December

December

அரசாங்கத்தை மாற்றி அமைக்க வேண்டும், என்ற சிந்தனையில் நாங்கள் இல்லை.  – இரா.சாணக்கியன்

அரசாங்கத்தை மாற்றி அமைக்க வேண்டும், என்ற சிந்தனையில் நாங்கள் இல்லை.  – இரா.சாணக்கியன்

நாங்கள் அரசாங்கத்துடன் போய் சண்டை பிடித்து, அரசாங்கத்தை விமர்சனம் செய்து, அரசாங்கத்தை மாற்றி அமைக்க வேண்டும், என்ற சிந்தனையில் நாங்கள் இல்லை.  மூன்றில் இரண்டு பெரும்பான்மை உடன் இருக்கின்ற அரசாங்கத்தில் அரசியல் தீர்வு விடயத்தை அடையக்கூடிய வாய்ப்பு இருக்கின்ற காரணத்தினால் அதனை நாங்கள் சாதகமாகத்தான் பயன்படுத்த வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் வரையறுக்கப்பட்ட குருமண்வெளி சிக்கன சேமிப்பு கடனுதவு கூட்டுறவுச் சங்கத்தின் 37வது ஆண்டு நிறைவு விழாவும் சாதனையாளர் பாராட்டு விழாவில் கருத்துரையாற்றும் போது தெரிவித்துள்ளார்.

இதன்போது சாணக்கியன்  மேலும் தெரிவிக்கையில், நாட்டிலே அரிசி தட்டுப்பாடு வந்தபோது அமைச்சர் தெரிவித்தார், சதோச விற்பனை நிலையங்கள் ஊடாக 210 ரூபாவுக்கு அரசியும், 130 ரூபாவுக்கு தேங்காயும் கொள்வனவு செய்யலாம் என தெரிவித்தார். மக்கள் அதனை கொள்வனவும் செய்யலாம். ஆனால் எமது பிரதேசத்தில் ஒரு சதொச விற்பனை நிலையம் கூட இல்லை.  எமது மக்கள் முகம் கொடுக்கும் பிரச்சினைகளைப் பற்றியும் நாங்கள் பேசாமல் இருக்க முடியாது. தற்போது அரிசி பாரிய தொடர்பில் பிரச்சினைகள் எழுந்துள்ளது. அது  விவசாயிகள் மத்தியில் பெரிய பிரச்சனையாக வந்துள்ளது. அரசாங்கம் அரிசி இறக்குமதி செய்கின்றது. எமது பிரதேசத்தில் பல விவசாயிகள் இருக்கிறார்கள், மட்டக்களப்பு மாவட்டத்தில் 2 லட்சத்துக்கு மேற்பட்ட ஹெக்டேயர்களில் வேளாண்மை செய்திருக்கின்றார்கள்.  தற்போது அரசாங்கம் அரிசியை இறக்குமதி செய்வதன் ஊடாக ஒரு மாதத்திற்கு முன்னர் வழங்குவதற்கான கோரிக்கை செய்யப்பட்ட அரிசி இலங்கைக்கு நேற்றைய தினம்தான் வந்து இறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆனால் எமது பகுதி ஜனவரி பெப்ரவரி மாதத்தில் தான் நெல் அறுவடை செய்கின்ற காலம்.

