13வது திருத்தம் ‘அப்பிட எப்பா’, மாகாணசபை ‘அப்பிட எப்பா’, இந்தியா ‘கமக்நா’ ரில்வின் அல்ல கஜா !

13வது திருத்தம் ‘அப்பிட எப்பா’, மாகாணசபை ‘அப்பிட எப்பா’, இந்தியா ‘கமக்நா’ ரில்வின் அல்ல கஜா !

13வது திருத்தச் சட்டமும் வேண்டாம் மாகாண சபையும் வேண்டாம் இவை இனப்பிரச்சினைத் தீர்வுக்கான தொடக்கப் புள்ளியாகக் கூட இருக்க முடியாது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் பொன்னம்பலம் கஜேந்திரகுமார் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அவர் ஊடகவியலாளருடைய கருத்துக்கு இட்ட பதில் கருத்தில், இந்தியா இவைபற்றிப் பேசாது ‘கம்மென்று’ இருப்பதையிட்டு தனக்குப் பெருமகிழ்ச்சியென்றும் குறிப்பிட்டுள்ளார். ஒரு பக்கம் இந்தியாவின் முகவர்களான பா.உ எஸ் சிறிதரனுடனும் பா உ செல்வம் அடைக்கலநாதனுடனும் கூட்டுச் சேர்ந்து அரசியல் தீர்வை முன்வைக்கப் போகிறோம் என்று பேச்சுவாரத்தை நடந்தது. அதற்கு சுமந்திரன் ‘கட்சியின் அரசியல் யாப்பு சீர்திருத்த நடவடிக்கைகளுக்குப் புறம்பாக செயற்படுபவர்கள் கட்சியிலிருந்து வெளியேற்றப்படுவார்கள்’ என்று இறுக்கிய ஆப்போடு பொன்னம்பலம் கஜேந்திரகுமார் மீண்டும் முருங்கைமரத்தில் ஏறிக்கொண்டார். பெரும்பான்மையான தமிழ் மக்கள் 13வது திருத்தத்தையும் மாகாணசபையையும் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதைத் தெளிவாகக் குறிப்பிட்ட பொன்னம்பலம் கஜேந்திரகுமார், தமிழ் மக்கள் கௌசல்யாவுக்கு கொடுத்த அங்கீகாரத்தைக் கூட தனக்கு அளிக்கவில்லை என்பதை உணரமறுக்கின்றார். 13வது திருத்தத்தையும் மாகாணசபையையும் ஏற்றுக்கொள்ளாத தமிழ் தேசிய மக்கள் முன்னணி 2025 முற்பகுதியில் நடைபெறும் உள்ளுராட்சித் தேர்தலில் அதனைத் தொடர்ந்து இடம்பெறவுள்ள மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

தமிழ் தேசியக் கட்சிகள், இந்திய அரசு ஜனாதிபதி அனுரவுக்கு அதீத முக்கியத்துவம் அளிக்கப்பட்டதில் அதிருப்தியடைந்துள்ளனர். 13வது திருத்தத்தைப் பற்றியே மோடி பேசவில்லை என்பதில் தமிழ் தேசியவாதக் கட்சிகள் சற்று மனமுடைந்துவிட்டன. பொன்னம்பலம் கஜேந்திரகுமாருக்கு முற்றிலும் முரணாக, 13வது திருத்தம் மாகாணசபை பற்றி கருத்து வெளியிட்ட வடக்கு – கிழக்கு இணைந்த மாகாணசபையின் முன்னாள் முதலமைச்சர் வரதராஜப் பெருமாள், தமிழகக் கட்சிகள் 13வது திருத்தத்தை அழுல்படுத்த பிரதமர் மோடிக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கோரியிருக்கின்றார். பொன்னம்பலம் கஜேந்திரகுமார் அமெரிக்க முகவராகவும் வரதராஜப் பெருமாள் இந்திய முகவராகவும் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டுள்ளனர்.

“தேசிய மக்கள் சக்தி இலங்கையின் அனைத்து மக்களதும் துணையோடு, மிகப்பெரும்பான்மைப் பலத்தோடு, ஆட்சி அமைத்துள்ளது எங்களுடைய ஆட்சியை கவிழக்கலாம் என கனவிலும் எண்ண வேண்டாம்” என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்து இருக்கின்றார். ஜனாதிபதி அனுர ஒருபடி மேலே சென்று, “மக்களுக்கான ஆட்சி அடுத்த பத்தாண்டுகளுக்குத் தொடரும்” எனத் தெரிவித்திருக்கின்றார். மேலும் “இந்தியாவில், ஜனாதிபதி அனுரவுக்கு எதிரான எவ்வித ஆர்ப்பாட்டங்களும் எழவில்லை. தவிர்க்க முடியாமல் ஜனாதிபதி அனுரா இலங்கையின் அனைத்து மக்களினதும் பிரதிநிதி என்பதை இந்தியா ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலையை, தேசிய மக்கள் சக்தி உருவாக்கி உள்ளது. எங்களுடைய சக இனத்தவர்களை எப்படி நடத்த வேண்டும் என்று இந்தியா, இலங்கைக்கு கற்பிக்க வேண்டிய அவசியமில்லை” என்பதை தேசிய மக்கள் சகத்தி தெளிவாக உணர்த்தியுள்ளது என ஆய்வாளர் மயில்வாகனம் சூரியசேகரம் தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *