05

05

பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்பதை விரைவில் ஆதாரங்களுடன் தெரியப்படுத்துவேன் – பழ.நெடுமாறன்

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்ற அறிவிப்பு இலங்கைத் தமிழர்கள் அனைவருக்கும் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. இந்தநிலையில் அதற்கான ஆதாரங்கள் கிடைத்தவுடன் அதை ஊடகங்களில் வெளியிடப்போவதாக உலகத் தமிழர் கூட்டமைப்புத் தலைவர் நெடுமாறன் மீண்டும் தெரிவித்துள்ளார். ஏ.என்.ஐ செய்திச்சேவை இந்த செய்தியை பிரசுரித்துள்ளது.

பிரபாகரன் உயிருடன் இருப்பதாகவும், விரைவில் அவர் பொது வெளியில் வருவார் என்றும் நெடுமாறன் தகவல் வெளியிட்ட சில வாரங்களுக்குப் பிறகு அவரது அறிக்கை மீண்டும் வந்துள்ளது.

எனினும் முன்னதாக இந்த கூற்றை மறுத்த இலங்கையின் இராணுவப் பேச்சாளருமான பிரிகேடியர் ரவி ஹேரத், பிரபாகரன் இறந்துவிட்டார் என்பதை நிரூபிப்பதற்கான மரபணுச் சான்றிதழ்கள் உட்பட அனைத்து பதிவுகளும் இருப்பதாக தெரிவித்திருந்தார்.

சட்டவிரோதமாக பிரித்தானியாவிற்குள் நுழைபவர்கள் அரசியல் அந்தஸ்தினை கோர முடியாது – ரிஷி சுனக்

சட்டவிரோதமாக சிறிய படகுகளில் பிரித்தானியாவிற்குள் செல்பவர்கள் அரசியல் அந்தஸ்தினை கோர முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரித்தானியாவினால் விசா வழங்கப்படும் நாடுகளின் பட்டியலில் இலங்கை முதல் 5 இடத்துக்குள் உள்ளது. 2019ஆம் ஆண்டை விடவும், 2022ஆம் ஆண்டில் பிரித்தானிய வீசா பெற்றுக்கொண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1.3 மில்லியனாக அதிகரித்துள்ளதாக பிரித்தானியாவுக்கான புலம்பெயர் கண்காணிப்பகம் அண்மையில் தகவல் வெளியிட்டிருந்தது.

தரவுகளின் அடிப்படையில், கல்விக்கான வீசாவில் குடும்ப உறுப்பினர்களுடன் செல்பவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. எவ்வாறாயினும், பிரித்தானியாவுக்கு பிரவேசிக்கும் சகலருக்கும் தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொள்ள முடியாது என புலம்பெயர் கண்காணிப்பகம் குறிப்பிட்டிருந்தது.

இந்த பின்னணியில் பிரித்தானியா தங்களது குடிவரவு மற்றும் குடியகல்வு கொள்கையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்திருந்தது. இந்தநிலையில், புதிய திருத்தங்களுடன் இந்த விடயம் தொடர்பான சட்ட மூலம் அந்த நாட்டு உள்துறை செயலாளர் சுவெல்ல பிரேவமானினால் அடுத்த வாரம் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த செயல்பாட்டிற்கு அமைச்சர்கள் ஆதரவினை வழங்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
இந்தநிலையில், பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் தமது ஐந்து முன்னுரிமை நடவடிக்கைகளில், ‘படகுகளை கட்டுப்படுத்தல்’ என்ற விடயத்தையும் உள்ளடக்கியுள்ளார். சட்டவிரோதமாக பிரித்தானியாவிற்குள் வருபவர்கள் அங்கு தங்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும் அவர் எச்சரித்துள்ளார். இதேவேளை, பிரித்தானிய செஞ்சிலுவை சங்கம் இந்த திட்டம் மனிதாபிமான முறையில் எதிர்கொள்ள வேண்டியது என தெரிவித்துள்ளதுடன், அது கவலையளிக்கும் விடயம் எனவும் குறிப்பிட்டுள்ளது.

“உக்ரைன் – ரஷ்ய போரை என்னால் ஒருநாளில் முடிவுக்கு கொண்டு வர முடியும்.”- ட்ரம்ப்

ரஷ்யா – உக்ரைன் போர் தொடங்கி கிட்டத்தட்ட ஓராண்டுக்கும் மேல் ஆகியும் முடிவுக்கு வராமல் உள்ளதால் உலக நாடுகள் மத்தியில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 2022 பெப்ரவரி மாத இறுதியில் ரஷிய ஜனாதிபதி புடின் உக்ரைன் மீதான போர் நடவடிக்கையை தொடங்கினார். ஆரம்பத்தில் ரஷிய படைகள் வேகமாக முன்னேறி உக்ரைனை திணறடித்தன. இருப்பினும், அமெரிக்கா மற்றும் இதர ஐரோப்பிய நாடுகள் உதவியுடன் உக்ரைன் பதில் தாக்குதலை  மேற்கொண்டு போரில் தாக்குபிடித்து வருகிறது.

