April

April

போதைப்பொருள் கடத்த முயன்ற தமிழருக்கு மரணதண்டனை – சிங்கப்பூர் நீதிமன்றம் தீர்ப்பு !

43 கிராம் (1.5 அவுன்ஸ்) ஹெரோயின் போதைப்பொருள் கடத்த முயன்ற நாகேந்திரன் தர்மலிங்கம் என்ற இளைஞனுக்கு சிங்கப்பூர் நீதிமன்றம் மரணதண்டனையை உறுதிப்படுத்தியுள்ளது.

கடத்தல்காரருக்கு சிங்கப்பூர் நீதிமன்றம் மரண தண்டனை விதித்ததை அவரது சகோதரி ஷர்மிளா தர்மலிங்கம் பத்திரிகையாளர்யிடம் உறுதிப்படுத்தியுள்ளார்.

நாகேந்திரன் தர்மலிங்கம் ஹெராயின் போதைப்பொருளை சிங்கப்பூருக்குள் கொண்டு வர முயன்றதற்காக ஒரு தசாப்தத்திற்கும் மேலாக மரண தண்டனை விதிக்கப்பட் நிலையில் சிறையில் இருந்துவந்தார்.

நீண்டகாலமாகவே அவரது வழக்கு மிகவும் சர்ச்சைக்குரியதாக இருந்துவந்தது. ஏனெனில் அவர் ஒரு மருத்துவ நிபுணரால் IQ 69 என்று கூறப்படுகின்ற அறிவுசார் இயலாமை உடைய ஒருவர் என்று சான்றிதழ் வழங்கப்பட்ட நிலையில், அவர் மீது மரண தண்டனை நிறைவேற்றப்படுவது தாமதிக்கப்பட்டு வந்தது.

ஆனால் நாகேந்திரன் தர்மலிங்கம் தனது செயல்களின் தன்மையை தெளிவாக புரிந்து கொண்டே அந்தக் குற்றத்தைப் புரிந்தார் என்று என்று அரசாங்கம் கூறிவந்தது.

இந்த நிலையில், அவரது தாயாரின் கடைசி மேல்முறையீட்டை செவ்வாய்க்கிழமை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

2009 ஆம் ஆண்டில்இ நாகேந்திரன் தனது இடது தொடையில் 43 கிராம் (1.5 அவுன்ஸ்) ஹெராயினைக் கட்டிக் கொண்டு மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்குக் கடக்கும்போது பிடிபட்டார்.

சிங்கப்பூர் சட்டத்தின் கீழ், 15 கிராமுக்கு மேல் ஹெராயின் கொண்டு பிடிப்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும்.

விசாரணையின் போது, 34 வயதான அவர் முதலில் போதைப்பொருளை எடுத்துச் செல்ல வற்புறுத்தப்பட்டதாகக் கூறினார், ஆனால் பின்னர் தனக்கு பணம் தேவைப்பட்டதால் குற்றத்தைச் செய்ததாகக் கூறினார்.

விசாரனைகளின் பின்பு அவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

2015 ஆம் ஆண்டில், அவர் அறிவுசார் இயலாமையால் பாதிக்கப்பட்டதன் அடிப்படையில் தனது தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்ற வேண்டும் என்று மேல்முறையீடு செய்தார்.

இறுதியில், அவர் அறிவுசார் ஊனமுற்றவர் அல்ல என்று நீதிமன்றம் கண்டறிந்தது.

கடந்த ஆண்டு ஜனாதிபதியின் கருணை மனுவும் நிராகரிக்கப்பட்டது.

கேள்விக்குரிய குற்ற நடத்தையுடன் தொடர்புடைய அபாயங்கள் மற்றும் எதிர்விளைவு நன்மைகளை எடைபோட்டு, இது ஒரு கிரிமினல் மனதின் செயல் என்று மேல்முறையீட்டு நீதிமன்றம் கண்டறிந்தது என்று சிங்கப்பூர் உள்துறை அமைச்சகம் முன்னைய அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.

2024 வரை தொடரவுள்ள பாரிய உணவு பற்றாக்குறை – உலக வங்கி எச்சரிக்கை !

ரஷ்யா-உக்ரைன் போரினால் உருவான உலகளாவிய உணவு மற்றும் பொருட்களின் பற்றாக்குறை 2024 வரை நீடிக்கும் என்று உலக வங்கி கூறுகிறது.

1970ஆம் ஆண்டுக்குப் பிறகு உலகமே மிகப்பெரிய பொருள் பற்றாக்குறையை எதிர்கொள்கிறது என்கிறார்கள்.

