மலையகத் தமிழர்களை அவமானப்படுத்திய யாழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர்களும் யாழ் நண்பர்கள் அமைபும் இந்திய தூதரகமும்!!
மலையகத் தமிழ் துறைசார் வல்லுநர் மன்றம் கண்டன அறிக்கையை இந்தியத் தூதரகத்திற்கு அனுப்பி வைத்துள்ளது!!!
நாளை மார்ச் 19 இல் மலையகத் தமிழர்கள் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட நிகழ்வை நினைவுகொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட வேண்டிய நிகழ்வு தொடர்பிலேயே இச்சர்ச்சை எழுந்தள்ளது. இந்நிகழ்வு தொடர்பாக அனுப்பி வைக்கப்பட்டிருந்த அழைப்பிதழ் எழுத்துப் பிழைகள், பொருட் பிழைகளுடன் மலையக மக்களின் அடையாளத்தையே கேள்விக்குள்ளாக்கி அவர்களை ‘இந்தியதமிழர்கள்’ என அழைப்பிதழ் அடையாளப்படுத்தி உள்ளது. இதனை மலையகத் தமிழ் துறைசார் வல்லுநர் மன்றம் கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்தியத் தூதரகத்தின் அணுசரணையுடன் நடைபெறும் இந்நிகழ்வை யாழ் நண்பர்கள் என்கின்றவொரு அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது. யாழ் நண்பர்கள் என்ற பெயரில் இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் அணுசரணையோடு இந்நிகழ்வை ஏற்பாடு செய்தவரகள்: கலாநிதி சிதம்பரம்போமன், கே கோபாலகிருஸ்ணன், சு கமலதாஸ், கலாநிதி கந்தையா சிவராஜா, இரா ரட்ணேஸ்வரன், யாழ் எப் எம் சமனோகரன்.
200 ஆண்டுகளுக்கு முன்பு மலையகத் தமிழர்கள் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட நிகழ்வை ‘நினைவேந்தல் உற்சவம்’ என அழைப்பிதழ் குறிப்பிடப்பட்டிருந்ததையும் மலையகத் தமிழ் துறைசார் வல்லுநர் மன்றம் கடுமையாகக் கண்டித்து இருந்து. ‘நினைவேந்தல்’, ‘உற்சவம்’ போன்ற சொற்களின் விளக்கத்தைக்கூட புரிந்துகொள்ளாமல் ‘யாழ் நண்பர்கள்’ என்ற அமைப்பு அழைப்பிதழைத் தயாரித்துள்ளது. இதனைச் சுட்டிக்காட்டிய மலையகத் தமிழ் துறைசார் வல்லுநர் மன்றம், 200 ஆண்டுகளுக்கு முன் தங்கள் உயிர்களைத் தியாகம் செய்தவர்களை நினைவு கூருவது எப்படி உற்சவம் கொண்டாட்டமாகும் என்று கேள்வி எழுப்பியதுடன் இது 200 வருடங்களுக்கு முன் உயிரிழந்த மலையக மக்களை மலையகத் தமிழர்களையும் அவர்களது பரம்பரையையும் அவமானப்படுத்தும் செயல் எனக் கண்டித்துள்ளனர்.
200 ஆண்டுகளுக்கு முன் மலையகத் தமிழர்கள் பிரித்தானியர்களால் இலங்கைக்கு அவர்களது விருப்பத்துக்கு மாறாக; அவர்களுக்கு பொய்வாக்குறுதிகள் அளித்து; அவர்களை அவர்களது சொந்தபந்தங்களிடமிருந்து நிரந்தரமாகப் பிரித்து; அடிமைகளாகக் கொண்டுவந்த நிகழ்வு வரலாற்றின் மிக மோசன நிகழ்வு. அன்று முதல் இன்று வரை அந்த மலையக மக்கள் தேயிலைக் கொழுந்துகளை தங்கள் முதுகில் சுமந்து தங்கள் முதகெலும்பை முறித்து இலங்கையின் பொருளாதாரத்தின் முதகெலும்பாக இருந்தவர்கள். அவர்களுடைய இந்த வலி மிகுந்த வரலாற்றை அது பற்றிய எவ்வித உணர்வும் பொறுப்புமற்ற மனிதர்கள் வெறும் சம்பிர்தாயத்திற்காக செய்ய முற்பட்டதன் விளைவுதான் இது.
இந்நிகழ்வு வலி மிகுந்த மலையகத் தமிழர்களின் 200 ஆண்டுகால வரலாற்றை நினைவிற்கொள்ளும் நிகழ்வு. இது நினைவேந்தல் என்ற உயிர்த் தியாகம் அல்ல. இது உற்சவமோ கொண்டாட்டமோ அல்ல.
மலையகத் தமிழ் துறைசார் வல்லுநர் மன்றத்தின் கண்டன அறிக்கை பிரச்சினையின் ஆழத்தை மிகத் தெளிவாகச் சுட்டிக்காட்டியுள்ளது. “எங்களது வேர்கள் இந்தியாவின் தமிழ்நாட்டுடன் பிணைந்துள்ளதை யாரும் மறுக்க முடியாது; பிரித்தானியர்கள் தங்கள் வசதிக்காக இந்தியத் தமிழர் என்று குறிப்பிட்டதை, சனத்தொகைக் கணக்கெடுப்பின் போது உத்தியோகபூர்வமாகவும் பயன்படுத்துகின்றார்கள். ஆனால் அம்மக்கள் தங்களை ‘மலையகத் தமிழர்கள்’ என்றே அழைக்கின்றனர். அவ்வாறே அவர்கள் அழைக்கப்பட வேண்டும்” என்றும் மலையகத் தமிழ் துறைசார் வல்லுநர் மன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
அவ்வறிக்கையில் “ஈழத் தமிழர்கள் என்ற பதம் சனத்தொகைக் கணக்கெடுப்பில் இல்லை. அதில் ஸ்ரீலங்கன் தமிழர் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் தங்ளை ஈழத் தமிழர்கள் என்றே அழைக்க விரும்புகின்றனர். அது அவர்களுடைய உரிமை” என்பதையும் மலையகத் தமிழ் துறைசார் வல்லுநர் மன்றம் சுட்டிக்காட்டத் தவறவில்லை. இவ்வறிக்கையில் மலையகத் தமிழ் துறைசார் வல்லுநர் மன்றம் சார்பில் பின்வருவோர் கையெழுத்திட்டுள்ளனர்: கலாநிதி எஸ் கெ நவரட்ணராஜா (Senior Lecturer, Engineering, University of Peradeniya), ரி ஜெயானந்தராஜா (Attorney-at-law, Colombo), பி சுந்தரசன்; (Pharmacist, Hong Kong) எஸ் விஜயகுமார் (Attorney-at-law, Ratnapura).
இந்நிகழ்வை சிறுபிள்ளைத்தனமாக ஏற்பாடு செய்த மொழியும் வரலாறும் தெரியாத யாழ் நண்பர்கள் அமைப்புப் பற்றிக் கருத்துத் தெரிவித்த லண்டனில் வாழும் அரசியல் விமர்சகரும் ஈரோஸ் அமைப்பின் உறுப்பினரான ஒருவர்: யாழ் நண்பர்கள் அமைப்பில் உள்ளவர்கள் தமிழ் தெரியாத பண்டிதர்களும் வரலாறு தெரியாத புரோக்கர்களும்” என்று கிண்டலாகக் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வுக் கூட்டத்தில் யாழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர்கள் பொன் பாலசுந்தரம்பிள்ளை, ந சண்முகலிங்கன் ஆகியோரும் உரையாற்ற உள்ளனர். அடுத்தடுத்து வந்த இவர்களுடைய நிர்வாகத்தின் கீழேயே யாழ் பல்கலைக்கழகத்தின் தரம் மிகத் தாழ்ந்து அதன் கடைநிலையை எட்டியதுடன் குறிப்பாக கலைத்துறை விரிவுரையாளர்களின் அந்தப்புரமாக்கப்பட்டது. இவர்கள் விட்டுச்சென்ற துச்சாதனர்கள் இன்றும் கலைத்துறையில் விரிவுரையாளர்களாகவும் பேராசிரியர்களாகவும் உள்ளனர். யாழ் சமூகம் சார்ந்த இத்துணை வேந்தர்களோ விரிவுரையாளர்களோ பேராசிரியர்களோ இதுவரை குறிப்பிடத்தக்க ஆய்வுகள் எதனையும் மேற்கொள்ளவில்லை. அது பற்றிய அறிவும் சிந்தனையும் அவர்களிடம் இல்லை. இவர்கள் மலையக மக்களின் வலி மிகுந்த வரலாற்றை ‘நினைவேந்தல் உற்சவம்’ என்று குறிப்பிட்டதில் எந்த ஆச்சரியமும் இல்லை. ஏனெனில் இவர்கள் தமிழ் தெரியாத பண்டிதர்களும் வரலாறு தெரியாத புரொக்கர்களும் தான். தமிழர்களின் கல்வி நிலை இவ்வளவுக் வீழ்ந்ததற்குக் காரணம் இவர்கள் உருவாக்கிய பெரும்பாலும் சமூக அக்கறையற்ற இரண்டாம்தர பட்டதாரிகள் தான் வடக்கு கிழக்கின் கல்விக் கட்டமைப்பிலும் ஏனைய கட்டமைப்புகளிலும் உள்ளதுதான்.
இவர்களுடைய இச்செயல் யாழ் சமூகம் பற்றி மட்டுமல்ல ஈழத் தமிழர்கள் பற்றியும் தவறான புரிதலை ஏனைய சமூகங்கள் மத்தியில் விதைக்கின்றது.
தங்களுடைய அரசியல் அபிலாசைகளை மற்றவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கின்ற ஈழத்தமிழ் சமூகம் ஏனைய சமூகங்களின் அரசியல் அபிலாஷைகளையும் பொறுப்புடன் செவிமடுத்து பொறுப்புடன் செயற்பட வேண்டும். வடமாகாணத்தில் தற்போது கணிசமான நாற்பது வீதமான மலையகத் தமிழர்கள் வாழ்கின்றனர். ஆனால் வட மாகாணத்தில் இன்னமும் அவர்களுடைய அரசியல் பிரதிநிதித்துவம் என்பது பூஜ்ஜிமாகவே உள்ளது. இந்திய அரசுக்கோ இந்திய தூரகத்திற்கோ தங்களுடைய நாட்டில் வாழும் மக்கள் மீது என்ன கரிசனை உள்ளது என்பதை யாரும் விளக்கத் தேவையில்லை. ஆகவே அவர்கள் மலையகத் தமிழர்களை இந்தியத் தமிழர்கள் என்று அழைக்க முற்படுவது ஒன்றும் அம்மக்கள் மீது உள்ள கரிசனையினால் அல்ல. சந்தர்ப்பம் ஏற்பட்டால் ஈழத் தமிழர்களை பயன்படுத்தியது போல் மலையகத் தமிழர்களையும் தன்னுடைய முதலாளித்துவ நலன்களைப்பாதுகாப்பதற்கு பயன்படுத்தவே.
