நேற்று) மாலை நடைபெற்றது. .

கமத்தொழில் அபி. அமைச்சின் ரூ 68 1/2 கோடி குறைநிரப்பு பிரேரணை சபையில் சமர்ப்பிப்பு

190909paddy.jpgவிவசாயிகள் தொடர்பான புதிய வரை விலக்கணத்தை உள்ளடக்கியதும், நெற் செய்கையில் ஈடுபட்டு வரும் குத்தகைக்கார விவசாயிகளின் உரிமைகளை பாதுகாக்கும் விதத்திலான கமநலச் சேவைகள் சட்டமூலமொன்று விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என அமைச்சர் மைத்திரிபால சிறிசேன நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

கமத்தொழில் அபிவிருத்தி, கமநல சேவைகள் அமைச்சுக்கு அறுபத்து எட்டு கோடியே 53 லட்சம் 93, 938 ரூபாவை பெற்றுக் கொள்வதற்கான குறைநிரப்புப் பிரேரணை யொன்றை சமர்ப்பித்து பேசும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

விவசாயிகளின் சிறப்புரிமைகளை, பாதுகாக்கவும், அவர்களுக்கு உரித்துடையவற்றை பாதுகாக்கவும் புதிய கமநல சேவைகள் சட்டமூலம் தயாரிக்கப்பட்டு சட்டவாக்கம் திணைக்களத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.  இந்தச் சட்டமூலம் விரைவில் சட்ட மா அதிபர் திணைக்களத்துக்கு அனுப்பப்படும். இவ்வருட இறுதிக்குள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகாரம் பெறப்படும்.

விவசாயிகளின் நலனை பாதுகாப்பதற்காக எமது அரசு தொடர்ந்தும் செயற்பட்டு வருகிறது. விவசாயிகளின் நலன் தொடர்பாக கொண்டுவரப்படும் இச்சட்டமூலத்திற்கு ஆதரவளிக்க வேண்டியது எதிர்க்கட்சிகளின் கடமையாகும். இக்கடமையிலிருந்து விடுபடவும் கூடாது.

வெளிநாடுகளிலிருந்து உணவுப் பொருட்கள் இறக்குமதி செய்வது நிறுத்தப்படும். அந்த அளவுக்கு விவசாயத்துறை ஊக்குவிக்கப்பட்டு தன்னிறைவும் காணப்படும். 1976ஆம் ஆண்டிலிருந்து கடந்த காலங்களில் கமநல சேவைகள் திணைக்களத்துக்கு இழைக்கப்பட்ட அநீதிகளினால் ஏற்பட்ட நட்டங்களை ஈடுசெய்யும் வகையில் குறை நிரப்பு தொகை கமநல சேவைகள் அமைச்சுக்கு கோரப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச தொலைபேசி இணைப்பு

mobile-phone.jpgஇலங்கை வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு இலவசமாக கையடக்கத் தொலைபேசி இணைப்புகளை வழங்கும் திட்டம் ஒன்றை தேசிய விமான சேவையான மிஹின் லங்கா விமான சேவையின் கீழ் உள்ள ஸ்ரீ லங்கன் ஹொலிடேஸ நிறுவனம் ஆரம்பித்துள்ளது.
 
இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளின் அன்றாட தொலைத் தொடர்பு தேவைகளுக்கு வசதி செய்து கொடுக்கும் வகையில் இந்தத் திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி இலங்கை வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு விமான நிலையத்தில் வைத்தே இந்த இலவச இணைப்பு வழங்கப்படவுள்ளது. இத்திட்டத்துக்கு டயலொக் தொலைபேசி நிறுவனம் அனுசரணை வழங்குகிறது.

விண்ணில் பாய்ந்தது ஓஷன்சாட்-2 செயற்கைக்கோள்

230909ossaan.jpgகடல் ஆய்வு, கடற்பகுதியில் ஏற்படும் மாற்றங்களை கண்காணித்தல், தட்பவெப்பநிலை மாற்றம் குறித்து ஆய்வு செய்வதற்கான ஓஷன்சாட்-2 செயற்கைக்கோளை இந்திய விண்வெளி ஆய்வுக் கழகம் – இஸ்ரோ நேற்று விண்ணில் செலுத்தியது.

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி மையத்தில் இருந்து, பி.எஸ்.எல்.வி – சி 14 செலுத்து வாகனம் (ராக்கெட்) ஓஷன்சாட்-2 செயற்கைக்கோளையும், 6 சிறியரக (நானோ) செயற்கைக்கோள்களையும் தாங்கிக் கொண்டு, சரியாக நேற்று நண்பகல் 11.53 மணிக்கு விண் வட்டப்பாதையை நோக்கி பாய்ந்தது.

