07

07

TNA பெரும்பான்மையான ஆசனங்களைப் பெறும்! ஏகபோகப் பிரதிநிதித்துவத்தை இழப்பர்! : த சோதிலிங்கம் & த ஜெயபாலன்

imagescavpjl09.jpgஇம்முறை தேர்தலில் வடகிழக்குப் பகுதிகளில் எல்லா விதமான தேர்தல் பிரச்சார முறைகள், தந்திரங்கள் யுக்திகளையும், சுதந்திரமாகப் பயன்படுத்தியுள்ளனர். வெறுமனே சுவரொட்டிகள், கூட்டங்கள் என்று மட்டும் இல்லாமல், வீடு வீடாகப் போய் வாக்குக் கேட்பதும், தங்கள் சின்னங்களை வாகனங்களில் கொண்டுசென்று ஊர் ஊராக திரிந்து ஒலிபெருக்கி பாவித்து பிரச்சாரங்கள் மேற்கொள்வதுடன், தங்கள் தொகுதிகளில் பெருமளவு கட்சிக் கூட்டங்களையும் நடாத்தியுள்ளனர். தெரு நாடகங்கள் கூட இந்த தேர்தல் பிரச்சாரங்களில் இடம்பெற்றுள்ளது. அந்தவகையில் இந்த தேர்தல் பிரச்சாரங்கள் பலவழிகளிலும் சிறப்பாக நடைபெற்றுள்ளது. தெருநாடகங்களை பல்வேறு கட்சிகள் நடாத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. சகல கட்சியினரும் வீடு வீடாகப்போய் வாக்குக் கேட்பது வழமைக்கு மாறாகவே நடைபெற்றுள்ளது. இன்று (6.4.2010) தேர்தல் பிரச்சாரங்கள் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இன்னமும் தேர்தல் பிரச்சாரங்கள் தொடர்ந்த வண்ணமே இருக்கின்றது.

சுயேட்சைக் குழுக்களைப் பொறுத்த வரையில் அவர்களிடம் பாரிய பணவசதிகள் இருந்திருக்கவில்லை. ஆனால் பெரிய கட்சிகளைப் பொறுத்த வரையில் குறிப்பாக அரசு அரசுசார் கட்சிகள் ஈபிடிபி மற்றும் மக்கள் சுதந்திரமுன்ணணி மிகப் பணப் பலத்தைக் காட்டிய தேர்தல் பிரச்சாரமாக இருந்திருக்கிறது. இதைவிட ரிஎன்ஏ யில் இருந்து பிரிந்து சென்ற கஜேந்திரகுமாரின் கட்சிகூட தீவிரமான பிரச்சாரங்களை மேற்கொண்டுள்ளது. இந்தத் தேர்தல் பிரச்சாரங்களில் வாகன தொடர் பிரச்சார அணிகள் இயங்கியுள்ளது. அதாவது 6, 7 வாகனங்கள் தொடர்ச்சியாக ஒலிபெருக்கியுடன் வடகிழக்குப் பகுதிகளின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் போய்ப் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப் பட்டுள்ளது. கிட்டத்தட்ட ஒவ்வொரு கிராமங்களிலும் குறிச்சிகளிலும் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்கள் நடைபெற்றுள்ளது. அண்மைய எந்தக் காலத்திலும் இல்லாதளவு தேர்தல் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நாட்டின் இதர பகுதிகளில் இதுபோன்ற பிரச்சாரங்கள் நடைபெற்றிருந்த போதும் வடகிழக்கில் நீண்ட காலங்களுக்கப் பின்னர் இதுதான் முதல்தரம் இப்படியான பிரச்சாரங்கள் நடைபெறுகின்றது.

தேர்தல் வன்முறைகள் எனும்போது ஆங்காங்கு சில சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. இதில் சில ஜரோப்பாவில் உள்ள ஊடகங்களில் பெரிதுபடுத்தப்பட்டு தேர்தல் வன்முறை என்றும், ஜனநாயக மீறல்கள் என்றும் சித்தரிக்க முற்பட்டுள்ளன. ஆனால் தேர்தல் பிரச்சாரங்கள் அமைதியாகவே நடைபெற்றுள்ளது முக்கியமாக நாம் இதை கூறுவது என்பது 9 ஆசனங்களுக்கு 324 வேட்பாளர்கள் தேர்தலில் நிற்கும்போது வன்முறைகள் இல்லாதிருப்பதாகவே நாம் இதைக் கருத வேண்டும். சுவரொட்டிகள் கிழிக்கப்பட்டுள்ளது, வாகனங்களுக்கு கல் எறியப்பட்டுள்ளது. இவைகளை பாரிய வன்முறைச் சம்பவங்களாக நாம் சொல்ல முடியாது.

மற்றும் முக்கியமாக ஈபிடிபி மீதும் குற்றம் சாட்டப்பட்டு வெளிவந்த சாகவச்சேரி மாணவன் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பரவலாக யாழில் பேசப்பட்டது இதை உதயன் பத்திரிகை மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து பிரசுரித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. இதை ஈபிடிபியுடன் தொடர்புபட்ட சம்பவம் எனவும் ஈபிடிபி மீது குற்றம் சாட்டியும் உதயன் பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது. இதை ஈபிடிபி முற்றாக மறுத்துள்ளது. மேலும் உதயன் பத்திரிகையின் உரிமையாளர்கள் ரிஎன்ஏயின் முக்கிய வேட்பாளர்களாக இருப்பதால் இந்த செய்தியின் நம்பகத்தன்மை என்பது கேள்விக்குரியதாகவே உள்ளது.