இறக்குமதி செய்யப்படுகின்ற அரிசி தற்போது சந்தைக்கு வருமாறு இருந்தால் ஜனவரி 15ஆம் தேதி வரைக்கும் அனைத்து விற்பனை நிலையங்களுக்கும் அந்த அரிசி போய் சேரும். அந்த வேளையில் அரிசியின் விலை குறையும். அந்த சந்தர்ப்பத்தில் எமது விவசாயிகள் அறுவடை செய்யும் நெல்லின் விலை குறைவடையும். நெல்லின் விலை குறைவடையும் பகுதி பட்சத்தில் எமது விவசாயிகள் பாரிய நஷ்டத்தினை எதிர்கொள்வார்கள். வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு வழங்குவோம் என சொன்னார்கள். ஒரு ஹெக்டருக்கு ஒரு லட்சம் என்றார்கள். அந்த இழப்பீட்டுத் தொகையும் விவசாயிகள் பயிர் மீண்டும் பயிர் செய்து மூன்றாவது உரம் இடும் காலப்பகுதியில் தான் அந்த தொகை வழங்கப்படும் இச்சூழ்நிலையில்தான் தற்போது அரசாங்கத்தின் நிலைமை சென்று கொண்டிருக்கிறது.  ஆனால் இந்த கூட்டுறவு சங்கங்களை இன்னும் மென்மேலும் பலப்படுத்தினால் அரிசி பிரச்சனைகள் போன்ற விடயங்கள் எழும்போது எதிர்காலத்தில் மக்களுக்கு சிறந்த செயற்பாடுகளை முன்னெடுக்க முடியும் என மேலும் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் இதன்போது தெரிவித்தார்.

ஜனாதிபதி தமிழ் பொதுவேட்பாளர் அரியநேத்திரம் மீது மோசடி விசாரணைப் பணியகம் விசாரணை !

ஜனாதிபதி தமிழ் பொதுவேட்பாளர் அரியநேத்திரம் மீது மோசடி விசாரணைப் பணியகம் விசாரணை !

தேர்தல் ஒழுங்கு சட்டத்தின் விதிகளின்படி, வருமானம், செலவு விபரங்களை முறையாக சமர்ப்பிக்காத மூன்று ஜனாதிபதி வேட்பாளர்கள் மற்றும் ஜனாதிபதி வேட்பாளர்களை நியமித்த கட்சியின் செயலாளர்கள் உட்பட 10 பேருக்கு எதிராக கொழும்பு மோசடி விசாரணைப் பணியகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அனுப்பப்பட்ட முறைப்பாட்டுக்கமைய, பதில் பொலிஸ் மா அதிபரின் உத்தரவின் பேரில், கொழும்பு மோசடி விசாரணைப் பிரிவினர் இது தொடர்பான விசாரணையை முன்னெடுத்துள்ளனர். அதன்படி, பாக்கிய செல்வம் அரியநேத்திரம், பத்தரமுல்லை சீலரதன தேரர் மற்றும் சரத் கீர்திரத்தன முதலான ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மோசடி விசாரணைப் பணியகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

20 ஆண்டுகளாக ஊடகப் பணியாற்றிவரும் தமிழ்ச்செல்வன் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் எதிர்காலத்தின் மீதான அச்சுறுத்தலாகும் – கிளிநொச்சி ஊடக அமையம்

20 ஆண்டுகளாக ஊடகப் பணியாற்றிவரும் தமிழ்ச்செல்வன் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் எதிர்காலத்தின் மீதான அச்சுறுத்தலாகும் – கிளிநொச்சி ஊடக அமையம்

கிளிநொச்சியில் சுயாதீன  ஊடகவியலாளர் முருகையா தமிழ்ச்செல்வனை  இனந்தெரியாதோரால்  கடத்த முற்பட்டதையும்  தாக்கப்பட்டமையையும் கிளிநொச்சி ஊடக அமையம் கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. இது குறித்து அமையம் விடுத்துள்ள கண்டன அறிக்கையில், எமது ஊடக அமையத்தின் செயலாளரும் சுயாதீன ஊடகவியலாளருமான முருகையா தமிழ்ச்செல்வன், நேற்று மாலை தனது பணியை முடித்துக்கொண்டு வீடு திரும்பும் வழியில் வாகனத்தில் வந்தோர் அவரை இடைமறித்து தமது வாகனத்தில் பலவந்தமாக ஏற்ற முற்பட்டுள்ளனர். இதை எதிர்த்துத் தமிழ்ச்செல்வன்  போராடியபோது, கடத்தற்காரர்கள் தமிழ்ச்செல்வனைத் தாக்கி விட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். இதனையடுத்து தமிழ்ச்செல்வன்  கிளிநொச்சி மாவட்ட மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