ஜூவாலையைக் கக்கிக் கொண்டு விண்ணில் பயணித்த பி.எஸ்.எல்.வி. திட்டமிட்டபடி விண்வட்ட நீள் பாதையில் எட்டியதும் ஒவ்வொரு செயற்கைக் கோள்களாக புவிச் சுழற்சிப் பாதையில் துல்லியமாகச் செலுத்தியது. செயற்கைகோள்கள் அனைத்தும் திட்டமிட்டபடி செலுத்தப்பட்டதும் இஸ்ரோ தலைவர் டாக்டர் ஜி. மாதவன் நாயர் உட்பட ஓஷன்சாட்-2 செயற்கைக்கோளை வடிவமைத்த விஞ்ஞானிகள் குழுவினர் கைதட்டி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். இந்தியா பல ஆண்டுகளுக்கு முன் செலுத்திய ஓஷன்சாட்-1 செயற்கைக்கோளின் செயல்பாட்டுப் பயன்களைத் தொடரவும், புதிய பயன்பாடுகளுக்காகவும் 960 கிலோ எடை கொண்ட ஓஷன்சாட்-2 செயற்கைக்கோள் செலுத்தப்பட்டுள்ளது. 720 கி.மீ. எஸ்.எஸ்.ஓ விண்வட்டப்பாதையில் இந்த செயற்கைக் கோள் நிலை நிறுத்தப்படும். இந்த செயற்கைக்கோளின் ஆயுட்காலம் 5 ஆண்டுகள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் சத்தீஸ்கர் மாநிலத்தில் மின் நிலைய நிர்மாணத்தில் விபத்து- 20 பேர் பலி, பலருக்கு காயம்

240909ind.jpgஇந்தியா வின் சத்தீஸ்கர் மாநிலத்தில் மின் நிலையம் அமைக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில் 178 மீட்டர் உயரமான ராட்சத புகைபோக்கியொன்று சரிந்து விழுந்ததில் அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த இருபதுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் உயிரிழந்துள்ளனர்.

கோர்பா மாவட்டத்தில் பாரத் அலுமினியம் நிறுவனத்துக்காக மின் நிலையம் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. அங்கு திடீரென்று அந்த புகைபோக்கி சரிந்து விழுந்ததில் மேலும் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாகவும் அவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

பாரத் அலுமினியம் நிறுவனத்துக்காக, சீன நிறுவனம் ஒன்று மின் நிலையம் அமைக்கும் ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளது. அந்த நிறுவனம் இன்னொரு தனியார் நிறுவனத்திடம் பொறுப்பை ஒப்படைத்திருந்தது. அந்தத் தனியார் நிறுவனம் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யவில்லை என்று கூறி, அந்த நிறுவன அதிகாரி ஒருவரை ஊழியர்கள் சிலர் அடித்துக் கொன்றுவிட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.  இந்தச் சம்பவம் தொடர்பாக நீதி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது

ஐ.சி.சி ஒருநாள் தரவரிசை: இந்தியா மீண்டும் முதலிடம்

sep-14-2009-india.jpgசர்வதேச கிரிக்கெட் கூட்டமைப்பின் ஒருநாள் அணிகளுக்கான உலகத் தரவரிசைப் பட்டியலில் இந்தியா மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது. சாம்பியன்ஸ் கோப்பைத் தொடரின் முதல் போட்டியில் தோல்வியடைந்ததால் தென்ஆப்ரிக்க அணி 3வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

உலக கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் தென்ஆப்ரிக்காவில் கோலகலமாகத் துவங்கியது. பகலிரவு ஆட்டமாக நடந்த முதல் போட்டியில் இலங்கை அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இலங்கைக்கு எதிரான தோல்வியின் காரணமாக ஐ.சி.சி. ஒருநாள் அணிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தில் இருந்த தென்ஆப்ரிக்க அணி (123 புள்ளிகளுடன்) தற்போது 3வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

இதனால் 2வது இடத்தில் இருந்த இந்தியா (126 புள்ளிகள்) முதலிடத்திற்கும், 3வது இடத்தில் இருந்த ஆஸ்ட்ரேலியா (125 புள்ளி) 2வது இடத்திற்கும் முன்னேறியுள்ளன.