கடுமையான உணவுப் பற்றாக்குறை, எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் வர்த்தகக் கட்டுப்பாடுகள் ஆகியவை உலகின் பல பகுதிகளில் பணவீக்கத்தை உயர்த்தியுள்ளதாக உலக வங்கி எச்சரித்துள்ளது.

ரஷ்யா உலகின் மிகப்பெரிய இயற்கை எரிவாயு மற்றும் உர ஏற்றுமதியாளராகவும், மசகு எண்ணெய் ஏற்றுமதியில் இரண்டாவது பெரிய நாடாகவும் உள்ளது.

பெப்ரவரி 24 ஆம் திகதி உக்ரைனில் ரஷ்யா இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்ததிலிருந்து பொருட்களின் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி செயன்முறை சீர்குலைந்துள்ளதாக வெளிநாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மியான்மர் முன்னாள் தலைவர் ஆங் சான் சூ ச்சீக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை !

மியான்மர் முன்னாள் தலைவர் ஆங் சான் சூகிசீக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மியான்மர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மியான்மர் முன்னாள் தலைவர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளில் அவரை குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

மியான்மரின் இராணுவத்தினர் கடந்த வருடம் பிப்ரவரி 2021 இல் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக அரசாங்கத்தை கவிழ்த்து இராணுவ ஆட்சியை கொண்டு வந்தனர்.

அப்போதிருந்து, ஆங் சான் சூகிசீக்கு எதிராக பல வழக்குகள் நடத்தப்பட்டு வந்தன. 76 வயதான சூகி தற்போது வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முதல் முறையாக பறவை காய்ச்சல் மனிதருக்கும் பரவுகிறது – சீனாவில் இருந்து புதிய காய்ச்சல் !

சீனாவின் ஹெனான் மாகாணத்தில் முதல் முறையாக பறவை காய்ச்சல் மனிதருக்கு பரவி உள்ளது என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

பறவை காய்ச்சலின் ‘எச்3 என்8’ திரிபு முதல் மனித நோய்த்தொற்றை பதிவு செய்துள்ளதாக சீனாவின் தேசிய சுகாதார  ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

காய்ச்சல் உள்ளிட்ட பல அறிகுறிகள் காணப்பட்ட 4 வயது சிறுவனுக்கு பறவை காய்ச்சல் நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. வீட்டில் வளர்க்கப்படும் கோழிகள் மற்றும் காகங்கள் மூலம் பறவை காய்ச்சல் மனிதர்களுக்கு பரவி இருக்கும் என்று தெரிவித்துள்ளனர்.

சிறுவனுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த யாருக்கும் வைரஸ் பாதிப்பு ஏற்படவில்லை.

இது தொடர்பாக சுகாதார ஆணையம் கூறும்போது, ‘எச்3 என்8’ வைரஸ் மாறுபாடு பறவைகள், குதிரைகள், நாய்கள் ஆகியவற்றில் கண்டறியப்பட்டது.  ஆனால் இந்த வைரஸ் மனிதர்களுக்கு பரவியதாக எதுவும் பதிவாகவில்லை. ஆரம்ப ஆய்வுகளின்படி இந்த மாறுபாடு இன்னும் மனிதர்களை திரும்ப பாதிக்கும் திறனை கொண்டிருக்கவில்லை. பெரிய அளவிலான தொற்று நோய்க்கான ஆபத்து குறைவாக உள்ளது-. எச்3 என்8 பறவை காய்ச்சல் வைரஸ் மக்களிடையே பரவுதற்கான ஆபத்து குறைவாகவே உள்ளது என்று தெரிவித்துள்ளது.

ஏற்கனவே சீனாவின் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் மனிதர்களுக்கு பரவி உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

‘நான் கருத்து சுதந்திரம் என்று சொன்னவுடன் அனைவரும் அச்சம் கொண்டுள்ளனர்.’ – எலான் மஸ்க்