இலங்கையில் இந்திய ஆக்கிரமிப்பு மிகத் தீவிரமாகி வருகின்றது. அதற்கான புரோக்கர்களையும் அவர்கள் உருவாக்கி வருகின்றனர். ஈழத்தமிழர், மலையகத் தமிழர், முஸ்லீம்கள், சிங்களவர்கள் நாம் அனைவருமே இலங்கை மக்களாக இருப்பது மட்டுமே எம் அனைவருக்கும் பாதுகாப்பு.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து ஓராண்டை கடந்துள்ளது. ரஷ்யா ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை உக்ரைன் தெரிவித்து வருகிறது. குறிப்பாக உக்ரைன் நாட்டு குழந்தைகளை ரஷ்ய ஜனாதிபதி புடின் சட்டவிரோதமாக நாடு கடத்தியதாக புதிய புகார்கள் எழுந்தன.
இந்த புகார் குறித்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் விசாரணை நடத்தியது. இந்நிலையில், போர்க் குற்றத்தைப் புரிந்ததாக கூறி ரஷ்யா ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு கைது வாரண்ட் பிறப்பித்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புடினின் கைது உத்தரவுக்கு உலக தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், புடினுக்கு எதிரான கைது பிடிவாரண்ட் நியாயமானது தான் என்று கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து பைடன் கூறுகையில், ” உக்ரேனிய குழந்தைகளை நாடு கடத்தியதற்காக போர்க்குற்றம் செய்ததாக ரஷ்யா ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது நியாயமானது. இந்த நடவடிக்கை மிகவும் வலுவான கருத்தை உருவாக்குகிறது” என்று குறிப்பிட்டார்.
திருவள்ளுவருக்கு பட்டையடித்து காவி போட்டு அவமானப்படுத்தும் உரிமையை யாழ் மாநகரசபைக்கு யார் கொடுத்தது? என்ற கேள்வி சுயசிந்தனையுடைய எவருக்கும் எழுவதைத் தவிர்க்க முடியாது. திருவள்ளுவர் என்றவுடன் இடதுகையில் ஓலைச்சுவடியும் வலதுகையில் எழுத்தானியுமாக முடிந்த சடையும் தாடியுடனும் வெள்ளைத்துணி போர்த்திய ஒரு மேலங்கியுடன் சப்பாணி கட்டி அமர்ந்திருக்கும் ஒரு நேரிய பார்வை கொண்ட தோற்றமே எம் கண்முன் வந்து நிற்கும். திருவள்ளுவர் என்று கூகுலில் தேடினாலும் அவ்வாறான ஒரு தோற்றத்தையே காண்பீர்கள்.
ஆனால் யாழ்ப்பாணத்தை அந்தப்புரமாக்கிக் கொண்டிருக்கும் ஹொட்டல் உரிமையாளர்களும் மோடியின் மோமயம் பருகி மயங்கிக் கிடப்பவர்களும் இணைந்து யாழ்ப்பாணத்தில் வள்ளுவர் சிலையைத் திறந்து வள்ளுவத்தையே சிதைத்துள்ளனர். ஆறுமுகநாவலருக்கும் வள்ளுவருக்கும் வித்தியாசம் புரியாமல் சிலையொன்றைத் திறந்து வள்ளுவனை கேவலப்படுத்தி உள்ளனர்.
உலகப் பொதுமறை என அழைக்கப்படக்கூடிய திருக்குறளை திருவள்ளுவர் எழுதியிருந்தார். திருக்குறள் தமிழ் மொழியின் மிக முக்கியமான ஒப்பற்ற பொக்கிஷம் ஆகும். அதில் இருக்கக்கூடிய தத்துவ கருத்துக்கள் மற்றும் மனித வாழ்க்கைக்கு தேவையான விடயங்கள் ஆகியவற்றினால் திருவள்ளுவர் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகின்ற ஒரு சூழல் உருவாகியுள்ளது. திருக்குறள் ஒரு தமிழ் நூல் என்பதால் திருவள்ளுவர் ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தினதும் அடையாளமாக கருதப்படுகின்றார். “1330 பாடல்களைக் கொண்டுள்ள திருக்குறளில் எந்த ஒரு இடத்திலும் தனித்த ஒரு இனம் சார்ந்தோ – மதம் சார்ந்தோ – ஒரு இனக் குழுமம் சார்ந்தோ – சாதி சார்ந்தோ – எந்த குறிப்புகளும் இல்லை” என்பதே திருக்குறள் இன்று உலகப் பொதுமறை என கொண்டாடப்படுவதற்கான மிக முக்கியமான காரணமாகும்.
இப்படியாக சிறப்பு கொண்ட திருவள்ளுவரின் சிலை இன்று காவி அடிக்கப்பட்ட நிலையில் யாழ்ப்பாணத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. மூன்று பட்டையுடன் ஒரு விதமான காவி வர்ணத்துடனான ஆடையை அணிந்து கொண்டு காட்சி கொடுத்துக் கொண்டிருக்கிறார் திருவள்ளுவர். இந்த நிலை இன்னும் தீவிரம் அடையப் போகின்றது என்பது ஆக கவலையான விடயம். இதே நிலை தொடரும் பட்சத்தில் இந்தியாவில் இந்துத்துவாவாதிகள் கோமியம் என மாட்டு மூத்திரத்தை குடிப்பது போல இலங்கை தமிழர்களும் தங்களை இந்துத்துவாவாதிகள் என – இந்துக்கள் என நிரூபிப்பதற்காக மாட்டு மூத்திரத்தை குடிக்க வேண்டிய ஒரு சூழல் ஏற்பட்டாலும் ஏற்படலாம்.
இந்தியாவில் மிகத்தீவிரத்தன்மையை எட்டியுள்ள இந்துத்துவாவாதம் தமிழ்நாட்டில் மிக வேகமாகவும் – மிக ஆழமாகவும் ஊடுருவியுள்ள நிலையில் அதனுடைய தாக்கம் இன்று இலங்கையையும் குறிப்பாக இலங்கையின் தமிழர் பகுதியையும் பற்றி பிடிக்க ஆரம்பித்துள்ளது. முக்கியமாக இலங்கையில் இந்துத்துவா கருத்துக்களை காவிச் செல்வோரில் பெரும்பாலானோர் தமிழ் தேசியவாதிகளாக காணப்படுவது மிகப்பெரிய அபத்தமாகியும் உள்ளது. அதாவது இலங்கையில் இந்துத்துவா செல்வாக்கை ஏற்படுத்துவதன் மூலம் இந்தியாவுக்கு சார்பான ஒரு நிலைப்பாட்டில் பயணித்து இலங்கை தமிழர்களுக்கான தீர்வுகளை பெற்றுக் கொடுக்கப் போகிறோம் என்பது போன்றதான பாணியிலும் – தமிழர் உரிமைகளை பாதுகாப்பதற்கு இந்து சமயம் ஒன்றை ஒரே தீர்வு எனவும் இந்த கண்மூடித்தனமான தேசியவாதிகளும் – இந்துத்துவாவாதிகள் பகற் கனவு கண்டு கொண்டிருக்கிறார்கள்.
இந்தியாவின் பாரதிய ஜனதா கட்சியின் அதீத எழுச்சி எவ்வாறு தமிழ்நாட்டை பாதித்து தமிழரின் வரலாற்றை காவி மயப்படுத்திக் கொண்டிருக்கின்றதோ அதே நிலை இலங்கையிலும் குறிப்பாக தமிழர் பகுதிகளிலும் ஏற்பட்டுள்ளது. இதன் நீட்சியாகவே அண்மையில் பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாட்டு தலைவரான அண்ணாமலை அவர்களின் இலங்கை வருகையை குறிப்பிட முடியும். இன்று மட்டுமல்ல பிரித்தானியர் இலங்கையை விட்டு சென்ற காலம் தொடங்கி இன்று வரை இலங்கையை பகடை காயாக பயன்படுத்தி வரும் இந்தியாவின் அரசாங்கங்கள் தன்னுடைய சுய விருப்பு வெறுப்புகளுக்காவும் – தென்னாசியாவில் இந்தியாவின் ஏகாதிபத்திய வாத வளர்ச்சிக்காகவும் பல செயல்பாடுகளை மேற்கொண்டு வந்திருக்கின்றன. அதன் ஒரு கட்டமாகவே இலங்கை தமிழர்களை தன்னுடைய ஒரு துருப்புச் சீட்டாக இந்தியாவில் பதவியேற்ற அரசாங்கங்கள் பயன்படுத்தி வந்திருக்கின்றன. இது தெரிந்திருந்தும் கூட இலங்கையின் தமிழ் தேசியம் பேசிய தலைவர்கள் இந்தியா மட்டுமே இலங்கை தமிழர்களை பாதுகாக்கும் என்கின்ற நிலையில் மடிப்பிச்சை கொண்டிருக்கிறார்கள். இதன் ஒரு புதிய வடிவமே இலங்கையில் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் இந்துத்துவாவாதமாகும்.
இந்த இந்துத்துவவாதிகள் இலங்கை தமிழர்களுக்கு இடையே மதரீதியான சாதிய ரீதியான முரண்பாடுகளைத் தூண்டிவிடுகின்றது. இலங்கையில் இதுவரை காலமும் காணப்பட்டு வரும் இனம் சார்ந்த முரண்பாட்டை மதம் சார்ந்து மாற்ற முற்பட்டு கொண்டிருக்கிறார்கள் என்பதை தெளிவான உண்மை. இந்தியாவில் எவ்வாறு இந்துத்துவா கட்சிகள் இஸ்லாமிய மதத்துக்கு எதிரான கருத்துக்களை விதைத்து தொடர்ச்சியாக மதக்கலவரங்களை மேற்கொண்டு அதனூடாக அரசியல் லாபமிட்டுக் கொண்டிருக்கின்றனரோ அதே வடிவம் இலங்கையின் தமிழர் பகுதிகளிலும் இன்று உருவாக்கப்பட்டு கொண்டிருக்கிறது. அண்மையில் திருக்கேதீஸ்வரம் பகுதியில் ஏற்பட்ட கிறிஸ்தவர்களுக்கும் இந்து சமயத்தவர்களுக்கும் இடையிலான முரண்பாடு கூட இதனுடைய ஒரு தொடர்ச்சியே.
இது மட்டுமல்ல இலங்கையில் தமிழர் வாழும் பல பகுதிகளிலும் இன்று இரவோடு இரவாக முளைத்து கொண்டிருக்கும் சிவலிங்கங்கள் கூட இந்த இந்துத்துவாவாதிகளினுடைய செயல்பாடுகளே. ஏற்கனவே 30 வருடங்கள் சிங்களவர்களுடனான இனப்போராக முடிவடைந்துள்ள நிலையில் இன்று தமிழர் என்கின்ற இனத்துக்குள்ளேயே மத போர் ஒன்றை இந்த இந்துத்துவாவாதிகள் உருவாக்க முற்படுகின்றனர்.