சுயாதீனமாக இயங்க வேண்டிய ஊடகங்களைச் சார்ந்தவர்கள், உரிமையாளர்கள் இம்முறை தேர்தலில் குதித்துள்ளனர் குறிப்பாக உதயன் சரவணபவன், வீரகேசரி சிறீகஜன். இதன் காரணமாக பத்திரிகை ஊடகங்களின் நம்பகத்தன்மை மிகவும் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது. உதாரணமாக ஈபிடிபியை சாகவச்சேரி மாணவனின் கொலையுடன் சம்பந்தப்படுத்தி உதயன் மட்டுமே செய்தி வெளியிட்டிருந்தமை கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த உதயன் பத்திரிகை தனது கட்சிப் பிரச்சாரத்திற்கான முக்கிய இயந்திரமாக வட கிழக்கில் செயற்படும் போது இப்பத்திரிகைகளின் நம்பகத்தன்மை கேள்விக்குள்ளாகியுள்ளது.

வடகிழக்கைப் பொறுத்த வரையில் தமிழ் மக்கள் தேர்தலில் பாரிய ஆர்வம் காட்டவில்லை ஆனால் வேட்பாளர்கள் கடுமையான பிரச்சாரப் போட்டிகளில் ஈடுபட்டுள்ளனர். 9 வேட்பாளர் தெரிவுக்கு 324 பேர் போட்டியிடுவதை பலபேர் பங்கு பற்றும் ஜனநாயகமாக பார்க்கப்படுகின்ற போதிலும் இந்த அதீததொகையான பங்கெடுப்பு ஒரு ஜனநாயக கேலிக்கூத்தாகவே தெரிகிறது.

பயங்கரவாதம் ஆயுத வன்முறை இருந்தகாலத்தில் மக்கள் அடக்கப்பட்டிருந்ததின் பின்னர் ஜனநாயக சூழ்நிலை ஏற்ப்பட்டபோது மக்கள் தாமே பிரதிநிதித்துவம் கொடுக்க முன்வருகிறார்கள் என்று பார்க்க நாம் முனைகின்ற போதிலும், இந்த தொகையான வேட்பாளர்கள் தேர்தலில் நிற்பது ஒரு சமனற்ற நிலைமை உள்ளதை அவதானிக்ககூடியதாக இருக்கிறது. இது மக்களையும் தேர்தலில் இருந்து என்ன இது? ஏன் இது? என்ற யோசனையை உருவாக்கிவிட்டுள்ளது. யாழ் மாவட்டத்தில் 2 லட்சத்து 50ஆயிரம் வாக்காளர்கள், 324 வேட்பாளர்கள் என்பது ஒரு சிரிப்பாகவே உள்ளது.

யாழ் மற்றும் வட-கிழக்குப் பகுதிகளில் பொலீஸ் இராணுவ பாதுகாப்புப் படையினர் மிகவும் நடுநிலைமையாகவே இருக்கிறார்கள். இவர்கள் பாரபட்சமாகவோ அல்லது சார்ந்தோ நடந்ததாக எந்த தகவல்களும் இல்லை. பணபலம் பொருந்திய கட்சிகள் மிகவும் மும்முரமாகவே உதாரணமாக அரசசார்பு கட்சிகள் முன்னணியிலிருந்து பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது வடக்கில் அரசினால், பொலீசாரினால், அரச போக்குவரத்து சேவைகளினால், ஈபிடிபியினால் சில இடைஞ்சல்கள் ஏற்ப்படுத்தப்பட்டதாக சில தேர்தல் பிரச்சாரஙகளில் ஈடுபட்ட கட்சிகளின் உறுப்பினர்கள் தெரிவித்திருந்தினர். ஆனால் இம்முறை இப்படியான கருத்துக்கள் எழுவதற்க்கு கூட சந்தர்ப்பம் இல்லாமல் அரசு விடயங்களை கவனித்துக் கொண்டுள்ளது. வடகிழக்கில் எந்தப் பகுதிக்கும் யாரும் போகக்கூடிய சூழ்நிலைகள் உள்ளது. இரவிலும் கூட சுதந்திரமாக நடமாட முடிகிறது.

யாழில் ஜனாதிபதி பேசிய விடயம் தமிழர்களை இழிவுபடுத்தியதாக ஜரோப்பாவில் நடைபெறும் பிரச்சாரங்கள் உட்பட மற்றய எந்தப் பிரச்சாரங்களும் இலங்கை வட கிழக்குப்பகுதிகளில் பிரதிபலிப்பை செய்வதாக இல்லை. அரசு மீது தமிழ் மக்கள் எதிர்ப்புணர்வை வைத்திருக்கிறார்கள் அதை பிரதிபலித்து தமது எதிர்ப்புக்களை தெரிவிக்கிறார்களே தவிர மற்றும்படி அரச மேற்கொள்ளும் எந்த நடவடிக்கை மீதும் மக்கள் சுதந்திரமாக தமது கருத்துக்களை முன்வைக்கிறார்கள். அரசு மீதுள்ள வெறுப்பு போன்றே தமிழ் மக்கள் தமிழ் கட்சிகள் மீதும் வெறுப்பாக இருப்பதை அவதானிக்க கூடியதாக உள்ளது, இந்த தேர்தலில் தமிழ் மக்கள் ஆர்வம் காட்டாததிற்கும் இந்த தமிழ் கட்சிகள் மீதுள்ள வெறுப்பும் ஒரு காரணமாகவே உள்ளது.

தற்போது இந்த தேர்தலில் நிற்கும் தமிழ் வேட்பாளர்கள் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப் படுத்துபவர்கள் அல்ல என்ற எண்ணப்பாடு மக்களிடையே பரவலாக உள்ளது. மக்கள் தேர்தலில் ஆர்வமாக இல்லாததிற்கு இதை முக்கிய காரணமாக கூறமுடியும்.