பிரபல சமூக வலைதளங்களில் ஒன்றான டுவிட்டரின் கருத்து சுதந்திரம் குறித்து உலகின் முன்னணி கோடீஸ்வரரும், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனருமான எலான் மஸ்க் கடந்த சில மாதங்களாக கேள்வி எழுப்பி வந்தார். பின் டுவிட்டரை வாங்குவதற்கு எலான் மஸ்க், டுவிட்டர் நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளையும் வாங்க முன் வந்தார்.
டுவிட்டர் நிறுவனமும்  4,400 கோடி அமெரிக்க nlhலருக்கு எலான் மஸ்கிடம் விற்பனை செய்ய  சம்மதம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் டுவிட்டரில் கருத்து சுதந்திரம் குறித்து எலான் மஸ்க் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது:-
நான் கருத்து சுதந்திரம் என்று சொன்னவுடன் அனைவரும் அச்சம் கொண்டுள்ளனர்.  கருத்து சுதந்திரம் என நான் குறிப்பிடுவது அந்நாட்டின் சட்டத்திட்டங்களுக்கு உட்பட்ட சுதந்திரத்தை தான். ஒரு நாட்டின் சட்டத்திற்கு புறம்பான கருத்துக்களை பரப்புவதற்கு என்றும் நான் எதிரானவன்.
ஒரு நாட்டின் சட்டத்திற்கு புறம்பாக செயல்படுவது அந்நாட்டு மக்களின் விருப்பதிற்கு எதிராக செயல்படுவது ஆகும். இவ்வாறு எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

எலான் மஸ்க் வசமாகிறது ட்விட்டர் !

சமீபத்தில் ட்விட்டர் சமூக வலைதளத்தில் பயனர்களின் கருத்து சுதந்திரம் குறித்து கேள்வி எழுப்பியிருந்தார் உலக பணக்காரரும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனருமான எலான் மஸ்க். தொடர்ந்து அந்நிறுவனத்தின் 9.2 சதவீத பங்குகளை வாங்கியிருப்பதாக அவர் தெரிவித்திருந்தார். மேலும், டுவிட்டரில் எடிட் பட்டன் குறித்தும் அவர் பேசியிருந்தார். அதன்பின், டுவிட்டர் நிறுவனத்தின் ஒரு பங்கை 54.20 அமெரிக்க டொலர்களுக்கு வாங்க முன்வந்தார்.
இந்நிலையில், டுவிட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டொலருக்கு வாங்க எலான் மஸ்க் ஒப்புக்கொண்டுள்ளார். டுவிட்டர் நிறுவனத்துடன் நடந்த பேச்சுவார்த்தையில் இந்த தொகைக்கு இருதரப்பும் சம்மதம் தெரிவித்துள்ளது.  தொகை பரிமாற்றம், மஸ்க் வாங்கிய பிறகு டுவிட்டர் நிறுவனத்தை வழிநடத்துவது யார் போன்ற விவரங்கள் வெளியாகவில்லை.

58.2 சதவீதம் வாக்குகள் பெற்று மீண்டும் பிரான்சின் ஜனாதிபதியானார் இமானுவல் மக்ரோன் !

பிரான்ஸ் ஜனாதிபதித் தேர்தலின் முதல் கட்டம் கடந்த 10ஆம் திகதி நடைபெற்றது. இந்தத் தேர்தலில் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் மக்ரோன் உட்பட மொத்தம் 12 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர்.

மெக்ரொன் பிரான்ஸில் இரண்டாவது முறையாகவும் ஜனாதிபதியாக தெரிவு! - தமிழ்வின்

இமானுவல் மக்ரோனுக்கும், வலதுசாரி வேட்பாளரும், பெண் சட்டத்தரணியுமான மரைன் லு பென்னுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. முதல் சுற்று தேர்தலில் எந்த வேட்பாளரும் பெரும்பான்மை வாக்குகளைப் பெறவில்லை. இதனால் நேற்று நடந்த பிரான்ஸ் ஜனாதிபதித் தேர்தலின் இரண்டாம் கட்டத்தில் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கையில் மக்ரான் 58.2 சதவீதம் வாக்குகள் பெற்று மீண்டும் ஜனாதிபதியாக பதவியேற்க உள்ளார்.

இந்நிலையில், இரண்டாவது முறை ஜனாதிபதியாக மீண்டும் தேர்வு செய்யப்பட்டதை அறிந்த இமானுவல் மக்ரோன், வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.

மேலும், இரண்டாவது முறையாக பிரான்ஸ் ஜனாதிபதியாக வெற்றி பெற்றுள்ள இமானுவல் மக்ரானுக்கு பிரிட்டன் பிரதமர் பொரிஸ் ஜோன்சன், இத்தாலிப் பிரதமர் மரியோ டிராகி, போர்த்துக்கல் பிரதமர் அண்டோனியோ கோஸ்டா உள்ளிட்ட பல்வேறு நாட்டுத் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

மனிதாபிமான வெளியேற்றத்தைத் தொடங்குவதற்கு தயார் – மரியுபோலில் போர் நிறுத்தத்தை அறிவித்த ரஷ்யா !