அரசியல் குறைபாடுகள், மக்கள் எதிர்நோக்குகின்ற சமூகப் பிரச்சினைகள், நிர்வாக முறைகேடுகள், ஊழல், சுற்றுச் சூழல் சிதைப்பு, சட்டவிரோதச் செயற்பாடுகள், போதைப்பொருள்பாவனை போன்றவற்றுக்கு எதிராக மிகவும் துணிச்சலான முறையில் செய்திகளையும் செய்திக் கட்டுரைகளையும் அளித்து வரும் தமிழ்ச்செல்வன் மீதான தாக்குதலானது, அவருடைய பணிகளை முடக்குவதற்கான உள்நோக்கைக் கொண்டதாக சந்தேகம் கொள்ள வைக்கிறது. கடந்த 20 ஆண்டுகளாக ஊடகப் பணியாற்றிவரும் தமிழ்ச்செல்வன், யுத்த காலத்திலும் யுத்தத்திற்குப் பிந்திய காலத்திலும் துணிச்சலாவவும் நேர்மையாகவும் பணியாற்றியவர். இத்தகைய சிறப்பு மிக்க ஊடகவியலாளர் ஒருவரின் மீதான தாக்குதலானது,  மக்களுடைய நல் வாழ்வுக்கான எதிர்காலத்தின் மீதான அச்சுறுத்தலாகவே கொள்ளப்பட வேண்டும்.  ஊடகவிலாளர் மீதான இந்தக் கடத்தல் முயற்சியும் தாக்குதலும் ஊடகத்துறையின் சுயாதீனத்துக்கும் ஊடகவியலாளரின் சுதந்திரமான செயற்பாட்டுக்கும் விடப்பட்டுள்ள அச்சுறுத்தலாகும். நாடு புதிய பாதையில் பயணிக்கவுள்ளதாக  அறிவிக்கப்பட்டிருக்கும் சூழலில் இத்தகைய சம்பவங்கள் மக்களிடையே பதட்டத்தை உருவாக்குவதோடு ஊடகத்துறைக்கும் பாரிய சவாலை ஏற்படுத்துகிறது. இந்தச் சம்பவம் குறித்து உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்.

இதேபோன்று அண்மையில் முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் உள்ள ஊடகவியலாளர்களின் வீடுகள் எரிக்கப்பட்டு வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளனர். அவ்வாறு தாக்கப்பட்டமைக்கான சரியான தீர்வுகளை பெற்றுக் கொள்ள முடியாத நிலையில்  தொடர்வதால்தான் தொடர்ந்தும் இவ்வாறான தவறுகள் இடம்பெறுகின்றன. எனவே இனியும் கால தாமதம் செய்யாமல் உறுதிய முறையில் உரிய நடவடிக்கையை அரசும் காவல்துறையினரும் மேற்கொள்ள வேண்டும் எனவும் குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

இலங்கை – இந்திய கடற்றொழிலாளர்கள் இடையே இனிமேல் எந்தவிதமான பேச்சுவார்த்தைகளும் இடம்பெறாது. – இலங்கை கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

இலங்கை – இந்திய கடற்றொழிலாளர்கள் இடையே இனிமேல் எந்தவிதமான பேச்சுவார்த்தைகளும் இடம்பெறாது. – இலங்கை கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

அண்மையில் இலங்கை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் இந்திய விஜயத்தின் போது மீனவர்கள் தொடர்பான பிரச்னைகள் அதிக முக்கியத்துவத்தை பெற்றிருந்தது.  ஹைதராபாத் இல்லத்தில் இந்திய பிரதமர் மோடியுடன் ஜனாதிபதி அனுர குமார பேச்சுவார்த்தை நடத்தினார். அந்த பேச்சுவார்த்தையில், மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கும், அவர்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைக்கும் காரணியாக உள்ள எல்லை மீறிய மீன் பிடிப்புக்கான கைது பிரச்சனைகளுக்கு மனிதாபிமான முறையில் தீர்வு காண வேண்டியதன் அவசியம் குறித்து இருவரும் பேசினர். இதையடுத்து, இனி மீனவர்கள் விவகாரத்தில் எந்த ஒரு ஆக்ரோஷமான நடவடிக்கையோ அல்லது வன்முறையோ இல்லாமல் நடவடிக்கைகளை மேற்கொள்வது என்று முடிவு செய்யப்பட்டிருந்தது. குறித்த முடிவு வரவேற்கும் வகையில் அமைந்துள்ளதாக கூறி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.