இந்த தேர்தலில் ரிஎன்ஏ ஏகப்பிரதிநிதித்துவத்தை இழந்து விடும். கடந்த தேர்தலில் 22 ஆசனங்களைப்பெற்ற ரிஎன்ஏ இம்முறை பத்து ஆசனங்களுக்கு உள்ளாகவே தமது பிரதிநிதித்தவத்தை பெறும் என்பதே இந்த சூழ்நிலைகளை வைத்துப் பார்க்கும்போது தெரிகின்றது ஆனால் வடகிழக்கு பகுதிகளில் பெரும்பான்மை ஆசனங்களை ரிஎன்ஏ தான் பெறும் நிலை உள்ளது ஆனால் ஏகப்பிரதிநிதித்துவத்தை இழந்துவிடுவார்கள்.

வடகிழக்குப் பிரதேசங்களில் 25 சதவிகித ஆசனங்களை தமிழ் மக்கள் இழப்பர் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. பெரும்பாலும் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, வன்னி போன்ற பிரதேசங்களில் 5 அல்லது 6 ஆசனங்களை முஸ்லீம் அல்லது சிங்கள பிரதிநிதிகளுக்கு இழந்து விடுவர் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இது தமிழர்களில் பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் அண்ணளவாக 25 சதவிகித்ததால் குறைந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கிளிநொச்சி மாவட்டத்தை பொறுத்தமட்டில் மீள்குடியேற்றம் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையிலேயே உள்ளது. மக்கள் பல்வேறு கிராமங்களுக்கு மீள் குடியேற்றப்படாமலும் அரசின் உத்தரவை எதிர்பார்த்தும் உள்ளனர். இம் மக்களின் மீள்குடியேற்றத்திற்கு திட்டவட்டமான கால அட்டவணை அரசு வழங்காமல் இருப்பது அந்த மக்களுக்கு அரசுமீது மிகுந்த வெறுப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.

முகாம்களில் உள்ள கிளிநொச்சி மக்கள் தமிழ் அரசியற் கட்சிகள், தமிழ் தேர்தல் வேட்பாளர்கள் மீது மிகவும் கடுமையான விமர்சனத்தை வைத்துள்ளார்கள், தமிழ் அரசியல்வாதிகள் மீது மிகுந்த கோபம் கொண்டுள்ளனர். என்றுமே தங்களிடம் வராத கட்சிகள் வேட்பாளர்கள் தமது முகாம் நிலைமைகளை கவனத்தில் கொள்ளாதவர்கள் எல்லோரும் இன்று தமது வாக்கு தேவைக்காக, தமது சுயநலத்திற்காக தம்மிடம் படையெடுத்து வந்துள்ளதாக கோபம் கொண்டுள்ளனர். இம்மக்களைப் பொறுத்தவரையில் இத்தமிழ் வேட்பாளர்கள் தமது சுயலாபத்ததிற்காகவே தேர்தலில் நிற்பதாகவும் மக்கள் நலன் என்பது இவர்களின் வேசம் என்றே கருத்துத் தெரிவித்தனர்.

இந்த தேர்தலின் போக்கில் முக்கிய கருத்தாக உள்ள வேறு ஒருவிடயம் என்னவெனில் புலம்பெயர் மக்களின் ஆதரவுடன் ரிஎன்ஏயிலிருந்து பிரிந்து தேர்தலில் நிற்கும் தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணி (காங்கிரஸ்) மீதும் மிகப்பெரும் அதிருப்தி உள்ளது. இந்த காங்கிரசின் தேர்தல், புலம்பெயர் மக்களின் அரசியலை நிர்ணயிக்கிற தேர்தலாகவும் இத்தேர்தல் அமையப்போகிறது. அதாவது புலம்பெயர் மக்களின் அரசியல் ஆதரவு கொண்ட இந்த தமிழ்தேசியத்திற்கான மக்கள் முன்னணிக்கு வட கிழக்கில் தமிழ்மக்கள் மத்தியில் ஆதரவு இல்லை என்பதே உண்மை.

இந்த தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணி மீது மிகுந்த சந்தேகம் தமிழ்மக்கள் மத்தியில் உள்ளது இலங்கை அரசு பல்வேறு சுயேட்சைக் குழுக்களை தேர்தலில் நிறுத்தியுள்ளது. அரசு நிதியினை வழங்கி தேர்தலில் போட்டியிட வைத்துள்ளதாக ஒரு கருத்து நிலவுகிறது. அதே குற்றச்சாட்டு இந்த தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணி மீதும் உள்ளது. இலங்கை அரசின் ஆதரவுடன் தமிழ் மக்களின் வாக்குகளை பிரிக்கவே போட்டியிடுகிறார்கள் என்ற எண்ணம் மக்கள் மத்தியில் உள்ளது.

தமிழ் மக்களின் பிரதிநிதித்துவப்படுததும் கட்சியாக ரிஎன்ஏ தான் உள்ளது. காரணம் மாற்று, புதிய மாற்றுக்கட்சிகள் இல்லாததால் தமிழர்களின் பிரதிநிதித்துவம் ரிஎன்ஏ தான் என்ற எண்ணப்பாடு மக்களிடம் உள்ளது. இதனால் அரசு ரிஎன்ஏயை இந்நிலையிலிருந்து வீழ்த்த பல வழிகளிலும் முயற்ச்சிக்கின்றது. இதன் ஒரு நிலையே ரிஎன்ஏயை தடைசெய்ய வேண்டும் என்று கூறுவதும் ரிஎன்ஏ யை விடமோசமாக பிரிவினை கூறும் தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணி என்ற (காங்கிரஸ்) கஜேந்திர குமாரின் கட்சியைப்பற்றி எதுவுமே பேசாமல் இருப்பது வெளிப்படையாகவே மக்களுக்குப் புரிந்துள்ளதை இங்கு கவனத்தில் எடுக்க வேண்டும். இந்த தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி மக்களிடமிருந்து அன்னியப்பட்டவர்களாகவே தெரிகிறது. இவர்கள் இந்தத் தேர்தலில் முற்றாக இழக்கும் வாய்ப்புக்கள் உண்டு. சில சமயங்களில் ஒரு ஆசனம்கூட கிடைக்காமலும் போகலாம்.