50 ஆயிரம் ரவைகள், 8 கிலோ சி-4 விசுவமடுவில் படையினரால் மீட்பு

பல்வேறு வகையான ஐம்பதாயிரம் ரவைகள், எட்டு கிலோ எடையுள்ள சி-4 அதிசக்தி வாய்ந்த வெடிமருந்துகள் மற்றும் பெருந்தொகையான ஆயுதங்களை விசுவ மடுவிலிருந்து பாதுகாப்புப் படையினர் மீட்டெடுத்துள்ளனர்.

இதேவேளை, சி-4 அதிசக்தி வாய்ந்து வெடிமருந்துகள் நிரப்பப்பட்ட ஏழு சிரட்டைகளையும் படையினர் மீட்டெடுத்துள்ளதாக பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

இராணுவத்தின் இரண்டாவது அதிரடிப் படையினர் நடத்திய பாரிய தேடுதல்களில் எம்.பி.எம்.ஜி ரவைகள் 13,500, ரி-56 ரக ரவைகள் 26,250, .22 மி.மீ ரவைகள் 10,600, 15 அடி உயரமான பாரிய கூடாரங்கள் – 14, அன்டனாக்கள்-03, மோட்டார் குண்டுகள், தொலைத் தொடர்புக் கருவிகளுக்கு பயன் படுத்தப்படும் பற்றரிபெட்டிகள்-03, வெடிக்கவைக்கும் கருவிகள்-245 மற்றும் உபகரணங்களை மீட்டெடுத்துள்ளனர்.

சுதந்திரபுரம் மற்றும் உப்புக்குளம் பகுதிகளில் இராணுவத்தின் எட்டாவது அதிர டிப் படையினர் நடத்திய தேடுதல்களில் 60. மி.மீ. மோட்டார் குண்டு-13, மிதி வெடிகள்-10, கிரனேட்-15, கிளேமோர் குண்டு கள்-02, 8 கிலோ எடையுள்ள சி-4 ரக வெடி மருந்துகள், சி.டி.எம்.ஏ. தொலைபேசி 01, வெடிமருந்துகள் நிறப்பப்பட்ட ஒலி பெருக்கி மற்றும் உபகரணங்களை மீட்டெடுத்துள்ளனர்.

ஆஸ்திரேலியாவில் புழுதி புயல்

23-sydney.jpgஆஸ்தி ரேலியாவின் கிழக்குப் பகுதியில் திடீரென வீசிய புழுதிப் புயலால் சிட்னி நகரமே சிவப்பு நிறமாக மாறிப் போனது. இந்த திடீர் செம்புழுதியால், போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. மூச்சுத் திணறல் உள்ளிட்டவை ஏற்படலாம் என சுகாதாரத் துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்ததால் வெளியில் வந்தவர்கள் அனைவரும் முகமூடிகளை அணிந்து நடமாடினர்.

சிட்னி விமான நிலையத்திற்கு வர வேண்டிய விமானங்கள் வேறு நகரங்களுக்கு திருப்பி விடப்பட்டன. துறைமுகத்தில் கப்பல் போக்குவரத்து  நிறுத்தப்பட்டது. மோட்டார் சைக்கிள்களில் செல்வோர் எதிரில் வருவது தெரியாத வகையில் புழுதி அடர்த்தியாக இருந்ததால் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.

செவ்வாய் கிரகம் போல சிட்னி நகரமே மாறிப் போயிருந்தது. இதை பலர் வெளியில் வந்து பார்த்து ரசித்து மகிழ்ந்தனர். பலர் வியப்புக்குள்ளாகினர். பலருக்கோ பீதியாகி விட்டது. புரோக்கன் ஹில் நகரிலிருந்து தொடங்கிய இந்த புழுதிப் புயல் கிழக்கு ஆஸ்திரேலியா  முழுவதும் படிப்படியாக வீசி நகரங்களை செம்மையாக்கி விட்டது.

புழுதிப் புயல் வீசியபோது, மணிக்கு 60 மைல் வேகத்தி்ல் பலத்த காற்றும் வீசியது. இந்த புழுதிப் புயல் காரணமாக 50 லட்சம் டன் தூசி சிட்னி உள்ளிட்ட பகுதிக்குள் வந்து சேர்ந்து விட்டதாக கணக்கிடப்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் மணிக்கு 75 ஆயிரம் டன் அளவுக்கு அடர்த்தியான தூசி சிட்னி நகரை மூடியது. இந்தப் புயல் பின்னர் பசிபிக் கடலில் போய் முடிந்தது.

ஆஸ்திரேலியாவில் இப்படி ஒரு அனுபவம் இதுவரை ஏற்பட்டதில்லை என்று பலரும் தெரிவித்துள்ளனர்.