எனினும் முன்னாள் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஜனாதிபதி அனுரகுமாரவின் மீனவர் பிரச்சனை அணுகுமுறை குறித்த தனது அதிருப்தியை வெளியிட்டிருந்தார். இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடும் இந்திய மீனவர்களைக் கைது மனிதாபிமான செய்யாதிருப்பதே அடிப்படையிலான அணுகுமுறையா ? என டக்ளஸ் தேவானந்தா கேள்வி எழுப்பியிருந்ததுடன் இது தொடர்பில் தொடர்ச்சியான எதிர்ப்பையும் அவர் வெளிப்படுத்தி வருகின்றார்.

இந்தநிலையில் யாழ்ப்பாணத்தில்  27.12.2024 நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், “இலங்கை – இந்திய கடற்றொழிலாளர்கள் இடையே இனிமேல் எந்தவிதமான பேச்சுவார்த்தைகளும் இடம்பெறாது.”  என தெரிவித்துள்ளார்.  அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், மீன்பிடி அமைச்சில் இருக்கின்ற அதிகாரிகளும் இந்தியாவில் இருக்கின்ற அதிகாரிகளுக்குமிடையே பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகின்றன. அந்த பேச்சுவார்த்தைகள் தொடரும். அதில் தொழில்நுட்ப ரீதியான பிரச்சனைகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் பேசப்படுகின்றது. மனிதாபிமான உதவிகளை வாங்குவதோ கொடுப்பதோ தொடர்பாக ஒரு பேச்சுவார்த்தைக்கு நாங்கள் செல்லப்போவதில்லை. இதுதான் எங்களது மனிதாபிமான நடவடிக்கை என நாங்கள் கூறுகின்றோம் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

ஒளிபரப்பு வாகனத்தின் மீது இஸ்ரேல் தாக்குதல் – பாலஸ்தீன ஊடகவியலாளர்கள் ஐவர் பலி!

ஒளிபரப்பு வாகனத்தின் மீது இஸ்ரேல் தாக்குதல் – பாலஸ்தீன ஊடகவியலாளர்கள் ஐவர் பலி

காசா நகரில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் பாலஸ்தீன ஊடகவியலாளர்கள் ஐவர் கொல்லப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் காசாவின் மத்தியப் பகுதியில் அமைந்துள்ள நுசிராத் அகதிகள் முகாமின் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியது.  இதில் அங்குள்ள அல்-அவ்தா மருத்துவமனையின் வெளியே நின்று கொண்டிருந்த பாலஸ்தீன ஊடகவியலாளர்களின் ஒளிபரப்பு வாகனம் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் ஊடகவியலாளர்கள் ஐவர் கொல்லப்பட்டனர். அவர்கள் ஐவரும் அப்பகுதியின் அல் குத்ஸ் எனும் ஊடகத்தைச் சார்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாத ஆரம்பத்தில் பாரிஸை தளமாகக்கொண்டு இயங்கும் எல்லைகளற்ற ஊடகவியாலளர்கள் அமைப்பு வெளியிட்ட தகவலின்படி காசா போர் ஆரம்பமாகிய 2023ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் தொடக்கம் 145க்கும் மேற்பட்ட பாலஸ்தின ஊடகவியலாளர்கள் இஸ்ரேலிய இராணுவத்தால் கொல்லப்பட்டுள்ளனர். இதேவேளை காசாவின் சுகாதார அமைச்சு வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையின்படி இதுவரையில் 45 ஆயிரத்து 399 பாலஸ்தீனியர்கள் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர் எனத் தெரியவருகின்றது.

மாமன் மத்திய வங்கியை கொள்ளையிட்டார் – வெளியே தலைமறைவு ! மருமகன் வரியில் மோசடி – உள்ளே சிறையில் !!

அரசாங்கத்தின் பொருளாதார இயந்திரம் ஆரம்பமாகிவிட்டது !