குறிப்பாக நேற்று வெளியிடப்பட்டிருந்த அறிக்கை ஒன்றில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மட்டுமே கிட்டத்தட்ட 2000 வரையிலான கர்ப்பிணிப் பெண்கள் வறுமைக் கோட்டுக்குள் வசிப்பதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதுபோல் பிறந்த 50 நாட்களேயான ஒரு குழந்தை மந்த போசணை நிமித்தம் உயிரிழந்துள்ளது. அதுபோல அண்மைய காலத்தில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக பாடசாலை உபகரணங்களை கொள்வனவு செய்ய முடியாது தவிக்கின்ற பின்தங்கிய கிராமங்களில் வசிக்கும் நூற்றுக்கணக்கான பாடசாலை மாணவர்கள் பாடசாலை கல்வியை கைவிடும் ஒரு துர்பாக்கிய சூழல் ஏற்பட்டுள்ளது. இவையும் இலங்கையின் யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற – நாளாந்த செய்திகளில் நாம் காண்கின்ற மிக முக்கியமான அவல நிலையே. இவர்களுக்கு உதவி செய்யத்தான் இவர்கள் யாருக்கும் மனதில்லை. இதை விடுத்து கடவுள்களுக்கு சிலை வைத்து மனிதர்களை காபட்பாற்ற முயன்று கொண்டிருக்கிறார்கள் இந்த இந்துத்துவாவாதிகள்.
ஆணையிறவில் பல கோடிகள் செலவில் அமைக்கப்பட்ட மிகப்பெரிய நடராஜர் சிலை, சந்திக்கு சந்தி முளைத்துக் கொண்டிருக்கும் புதிய கோயில்கள், யாழ்ப்பாணத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலை இந்துத்துவாவாதிகள் இலங்கையில் தமிழ் தேசியத்தை நிலை நாட்டுகிறோம் எனக் கூறி இந்தியாவில் காணப்படும் மதவாத அரசியலை இலங்கையின் தமிழர் பகுதியில் புகுத்துவதற்கு மிக கடினமாக வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். இதற்கு புலம்பெயர் தேசங்களில் உள்ளவர்களே ஆகப்பெரிய துணையாக இருக்கிறார்கள். இதன் உச்சகட்ட அநியாயம் இந்த இந்துத்துவாதிகளை நம்பி புலம்பெயர் தேசங்களில் இருந்து கோயில்களை கட்டுவதற்காக கோடிக்கணக்கான பணம் கொட்டப்படுகின்றதாகும்.
யாழ்ப்பாணத்தில் திருவள்ளுவர் சிலையை திறந்து வைக்கின்ற நிகழ்வில் உரையாற்றிய திரு. ஆறுதிருமுருகன் இதனை அவர் வாயினாலே ஒத்துக் கொண்டிருந்தார். அங்கு பேசிய அவர் கடவுளின் அருளால் புலம்பெயர் தேசங்களில் வாழக்கூடிய தமிழர்களின் இடத்தில் ஒரு சக்தி பிறந்திருக்கிறது. அந்த சக்தியின் ஊடாக இங்கு கோடானு கோடியை கொடுத்து பல கோயில்களை கட்டுகிறார்கள்,” என பெருமையாக கூறியிருந்தார்.
இந்த இந்துத்துவாவாதிகள் தொடர்பில் தமிழர்கள் விழித்துக் கொள்ள வேண்டிய மிக முக்கியமான தருணம் உருவாகியுள்ளது. இந்தியாவில் இந்துத்துவாவாதம் தமிழ் மொழியின் இருப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஆகி உள்ள நிலையில் இலங்கையிலும் இந்த நிலை நீடிப்பதற்கான வாய்ப்புகளே அதிகரித்துள்ளன. ஏற்கனவே பெரும்பான்மை சிங்கள மக்களிடமிருந்து உரிமைகளை பாதுகாப்பதற்காக தமிழினம் ஏதோ ஒரு விதமாக போராடிக் கொண்டிருக்கும் நிலையில் இந்த இந்துத்துவவாதிகளின் வருகை வடக்கு – கிழக்கில் இருக்கக்கூடிய தமிழர்களிடம் புதிய பிரிவினைகளை ஏற்படுத்தி அதன் ஊடாகவும் அரசியல் லாபமீட்ட முனையும் இந்தியாவிற்கு துணை போகுமே தவிர தமிழர் பகுதிகளில் எந்த ஒரு ஆரோக்கியமான மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்பதே உண்மை.
மீண்டும் பயன்படுத்தக்கூடிய தண்ணீர் போத்தல்களில் கழிப்பறை இருக்கைகளை விட 40,000 மடங்கு அதிக பாக்டீரியாக்கள் இருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
சமீபத்தில் வெளியாகியுள்ள ஆய்வு அறிக்கையில், மீண்டும் பயன்படுத்தக்கூடிய போத்தல்கள் சராசரி கழிவறை இருக்கையை விட 40,000 மடங்கு அதிகமான பாக்டீரியாக்களை தங்க வைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஆராய்ச்சியாளர்கள் குழு, தண்ணீர் போத்தலின் பல்வேறு பகுதிகளான ஸ்பூட் மூடி(spout lid), ஸ்க்ரூ-மேல் மூடி, ஸ்ட்ரே லிட்(screw-top lid, stray lid) மற்றும் ஸ்க்வீஸ்-மேல் மூடி என ஒவ்வொன்றையும் மூன்று முறை வரை துடைத்து எடுத்து நடத்திய ஆய்வில், கிராம் நெகட்டிவ் ராட்ஸ் மற்றும் பேசிலஸ்(gram-negative rods and bacillus) என்ற இரண்டு வகையான பாக்டீரியாக்களை கண்டறிந்துள்ளனர்.
இந்த கிராம்-எதிர்மறை பாக்டீரியாக்கள் நுண்ணுயிர் எதிர்ப்பிகளை அதிகளவில் எதிர்க்கும் நோய்த்தொற்றுகளை ஏற்படுத்தும் அதே வேளையில், சில வகையான பேசிலஸ் இரைப்பை குடல் பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்று ஆராய்ச்சியாளர்கள் விளக்கினர்.
மேலும் ஆராய்ச்சியாளர்கள் போத்தல்களின் தூய்மையை வீட்டுப் பொருட்களுடன் ஒப்பிட்டு போது, இவை வீட்டு சமையலறை மடுவை விட இரண்டு மடங்கு கிருமிகளைக் கொண்டிருப்பதாகவும், கணினி சுட்டியை விட நான்கு மடங்கு பாக்டீரியாவையும், செல்லப்பிராணி குடிக்கும் கிண்ணத்தை விட 14 மடங்கு அதிகமாகவும் இருப்பதாக தெரிவித்தனர்.
இந்த நிலையில் ரீடிங் பல்கலைக்கழகத்தின் நுண்ணுயிரியலாளர் வைத்தியர் சைமன் கிளார்க் வழங்கிய தகவலில், போத்தல்கள் அதிக எண்ணிக்கையிலான பாக்டீரியாக்களின் இனப்பெருக்கம் செய்யும் இடமாக இருந்தாலும், அது ஆபத்தானது அல்ல என தெரிவித்துள்ளார்.
இந்த மீண்டும் பயன்படுத்தும் தண்ணீர் போத்தலை ஒரு நாளைக்கு ஒரு முறையாவது சூடான சவர்கார நீரில் கழுவவும், வாரத்திற்கு ஒரு முறையாவது சுத்தப்படுத்தவும் ஆராய்ச்சியாளர்கள் பரிந்துரைத்துள்ளனர்.
அரசாங்கத்தின் வரிக் கொள்கை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று முன்னெடுக்கப்பட்ட வேலை நிறுத்தப் போராட்டம் வெற்றியடைந்ததாக தொழிற்சங்கத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை இந்த போராட்டங்களால் மாணவர்கள், நோயாளர்கள் உட்பட பலரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் பொதுமக்கள் பலரால் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
ஏற்கனவே தொடர்சியாக மேற்கொள்ளப்பட்டு வந்த வைத்தியசாலை ஊழியர்கள் போராட்டங்களால் வைத்தியசாலைகளில் யாரும் கவனிப்பாரின்றி உள் மற்றும் வெளி நோயாளர்கள் பலரும் பாதிக்கப்பட்ட நிலையில் இன்றைய போராட்டத்தால் இந்த நிலை இன்னமும் மோசமடைந்துள்ளது.
இதைவேளை ஆசிரியர்களின் போராட்டத்தால் 100% பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன என இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலிங் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே பாடசாலைகள் ஒரு வருட கால இடைவெளியில் இயங்கிவரும் நிலையில் இறுதித்தவணை பரீட்சை நேரத்தில் சம்பள உயர்வு வேண்டி பாடசாலை ஆசிரியர்கள் பணிபுறக்கணிப்பில் ஈடுபட்டிருந்தமை தொடர்பில் பெற்றோர்கள் பலரும் விசனம் வெளியிட்டுள்ளனர்.
இலங்கை முழுமையாக பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இன்றைய தொழிற்சங்க நடவடிக்கையால் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒரே நாளில் 46 பில்லியன் ரூபாய் இழப்பு ஏற்படும் என அரசாங்கம் கூறியுள்ளது.
நாடளாவிய ரீதியில் இன்று புதன்கிழமை பல தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.
இந்த தொழிற்சங்க நடவடிக்கை தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய மேற்கண்டவாறு கூறியுள்ளமையும் கவனத்தில் கொள்ளத்தக்கது.
நாடு எதிர்கொண்டுள்ள இன்றைய நெருக்கடி நிலைக்கு பதில் சொல்ல வேண்டிய கடப்பாட்டிலுள்ளவர்கள் இந்த அரசாங்க அதிகாரிகள் தான். ஆட்சியாளர்கள் ஐந்து வருடங்களுக்கு ஒரு தடவை மாறிக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால் இந்த அரசாங்க அதிகாரிகள் பதவியில் நிலையாக ஆயுள் முழுமைக்கும் இருக்கிறார்கள். ஆனால் நாட்டில் எந்த விடயங்களிலும் இதுவரை முன்னேற்றம் இல்லை. நாட்டு மக்களுக்கு தேவையான – அடிப்படை தகவ்லகள் கூட இன்னமும் கணினி மயப்படுத்தப்படவில்லை. உலக நாடுகள் அனைத்தும் கணினித்துறைக்குள் தன்னுடைய நிர்வாக கட்டமைப்பை மிக வேகமாக உள்நுழைத்துக் கொண்டிருக்கும் நிலையில் இன்னும் தன்னை மாற்றிக்கொள்ள நினைக்காத பிரித்தானியர் கால நிர்வாக கட்டமைப்பு ஒன்று தான் இலங்கையில் இயங்கிக் கொண்டிருக்கிறது.
ஒவ்வொரு அரசு திணைக்களங்களில் அளவுக்கு அதிகமான அதிகாரிகள் நித்திரை கொள்வதற்காகவே நியமிக்கப்பட்டது போல அசமந்தப் போக்கிலேயே இந்த நிர்வாக கட்டமைப்புகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இதன் உச்சகட்டமான அபத்தம் தான் அண்மையில் தென்னிந்தியாவிலிருந்து இலங்கைக்கு வழங்கப்பட்டிருந்த இலவச உணவுப் பொதிகள் கூட மக்கள் கைகளுக்கு ஒழுங்காக சென்று சேராத பிரச்சினை. மலையகம் தொடங்கி இலங்கையின் பல பகுதிகளிலும் அந்த உணவுப் பொதிகளின் நிலை என்னவாயிற்று என்பதே தெரியவில்லை.