சிறீகாந்தா, சிவாஜிலிங்கம் உட்பட இடதுசாரி முன்னணி மிகவும் பலவீனமான நிலையிலேயே உள்ளனர். இன்று மிக முக்கிய போட்டியாளர்களாக யுஎன்பி, ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணி (ஈபிடிபி உட்பட), தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள், ரிஎன்ஏ இவர்களுக்கிடையேதான் கடுமையான போட்டி நிலவுகிறது. சுயேட்சைக் குழுக்களில் யாரும் முன்னணியாளர்களாகத் தெரியவில்லை. இவர்களை அரசு வாக்குகளை சிதறடிக்கவே பயன்படுத்துகிறது. தமிழ் மக்களின் பாராளுமன்றப் போராட்டம் பயனளிக்காமல் ஆயுதமேந்திப் போராடித் தோற்ற பின்னரும் இன்றைய தேர்தல் நிலைப்பாட்டை நோக்கையில் தமிழ் மக்கள் இலங்கை அரசு மீதான நம்பிக்கையை இழந்திருப்பதையே காணக்கூடியதாக உள்ளது. ஆயுதப் போராட்த்தின் தோல்வியும் இயலாமையும் ஒரு காரணம் எனலாம். இவ்வளவு இழப்பினாலும் பெறாத அரசியல்த்தீர்வை இந்தத் தேர்தலால், அரசியலால் பெற முடியும் என தமிழ்மக்கள் நம்பவில்லை. இந்த ஒட்டுமொத்த விரக்தி தமிழ்மக்களை அரசியலில், தேர்தலில் ஆர்வமற்ற போக்கை உருவாக்கியுள்ளது.

இத்தேர்தலில் உள்ள அடுத்த முக்கிய விடயம் சாதிய அடிப்படையிலான தேர்வுகளாகும். குறிப்பாக யாழ்ப்பாணத்தில் ஈபிடி கட்சி சாதிரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதியாகவே பார்க்கப்பட்டும் அறியப்பட்டும் வந்துள்ளது. சாதிரீதியாக ஒடுக்கப்பட்டவர்களின் ஆதரவு முழுமையாக ஈபிடிபிக்கும் கல்விநிலையில் வளர்ந்த மற்றவர்கள் ஈபிடிபியை ஒதுக்கிப் பேசும்நிலையும் மிகவும் வெளிப்படையாகவே யாழ்ப்பாணத்தில் தென்படுகிறது. இது யாழ்ப்பாணத்தில் ஒரு முக்கிய விடயமாக இருப்பதற்கு இந்த 9 ஆசனங்களுக்கான தேர்தல் போட்டியும் ஒரு முக்கிய காரணமாகும்.

சிறுபான்மைத் தமிழர் மகாசபையினர் சாதிரீதியாக ஒடுக்கப் பட்டவர்களின் சார்பாகப் போட்டியிடுவது ஈபிடிபிக்கு ஒரு போட்டியாக இருக்குமோ என்ற நிலை எழுந்துள்ள போதிலும் இந்த சிறுபான்மை தமிழர் மகாசபையினர் சுயேட்சையாகப் போட்டியிடுவது வாக்கு வங்கியில் பெரிய பங்கினைப் பெறமுடியாதவர்களாகவே உள்ளனர். இது பாரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் கருத்தை யாழில் போட்டியிடும் ஈபிடிபி வேட்பாளர் சந்திரகுமாரும் கொண்டிருந்தார். சந்திரகுமார் ஈபிடிபி 4 ஆசனங்களைப் பெறும் என்ற நம்பிக்கையைக் கொண்டிருந்த போதிலும், ஈபிடிபி பெரும்பாலும் ஓரிரு ஆசனங்களைப் பெறும் என நாம் எதிர்பார்க்கிறோம். ஆனால் இம்முறை தேசியப் பட்டியலில் கிடைக்கும் ஆசனங்கள் பெரும்பாலும் ஈபிடிபியினர்க்கே கிடைக்கும். ஈபிடிபியினரின் வாக்குவங்கி சிதைவடையாமல் இருப்பதுவும், தமிழ்த் தேசிய கூட்டணியினரின் வாக்குவங்கி சிதைவடைந்து இருப்பதையும் வெளிப்படையாகக் காணக்கூடியதாக உள்ளது.

வடக்கில் பெரும்பான்மை ஆசனங்களை ரிஎன்ஏயும் (10 அல்லது அதற்குக்குறைவாகவும்) ஈபிடிபி இரு ஆசனங்களையும், யுஎன்பி இரு ஆசனங்களையும், அரசுசார் மக்கள் தேசிய முன்னணி இரு ஆசனங்களையும் பெறும் சந்தர்ப்பங்கள் உள்ளது. கிழக்கில் தமிழ் மக்கள் புலிகள் இரு ஆசனங்களையும், திருகோணமலையில் ஒரு ஆசனம் சம்பந்தருக்கும், மற்றைய ஆசனங்கள் சிங்களவர்களுக்குமே போகலாம். (திருகோணமலையில் இரு தமிழ் ஆசனங்கள் இருந்திருந்தன.) வன்னியில் 3, 4 ஆசனங்கள் ரிஎன்ஏக்கும், சித்தார்த்தனுக்கு ஒரு ஆசனமும், பதியுதீனுக்கு ஒரு ஆசனமும் கிடைக்கலாம்.