தங்களுடைய அரசாங்கத்தின் பொருளாதார இயந்திரம் இயங்க ஆரம்பித்து விட்டதாக தொழிலாளர் அமைச்சரும் பொருளியல் அபிவிருத்தி பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜெயந்த பெர்னான்டோ செய்தியாளர்களுக்குத் தெரிவித்துள்ளார். முப்பிரவு கடன் மீள்வரைபு நிறைவேற்றப்பட்டு விட்டது, சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான உதவித் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டு விட்டது, குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கான உதவித்திட்டங்களும் வழங்கப்பட ஆரம்பிக்கப்பட்டு விட்டது என அனில் ஜயந்த பெர்னாடோ தெரிவித்தார்.

மாமன் மத்திய வங்கியை கொள்ளையிட்டார் – வெளியே தலைமறைவு ! மருமகன் வரியில் மோசடி – உள்ளே சிறையில் !!

ரணிலுடைய ஆட்சிக்காலத்தில் மத்திய வங்கியில் பிணைமுறி மோசடி செய்த ரணிலின் நெருங்கிய நண்பரான அர்ஜூனா மகேந்திரன் நாட்டைவிட்டு வெளியேறி தலைமறைவாகி உள்ளார். அவருக்கு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருந்தது. தற்போது அவருடைய மருமகன் அர்ஜூனா அலோசியஸ், மென்டிஸ் சாராயக் கொம்பனியின் உரிமையாளர் கோடிக்கணக்கில் வரி மோசடி செய்தமைக்காக உள்ளே சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் நேற்று கொழும்பு பிரதான நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். அர்ஜூனா அலோசியஸின் தந்தையும் பிணைமுறி மோசடிக்குற்றச்சாட்டில் நேற்று நீதிமன்றத்தில் ஆஜரானார்.

வடமாகாண சுகாதாரப் பொறுப்பாளர்களிடம் திட்டங்கள் இல்லை: காய்ச்சலால் உயிரிழப்புகள் தொடருகிறது! எலிக்காய்ச்சல் தாக்கம் இன்னமும் தொடர்கிறது !

வடமாகாண சுகாதாரப் பொறுப்பாளர்களிடம் திட்டங்கள் இல்லை: காய்ச்சலால் உயிரிழப்புகள் தொடருகிறது! எலிக்காய்ச்சல் தாக்கம் இன்னமும் தொடர்கிறது !

எலிக்காய்ச்சலின் தாக்கம் கட்டுப்பாட்டுக்குள் உள்தாக யாழ் மாவட்ட சுகாதார பணிப்பாளர் ஆ கேதிஸ்வரன் தெரிவிக்கின்றார். ஆனால் மேலும் நால்வர் நேற்று எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு யாழ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஒன்றுக்குப் பின் ஒன்று முரணாண செய்திகள் வளிவருகின்றது. இதுவரை 9 நோயாளிகள் எலிக்காய்ச்சலால் மரணித்துள்ளனர், 234 பேர் இக்காய்ச்சல் தொற்றுக்கு இலக்காக உள்ளனர். இதைவிடவும் திடீரென வந்த காய்ச்சல்களால் அங்கொன்றும் இங்கொன்றுமாக சில மரணங்கள் சம்பவித்துள்ளது. இவை எழுந்தமான மரணங்களா? அல்லது இந்த மரணங்களிடையே ஏதும் தொடர்புகள் உள்ளதா என்பது உறுதியாகத் தெரியவரவில்லை.

இதற்கிடையே நேற்று கிளிநொச்சியில் நடந்த மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த வடமாகாண சுகாதாரப் பணிப்பாளர் தர்மசிறி பத்திரண தங்களிடம் வடமாகாணத்துக்கோ, யாழ் மாவட்டத்துக்கோ உரிய பிரதான திடடமிடல் இல்லையெனத் தெரிவித்தார். இதனைக் கேட்டு அதிர்ச்சியுற்ற கடல்தொழில் அமைச்சர் எப்படி இப்படியொரு திட்டமிடல் இல்லாமல் இயங்க முடியும் எனவும் கேள்வி எழுப்பினார். அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில் கடந்த காலங்களில் எவ்வாறு இயங்கினீர்களோ எமக்குத் தெரியாது ஆனால் இனிவரும் காலங்களில் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என அதிகாரிகளை எச்சரித்தார்.