இந்தக் கல்வித்துறை தொடர்பான இடங்களில் பணியாற்றிக் கொண்டிருக்க கூடிய ஆசிரியர்கள் எண்ணத்தை சாதித்து விட்டார்கள் என சம்பள உயர்வு கேட்டு போராடுகிறார்கள் என தெரியவில்லை. பாடசாலை மாணவர்களுக்கு நூலகப் பாவனைக்கான வசதிகளை கூட ஏற்படுத்திக் கொடுக்காத – ஏற்படுத்திக் கொடுக்க நேரமில்லாத ஆசிரியர்களும் – அதிபர்களும் தான் இங்கு அதிகம் பேர்.
மாணவர்களின் உடைய பிரச்சனைகளுக்காக இந்த ஆசிரியர்களும் – நோயாளர்கள் எதிர்கொள்கின்ற பிரச்சனைகள் தொடர்பில் வைத்திய அதிகாரிகளும்- பொதுமக்களின் உடைய தேவைக்காக நிர்வாக அதிகாரிகளும் இதுவரையில் போராட்டம் செய்ததாக பெரிதாக பதிவுகள் இல்லை. எப்பொழுதெல்லாம் இந்த நிர்வாக அதிகாரிகள் பாதிக்கப்படுகிறார்களோ அப்பொழுது மட்டுமே நாடு சீரழிகிறது என இந்த அரசாங்க அதிகாரிகள் அழுது வடித்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு மக்கள் புரட்சி என பெயர் வைத்துக் கொள்கிறார்கள்.
இலங்கை இன்று எதிர்கொண்டுள்ள மிக மோசமான பொருளாதார நெருக்கடிக்கு – இந்த அபாயகரமான நிலைக்கு பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு இந்த அரசு அதிகாரிகளுக்கும் உரியது என்பதை மக்கள் மறந்து விடக்கூடாது.
தமிழகத்தின் நீலகிரி மாவட்டம் முதுமலையில் யானைகளை பராமரிக்கும் தம்பதியின் கதையைக் கொண்ட தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ் என்ற குறு ஆவணப்படம் ஒஸ்கார் விருதை வென்றுள்ளது.
முதுமலை காப்பகத்தில் யானை பராமரிப்பாளர்களாகப் பணியாற்றும் காட்டு நாயக்கர் பழங்குடி இனத்தைச் சேர்ந்த பொம்மன், பெள்ளி தம்பதியைப் பற்றியது இந்த குறு ஆவணப்படம். “ஒஸ்கார் விருது கிடைத்துள்ளது கொடுக்கும் மகிழ்ச்சியைச் சொல்ல வார்த்தைகள் இல்லை.
இவை அனைத்திற்கும் இயக்குநருக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். ஆனால், இந்த நேரத்தில் யானை ரகு கூட இல்லையே என்றுதான் வருத்தமாக இருக்கிறது,” என்று பொம்மன் நெகிழ்ந்து கூறியுள்ளார்.
தாயைப் பிரிந்த குட்டி யானைகளை இந்தத் தம்பதி பராமரித்து வருகின்றனர். யானைகளுக்கும் இவர்களுக்கும் இடையிலான உணர்வுபூர்வமான கதையைக் கொண்டது தி எலிபெண்ட் விஸ்பரரஸ் ஆவணப்படம். நெட்பிளிக்ஸில் வெளியிடப்பட்ட இந்த ஆவணப்படத்தை கார்த்தி கொன்சால்வ்ஸ் இயக்கியிருக்கிறார். குனீத்மோங்கா தயாரித்திருக்கிறார்.
தமிழகத்தின் முதுமலை பகுதியில் யானை பராமரிப்பில் ஈடுபட்டு வரும் பழங்குடி மக்களான பொம்மன், பெள்ளியின் கதை இன்று உலகம் முழுக்க பேசுப்பொருள் ஆகியுள்ளது.
`எலிபெண்ட் விஸ்பரரர்ஸ்` என்னும் ஆவணப்படம் மூலம் வெளியுலகிற்கு தெரியவந்த இவர்களின் கதை, இன்று உலகின் அத்தனை ஓரங்களிலும் பொம்மன், பெள்ளி என்ற பெயர்களை முனுமுனுக்க வைத்திருக்கிறது.
காட்டுநாயக்கர் பழங்குடிகளான பொம்மன், பெள்ளியின் வாழ்வியலையும் அவர்களுக்கு யானைகளுடன் இருக்கும் உறவையும் இந்த ஆவணப்படத்தில் மிகவும் உணர்வுப்பூர்வமாக பதிவு செய்திருந்தார் இயக்குநர் கார்த்தி கொன்சால்வ்ஸ்.
தாயை பிரிந்து, உடம்பில் பல காயங்களுடன், வால் வெட்டுபட்டு, இறக்கும் தருவாயில் ஒரு குட்டி யானை காட்டிற்குள் கண்டெடுக்கப்படுகிறது. காப்பகத்தில் இருந்த பலரும் இனி அதை காப்பாற்றி வளர்த்தெடுப்பது கடினமான காரியம் என ஒதுங்கி கொள்ள பொம்மன் மட்டுமே அதனை என்னால் காப்பாற்ற முடியும் என்று கூறி தன்னுடன் அழைத்து வருகிறார்.
யானையை வளர்ப்பதற்கு அவருக்கு துணையாக பெள்ளியும் வருகிறார். அந்த யானைகுட்டிக்கு ரகு என பெயர் சூட்டி தனது குழந்தையை போலவே பராமரித்து வந்த அவர், தான் சொன்னது போலவே அந்த குட்டியை இயல்பான உடல்நிலைக்கு தேற்றிவிட்டார். அதன்பின் அவருக்கு துணையாக வந்த பெள்ளிக்கு அம்மு என்ற பெண் குட்டி யானையை பராமரிக்க கொடுக்கிறார்கள்.
ஒரே கிராமத்தைச் சேர்ந்த பொம்மனும், பெள்ளியும் 50 வயதை கடந்தவர்கள். யானை பராமரிப்பில் ஒன்றாக ஈடுபட்டு வந்த பொம்மனும், பெள்ளியும் ஒரு கட்டத்தில் திருமணம் செய்துகொள்கிறார்கள். பொம்மன், பெள்ளி, ரகு, அம்மு என நால்வரும் ஒரு குடும்பமாக மாறுகிறார்கள்.
இந்த தம்பதியினர் யானைகளின் மீது கொண்டிருக்கும் இத்தகைய நிபந்தனையற்ற அன்புதான் `எலிபெண்ட் விஸ்பரர்ஸ்` ஆவணப்படத்தின் வெற்றிக்கு அடித்தளமாக அமைந்துள்ளது. இப்போது இந்த ஆவணப்படம் ஒஸ்கார் விருதை வென்றுள்ள அதேsஅமயம் இத்தனை பெரிய வரவேற்பு தங்களின் கதைக்கு கிடைக்குமென பொம்மன், பெள்ளி சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை. எப்போதும் போல் எந்தவொரு பரபரப்பும் இல்லாமல் முதுமலையில் தங்களது அன்றாட வேலையை பார்த்து வருகின்றனர்.
இலங்கை, இந்தியாவில் பிரேமானந்தா முதல் லண்டனில் பிரேமகுமார் பாரிஸில் குடுமி ஜெயா என அறியப்பட்ட ஜெயந்திரன் வரை மக்களின் மத நம்பிக்கைகளை வைத்து, நம்பிக்கையை வளர்த்து மோசம் செய்கின்ற நிலை அறிவியல் வளர்ந்த மேற்கு நாடுகள் வரை தொடர்கின்றது. 13 பாலியல் வன்புணர்வு உட்பட 50 வரையான சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை இழைத்த இலங்கையைச் சேர்ந்த பிரேமானந்தா பற்றிய ஒளிப்பதிவில் தமிழகத்தின் மூத்த ஊடகவியலாளர் ‘தமிழா தமிழா’ த பாண்டியண் சொல்கின்ற போது சமூகத்தின் தலைவர்களாக இருந்தவர்கள் எவ்வாறு இந்தக் குற்றவாளிகளுக்கு உறுதுணையாக இருந்தார்கள் என்று தெரிவித்தார். பாலியல் குற்றவாளியை விடுதலை செய்யுமாறு கேட்டவர் வடக்கு கிழக்கின் முதலமைச்சராக இருந்த முன்னாள் நீதிபதி சி.வி விக்கினேஸ்வரன். இவருக்கும் பிரேமானந்தாவுக்குமான உறவு இலங்கையில் பிரேமானந்தா ஆச்சிரமம் நடத்துகின்ற போது 1983 இனக்கலவரத்துக்கு முன்னரே ஆரம்பமாகி விட்டது. அப்போது சி.வி விக்கினேஸ்வரன் உயர் நீதிமன்ற நீதிபதி.
இளம்பெண்களை வன்புணரும் பாலியல் வெறியனை கும்பிட்டு வந்த நீதிபதி சி.வி விக்கினேஸ்வரன் தன் முன் – சட்டத்துக்கு முன் நிறுத்தப்படும் விடுதலைப் போராட்ட போராளிகளுக்கு அதிகபட்ச தண்டணையை வழங்கி வந்தவர். ஆனால் பிரேமானந்தா போன்ற காமுகர்கள் சட்டத்தினால் தண்டிக்கப்பட்ட போது அவரை விடுதலை செய்ய மன்றாடியவர்.
பிரேமானந்தா முதல் பிரேமகுமார் வரைக்கும் முன்னாள் நீதிபதியும் முதலமைச்சருமாக இருந்த சி.வி விக்கினேஸ்வரன் மட்டுமல்ல லண்டனில் பாரிஸில் இருந்த சைவ ஆலயங்களும் அதன் முக்கியஸ்தர்களும் கூட பாலியல் குற்றவாளிகளுக்கு கூடாரமாகச் செயற்பட்டுள்ளனர். லண்டனில் உள்ள ஆலயங்களின் முக்கியஸ்தர்கள், அறங்காவலர்கள் பிரேமகுமார் ஆனந்தராஜா, பாலியல் குற்றவாளி என பிரித்தானிய நீதிமன்றத்தால் நிரூபிக்கப்பட்ட பின்னரும் அக்குற்றவாளிக்கு ஆதரவாக நற்சான்றிதழ் வழங்கி உள்ளனர். சிறார்களுக்கும் பெண்களுக்கும் பாதுகாப்பும் அடைக்கலமும் கொடுக்க வேண்டிய ஆலயங்கள் காமுகர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கியது மட்டுமல்லாமல் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தின் மீது அபாண்டமான வதந்திகளைப் பரப்பியும் வருகின்றனர்.
பாலியல் குற்றவாளியான பிரேமகுமார் ஆனந்தராஜாவை காப்பாற்றுவதில் அவருக்கு உறுதுணையாக நின்றது ஹைகேற்றில் உள்ள உயர்வாசற் குன்று முருகன் ஆலயம். ஆலயத்தின் நிர்வாகசபைக்கான தேர்தலில் அதில் போட்டியிட்ட தெய்வேந்திரம்பிள்ளை காங்கேயன், தான் தெரிவு செய்யப்பட்டால் சமூக விழுமியங்களைப் பேணுவேன் என அவர் காங்கேயன் வெளியிட்ட துண்டுப் பிரசுரத்தில் குறிப்பிட்டு இருந்தார். ஆனால் செப்ரம்பர் 22இல் புதிய நிர்வாகம் பொறுப்பேற்றது முதல் பாலியல் குற்றவாளிக்கு துணைபோவதாகவே ஆலயத்தின் செயற்பாடுகள் அமைந்திருந்தது.