TNA உள்ள ரெலோவை ஓரம்கட்டவே – வன்னியில் போட்டியிடும் செல்வம் அடைக்கலநாதனை தோற்கடிக்கவே – சூசைதாசனை வன்னியில் ரிஎன்ஏ நிறுத்தியதாக கருத்து உள்ள போதிலும் செல்வம் அடைக்கலநாதன் வன்னியில் வெற்றிபெறும் வாய்ப்புக்களே அதிகமாக உள்ளது.

இந்தத் தேர்தலில் நிற்கும் பல வேட்பாளர்கள் இன்று தமிழ் மக்களிடம் போகின்றார்கள், மக்களிடம் தீவிரமாகப் போகின்றார்கள், பணம்விரயம் செய்து போகின்றார்கள், எல்லாமே தங்களின் தேர்தல் லாபத்திற்க மட்டுமே, இந்த வேட்பாளர்கள் தங்கள் சுயநலத்திற்காகவே செய்கிறார்கள் என்பது வெளிப்படையான உண்மை இதை மக்கள் மிக உன்னிப்பாக அவதானித்தும் அதற்கேற்றாற்போல் நடந்தும் கொள்கிறார்கள். மக்கள் ஏமாளிகள் அல்ல என்பது இனிவரும் காலங்களில் நன்றாகவே தெரியவரும்.

மக்கள் கஷ்டப்பட்ட காலங்களில் மக்களுக்காக எதுவுமே செய்யாமல், மக்களுக்காக போராடாமால், தமது பதவிகளைத் துறந்து அரசுக்கு எதிர்ப்புக் காட்டாமலும், இன்று தமது நலனுக்காக மக்களிடம் போகிறார்கள் என்பது, வெட்கக்கேடான அரசியலில் இவர்களுக்குள்ள அக்கறையையே இது காட்டுகிறது. இவர்களது அரசியற் கூட்டங்களுக்கு மக்கள் போகாமல் இருப்பதற்கும், அக்கறையற்று இருப்பதற்கும் இதுவும் ஒரு காரணமாகும். இவர்களின் அரசியற் கூட்டங்களுக்கு சில நூற்றுக்கணக்கில் மக்கள் வந்தால் அது மாபெரும் கூட்டம் என்று சொல்லும் நிலையே உள்ளது. பெரும்பாலும் 100 பேர் மட்டிலேயே பெரிய கூட்டங்களுக்கு மக்கள் போயுள்ளனர். இவர்களுள் பெரும்பாலானோர் வேட்பாளர்களின் மிகநெருங்கிய உறவினர்களும் ஆதரவாளர்களுமாவர்.

வன்னி முகாமிற்கு வேட்பாளர்கள் வராதிருந்தமை பற்றியும், தங்கள் கஷ்டங்களில் பங்குகொள்ளாத நீங்கள் இப்போது ஏன் எம்மிடம் வருகின்றீர்கள் என்றும், பல வேட்பாளர்களிடம் மக்கள் நேரிடையாகவே கேள்வி கேட்கப்பட்டமை முக்கியமானதொன்று. மக்கள் வெளிப்படையாக யாரையும் நிராகரிக்கின்ற போக்கு இல்லாமல் மிக புத்திசாதுரியமாக இந்த வேட்பாளர்களை கையாளுகின்றனர் என்றே கருதுகின்றோம். இந்தத் தேர்தல் பலருக்கும், பல கட்சிகளுக்கும் ஒரு பாடம் கற்பிக்கும்
.
தீவுப் பகுதிகளில் நடைபெற்ற 3 தேர்தல் பிரச்சாரங்களின் கூட்ட முடிவில் அந்த மக்களிடம் பேசிப் பார்த்தபோது இத்தீவுப் பகுதி மக்கள் வெளிப்படையாகவே ஈபிடிபியினை ஆதரிப்பதை வெளிப்படுத்தினர். தமது கஷ்டமான காலங்களில் ஈபிடிபியும் தலைவரும் நேரடியாக வந்து தமக்கு உதவிகள் ஒத்தாசைகள் வழங்கியதையும் கூறுகின்றனர். இது இதர யாழ் பகுதிகளிலிருந்து வேறுபட்ட நிலையாகும். ஈபிடிபி தீவுப் பகுதிகளில் தமது கோட்டையாக வளர்த்தெடுக்கப் பட்டுள்ளனதை இது எடுத்துக் காட்டுகிறது.

** இந்த தமிழ் தேர்தல் வேட்பாளர்களில் பலர் மக்கள் வன்னி முகாம்களில் இருந்தபோது அரசுக்கெதிராக எந்தப் போராட்டங்களிலும் ஈடுபடவில்லை. அன்றும் இன்றும் தமது ஏகபோக, சுயநல அரசியலுக்காகவே செயற்படுவதாகவே எமக்குத் தென்படுகிறது.

** ஜக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் அவர்கள்- ‘நீங்கள் யாருக்கும் வாக்களியுங்கள், ஆனால் வெற்றிலைச் சின்னத்திற்கு வாக்குப் போட வேண்டாம்’ என்பது, அரசு பெரும்பான்மை ஆசனங்களைப் பெறும் என்ற பயப்பாடு கொண்டுள்ளதையும், அதனால் முயற்சி செய்து 2 /3 பெரும்பான்மையை தவிர்க்கப் பார்ப்பதாகவே தெரிகிறது.