மரியுபோல் உருக்கு ஆலையைச் சுற்றி போர்நிறுத்தத்தை ரஷ்யா அறிவித்துள்ளது. அப்பகுதியில் தஞ்சமடைந்துள்ள பொதுமக்களை வெளியேற்ற அனுமதிக்கும் வகையில் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்ய துருப்புக்கள் இன்று முதல் ஒருதலைப்பட்சமாக எந்தவொரு தாக்குதலையும் நடத்தாமல், பாதுகாப்பான தூரத்திற்கு துருப்புகளை திரும்பப் பெற்று, குடிமக்கள் வெளியேறுவதை உறுதி செய்யப்படும் எனறு ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
‘பொதுமக்கள் எந்த திசையில் செல்ல விரும்புகிறார்களோ அங்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். அசோவ்ஸ்டல் உருக்கு ஆலையில் இருந்து மனிதாபிமான வெளியேற்றத்தைத் தொடங்குவதற்கு தயார் நிலையில் இருப்பதை காட்டும் வகையில், உக்ரைன் தரப்பு அங்கு வெள்ளைக் கொடிகளை உயர்த்த வேண்டும். ஆலையில் உள்ளவர்களுக்கு ரேடியோ சேனல்கள் வழியாக ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்படும்’ என்றும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் கூறி உள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – பரிசுத்த பாப்பரசர் வெளியிட்டுள்ள கோரிக்கை !

உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கு யார் காரணம் என்பதை இலங்கை அரசாங்கம் தெளிவுபடுத்தவேண்டும் என பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வத்திக்கானில் இடம்பெற்ற விசேட ஆராதனையின் போது அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

தயவுசெய்து நீதிக்காக-உங்களின் மக்களிற்காக இந்த சம்பவங்களிற்கு யார் காரணம் என்பதை நிச்சயமாக தெளிவுபடுத்துங்கள் என பாப்பரசர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது நாட்டிற்கு அமைதியையும் மனச்சாட்சியையும் கொண்டுவரும் என அவர் தெரிவித்துள்ளார். இந்த ஆராதனையின் போது பரிசுத்த பாப்பரசர் இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்துள்ளார்.

இலங்கை – இந்தியா மின்பாதை அமைப்பு முயற்சி – சேதுக்கால்வாய் திட்டத்திற்கு மூடு விழா நடத்துவதற்கான தொடக்கம் என்கிறார் ராமதாஸ் !

இலங்கை -இந்தியா மின்பாதையை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

தமிழக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை இலங்கைக்கு கொண்டு செல்வதற்கு வசதியாக மதுரையிலிருந்து இலங்கையின் அனுராதபுரம் பகுதிக்கு கடல் வழியாக மின்பாதை அமைக்கும் திட்டம் நீண்ட காலமாக இரு நாடுகளின் பரிசீலனையில் இருந்து வருகிறது. 2000-ஆவது ஆண்டுகளின் பிற்பகுதியில் இத்திட்டத்தை செயல்படுத்த முயற்சிகள் நடந்த போது, அதற்கு தமிழ்நாட்டில் கடுமையான எதிர்ப்பு எழுந்தது. அதனால் அத்திட்டம் கைவிடப்பட்டது.

அதன்பின் 2010-ஆம் ஆண்டுகளின் தொடக்கத்தில் இந்தியா -இலங்கை இடையே மின்சார கோபுரங்களை அமைத்து மின்சாரத்தை கொண்டு செல்வதற்கு திட்டமிடப்பட்டது. ஆனால், அத்திட்டமும் தமிழ்நாட்டின் ஆதரவு இல்லாததால் கிடப்பில் போடப்பட்டது.