லண்டன் ஹைகேற் உயர்வாசற் குன்று முருகன் ஆலயத்தின் அறங்காவல் சபைத் தலைவராக யாழ் காரைநகரைச் சேர்ந்த கதிரவேலு நாகராஜா உள்ளார். தெய்வேந்திரம்பிள்ளை காங்கேயன் செயலாளராகவும் யாழ் சாவகச்சேரியைச் சேர்ந்த பத்மநாதன் பார்த்தீபன் பொருளாளராகவும் உள்ளனர். உரும்பிராயைச் சேர்ந்த செல்லையா சோதிலிங்கம் அறங்காவல் உறுப்பினராகவும் உள்ளனர். இந்த அறங்காவலர் சபையினால் நடத்தப்படும் ஹைகேற் உயர்வாசற்குன்று முருகன் ஆலயத்தில் பிரேமகுமார் ஆனந்தராஜா மிகுந்த செல்வாக்கை கொண்டிருந்தார். இவருடைய வழக்கு வூட்கிறீன் நீதி மன்றத்தில் விவாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் நேரத்தில் ஆலயத்தில் அவர் விடுதலை செய்யப்பட வேண்டும் என்று விசேட பூசைகள் நடாத்தப்பட்டது. தண்டனை குறித்த நீதிமன்ற அமர்வின் போதும் பிரேமகுமார் ஆனந்தராஜாவுக்கு ஆதரவாக பார்த்தீபன் நீதிமன்று சென்று தன்னுடைய ஆதரவை வெளிப்படுத்தி உள்ளார். இவர்களுடன் தேசம்நெற் தொடர்புகொள்ள முயற்சித்த போதும் அவர்கள் யாரும் இணைப்புக்கு வரவில்லை. அவர்களுக்கு குறும் செய்தியும் அனுப்பப்பட்டது. ஆனால் பதிலில்லை. தனாதிகாரி பார்தீபன் முதற் தடவை எடுத்த போது “வேலையாக உள்ளேன் பிறகு எடுக்கிறேன்” என்றார். ஆனால் அவர் பின்னர் எடுக்கவில்லை.
இரு ஆண்டுகளுக்கு முன் பிரேமகுமார் ஆனந்தராஜாவின் மீது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்ட உடனேயே பிரேமகுமாரது நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணிக்குமாறு பொலிஸார் ஹைகேற் முருகன் ஆலயத்திற்கு அறிவித்திருந்தனர். அத்தோடு இந்தக் கண்காணிப்பு நடவடிக்கை பற்றிய தொடர்ச்சியான கூட்டங்கள் சூம் ஊடாக நடந்துள்ளது. இக்கூட்டத்தில் அப்போது ஆலயத்தின் தலைவராக இருந்த சபாபதிப்பிள்ளை ஸ்றிகாந்தா, உள்ளுராட்சி மன்ற உறுப்பினர், மெற்ரோ பொலிட்டம் பொலிஸ் உத்தியோகஸ்தர் என மூவர் கலந்துகொண்டு நிலைமையை அவதானித்து வந்தனர். நாகராஜா தலைமையிலான புதிய நிர்வாக சபை பாலியல் குற்றம்சுமத்தப்பட்ட பிரேமகுமாரோடு நெருக்கமாக இருந்தது.
பிரித்தானியாவில் உள்ள சைவ ஆலயங்களில் ஹைகேற் முருகன் ஆலயமே முதலில் உருவானது. 1975இல் சபாபதிப்பிள்ளை இவ்வாலயத்தை உருவாக்கினார். தமிழ் ரைம்ஸ் என் எஸ் கந்தையா, பேர்மிங்ஹாம் பாலாஜி கோயிலை உருவாக்கிய டொக்டர் ராஓ, லண்டனுக்கு வெளியே ஒரு கோவிலை உருவாக்கிய வைரவமூர்த்தி, விநாயகமூர்த்தி, விம்பிள்டன் பிள்ளையார் கோவிலை உருவாக்கிய ரட்ணசிங்கம், ஸ்ரோன்லி அம்மன் ஆலயத்தை உருவாக்கிய குணசிங்கம் ஆகிய ஏழு பேர் இந்த ஆலயத்தின் அறங்காவலர்களாக இருந்தனர். சபாபதிப்பிள்ளையின் மகனே முன்னைய நிர்வாகத் தலைவராக இருந்த டொக்டர் ஸ்றிகாந்தா. இவர் பிரித்தானியாவின் மிகப்பிரசித்தி பெற்ற ‘மூர் ஐ ஹொஸ்பிரல்’லில் தசாப்தங்கள் பணியாற்றி ஓய்வுபெற்றவர்.
பிரித்தானியாவில் உள்ள சைவ ஆலயங்களில் ஹைகேற் முருகன் ஆலயமே மிகக் கூடுதலான சொத்துக்களைக் கொண்டுள்ளது. இவர்களிடம் உள்ள சொத்துக்களின் மொத்த மதிப்பு 45மில்லியன் பவுண்கள் எனமதிப்பிடப்படுகின்றது. இருந்த போதும் இவ்வாலயம் இதுவரை குறிப்பிடத்தக்க சமூக செயற்பாடுகளை தாயகத்திலோ லண்டனிலோ மேற்கொள்வதில்லை.
பிரேமானந்தா பற்றிய நேர்காணலில் வெளிநாடுகளுக்குச் சென்ற இலங்கைத் தமிழர்கள் கோயில்களைக் கட்டி கோடி கோடியாகச் சம்பாதிப்பதாக்க குறிப்பிட்டிருந்தார் மூத்த பத்திரிகையாளர் த பாண்டியன். அதில் அவர் லண்டனில் உள்ள ஈழபதீஸ்வரர் ஆலயம் பற்றியும் குறிப்பிட்டிருந்தார்.
பாண்டியன் குறிப்பிட்டது போல் ஆர் ஜெயதேவன் புலிகளுடன் நெருக்கமாக இருந்த காலம் ஒன்று இருந்தது.
அன்றைய காலகட்டத்தில் லண்டனில் இருக்கும் ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலயம் அங்கு வருகின்ற ஆலய வருமானத்தைப் பயன்படுத்தி பெருமளவில் பொதுத் தொண்டுகளைத் தாயகத்தில் மேற்கொண்டு வந்தது. அப்போது ஆலய நிர்வாகத்தின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டிருந்த எஸ் கருணைலிங்கம் ஆலய வருமானத்தில் செலவு போக மூன்றிலொரு பங்கை தாயக மக்களின் நல்வாழ்வுக்காகப் பயன்படுத்த வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றி இருந்தார். சில தடைகள் இருந்தாலும் அது இன்றை வரைக்கும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அன்று இந்த முன்மாதிரியைத் தொடர்ந்து லண்டனில் புலிகளும் இரு கோவில்களை நிறுவினர். வெம்பிளி ஈழபதீஸ்வரர் ஆலயம் மற்றையது என்பீல்ட் நாகபூசணி ஆலயம். இந்த ஆலயம் தொடர்பான சர்ச்சையிலேயே தமிழீழ விடுதலைப் புலிகள் ஆர் ஜெயதேவனை விசாரணைக்கு இலங்கைக்கு வரவழைத்து அவரைத் தடுத்து வைத்து படுகொலை செய்யவும் முயற்சித்தனர். அக்காலகட்டத்தில் தேசம் உட்பட பலரும் தமிழீழ விடுதலைப் புலிகளின் செயலைக் கண்டித்து அழுத்தங்களை வழங்கினர். அதன் பின் பிரத்தானிய அரசினதும் அழுத்தங்களால் ஆர் ஜெயதேவன் விடுவிக்கப்பட்டார்.
பிரேமகுமார் ஆனந்தராஜா என்ற பாலியல் குற்றவாளிக்கு நற்சான்றிதல் வழங்கியவர்களின் சமூக அக்கறையற்ற தன்மையை தேசம்நெற் வன்மையாகக் கண்டித்துப் பல பதிவுகளை வெளியிட்டு வந்தது. பாலியல் குற்றவாளியான பிரேமகுமார் ஆனந்தராஜாவுக்கு நற்சான்றிதழ் வழங்கிய கலாநிதி நித்தியானந்தனின் சமூகப்பொறுப்பற்ற செயலை தேசம்நெற் அம்பலப்படுத்தியது. ஏனையவர்களும் அம்பலப்படுத்தப்படுவார்கள் என தேசம்நெற் எச்சரித்தது.
அதற்காக சமூவலைத் தளத்தில் ஆர் ஜெயதேவன் ஊடகவியலாளரான த ஜெயபாலன் (என்) மீது கொதித்து எழுந்து பதிவுகளை வெளியிட்டார். அப்பதிவில் ‘குற்றும் நிரூபிக்கப்படும் வரை ஒருவர் நிரபராதி’ என்ற சட்டத்தின் தாரக மந்திரத்தைச் சுட்டிக்காட்டினார். ஆனால் பாலியல் குற்றவாளியான பிரேமகுமார் ஆனந்தராஜா நீதிமன்றத்தால் குற்றவாளியென நிரூபிக்கப்பட்ட பின்னரே நாற்பது பேர் அவருக்கு நற்சான்றிதழ் வழங்கி உள்ளனர். இதனை நீதிமன்றத்தில் நீதிபதியும் பிரதிவாதியின் சட்டத்தரணியிடம் உறுதிப்படுத்திக் கொண்டார். “பிரேமகுமார் ஆனந்தராஜா ஒரு பாலியல் குற்றவாளியென நிரூபிக்கப்பட்டது தெரியப்படுத்தப்பட்டே இந்நற்சான்றிதழ் பெறப்பட்டது” என்பதை நீதிபதி பெப்ரவரி 02 தண்டனைக் காலத்தை தீர்மானிக்கும் வழக்கின் போது உறுதிப்படுத்திக்கொண்டார்.
வன்முறையான கிரிமினல் குற்றங்கள் கொலைகள் உட்பட, நிதி மோசடிகள் போன்ற விடயங்களில் உணர்ச்சி வசப்பட்டு அந்தக் கணப்பொழுதின் உணர்ச்சிகளுக்கு அடிமைப்பட்டு வன்முறைக் குற்றங்கள் தேவையின் உந்துதலால் நிதிமோசடிகள் நிகழலாம். அவ்வாறான சமயங்களில் நற்சான்றிதழ் வழங்குவது பெரிதாகக் கண்டுகொள்ளப்படுவதில்லை.