மேலும் பாராளுமன்ற உறுப்பினராக சுகாதாரத் திட்டங்கள் தொடர்பில் தனக்கு மருத்துவமனைகளுக்குச் சென்று ஆவணங்களைக் பார்க்க அனுமதி வேண்டும் என்று கோரியிருந்தார் அர்ச்சுனா. அதற்குப் பதிலளித்த அமைச்சர் சந்திரசேகர், பாராளுமன்ற உறுப்பினராக நீங்கள் அவற்றைப் பார்ப்பதற்கு உங்களுக்கு சகல அனுமதியும் உள்ளது என்றும் ஆனால் போகும் இடங்களில் குழப்பம் விளைவிக்காமல் நடத்துகொள்ள வேண்டும் என்றும் நளினமாகச் சுட்டிக்காட்டினார். பா உ அர்ச்சுனா உட்பட சiபியில் இருந்தவர்கள் அனைவரும் வாய்விட்டுச் சிரித்தனர்.

கல்வியில் அரசியல் தலையீடு – வவுனியா நகர்ப்புற ஆசிரியர்களின் இடமாற்றங்களில் சலுகை !

கல்வியில் அரசியல் தலையீடு – வவுனியா நகர்ப்புற ஆசிரியர்களின் இடமாற்றங்களில் சலுகை !

வவுனியாவில் நகர்ப்புறத்தில் இருக்கும் ஆசிரியர்களுக்கு அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி இடமாற்றங்கள் வழங்கப்படுகின்றதாக தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் வவுனியா – செட்டிகுளத்தில் இடம்பெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போது குறிப்பிட்டுள்ளார்.

ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் மேலும் கருத்து தெரிவிக்கையில் ம.ஜெகதீஸ்வரன், செட்டிகுளம் பிரதேசத்தில் ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுகின்றது. நகர்ப்புற பாடசாலைகள் பலவற்றில் மேலதிகமாக பல ஆசிரியர்கள் உள்ளனர். ஏன் நகர்ப்புறப் பகுதியில் உள்ள ஆசிரியர்களை பின்தங்கிய பிரதேசத்திற்கு அனுப்ப முடியாமல் உள்ளது. செட்டிகுளம் பிரதேசத்தில் கடமையாற்றும் சில ஆசிரியர்கள் 8 வருடம் முடிந்தும் இடமாற்றம் வழங்கப்படாது உள்ளனர். ஆனால் நகர்ப்புறப் பாடசாலைகளில் குறிப்பிட்ட சில ஆசிரியர்கள் நகர்ப்புற பாடசாலைகளுக்கே சுழற்சி முறையில் இடமாற்றமாகி செல்கின்றனர். ஏன் அந்த ஆசிரியர்களை தூரப் பிரதேசங்களுக்கு அனுப்பக் கூடாது. தொடர்ச்சியாக தூரப் பிரதேசத்தில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஏன் விமோசனம் கொடுக்கக் கூடாது. இங்கு கூடுதலான அதிகாரிகள் நகர்ப்புறத்தில் இருக்கும் ஆசிரியர்களை காப்பாற்றி செல்வாக்கை பயன்படுத்தி இடமாற்றங்களை வழங்குகின்றனர். எதிர்வரும் காலங்களில் இது தொடர்பாக நாம் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டி வரும்.நாம் வடக்கு மாகாண ஆளுநருடனும், கல்வி அமைச்சின் செயலாளருடனும் பேசி இங்குள்ள ஆசிரியர் பறறாக்குறையை நிரப்ப முடியும்“ என தெரிவித்தார்.

இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும், வடக்கு மாகாண ஆளுநருக்கும் இடையிலான சந்திப்பு ஆளுநர் செயலகத்தில் 24.12.2024  இடம்பெற்ற சந்திப்பின் போது வடக்கு மாகாண ஆளுநர் ஆசிரிய இடமாற்றங்கள் தொடர்பான தனது அதிருப்தியை வெளியிட்டிருந்ததும் கவனிக்கத்தக்கது. குறித்த சந்திப்பில் வடக்கு மாகாணத்தில் ஆசிரிய வளப் பங்கீடு சரியான முறையில் நடைபெறவில்லை எனச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள், ஆசிரிய தொழிற்சங்கங்கள் மற்றும் கல்வி அமைச்சின் சகல அதிகாரிகளையும் இணைத்து அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் கலந்துரையாடல் நடத்தி இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார்.

 

 

அந்நியபுலனாய்வு அமைப்புக்களின் ஊடுருவலா ஆராய்கிறது இலங்கை !

அந்நியபுலனாய்வு அமைப்புக்களின் ஊடுருவலா ஆராய்கிறது இலங்கை

டிசம்பர் 26 இல் சிறிய ரக ஆளில்லா விமானமொன்றை திருகோணமலை கடலிலிருந்து கடற்படை மீட்டுள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த விமானப்படை ஊடகப் பேச்சாளர் குரூப் கப்டன் எரந்த கிகனகே இந்த விமானத்தை  திருகோணமலை கரையில் இருந்து சுமார் 35 கடல் மைல் தொலைவில் கடலில் அவதானித்த மீனவர்களே இத்தகவலை வழங்கியதாக கூறினார். மேலும் மீனவர்கள் தாமே தமது படகில் இணைத்துக் கொண்டு கடற்படையினரை வரவழைத்தாகவும் பின்னர் கடற்படையால் கரைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

மேலும் இவ் ஆளில்லா விமானம் 2020 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. 40 கிலோ எடையுடைய இவ் விமானத்தில் வெடிப்பொருட்கள் எதுவும் கண்டுப்பிடிக்கவில்லை என ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளும் வகையில் விசேட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக விமானப்படை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த விமானம் எங்கிருந்து ஏன் இலங்கையின் முக்கியமான திருகோணமலை துறைமுகம் அமைந்துள்ள பகுதிக்கு வந்தது என்பது தொடர்பில் பல மர்மங்கள் காணப்படுவதாகவும் அவதானிகள் எச்சரிக்கின்றனர். இது ஒருவேளை அந்நிய நாட்டு புலனாய்வு அமைப்புக்களின் சதியா? அல்லது யாருக்கோ வைத்த இலக்கில் இலங்கைக்கு மாட்டிக்கொண்டதா? என்பவற்றுக்கான பதில்கள் விசாரணை முடிவில் கிடைக்கலாம். பொதுவாக ஆளில்லா விமானங்கள் வேவு நடவடிக்கைகளுக்கும் துல்லியமாக இலக்குகளை தாக்கவும் யுத்த களங்களில் பயன்படுத்தப்படுகின்றன.

 

13வது திருத்தம் ‘அப்பிட எப்பா’, மாகாணசபை ‘அப்பிட எப்பா’, இந்தியா ‘கமக்நா’ ரில்வின் அல்ல கஜா !

13வது திருத்தம் ‘அப்பிட எப்பா’, மாகாணசபை ‘அப்பிட எப்பா’, இந்தியா ‘கமக்நா’ ரில்வின் அல்ல கஜா !

13வது திருத்தச் சட்டமும் வேண்டாம் மாகாண சபையும் வேண்டாம் இவை இனப்பிரச்சினைத் தீர்வுக்கான தொடக்கப் புள்ளியாகக் கூட இருக்க முடியாது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் பொன்னம்பலம் கஜேந்திரகுமார் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அவர் ஊடகவியலாளருடைய கருத்துக்கு இட்ட பதில் கருத்தில், இந்தியா இவைபற்றிப் பேசாது ‘கம்மென்று’ இருப்பதையிட்டு தனக்குப் பெருமகிழ்ச்சியென்றும் குறிப்பிட்டுள்ளார். ஒரு பக்கம் இந்தியாவின் முகவர்களான பா.உ எஸ் சிறிதரனுடனும் பா உ செல்வம் அடைக்கலநாதனுடனும் கூட்டுச் சேர்ந்து அரசியல் தீர்வை முன்வைக்கப் போகிறோம் என்று பேச்சுவாரத்தை நடந்தது. அதற்கு சுமந்திரன் ‘கட்சியின் அரசியல் யாப்பு சீர்திருத்த நடவடிக்கைகளுக்குப் புறம்பாக செயற்படுபவர்கள் கட்சியிலிருந்து வெளியேற்றப்படுவார்கள்’ என்று இறுக்கிய ஆப்போடு பொன்னம்பலம் கஜேந்திரகுமார் மீண்டும் முருங்கைமரத்தில் ஏறிக்கொண்டார். பெரும்பான்மையான தமிழ் மக்கள் 13வது திருத்தத்தையும் மாகாணசபையையும் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதைத் தெளிவாகக் குறிப்பிட்ட பொன்னம்பலம் கஜேந்திரகுமார், தமிழ் மக்கள் கௌசல்யாவுக்கு கொடுத்த அங்கீகாரத்தைக் கூட தனக்கு அளிக்கவில்லை என்பதை உணரமறுக்கின்றார். 13வது திருத்தத்தையும் மாகாணசபையையும் ஏற்றுக்கொள்ளாத தமிழ் தேசிய மக்கள் முன்னணி 2025 முற்பகுதியில் நடைபெறும் உள்ளுராட்சித் தேர்தலில் அதனைத் தொடர்ந்து இடம்பெறவுள்ள மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

தமிழ் தேசியக் கட்சிகள், இந்திய அரசு ஜனாதிபதி அனுரவுக்கு அதீத முக்கியத்துவம் அளிக்கப்பட்டதில் அதிருப்தியடைந்துள்ளனர். 13வது திருத்தத்தைப் பற்றியே மோடி பேசவில்லை என்பதில் தமிழ் தேசியவாதக் கட்சிகள் சற்று மனமுடைந்துவிட்டன. பொன்னம்பலம் கஜேந்திரகுமாருக்கு முற்றிலும் முரணாக, 13வது திருத்தம் மாகாணசபை பற்றி கருத்து வெளியிட்ட வடக்கு – கிழக்கு இணைந்த மாகாணசபையின் முன்னாள் முதலமைச்சர் வரதராஜப் பெருமாள், தமிழகக் கட்சிகள் 13வது திருத்தத்தை அழுல்படுத்த பிரதமர் மோடிக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கோரியிருக்கின்றார். பொன்னம்பலம் கஜேந்திரகுமார் அமெரிக்க முகவராகவும் வரதராஜப் பெருமாள் இந்திய முகவராகவும் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டுள்ளனர்.

“தேசிய மக்கள் சக்தி இலங்கையின் அனைத்து மக்களதும் துணையோடு, மிகப்பெரும்பான்மைப் பலத்தோடு, ஆட்சி அமைத்துள்ளது எங்களுடைய ஆட்சியை கவிழக்கலாம் என கனவிலும் எண்ண வேண்டாம்” என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்து இருக்கின்றார். ஜனாதிபதி அனுர ஒருபடி மேலே சென்று, “மக்களுக்கான ஆட்சி அடுத்த பத்தாண்டுகளுக்குத் தொடரும்” எனத் தெரிவித்திருக்கின்றார். மேலும் “இந்தியாவில், ஜனாதிபதி அனுரவுக்கு எதிரான எவ்வித ஆர்ப்பாட்டங்களும் எழவில்லை. தவிர்க்க முடியாமல் ஜனாதிபதி அனுரா இலங்கையின் அனைத்து மக்களினதும் பிரதிநிதி என்பதை இந்தியா ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலையை, தேசிய மக்கள் சக்தி உருவாக்கி உள்ளது. எங்களுடைய சக இனத்தவர்களை எப்படி நடத்த வேண்டும் என்று இந்தியா, இலங்கைக்கு கற்பிக்க வேண்டிய அவசியமில்லை” என்பதை தேசிய மக்கள் சகத்தி தெளிவாக உணர்த்தியுள்ளது என ஆய்வாளர் மயில்வாகனம் சூரியசேகரம் தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.