கிழக்கில் இடைத்தங்கல் முகாம்களில் தங்கியிருந்த சில குடும்பங்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு

இலங்கையின் வடக்கே வவுனியா இடைத்தங்கல் முகாமிலிருந்து மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களுக்கு மீள் குடியேற்றத்திற்கு அழைத்து வரப்பட்டு, இடைத் தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்த சில குடும்பங்கள் தமது சொந்த இருப்பிடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு மாவட்டதிலுள்ள குருக்கள் மடம் கலைவாணி வித்தியாலயம் இடைத் தங்கல் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள 45 குடும்பங்களைச் சேர்ந்த 127 பேரில் 5 குடும்பங்களைச் சேர்ந்த 16 பேரும் அம்பாறை மாவட்டத்திலுள்ள அக்கரைப்பற்று இடைத்தங்கல் முகாமிலுள்ள 42 குடும்பங்களைச் சேர்ந்த 132 பேரில் 5 குடும்பங்களைச் சேர்ந்த 11 பேரும் நேற்று விடுவிக்கப்பட்டனர்.

இவர்களைப் பிரதேச செயலக அதிகாரிகள் பொறுப்பேற்று உறவினர்களிடம் நேரடியாக ஒப்படைத்ததாக அதிகாரிகள் குறிப்பிட்டனர்.அதிகாரிகளின் தகவல்களின்படி கட்டம் கட்டமாக இக்குடும்பங்கள் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது

த‌மிழக ‌மீனவ‌ர்களை ‌விடு‌‌வி‌க்க கோ‌ரி ராமே‌ஸ்வர‌த்த‌ி‌ல் நாளை ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌‌ம்

22-jayalalitha.jpgஇலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டு‌ள்ள 21 தமிழக மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தியும், மீனவர்களை தொடர்ந்து தாக்கி வரும் இலங்கை கடற்படையை கண்டித்தும் அ.இ.அ.தி.மு.க சார்பில் நாளை 25ஆ‌ம் தே‌தி ராமேஸ்வரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெறு‌கிறது. இது தொட‌ர்பாக அ‌க்கட்சியின் பொதுச் செயலர் ஜெயலலிதா இ‌ன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ”இலங்கை கடற்படையினரின் தொடர் தாக்குதலைத் தடுத்து நிறுத்தக் கோரி கடந்த மாதம் தமிழக மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் தமிழக அரசின் சார்பில் அளிக்கப்பட்ட உறுதிமொழியை அடுத்து மீண்டும் கடலுக்குள் சென்று மீன்பிடித் தொழிலை செய்ய ஆரம்பித்தனர்.

ஆரம்பித்த ஒரு சில நாட்களிலேயே இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது மீண்டும் தாக்குதலைத் தொடுத்துள்ளனர். 16.9.2009 அன்று ராமேஸ்வரம் பகுதியில் 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் சுற்றி வளைத்து, வலைகளை அறுத்து, அவர்களுடைய படகுகளை சேதப்படுத்தி மீன்பிடி சாதனங்களை கடலில் தூக்கி எறிந்ததோடு மட்டுமல்லாமல் 5 படகுகளையும், 21 மீனவர்களையும் கடத்திச் சென்று உள்ளனர்.

தமிழக மீனவர்களை ஈவு இரக்கமின்றி துன்புறுத்துவது, துப்பாக்கியால் சுடுவது, சிறை பிடிப்பது ஆகியவற்றை இலங்கை அரசு வாடிக்கையாகக் கொண்டு இருக்கிறது. இது போன்ற துயரச் சம்பவம் நடைபெறும் ஒவ்வொரு முறையும் இலங்கை அரசைக் கண்டித்து அறிக்கை விடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார் கருணாநிதி.

தமிழக மீனவர்களை வாழவிடாமல் தொடர்ந்து துன்புறுத்திக்கொண்டு இருக்கும் இலங்கைக் கடற்படையினரைக் கண்டித்தும், சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், அவர்களது படகுகளையும் மீட்க மத்திய அரசு மூலமாக தி.மு.க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் ராமநாதபுரம் மாவட்ட அ.இ.அ.தி.மு.க சார்பில் வரு‌ம் 25ஆ‌ம் தே‌தி மாலை 3 மணி அளவில் ராமேஸ்வரத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம் அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்றச் செயலர் டி.ஜெயக்குமார் தலைமையிலும், மீனவர் பிரிவு செயலர் கே.கே.கலைமணி, ராமநாதபுரம் மாவட்ட செயலர் வ.சத்தியமூர்த்தி ஆகியோர் முன்னிலையிலும் நடைபெறும் எ‌ன்று ஜெயல‌லிதா கூ‌றியு‌ள்ளா‌ர்.