அரசாங்கத்தை மாற்றி அமைக்க வேண்டும், என்ற சிந்தனையில் நாங்கள் இல்லை. – இரா.சாணக்கியன்
நாங்கள் அரசாங்கத்துடன் போய் சண்டை பிடித்து, அரசாங்கத்தை விமர்சனம் செய்து, அரசாங்கத்தை மாற்றி அமைக்க வேண்டும், என்ற சிந்தனையில் நாங்கள் இல்லை. மூன்றில் இரண்டு பெரும்பான்மை உடன் இருக்கின்ற அரசாங்கத்தில் அரசியல் தீர்வு விடயத்தை அடையக்கூடிய வாய்ப்பு இருக்கின்ற காரணத்தினால் அதனை நாங்கள் சாதகமாகத்தான் பயன்படுத்த வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் வரையறுக்கப்பட்ட குருமண்வெளி சிக்கன சேமிப்பு கடனுதவு கூட்டுறவுச் சங்கத்தின் 37வது ஆண்டு நிறைவு விழாவும் சாதனையாளர் பாராட்டு விழாவில் கருத்துரையாற்றும் போது தெரிவித்துள்ளார்.
இதன்போது சாணக்கியன் மேலும் தெரிவிக்கையில், நாட்டிலே அரிசி தட்டுப்பாடு வந்தபோது அமைச்சர் தெரிவித்தார், சதோச விற்பனை நிலையங்கள் ஊடாக 210 ரூபாவுக்கு அரசியும், 130 ரூபாவுக்கு தேங்காயும் கொள்வனவு செய்யலாம் என தெரிவித்தார். மக்கள் அதனை கொள்வனவும் செய்யலாம். ஆனால் எமது பிரதேசத்தில் ஒரு சதொச விற்பனை நிலையம் கூட இல்லை. எமது மக்கள் முகம் கொடுக்கும் பிரச்சினைகளைப் பற்றியும் நாங்கள் பேசாமல் இருக்க முடியாது. தற்போது அரிசி பாரிய தொடர்பில் பிரச்சினைகள் எழுந்துள்ளது. அது விவசாயிகள் மத்தியில் பெரிய பிரச்சனையாக வந்துள்ளது. அரசாங்கம் அரிசி இறக்குமதி செய்கின்றது. எமது பிரதேசத்தில் பல விவசாயிகள் இருக்கிறார்கள், மட்டக்களப்பு மாவட்டத்தில் 2 லட்சத்துக்கு மேற்பட்ட ஹெக்டேயர்களில் வேளாண்மை செய்திருக்கின்றார்கள். தற்போது அரசாங்கம் அரிசியை இறக்குமதி செய்வதன் ஊடாக ஒரு மாதத்திற்கு முன்னர் வழங்குவதற்கான கோரிக்கை செய்யப்பட்ட அரிசி இலங்கைக்கு நேற்றைய தினம்தான் வந்து இறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆனால் எமது பகுதி ஜனவரி பெப்ரவரி மாதத்தில் தான் நெல் அறுவடை செய்கின்ற காலம்.
இறக்குமதி செய்யப்படுகின்ற அரிசி தற்போது சந்தைக்கு வருமாறு இருந்தால் ஜனவரி 15ஆம் தேதி வரைக்கும் அனைத்து விற்பனை நிலையங்களுக்கும் அந்த அரிசி போய் சேரும். அந்த வேளையில் அரிசியின் விலை குறையும். அந்த சந்தர்ப்பத்தில் எமது விவசாயிகள் அறுவடை செய்யும் நெல்லின் விலை குறைவடையும். நெல்லின் விலை குறைவடையும் பகுதி பட்சத்தில் எமது விவசாயிகள் பாரிய நஷ்டத்தினை எதிர்கொள்வார்கள். வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு வழங்குவோம் என சொன்னார்கள். ஒரு ஹெக்டருக்கு ஒரு லட்சம் என்றார்கள். அந்த இழப்பீட்டுத் தொகையும் விவசாயிகள் பயிர் மீண்டும் பயிர் செய்து மூன்றாவது உரம் இடும் காலப்பகுதியில் தான் அந்த தொகை வழங்கப்படும் இச்சூழ்நிலையில்தான் தற்போது அரசாங்கத்தின் நிலைமை சென்று கொண்டிருக்கிறது. ஆனால் இந்த கூட்டுறவு சங்கங்களை இன்னும் மென்மேலும் பலப்படுத்தினால் அரிசி பிரச்சனைகள் போன்ற விடயங்கள் எழும்போது எதிர்காலத்தில் மக்களுக்கு சிறந்த செயற்பாடுகளை முன்னெடுக்க முடியும் என மேலும் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் இதன்போது தெரிவித்தார்.