கடந்த 20 ஆண்டுகளில் இரு முறை கைவிடப்பட்ட இந்தியா – இலங்கை மின்பாதை திட்டத்தை மீண்டும் செயல்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே பேச்சுகள் தொடங்கியிருப்பதாகவும், அவை தொடக்க நிலையில் இருப்பதாகவும் இலங்கை அரசின் மின்துறை செயலாளர் வசந்த பெரேரா தெரிவித்துள்ளார். இந்த முயற்சி பொதுவாக இந்திய நலனுக்கும், குறிப்பாக தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் பாதகமாக அமையும் என்பதே உண்மை.
இலங்கைக்கு கடல் வழியாக மின்சாரப் பாதை அமைக்கும் திட்டம் குறித்து இதற்கு முன் பேசப்பட்ட போதெல்லாம் அதற்கு தமிழகத்தில் கடுமையான எதிர்ப்பு எழுந்தது. அதற்கான முக்கியக் காரணம், கடந்த காலங்களில் இத்திட்டம் குறித்த பேச்சுகள் தொடங்கப்பட்ட போது தமிழ்நாடு கடுமையான மின்வெட்டை எதிர்கொண்டு வந்தது. இப்போது தமிழகத்தின் மின்வெட்டு கட்டுப்படுத்தப்பட்டு விட்ட போதிலும் கூட, இலங்கைக்கு மின்பாதை அமைப்பதை எதிர்க்க இன்னும் பல காரணங்கள் உள்ளன.
சேது சமுத்திரம் திட்டம் தென் தமிழகத்தின் வளர்ச்சிக்கான கனவுத் திட்டம் ஆகும். பல்லாண்டு கால போராட்டத்திற்குப் பிறகு தான் அத்திட்டத்திற்கு செயல்வடிவம் கொடுத்து தொடங்கப்பட்டது. ஆனால், அத்திட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகள் காரணமாக சேது சமுத்திர திட்டப் பணிகள் முடக்கி வைக்கப்பட்டுள்ளன. இன்றைக்கு இல்லாவிட்டாலும் என்றாவது ஒரு நாள் சேதுக்கால்வாய் திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும்; இலங்கையை சுற்றிச் செல்லும் பன்னாட்டு சரக்குக் கப்பல்கள் தூத்துக்குடி, இராமேஸ்வரம், வேதாரண்யம், காரைக்கால் வழியாக செல்ல வேண்டும்; அதன் காரணமாக அப்பகுதிகளில் பொருளாதார வளர்ச்சி ஏற்படுத்தப்பட வேண்டும் என்பது தான் தமிழகத்தின் எதிர்பார்ப்பு ஆகும். அது நிறைவேறுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.
ஆனால், இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே கடலுக்கு அடியிலோ, மின் கோபுரங்கள் அமைத்து கடலுக்கு மேலாகவோ மின் பாதை அமைக்கப்பட்டால், அத்துடன் சேதுக்கால்வாய் திட்டத்திற்கு மூடு விழா நடத்தப்பட்டு விடும். இது இந்தியாவுக்கு பாதகமாகவும், இலங்கைக்கு சாதகமாகவும் அமையும். இலங்கைக்கு மட்டுமே பயனளிக்கக்கூடிய மின்பாதை திட்டத்திற்காக தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், இந்தியாவின் முன்னேற்றத்திற்கும் பங்களிக்கக்கூடிய சேதுக்கால்வாய் திட்டத்தை எதற்காக இழக்க வேண்டும்?
சேதுக்கால்வாய் திட்டம் கைவிடப்படுவதும் இலங்கை அரசுக்குத் தான் லாபமாக அமையும்.

இவை அனைத்தையும் கடந்து இலங்கை போர்க்குற்றங்களை நிகழ்த்திய நாடு, தமிழர்களை இனப் படுகொலை செய்த நாடு, இத்தகைய குற்றங்களுக்காக ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் விசாரணையை எதிர்கொண்டு வரும் நாடு என்பதை மத்திய, மாநில அரசுகள் மறந்து விடக் கூடாது.

இலங்கை கடுமையான அரசியல், பொருளாதார நெருக்கடிகளை சந்தித்து வரும் சூழலில், அந்நாட்டுக்கு கருணை அடிப்படையில் உதவிகளை செய்வது வேறு; அந்நாட்டின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த உதவுவது வேறு என்பதில் இந்தியா தெளிவாக இருக்க வேண்டும். அதேபோல், சீனாவின் ஆதிக்கத்தைத் தடுப்பதாகக் கூறிக் கொண்டு, கண்களை மூடிக் கொண்டு இலங்கைக்கு உதவுவதும் தவறு ஆகும்.இலங்கைக்கு செய்யப்படும் உதவிகள் ஒருபோதும் இந்தியாவுக்கு எதிராக அமைந்து விடக் கூடாது. பாகிஸ்தானின் பக்கம் இலங்கை சாய்ந்து விடக் கூடாது என்பதற்காக கச்சத்தீவை தாரை வார்த்ததன் விளைவை இப்போது வரை தமிழகம் தான் அனுபவித்துக் கொண்டிருக்கிறது.

அதேபோல், சேதுக்கால்வாய் திட்டத்தை தாரை வார்த்து இலங்கைக்கு மின்பாதை அமைப்பதன் பாதிப்பையும் தமிழகம் தான் அனுபவிக்கும். இவற்றைக் கருத்தில் கொண்டு இலங்கை & இந்தியா மின்பாதையை மத்திய அரசு கைவிட வேண்டும்” என்று குறித்த அறிக்கையில்  கேட்டுக்கொண்டுள்ளார்.