ஆனால் மிகத் திட்டமிட்டு சாதுரியமாக இளம்பெண்களைத் துஸ்பிரயோகம் செய்பவர்களுக்கு இளம்பெண்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்துபவர்களுக்கு ஆலயங்களை கூடாரமாக்குவது அவர்களுக்கு நற்சான்றிதழ் வழங்குவது அயோக்கியத்தனமான செயல். இவ்வாறான சமூகத் தலைவர்களை யோக்கியமற்ற அயோக்கியர்கள் என்றால் மிகையல்ல. பாதிக்கப்பட்ட மாணவி கலாநிதி நித்தியானந்தனின் தமிழ் பள்ளியில் படித்த குழந்தை. ஆனால் கலாநிதி நித்தி பாலியல் துஸ்பிரயோகம் செய்தவனைக் கண்டிக்காமல் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு பாடம் புகட்ட வேண்டும் என்று தான் கையெழுத்திட்டதாக சிலருக்கு குறிப்பிட்டிருக்கின்றார். இந்த அயோக்கியத்தனத்துக்கு ஆர் ஜெயதேவன் வக்காலத்து வாங்குகின்றார். ஈழபதீஸ்வரர் ஆலயம், ஹைகேற் முருகன் ஆலயம் போன்றன முதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு புகலிடமாக வேண்டுமேயொழிய பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்ற வேண்டுமேயொழிய காமுகர்களுக்கு புகலிடமாகவும் அவர்களைக் காப்பாற்ற கையெழுத்து வேட்டையும் நடத்தக்கூடாது. இவர்களுக்கு பாடம் புகட்ட இன்னும் பல பெரியார்கள் வரவேண்டும்.
மேற்குறிப்பிட்ட இரு ஆலயங்கள் மட்டுமல்ல உலகெங்கும் இருக்கும் ஆலயங்கள், பள்ளிகள், தேவாலயங்கள், குருதுவாராக்கள் கொடியவர்களின் கூடாரமாகவும் பணம் சுரண்டுபவர்களாகவும் இருப்பதற்கு முற்றுப்புள்ளி முதலில் வைக்க வேண்டும். ஆனால் இவ்வாலயங்கள் அப்படிச் செய்வதில்லை. பிரான்ஸின் லாகுர்னே இல் உள்ள சிவன் ஆலயத்தின் உரிமையாளரான வெற்றிவேலு ஜெயந்திரன் அதன் வருமானத்தைக் கொண்டு நல்லூரடியில் ‘லக்ஸ் ஹொட்டல்’ என்ற பெயரில் காமவிடுதியை நடத்தி வருகின்றார். அதற்காக ஒரு சில மணித்தியாலங்களுக்கு ஹொட்டலை ‘புக்கிங்’ செய்யும் வசதியும் ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டு சமூகத்தின் கலாச்சார விழுமியங்கள் சீரழிக்கப்படுகின்றது. பல இளம் பெண்களின் வாழ்வைச் சீரழித்த ஜெயந்திரன் சாதிய ரீதியாக ஒடுக்கப்பட்ட சமூகங்களில் வறுமையில் உள்ள குடும்பங்களில் இருந்து இளம் பெண்களை வேலைக்கு எடுப்பதாகவும் பின் அவர்களுக்கு போதையூட்டி தன் பாலியல் இச்சைகளை தீர்த்துக்கொள்வதாகவும் இந்த ஹொட்டலுக்கு சாரதியாக இருந்தவர்களில் ஒருவர் தேசம்நெற் க்குத் தெரிவித்தார். குறிப்பிட்ட நபரைத் தொடர்பு கொண்டு இந்த லக்ஸ் ஹொட்டலில் ஒரு ‘ரூம் புகிங்’ செய்ய வேண்டும் எனக் கேட்டபோது, “அண்ணை இந்த ஹொட்டல் நல்லதில்லை. அது மற்றைய விசயங்களுக்குதான் பாவிக்கிறவை” என்றார் அச்சாரதி. “இப்பதான் இப்படியா?” என்று கேட்டபோது, “அப்ப இருந்தே இப்படித்தான்” என்றார் அவர். “உங்களிடம் யாராவது முறையிட்டார்களா?” என்று கேட்டபோது, “ஆறு வருசத்துக்கு முதல் ஒரு நாள் ஒரு வடிவான நல்ல வெள்ளை கலரான பொம்பிளப் பிள்ளை அழுதுகொண்டு ஓடி வந்தாள். தனக்கு எதனையோ தந்து குடிக்கச் சொன்னதாகவும் தன்னை துஸ்பிரோகம் செய்ய முற்பட்டு தன்னை அடித்ததாகவும் சொன்னாள்” என்றார். “அதைவிட நிறைய கேள்விப்பட்டு இருக்கிறன். இதையெல்லாம் பார்த்துப் போட்டு பாவங்களை சம்பாதிக்க வேண்டாம் என்று போட்டுத்தான் அங்கயிருந்து விலத்தீட்டன்” என்றார். “அவன் கோயில் வைச்சிருக்கிறான் காசிலை குறைவிடான். ஆனால் வாயைத் திறந்தா ஒரே தூசணமும் சாதியை இழுத்தும் தான் கதைப்பான். எனக்கு ஒரு மாதிரியாத் தான் இருக்கும்” என்றார் அந்தச் சாரதி. அவர் இப்போது யாழில் இல்லாவிட்டாலும் அவருடைய பாதுகாப்பிற்காக அவரது பெயர் விபரங்கள் வெளியிடப்படவில்லை.
குடுமி ஜெயா என்று அறியப்பட்ட கைதேர்ந்த ஒரு அயோக்கியனை கடவுளுக்கு இணையாக வைத்து லாகுர்னே சிவன் கோவிலில் காசுக்காகப் பாடி கூத்தடிக்கின்ற ஒரு காவிக்கூத்தாடி தான் இந்திரநாதன் நாகலிங்கம். பாரிஸில் குடும்பமாக வாழ்கின்ற இவருக்கும் இளவயதில் மகளும் இருக்கின்றார். ஆனால் இவர் குடுமி ஜெயாவின் நெருங்கிய நண்பரும் கூட. புலம்பெயர் தேசத்தில் இருந்து அயோக்கியர்களுக்கும் காமுகர்களுக்கும் கதைவசனம் எழுதும் இந்திரன் என்று அறியப்பட்ட இவர் பொதுமேடைகளில் சமூகம் பற்றி சமூகப் பிரச்சினைகள் பற்றி பேசுகின்றார். பாடுகின்றார். ஆனால் நடைமுறையில் அவரது பேச்சுக்கும் பாட்டுக்கும் சம்பந்தமில்லாமல் சமூகத்தை சீரழிப்பவர்களை இளம்பெண்களை துஸ்பிரயோகம் செய்பவர்களை கடவுளோடு இணைத்து சமூகத்தை சீரழிக்கின்றார்.
பிரித்தானியாவில் உள்ள நியுகாஸ்டில் உதைபந்தாட்டக் கழகத்தை சவுதியரேபியா கொள்வனவு செய்ததை அடுத்து பெரும் சர்ச்சை தற்போது எழுந்துள்ளது. காரணம் சவுதியரேபியாவின் முடிக்குரிய இளவரசர் முகம்மது பின் சல்மன் ஊடகவியலாளர் ஜமால் கொஷொக்கியை படுகொலை செய்தவர் என்பதால் அது உதைபந்தாட்டக் கழகத்துக்கு இழுக்கை ஏற்படுத்தும் என்பதன் அடிப்படையிலேயே இந்த சர்ச்சை எழுத்துள்ளது. ஒரு உதைபந்தட்டக் கழகம் கூட தன்னுடைய விழுமியங்களை உயர்த்திப் பிடிக்கின்ற போது ஈழத்தமிழர் புலம்பெயர்ந்த நாடுகளில் உருவாக்கியுள்ள கோயில்கள் கொடியவர்களின் கூடாரமாகி வருகின்றது.
பிரித்தானியாவில் தமிழர்களின் வன்முறையைக் கட்டுப்படுத்துவதில் ஒப்பிரேசன் என்வர் என்ற ஸ்கொட்லன்ட் யாட்டின் பொலிஸ் நடவடிக்கையோடு ஊடகவியலாளராக நானும் அன்றைய கவுன்சிலர் போல் சத்தியநேசனும் ஈடுபட்டிருந்தோம். வேறும் பலரும் ஈடுபட்டு இருந்தனர். அதனை தலைமை தாங்கி நடத்தியது பின்நாட்களில் துணை ஆணையாளராக இருந்த சேர் ஸ்ரிபன் ஹவுஸ். அவர் ஜனவரி 2022இல் உள்துறை அமைச்சு லோசகருக்கு கூறிய ஒரு சொல் பெரும் அதிர்வலையை மார்ச் 2, 2023இல் ஏற்படுத்தி உள்ளது. ‘பாலியல் வன்புணர்வு’ rape என்பதை அவர் ‘பாலியல் துன்பியல்’ regretful sex என்று குறிப்பிட்டுவிட்டார் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளார். ‘பாலியல் துன்பியல்’ regretful sex என்று தான் ஒருபோதும் குறிப்பிடவில்லை என சேர் ஸ்ரிபன் ஹவுஸ் கடுமையாக தன்னுடைய மறுப்பை வெளியிட்டுள்ளார். பாலியல் வன்புணர்வு என்ற மிகக்கொடுமையான குற்றச்செயலை ‘பாலியல் துன்பியல்’ regretful sex என்று மிதமாகக் குறிப்பிட்டு அக்குற்றத்தின் கொடுமையை சேர் ஸ்ரீபன் ஹவுஸ் குறைத்துவிட்டார் என்பதே குற்றச்சாட்டு. பாலியல் குற்றங்களுக்கு எதிராக மிக உறுதியாக போராடுகின்ற நாடுகளில் ஆலயங்களை வைத்திருக்கும் எம் ஆணாதிக்க ஆசாமிகள் இக்குற்றங்களை இழைக்கும் கொடியவர்களை பாதுகாப்பதோடு பாதிக்கப்பட்ட இளம்பெண்களையும் அப்பிள்ளைகளின் தாய்மார்களையும் எள்ளிநகையாடுகின்றனர். இவற்றை அம்பலப்படுத்தினால் அதனை gutter reporting, gutter journalism என்று கொக்கரிக்கின்றனர்.
பெண்களை கீழானவர்களாக நோக்குகின்ற பெண்கள் துன்புறுத்தப்பட்டால் அதற்கு அவர்களது நடத்தையே காரணம் என்று எண்ணுகின்ற பெண்கள் சொல்வதை நம்ப மறுக்கின்ற ஆணாதிக்கச் சிந்தனை தான் இந்நிலைக்குக் காரணம். இந்த ஆணாதிக்கச் சிந்தனை இருக்கின்ற வரை பிரேமானந்தா, பிரேமகுமார், குடுமி ஜெயா போன்றவர்கள் எப்போதும் போற்றப்படுவார்கள். எங்களுடைய ஆலயங்கள் முற்று முழுதாகவே ஆண்களுடைய – ஆணாதிக்க வாதிகளுடைய கட்டுப்பாட்டிலேயே உள்ளது. இயற்கை நிகழ்வான தீட்டை காரணம் காட்டி பெண்களை ஒதுக்கும் இந்த ஆணாதிக்க அயோக்கியர்களை ஆலயங்களில் இருந்து விரட்டாதவரை ஆலயங்கள் கொடியவர்களின் கூடாரமாகவே அமையும். ஹைகேற் முருகன் ஆலயம், வெம்பிளி ஈழபதீஸ்வரர் ஆலயம், லாகுர்னே சிவன் ஆலயம் மற்றும் ஆலயங்கள் ஆணாதிக்க கருத்தியல் கொண்ட பெண்களுக்கு எதிராகச் செயற்படுபவர்களுக்கு வக்காலத்து வாங்குகின்ற ஆசாமிகளை அறங்காவலர்களை விரட்டியடிக்க வேண்டும். அதற்கு ஒரே வழி இந்த ‘உண்டியல்’களை காயவிட்டால் போதும்.
