23

23

கொழும்பில் பதியும் நடைமுறை தமிழர்களுக்கு மட்டுமானதல்ல. சகலரதும் பாதுகாப்புக்கும் முக்கியம் – பொலிஸ் மா அதிபர்

கொழும்பில் தங்கியிருப்பவர்கள் தம்மை பொலிஸில் பதிவு செய்து கொள்வது அவர்களது சொந்தப் பாதுகாப்புக்கு மிகவும் முக்கியமானதாகும். எனவே, இவ்விடயம் தொடர்பாக சட்டத்தை அமுலாக்கும் அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையொன்றில் கூறப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:-

கொழும்பில் குடியிருப்பாளர்கள் தம்மை பொலிஸில் பதிவு செய்து கொள்ளும் நடைமுறை தமிழ் மக்களுக்கு மட்டுமேயான பாரபட்ச செயற்பாடு என காட்டுவதற்கு சில சுயநல அக்கறை கொண்ட தரப்பினர் முயற்சித்து வருவது தெரிய வந்துள்ளது.

இது உண்மைக்கு மாறுபட்ட எந்த அடிப்படையும் அற்ற கூற்றாகும். அத்துடன் பாதுகாப்பு படையினர் இன விரோத நோக்குடன் அநீதியாகவும், கொழும்பில் வாழும் தமிழ் சமூகத்துக்கு பாரபட்சமாகவும் நடந்து கொள்வதாக உலகத்துக்கு காட்ட முயற்சிக்கும் வகையிலானதாகும்.

இதற்கு மாறுபட்ட வகையில் பொலிஸ் கட்டளைக்கோவையின் கீழ் பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் அவ்வாறான ஆட் பதிவினை அதிக பட்ச சமூக பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும், பொறுப்புடைமை மற்றும் அனைத்து மக்களினதும் இன பாகுபாடு பாராமலும் இவ்வாறான பதிவு நடவடிக்கையை மேற்கொள்ளுகின்றனர்.

இவ்விடயம் தொடர்பாக குறிப்பிடப்படும் வெள்ளவத்தை பொலிஸ் பிரிவில் பெரும்பான்மையாக தமிழ் மக்கள் மட்டுமன்றி அப்பிரதேசத்தில் உள்ள சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களும் பதிவு செய்யப்பட்டுள்ளனர் என்பதை இங்கு குறிப்பிட வேண்டியது அவசியமாகிறது.

எனவே தமது சொந்த பாதுகாப்புக்கு மிகவும் முக்கியத்துவம் பெறும் இந்த பதிவு நடைமுறையை வெற்றிகரமாக செயற்படுத்துவதற்கு பொது மக்கள் சட்டத்தை அமுலாக்கும் அதிகாரிகளுக்கு தமது ஒத்துழைப்பை வழங்குமாறு பொலிஸார் அறிவுறுத்துகின்றனர் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மீள் குடியமர்வோரின் வாழ்வாதாரத்திற்கு ரூ. 25,000 – அமைச்சரவை அங்கீகாரம்

Check_Pointவட மாகாணத்திற்குள் இடம்பெயர்ந்த மக்கள் மீள் குடியமர்த்தப்பட்டவுடன் அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக ஒவ்வொரு குடும்பதிற்கும் 25 ஆயிரம் ரூபா வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்காக உலக வங்கியின் அபிவிருத்தி நிறுவனத்தினூடாக 10.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அவசர வடக்கு புனரமைப்பு திட்டத்தின் கீழ் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினூடாக இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படும். இந்தத் திட்டம் 2012 டிசம்பர் வரை மேற்கொள்ளப்படும். நிரந்தர வழிவகைகள் மூலம் வருமானம் கிடைக்கும் வகையில் மீள்குடியேற்றப்பட்ட மக்கள் தொழி லொன்றில் ஈடுபடுவதற்காக இந்த உதவி வழங்கப்படும். நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்படி அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்துள்ளார்.

இந்தியாவுடனான முதல் டெஸ்ட் – இலங்கை அணி பத்து விக்கெட்டால் வெற்றி

முரளிதரனின் ஓய்வுடன் இலங்கை அணி இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்டுகளால் அபார வெற்றியீட்டியது மட்டுமல்லாமல் முரளியின் ஓய்வின் பரிசாகவும் சமர்ப்பணம் செய்துள்ளது.

இலங்கை அணிக்கு வெற்றி இலக்கை 95 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில் 2வது இன்னிங்சைத் தொடர்ந்த இலங்கை அணி விக்கெட் இழப்பின்றி 96 ஓட்டங்களைப் பெற்றது.

அதேநேரம் இலங்கை அணி தொடரை 1-0 என முன்னிலையில் உள்ளது. இப் போட்டியின் ஆட்டநாயகனாக மலிங்க தெரிவு செய்யப்பட்டார்.

ஸ்கோர் விபரம்
இலங்கை முதல் இன்னிங்ஸ் 520-8
பரணவிதாரன 111, சங்கக்கார 103, ஹேரத் 80 (ஆ- இ) மலிங்க 64 மிதுன் 105-4, சர்மா 3-145

இந்தியா முதல் இன்னிங்ஸ் 276
செவாக்-109, யுவராஜ் சிங் 52, முரளிதரன் 5-63, மலிங்க 2-55
இந்தியா 2வது இன்னிங்ஸ் 228
டெண்டுல்கர் 84, லஷ்மன் 69
இலங்கை இரண்டாவது இன்னிங்ஸ் 96
பரணவிதாரன 23 (ஆ/இ), டில்சான் 68 (ஆ/இ)