** தமிழ் தேர்தல் வேட்பாளர்களில் சிலர் ஊடகங்களில் பணிபுரிபவர்கள். இதன் காரணமாக ஊடகங்களின் நம்பிக்கைத்தன்மை கேள்விக்குள்ளாகியதை குறிப்பிட்டுக் காட்ட விரும்புகிறோம்.

** தேர்தல் வாக்குச் சீட்டில் வாக்காளர்களது அடையாள அட்டை இலக்கம் பதித்தே வாக்குசீட்டு வருவதாலும் அதன் அடையாளத்தை நிரூபிக்க அடையாள அட்டை பாவிக்கப் படுவதாலும் தேர்தலில் கள்ளவாக்குகள் பெரும்பாலும் தவிர்க்கப்படுவதாகவே எமக்குத் தெரிகிறது.

தமிழ்க்கூட்டமைப்பை தோற்கடிக்க முயற்சிப்பது பகல் கனவு; இமாம்

தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு எதிர்வரும் பாராளுமன்ற அமர்வில் சம்பந்தன் தலைமையில் பெரு வெற்றியோடு வந்து அமரும் எனக்கூறிய அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இமாம், தமிழ்த் தேசியக்கூட்டமைப்பை தோற்கடிக்க எடுக்கப்படும் முயற்சிகள் பகற்கனவாகவே முடியும் என்று தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற அவசரகாலச்சட்ட நீடிப்புவிவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது;

இந்த அரசாங்கம் எதற்காக மாதாமாதம் அவசரகால பிரேரணையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கின்றது என்பதை எங்களால் புரிந்துகொள்ள முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். எது எப்படியிருந்தாலும எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தல் இலங்கையின் தலைவிதியை தீர்மானிக்க இருக்கின்ற வேளையில் ஒரு சில உண்மைகளை இங்கு நான் சொல்லியே ஆகவேண்டும். கடந்த மே மாத இறுதியில் ஆயுத போராட்டம் தோற்கடிக்கப்பட்ட நிலையில் அரசாங்கம் இலகுவாக தமிழ்மக்களின் பிரச்சினையைத் பேசித் தீர்த்திருக்கலாம். ஆனால், ஜனாதிபதி, தான் ஜனாதிபதித் தேர்தலின் பின்புதான் இப்பிரச்சினையை பேச இருக்கின்றேன் என்று வெளிப்படையாகக் கூறினார். ஆனால்,ஜனாதிபதித் தேர்தல் முடிந்த பின்பு தற்போது வேறொரு விதமாக ஜனாதிபதி தான் இந்த பொதுத்தேர்தலின் பின்பு வடகிழக்கு மாகாணங்களிலிருந்து தெரிவுசெய்யப்பட்டு வருகின்ற புது முகங்களோடு இப்பிரச்சினையை பேசித்தீர்க்க இருக்கிறேன் என்று கூறி வருகின்றார்.

இந்த வேளையில் நான் சார்ந்த தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் சார்பாக ஒரு உண்மையைச் சொல்ல ஆசைப்படுகின்றேன்.இத்தேர்தலில் வடகிழக்கு மாகாண தமிழ் பேசும் மக்கள் ஏக மனதாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை தலைவர் சம்பந்தன் தலைமையில் பாராளுமன்றம் அனுப்ப இருக்கின்றனர். எனவே, ஜனாதிபதி தமிழ் மக்கள் பிரச்சினையைத் தீர்க்க வேண்டுமென்றால் இதய சுத்தியுடன் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புடன் பேச முன்வரவேண்டும். அதற்கு எமது தலைமைத்துவம் தயார். அடுத்து இத்தேர்தலில் எமது கட்சியை எவ்வகையிலேனும் தோற்கடிக்க வேண்டுமென்று பலவித யூகங்கள் வகுத்து ஆட்சியாளர்கள் செயற்படுகின்றார்கள். ஆனால், இவை யாவும் பகற்கனவாகவே முடியும்.

எமது தலைவர் திருகோணமலை மாவட்டத்தில் தமிழ் பேசும் மக்களின் மகத்தான ஆதரவைப் பெற்று அமோக வெற்றி அடைவதும் உண்மை.எங்களுக்கெதிராக செயற்படுகின்ற சக்திகள் வாக்காளர்களுக்கு தையல் மெஷின்களையும் சைக்கிள்களையும் விளையாட்டு உபகரணங்களையும் வழங்கி வாக்குச் சேகரிப்பதற்கு முனைகின்றார்கள்.

எமது கட்சியை நோக்கி பலவிதமான இடையூறுகள் இத்தேர்தலில் விளைவிக்கப்படுகின்றது. அரியநேத்திரனின் ஊர்வல பேரணி மீது விஷமிகளால் தாக்குதல் நடத்தப்பட்டு மூவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகி ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. அதேவேளையில், வடகிழக்கில் எந்தத்தேர்தல் தொகுதியிலும் எமது கட்சியினர் ஒரு சிறு வன்முறையில் ஈடுபட்டார்கள் என்பது குறித்து எந்தவித முறைப்பாடுகளும் இல்லை என்பதைக் கூறிக்கொள்வதையிட்டு நான் மகிழ்ச்சி அடைகின்றேன்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பாராளுமன்றுக்கு திடீர் விஜயம்

pr.jpgகலைக் கப்பட்டுள்ள 6 ஆவது பாராளுமன்றம் சில விசேட விடயங்களை நிறைவேற்றும் நோக்கில் நேற்று மீண்டும் கூடிய போது திடீரென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பாராளுமன்றத்துக்கு சமுகமளித்தார்.

பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் அமைந்துள்ள ஜனாதிபதி அலுவலகத்துக்கு சென்ற ஜனாதிபதி. அங்கிருந்து கொண்டு அவசர காலத்தை மேலும் ஒரு மாத காலம் நீடிக்கும் பிரேரணையை நிறைவேற்றுவதற்கான விவாதத்தை கேட்டுக் கொண்டிருந்தார்.

அதனையடுத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான போசனசாலைக்கு சென்ற ஜனாதிபதி ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுடன் சுமுகமாக பேசிக் கொண்டே பகல் உணவை உண்டார். பாராளுமன்றத்தின் உத்தியோகத்தர்களுடன் பேசவும் அவர் தவறவில்லை.

வவுனியா இரவு தபால் ரயில் கல்கமுவவில் தடம்புரண்டது

கொழும்பு கோட்டையிலிருந்து திங்கட்கிழமை இரவு வவுனியா நோக்கிச் சென்றுகொண்டிருந்த இரவு தபால் ரயில் கல்கமுவவுக்கும் செனத்கமுவவுக்கும் இடையில் தடம்புரண்டுள்ளது. நேற்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவத்தில் ஒரு பெட்டி தண்டவாளத்தை விட்டு விலகியுள்ளது.

இச் சம்பவத்தால் பயணிகளுக்கு எதுவித பாதிப்பும் ஏற்படவில்லையெனவும், திருத்த வேலைகள் நடைபெறுவதாகவும் ரயில்வே பகுதி அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இச் சம்பவத்தால் நேற்று கொழும்பிலிருந்து வவுனியா அநுராதபுரம் நோக்கிச் செல்லும் ரயில்கள் கல்கமுவவரையும் நடைபெற்றன.

அண்மைக் காலங்களில் இந்தப் பாதையில் ரயில்கள் அடிக்கடி தடம்புரள்வதும் குறிப்பிடத்தக்கது. ஆங்கிலேயர் கால ரயில் பாதை அமைப்பே இதற்கு காரணம் எனவும், ரயில் பாதைகள் புனரமைக்கப்பட வேண்டுமெனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

புதிய எம்.பி.க்கள் சத்தியப்பிரமாணம் செய்ய முடியாதென சபாநாயகர் அறிவிப்பு

ஐக்கிய தேசியக் கட்சி புதிதாக நியமித்துள்ள இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் சத்தியப் பிரமாணம் செய்துகொள்வது தொடர்பில் ஆளுந்தரப்பு எதிர்தரப்பு உறுப்பினர்களுக்கிடையே சுவாரஸ்யமான வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றன. சுமார் ஒரு மணித்தியாலமாக வாதங்கள் நீடித்த போதிலும் புதியவர்களை சத்தியப் பிரமாணம் செய்வதற்குக் கடைசிவரை இடமளிக்க முடியாது என்று சபாநாயகர் தெரிவித்துவிட்டார்.

கடந்த பெப்ரவரி மாதம் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதற்குப் பின்னர், அவசரகாலச் சட்டத்தை நீடிப்பதற்காகவென நேற்றைய தினமும் பாராளுமன்றம் இரண்டாவது தடவையாகக் கூட்டப்பட்டது. சபாநாயகர் டபிள்யூ. ஜே. எம். லொக்குபண்டார தலைமையில் காலை 9.30ற்கு ஆறாவது பாராளுமன்றத்தில் இறுதி அமர்வு கூடியது.  அப்போது, முதலில் தமது புதிய உறுப்பினர்களுக்குச் சத்தியப்பிரமாணம் செய்ய இடமளிக்க வேண்டுமென்று எதிர்க்கட்சியின் பிரதம கொறடா ஜோசப் மைக்கல் பெரேரா சபாநாயகரைக் கேட்டுக் கொண்டார். அதன்போது அதற்கு இடமளிக்க முடியாது என்றும் பாராளுமன்றம் கலைக்கப்பட்ட போது உறுப்பினர்களாக இருந்தவர்கள் மாத்திரமே விசேட அமர்வில் பங்கேற்க முடியுமென்றும் ஆளுந்தரப்பு உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

“கலைக்கப்பட்ட பாராளுமன்றம் அதி முக்கியமான ஒரு விசேட அம்சத்துக்காகப் கூட்டப்பட்டிருக்கிறது. அதாவது அவரசகாலச் சட்டத்தைத் தவிர்ந்த வேறு எந்த விடயமும் இடம்பெற முடியாது. எனவே, புதியவர்கள் சத்தியப்பிரமாணம் செய்ய முடியாது. அரசியல் அமைப்பில் இது தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது” என்று விவாதத்தை முடுக்கிவிட்டார் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ். அப்படியானால், 225 உறுப்பினர்கள் கொண்ட பாராளுமன்றத்தில் இரண்டு உறுப்பினர்கள் குறைவாக உள்ளனர். எனவே, பாராளுமன்றச் செயற்பாடுகளை முன்னெடுக்க முடியாது” என்று வாதிட்டார் ஜோசப் மைக்கல் பெரேரா. விவாதத்தில் இணைந்துகொண்ட சபை முதல்வரான அமைச்சர் நிமல் சிறிபால டி. சில்வா, “இது தொடர்பில் சட்ட மா அதிபரிடமும் ஆலோசனை பெற்றிருக்கிறோம்.

புதியவர்கள் சத்தியப்பிரமாணம் செய்ய முடியாது. இன்று பாராளுமன்றம் கூடவிருக்கும் நிலையில் நேற்றிரவு ஒருவர் இறந்துவிட்டால், அந்த உறுப்பினருக்குப் பதிலாகப் புதியவரை நியமிக்க அவகாசம் இருக்கிறதா?” என்று ஜோசப் மைக்கல் பெரேராவிடம் கேள்வி எழுப்பினார்.