பெண்களை இழிவு செய்யும் மடமையைக் கொழுத்த: பெண்களுக்கு போதைவஸ்தூட்டி பாலியல் இச்சைக்கு உட்படுத்துவதை தடுக்க, பெண்கள் பாலியல் துஸ்பிரயோகம் செய்யப்படுவதை தடுக்க இந்த ஆலயங்களின் உண்டியலை காயப்போடுங்கள். உண்டியலைக் காயப்போட்டால் ஆசாமிகள் ஓடிவிடுவார்கள். கடவுள் உண்டியலுக்குள் போடும் பணத்தை வைத்து யாருக்கும் அருள்பாலிப்பதில்லை. அதனால் சாமிக்கு லஞ்சம்கொடுக்கும் பழக்கத்தை கை விடுங்கள்.
இலங்கை, இந்தியாவில் பிரேமானந்தா முதல் லண்டனில் பிரேமகுமார் பாரிஸில் குடுமி ஜெயா என அறியப்பட்ட ஜெயந்திரன் வரை மக்களின் மத நம்பிக்கைகளை வைத்து, நம்பிக்கையை வளர்த்து மோசம் செய்கின்ற நிலை அறிவியல் வளர்ந்த மேற்கு நாடுகள் வரை தொடர்கின்றது. 13 பாலியல் வன்புணர்வு உட்பட 50 வரையான சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை இழைத்த இலங்கையைச் சேர்ந்த பிரேமானந்தா பற்றிய ஒளிப்பதிவில் தமிழகத்தின் மூத்த ஊடகவியலாளர் ‘தமிழா தமிழா’ த பாண்டியண் சொல்கின்ற போது சமூகத்தின் தலைவர்களாக இருந்தவர்கள் எவ்வாறு இந்தக் குற்றவாளிகளுக்கு உறுதுணையாக இருந்தார்கள் என்று தெரிவித்தார்.
பாலியல் குற்றவாளியை விடுதலை செய்யுமாறு கேட்டவர் வடக்கு கிழக்கின் முதலமைச்சராக இருந்த முன்னாள் நீதிபதி சி.வி விக்கினேஸ்வரன். இவருக்கும் பிரேமானந்தாவுக்குமான உறவு இலங்கையில் பிரேமானந்தா ஆச்சிரமம் நடத்துகின்ற போது 1983 இனக்கலவரத்துக்கு முன்னரே ஆரம்பமாகி விட்டது. அப்போது சி.வி விக்கினேஸ்வரன் உயர் நீதிமன்ற நீதிபதி. இளம்பெண்களை வன்புணரும் பாலியல் வெறியனை கும்பிட்டு வந்த நீதிபதி சி.வி விக்கினேஸ்வரன் தன் முன் – சட்டத்துக்கு முன் நிறுத்தப்படும் விடுதலைப் போராட்ட போராளிகளுக்கு அதிகபட்ச தண்டணையை வழங்கி வந்தவர். ஆனால் பிரேமானந்தா போன்ற காமுகர்கள் சட்டத்தினால் தண்டிக்கப்பட்ட போது அவரை விடுதலை செய்ய மன்றாடியவர். பிரேமானந்தா முதல் பிரேமகுமார் வரைக்கும் முன்னாள் நீதிபதியும் முதலமைச்சருமாக இருந்த சி.வி விக்கினேஸ்வரன் மட்டுமல்ல லண்டனில் பாரிஸில் இருந்த சைவ ஆலயங்களும் அதன் முக்கியஸ்தர்களும் கூட பாலியல் குற்றவாளிகளுக்கு கூடாரமாகச் செயற்பட்டுள்ளனர். லண்டனில் உள்ள ஆலயங்களின் முக்கியஸ்தர்கள், அறங்காவலர்கள் பிரேமகுமார் ஆனந்தராஜா, பாலியல் குற்றவாளி என பிரித்தானிய நீதிமன்றத்தால் நிரூபிக்கப்பட்ட பின்னரும் அக்குற்றவாளிக்கு ஆதரவாக நற்சான்றிதழ் வழங்கி உள்ளனர். சிறார்களுக்கும் பெண்களுக்கும் பாதுகாப்பும் அடைக்கலமும் கொடுக்க வேண்டிய ஆலயங்கள் காமுகர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கியது மட்டுமல்லாமல் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தின் மீது அபாண்டமான வதந்திகளைப் பரப்பியும் வருகின்றனர்.
உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட சீனாவில் கடந்த 2012ம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரான ஜின்பிங் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கபட்டார்.
அதன்பிறகு 2வது முறையாக அவர் ஜனாதிபதியாக பதவி வகித்து வருகிறார். இதன் தொடர்ச்சியாக 3வது தடவையாக மீண்டும் அவர் சீன ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.
சீனா கம்யூனிஸ்டு கட்சி விதிமுறைகளில் மாற்றம் கொண்டு வரப்பட்டு இதுவரை இல்லாத அளவில் கடந்த அக்டோபர் மாதம் மூன்றாம் முறையாக ஜின்பிங் கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டார். கட்சியின் அனைத்து உயர் மட்ட குழுவினரும் சேர்ந்து அவரை தேர்ந்தெடுத்தனர். இதன் தொடர்ச்சியாக இன்று சீனா பாராளுமன்றத்தில் நடந்த 14வது தேசிய மக்கள் மாநாட்டில் சுமார் 2,952 உறுப்பினர்கள் மீண்டும் ஜின்பிங்கை அதிபராக தேர்வு செய்துள்ளனர். எதிர்த்து யாரும் போட்டியிடவில்லை என்பதால் அவர் ஒருமனதாக தேர்ந்தெடுக்கபட்டு உள்ளார். மேலும் அவர் சீன ராணுவ ஆணையத்தின் தலைவராகவும் பொறுப்பேற்க உள்ளார். சீன வரலாற்றில் இதுவரை யாரும் தொடர்ந்து 3 முறை அதிபராக பதவி வகிக்கவில்லை. அந்த சாதனையை ஜின்பிங் பெற்று இருக்கிறார். இன்னும் 5 ஆண்டு காலம் அவர் சீன அதிபராக பதவி வகிப்பார்.
தற்போது 69 வயதாகும் அவர் கொரோனா காலகட்டத்தின்போது கட்டுப்பாடுகள் விதித்ததில் பொதுமக்களின் எதிர்ப்புகளை சம்பாதித்தார். அவருக்கு எதிராக போராட்டங்களும் நடந்தது. ஆனால் அதையெல்லாம் மறந்து இப்போது ஜின்பிங் மீண்டும் சீன அதிபராகி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கட்டிளம் பெண்ணான வாழ்க்கை பற்றிய பல்வேறு கனவுகளோடு வாழ்ந்த மிதுலா அப்போது நெல்லுக்குளம் மகாவித்தியாலயத்தில் ஆண்டு ஒன்பதில் கல்வி கற்றுக்கொண்டிருந்தார். ஒரு ஆசிரியையாக வரவேண்டும் என்ற கனவோடு வாழ்ந்த மிதுலா, 1995 சூரயக்கதிர் இராணுவ நடவடிக்கையோடு, தங்கள் சொந்த ஊரான யாழ் தாவடி (கொக்குவில்) பகுதியிலிருந்து இடம்பெயர்ந்து வன்னியில் பல பிரதேசங்களிலும் இடம்பெயர்ந்து வாழ்ந்தனர். இறுதியில் கொழும்பு செல்லாம் எனத் தீர்மானித்து வவுனியாவின் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் சென்று முகாமில் தங்கியிருந்தனர். அப்படித் தங்கியிருந்த காலத்தில் தான் மிதுலா நெல்லுக்குளம் மகாவித்தியாலயத்தில் படித்தார். மிதுலாவோடு மூன்று வயது மூத்த சகோதரி ஒருவரும் இருந்தார். குடும்பப் பொறுப்பு மிக்க மிதுலா பொறுப்பில் தான் பண நிர்வாகம் இருந்தது. அவ்வளவு பொறுப்பு மிக்கவர். அவர் கடைசியாக எழுதிய பரீட்சையில் வழமைக்கு மாறாக முதலாம் பிள்ளையாகவும் வந்திருந்தார். படிப்பில் ஆர்வம் ஏற்பட்ட காலமது. மிதுலா தனது அக்காவுக்கு எழுதிய ஓட்டோகிராப்யை கீழே காணலாம்.
அத்தங்கையின் விரும்பம் போலவே அதையும் தாண்டி கல்வியில் ஒரு நிலைக்கு வந்துவிட்டார் சகோதரி கங்கா. இவ்வாறான அன்புக்கும் பாசத்திற்குமரிய தங்கையுடன் சந்தோசத்தை பகிர்ந்துகொள்ள அந்தத் தங்கை தன்னோடு இல்லை என்ற ஏக்கத்துடனேயே கங்கா இன்றும் தனது நாட்களை கடந்து செல்கின்றார். கங்காவிடம் இருந்த அந்தத் தங்கையைப் பிரித்தது ?
1997 செப்ரம்பர் 20 அதுவொரு சனிக்கிழமை மிதுலா தன்னுடைய சகோதரி கங்காவோடும் கங்காவின் நண்பியோடும் உல்லாசமாக வெளியே புறப்பட்டு நெரிக்குளம் மகாவித்தியாலய முகாமில் இருந்து வந்து செட்டிகுளம் பிரதான வீதிக்கு வந்தனர்.
அதே செட்டிகுளம் சந்திக்கு அருகில் உள்ள வீட்டில் வின்சன் என்றழைக்கப்படும் கந்தையா அகிலன் தன் நண்பர்களோடு மது அருந்தி குடிபோதையில் இருந்தார். இவர் ஒரு தமிழீழ விடுதலை இயக்கப் போராளியும் கூட. இலங்கை வாகன ஓட்டுனர் பத்திரம் இல்லாத இவர் இந்தியாவின் வாகன ஓட்டுனர் பத்திரத்தையே வைத்திருந்தார். இவருக்கு லொறி போன்ற பெரிய வாகனத்தை ஓட்டிய அனுபவமும் இருக்கவில்லை. அந்நிலையில் அங்கிருந்த லொறியை எடுத்து ஓட்டுகிறேன் என்று வீராப்பு பேசி லொறியை வேகமாக ஒட்டிக்கொண்டு செட்டிகுளம் வீதிக்குள் நுழைந்தார் வின்சன்.
அதேசமயம் மிதுலா, சககோதரி கங்கா, கங்காவின் நண்பி வீதியின் ஓரமாக நடந்துகொண்டிருந்தனர். கங்கா தூரத்தே ஒரு லொறி வேகமாக வருவதை கண்டுவிட்டார். ஆனாலும் தாங்கள் வீதியின் ஓரத்தால் செல்வதால் வேறு எதைப்பற்றியும் எண்ணவில்லை. நிகழப் போகும் அனர்த்தத்தம் பற்றி கிஞ்சித்தும் எண்ணியிருக்கவில்லை.