பெப்ரவரி மாதத்தில் இருந்து இதுவரை ரஷ்யா 1,16,950 வீரர்களை இழந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், உக்ரைன் நாட்டிற்கு புதிதாக 2.5 பில்லியன் டொலர் நிதியுதவி வழங்கி அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது. ஆயுத உதவியாக 31 போர் டாங்கிகளை உக்ரைனுக்கு வழங்குவதாகவும் அமெரிக்கா உறுதி அளித்துள்ளது. இந்த போர் முடிவுக்கு வராமல் தொடர்வது இரு நாடுகளை மட்டுமல்லாது சர்வதேச அளவிலும் பெரும் தாக்கங்கள் ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில், அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் ரஷியா – உக்ரைன் போர் குறித்து வீடியோ மூலம் தனது விமர்சனத்தை முன்வைத்துள்ளார். போரை தற்போதைய அமெரிக்க அரசு ஒழுங்காக கையாளவில்லை எனக் கூறிய டொனால்டு டிரம்ப்,

“நான் ஜனாதிபதியாக இருந்திருந்தால் ரஷ்யா-உக்ரைன் நாடுகளுக்கு இடையே இதுபோன்ற போர் ஏற்பட்டிருக்காது. நான் ஜனாதிபதியாக இருந்திருந்தால் புதின் போரை தொடங்கியிருக்க மாட்டார். லட்சம் ஆண்டுகள் ஆனாலும் இது போன்ற போரை நடத்த விட்டிருக்கமாட்டேன். போர் சூழல் ஏற்பட்டது தெரிந்திருந்தால், நான் பேச்சுவார்த்தை நடத்தி 24 மணிநேரத்தில் போரை முடிவுக்கு கொண்டு வந்திருப்பேன். இப்போது அமெரிக்கா டாங்கிகளை கொடுக்கிறது. அடுத்து என்ன அணு ஆயுதங்களை தரப்போகிறதா? இந்த முட்டாள்தனமான போரை உடனடியாக முடிவுக்கு கொண்டு வர வேண்டும். ரஷ்ய ஜனாதிபதி புடின் நான் என்ன சொன்னாலும் கேட்பார். போரை நிறுத்த எனக்கு 1 நாளுக்கு மேல் ஆகாது. 3ம் உலகப் போரைத் தடுக்கும் வல்லமை எனக்கு மட்டும் தான் உண்டு. இந்த போரை நிறுத்தி காட்ட என்னால் மட்டுமே முடியும்” என்றார்.

அகதி அந்தஸ்து கோரி பிரான்சுக்கு சென்ற யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் வெட்டிப்படுகொலை !

யாழ்ப்பாணம் மல்லாகம் பகுதியைச் சேர்ந்த சிவசுப்ரமணியம் சபேசன்  என்ற நபர்  பிரான்ஸ் நாட்டிலுள்ள வீடொன்றில்  பணிபுரிந்து வந்த நிலையில், நேற்று முன்தினம் (26) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் மல்லாகம் பகுதியில் வசிக்கும் அவரது மனைவிக்கு அவர் பணிபுரியும் வீட்டின் தொலைபேசி இலக்கம் மற்றும் முகவரி வழங்கியுள்ளார். இந்நிலையில்,  இவரது மனைவி  கடந்த வாரம் தனது கணவரை  தொலைபேசியில்  அழைத்தபோது, சில நாட்களாக  அவரைக்  காணவில்லை என  குறித்த வீட்டினர் அவரது  மனைவிக்கு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், காணாமல்போன கணவரை கண்டுபிடித்து தருமாறு பிரான்ஸ் நாட்டு அதிகாரிகளிடம் மனைவி வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதனையடுத்து  விசாரணை நடத்திய பிரான்ஸ்  அதிகாரிகளும் பொலிஸாரும் அவர் கொலை செய்யப்பட்டதை கண்டுபிடித்துள்ளனர்.

இறந்தவர் பணிபுரிந்த வீட்டின் ஏனைய ஊழியர்களிடம் விசாரணை நடத்தியதுடன்  சிசிரிவி கமெரா சோதனையில் அவர் எப்படி வெட்டிக் கொல்லப்பட்டார் என்பது தெரிய வந்துள்ளது.

இந்நிலையில், குறித்த வீட்டின்  உரிமையாளரை சந்தேகத்தில் கைதுசெய்து விசாரணை நடத்தியபோது, உயிரிழந்த இலங்கையரின்  சடலம் குப்பை மேடு ஒன்றிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டது.

இதே நேரம் வீட்டின் உரிமையாளரான முதலாளியே இறந்தவரை கொலை செய்துள்ளதுடன் அவரது உடலை குப்பை மேட்டில் வீசியுள்ளதாகவும் அறிய முடிகின்றது.