ஆம் வின்சன் மது போதையில் ஓட்டிவந்த லொறி இப்பெண்கள் மீது மோதி அருகில் சென்றுகொண்டிருந்த ரக்ரரையும் தாக்கி அப்பகுதியையே புழதி மண்டலமாக்கியது. அந்தப் புழதிக்குள் லொறியை ஓட்டி வந்த வின்சன் லொறியிலிருந்து இறங்கி அவ்விடத்தை விட்டே ஓடிவிட்டார். மிதுலா தலையில் ஏற்பட்ட பாரிய அடியினால் சிதைந்து அந்த இடத்திலேயே உயிரிழந்தார். கங்காவின் நண்பி பாரிய காயங்களுக்கு உள்ளானார். கங்கா அதிஸ்ரவசமாக சிறிய காயங்களோடு உயிர் தப்பினார்.
விசயத்தைக் கேள்விப்பட்டு நெல்லிக்குளம் முகாமில் இருந்த மிதுலாவின் சகோதரன் மற்றும் நண்பர்கள் எல்லோரும் சம்பவ இடத்துக்கு ஓடிவந்து காயப்பட்டவர்களை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லவும், இன்னும் சிலர் லொறியின் கண்ணாடிகளை அடித்து நொருக்கினர். அதில் மிதுலாவின் சகோதரனும் ஒருவர். அதற்குள் அப்போது வவுனியாவுக்கு ரெலோ பொறுப்பாளராக இருந்த குகனும் சம்பவ இடத்திற்கு வந்து தாங்கள், சம்பந்தப்பட்ட சாரதி வின்சனுக்கு தகுந்த தண்டணை வழங்குவதாக உறுதியளித்தனர். மரண நிகழ்வுக்கான ஏற்பாடுகளையும் குகன் ஏற்பாடு செய்திருந்தார். இறுதிக்கிரியைகளின் போது வின்சன் மயானத்திற்கு அழைத்து வரப்பட்டு பொதுமக்கள் முன்னிலையில் வைத்து அடிக்கப்பட்டார்.
ஒரு உயிர் இழப்பை எவ்வளவு பணமும் ஈடு செய்யாது, இழப்பீடாக 50,000 ரூபாயை வழங்கினர். குடும்பத்தினர் அதனை ஏற்க மறுக்கவே, பணத்தை அங்கேயே வைத்துவிட்டுச் சென்றனர்.
காயப்பட்ட கங்காவின் நண்பி குணமடைய இரு ஆண்டுகள் ஆனது. காலங்கள் உருண்டோட வவுனியா ரெலோ பொறுப்பாளராக இருந்த குகன் இயக்க மோதலில் கொல்லப்பட்டார். மதுபோதையில் வாகனத்தை ஓட்டி கொலையைச் செய்த வின்சன் வவுனியா பொறுப்பாளரானார். இதனை உடனடியாக உறுதிப்படுத்த முடியவில்லை. அதின் பின் வின்சன் எப்படியோ ஜேர்மனி வந்தடைந்தார்.
கங்காவும் பிற்காலத்தில் அங்கு வந்து சேர்ந்தார். காயப்பட்ட கங்காவின் நண்பியும் ஜேர்மனியிலேயே வாழ்வதாகவே அறிய வருகின்றது. ஆனால் இவர்கள் யாரும் ஒருவரை ஒருவர் சந்திக்கவில்லை.
இந்நிலையிலேயே ரெலோ இயக்கத் தலைவர் செல்வம் அடைக்கலநாதனின் முகநூலில் கந்தையா அகிலன் மறைந்த செய்தியை வெளியிட்டு அஞ்சலியைச் செலுத்தி இருந்தார். அதற்கு மிதுலாவின் சகோதரி இடம் குறிப்பு கீழேபதிவு செய்யப்பட்டுள்ளது.
கந்தையா வின்சன் இந்த விபத்தை திட்டமிட்டு மேற்கொள்ளவில்லை. ஆனால் அவருடைய பொறுப்பற்ற செயல்: மது அருந்திவிட்டு வாகனத்தை ஓட்டியது, முன் அனுபவமில்லாமல் அந்த வாகனத்தை பொது வீதியில் ஓட்டியது இரண்டுமே இந்த விபத்துக்குக் காரணம். இந்தப் பொறுப்பற்ற மனிதரை ‘மூத்த போராளி’ என அவருக்கு ஒரு அந்தஸ்த்தை வழங்குவது இன்னமும் மோசமான செயல். இவ்வாறான சில்லறைத்தனமான பொறுப்பற்ற செயல்களால் தான் நாடு சீரழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றது.
ஒவ்வொருவரும் தங்களளவில் பொறுப்புடன் செயற்பட்டால் மட்டுமே ஒரு ஆரோக்கியமான சமூகத்தைக் கட்டியமைக்க முடியும். ஒவ்வொரு அரசியல் கட்சியும் தங்கள் கட்சிகளில் உள்ள பொறுப்பற்ற மனிதர்களை தூக்கி எறியத் தயாராக வேண்டும். மக்களும் பொறுப்பற்றவர்களுக்கு வாக்களிப்பதை நிறுத்த வேண்டும். மாறாக மௌள்ள மாரிகள், முடிச்சவிக்கிகள், பொறுக்கிகள் என கோயில்களும் அரசியல் கட்சிகளும் கொடியவர்களின் கூடாரமாகிவிட்டது.
2019யைக் காட்டிலும் 2020இல் இலங்கையில் வீதி விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 2019இல் 2840 ஆக இருந்து விபத்து மரணங்கள் 2020இல் 3590 ஆகா 26வீதத்தால் அதிகரித்துள்ளது. இவ்விபத்துக்களில் உயிரிழப்பவர்கள் பாதிக்கப்படுபவர்களில் 70 வீதமானவர்கள் பொருளாதார ரீதியாக சிக்கனமான போக்குவரத்தை பயன்படுத்துபவர்களாகவே உள்ளனர். விபத்துக்களில் கொல்லப்படுபவர்களில் 50 வீதமானவர்கள் இருசக்கர அல்லது முச்சக்கர வண்டிகளில் பயணிப்பவர்கள். வீதி விபத்துக்களில் கொல்லப்படுபவர்களில் பாதசாரிகள் மூன்றில் ஒரு பங்கினர். மேலும் 25,000 பேர்வரை விபத்துக்களில் காயமுறுகின்றனர். இலங்கையில் யுத்தத்திற்குப் பின் உடல் ஊனத்தை ஏற்படுத்தும் முக்கிய காரணிகளில் ஒன்றாக வீதி விபத்துக்கள் உள்ளன.
மேற்குறிப்பிட்ட புள்ளிவிபரங்கள் பொலிஸார் வீதி விபத்துக்களை பதிவு செய்த போது எடுக்கப்பட்ட புள்ளிவிபரம். ஆனால் வீதி விபத்துக்களில் காயப்பட்டவர்கள் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு சில நாட்கள், சில வாரங்கள், சில மாதங்கள் கடந்து இறந்தும் உள்ளனர். இவற்றையெல்லாம் பார்க்கின்ற போது 2020இல் வீதி விபத்துக்களில் இறந்தவர்களின் எண்ணக்கை 4,200க்கும் அதிகம் என உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்படி தினமும் பதினொருவருக்கு அதிகமானவர்கள் இலங்கையின் வீதிகளில் கொல்லப்படுகின்றனர்.
தெருக்களில் வாகனங்களின் அதிகரிப்பு (கடந்த பத்து ஆண்டுகளில் இலங்கையில் வாகன உரிமையாளர்களின் எண்ணிக்கை 70 வீதத்தால் அதிகரித்து இருப்பதாக ஒரு புள்ளிவிபரம் தெரிவிக்கின்றது.) பராமரிப்பற்ற அல்லது பாராமரிப்பு குறைந்த வீதிகள், வாகன அனுமதிப் பத்திரம் வழங்கப்படும் போது நம்பகத்தன்மை மற்றும் உறுதிப்படுத்தல்களில் காட்டப்படும் அசிரத்தை, வீதிக் குற்றங்கள் முறையாகத் தண்டிக்கப்படாமை, பொதுப் போக்குவரத்து வளர்த்தெடுக்கப்படாமை என்பன வீதி விபத்துக்களுக்கு முக்கிய காரணமாக உள்ளது.
கண்ணிமைக்கும் நேரத்தில் நிகழ்ந்துவிடும் இவ்விபத்துக்கள் பல்லாயிரம் குடும்பங்களை உருக்குலைய வைக்கின்றது. அவர்களுடைய கனவுகளை வண்டிச் சக்கரத்தில் நசித்துவிடுகின்றது. வேகம் ஒரு போதும் விவேகமானதல்ல. உயிரினும் மேலானது எதுவுமில்லை. ஒரு வீதம் வேகத்தை அதிகரிப்பது உயிரிழப்பை நன்கு வீதத்தால் அதிகரிக்கின்றது. இன்னொரு உயிரைப் பறிக்கின்ற, எம்முயிரை பறிக்கின்ற வேகத்திற்கு முற்றுப்புள்ளி வைப்போம். வேகமாகச் சென்று நாம் எதனையும் சாதித்துவிடுவதில்லை. ஆகையால் விவேகத்துடன் நிதானத்துடன் வாகனத்தை ஓட்டுவோம்.
துரதிஸ்ட்டவசமாக அன்று மிதுலாவை மோதிய வாகனத்தை அடித்து நொருக்கிய அண்ணனும் கடந்த ஆண்டு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வாகனவிபத்தில் கொல்லப்பட்டார். முன்னாள் போராளியான இவருடைய இன்னுமொரு சகோதரரும் மூத்த போராளியாக உயிர்நீத்தமை குறிப்பிடத்தக்கது.
குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டுதல், அதிவேகமாக வாகனம் ஓட்டுதல்இ சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டுதல்இ செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுதல்இ அனுமதிப்பத்திரம் இன்றி வாகனம் ஓட்டுதல் ஆகிய குற்றங்களில் ஈடுபடும் வாகன சாரதிகள் நெடுஞ்சாலைகளில் கைது செய்யப்படுவதாக பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். 2021 ஆம் ஆண்டில் அவர்களுக்கு எதிராக 79,904 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும்இ 2020 ஆம் ஆண்டில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 66,252.
மிதுலா விபத்தில் கொல்லப்பட்டு கால்நூற்றாண்டுக்கு மேலாகி விட்டது. ஆனால் இலங்கையின் வீதிகள் இன்னமும் எமலோகத்திற்கான வீதிகளாகவே மாற்றப்பட்டு வருகின்றது. உலகெங்கும் வீதி விபத்துக்களில் 1.3 மில்லியன் மக்கள் கொல்லப்படுகின்றனர். இதனை மட்டுப்படுத்த 2030இல் வீதி விபத்துக்களை 50 வீதத்தால் குறைக்க வேண்டும் என்ற நோக்கோடு ஐநா பொதுச் சபை தீர்மானம் இயற்றியுள்ளது. ஆனால் இலங்கையின் வீதிகள் என்னவோ மரணப் பொறியாகவே மாறி வருகின்றது. பொறுப்பற்ற மனிதர்களை சாரதி இருக்கையில் இருந்து தூக்கியெறிவதே இதற்கு ஒரே தீர்வாக இருக்க முடியும்.