நான் இறந்தவர்களைப் பற்றிப் பேசவில்லை. உயிருடன் இருப்பவர்களைப் பற்றித்தான் கூறுகிறேன்” என்று பதில் கொடுத்தார் பெரேரா. இவ்வேளையில் கருத்துத் தெரிவித்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், “அவர்கள் இருவரும் ஏற்கனவே வர்த்தமானிப் பத்திரிகை மூலம் எம்.பி.க்களாக அறிவிக்கப்பட்டு விட்டார்கள். இனி அவர்கள் சம்பிரதாயமாக சத்தியப் பிரமாணம் செய்து கொள்ள இடமளிக்க வேண்டும். இல்லாவிட்டால் ஒரு முக்கியமான வாக்கெடுப்பில் பங்கெற்பதற்கு அவர்களுக்கு உள்ள உரிமை மறுக்கப்படுவதாகும்” என்றார். ஆனால் இதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்று பேராசிரியர் பீரிஸ் மீண்டும் தெரிவித்ததுடன், அவ்வாறான ஒரு நிலை இந்த விசேட அமர்வில் ஏற்பட வாய்ப்பில்லை என்று தெளிவுபடுத்தினார்.

இதன் போது குறுக்கிட்ட எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, “இந்த விடயத்தைத் தீர்மானிப்பதற்காக கட்சித் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டுமாறு சபாநாயகருக்குக் கடிதம் எழுதியிருந்தேன், அவர் எனக்குப் பதில் எழுதாமல், என் செயலாளருக்குக் கடிதம் அனுப்பியுள்ளார்” என்றார். என்றாலும், அதனை நிராகரித்த சபாநாயகர், கடந்த அமர்வில் இணங்கிக்கொண்டதற்கு அமையவே இன்றைய பணிகள் நடைபெறுகின்றன என்று விவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

அமைச்சர்கள் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் இந்திக பண்டாரநாயக்க ஆகியோரின் வெற்றிடத்துக்குப் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள டி.எம்.பண்டாரநயாக்க, அநுர கொபல்லாவ ஆகியோரே சத்தியப்பிரமாணம் செய்ய வேண்டுமென எதிர்க்கட்சி கேட்டுக் கொண்டிருந்தது.

வாக்குச்சீட்டில் புள்ளடியிட இம்முறை விசேட பேனா பயன்படுத்தப்படும்

நாளை நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் வாக்காளர்கள் வாக்குச் சீட்டில் புள்ளடியிடுவதற்கு விசேட பேனாவை பயன்படுத்த தேர்தல்கள் திணைக்களம் ஏற்பாடு செய்துள்ளது. இதுவரை காலமும் நடைபெற்ற தேர்தல்களில் பென்சில் மூலமே வாக்காளர்கள் தமது வாக்கை (புள்ளடியிடுதல்) செலுத்திவந்தனர்.

பென்சில் மூலம் புள்ளடியிடுவதால், அந்த வாக்குச்சீட்டில் அதனை அழித்தும் வேறு மோசடிகளும் இடம்பெறுவதாக அரசியல் கட்சிகளும் சுயேச்சைக் குழுக்களும் தேர்தல்கள் திணைக்களத்துக்கு முறையிட்டிருந்தன.அதனால் பேனா மூலம் புள்ளடியிடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை விடுத்திருந்தன.

இதனையடுத்து பேனா மூலம் வாக்குச்சாவடியில் புள்ளடியிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பென்சில் மூலம் வாக்குச்சீட்டில் புள்ளடியிட்டால் அது நிராகரிக்கப்படும் எனவும் தேர்தல்கள் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இம்முறை தேர்தலில் வாக்களிப்பவருக்கு விரலில் இடப்படும் மையின் நிறமும் வேறுபட்டிருக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

கல்லறையிலிருந்து பயங்கரவாதம் மீண்டும் உயிர்த்தெழ இடமளியோம் – பிரதமர்

pm.jpgநாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படாதவாறு அவசரகாலச் சட்டத்தில் எந்தெந்த சரத்துக்களை நீக்குவது என்பது பற்றி அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது என பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்க நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இலங்கையின் ஆறாவது பாராளுமன்றத்தின் இறுதி தினத்தில் அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பது தொடர்பான பிரேர¨ணை சமர்ப்பிக்கும் இறுதி சந்தர்ப்பம் இதுவாகும்.

அவசரகாலச் சட்டத்தை நீடிப்பதற்காக கோரும் இறுதிச் சந்தர்ப்பமாக இருப்பதை காண்பதே எமது எதிர்பார்ப்புமாகும். கடந்த காலங்களில் இந்த எதிர்பார்ப்பு எமக்கு இருந்து வந்தது. எனினும், நாட்டில் ஏற்பட்ட நிலைமை காரணமாக அவசரகாலச் சட்டத்தை நீடிக்க வேண்டியிருந்தது. இதனாலேயே தொடர்ந்தும் இந்த கோரிக்கையை முன்வைக்க நேர்ந்தது எனவும் பிரதமர் தெரிவித்தார். அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பதற்காக நேற்று பாராளுமன்றம் மீண்டும் கூட்டப்பட்டது. பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்க பிரேரணையை சமர்ப்பித்துப் பேசினார்.

சபாநாயகர் வி. ஜே. மு. லொக்குபண்டார தலைமையில் கூடிய போது பிரதமர் தொடர்ந்து உரையாற்றுகையில் கூறியதாவது :- கடந்த காலங்களில் இந்தச் சபையில் அவசரகாலச் சட்டத்தை நீடிப்பதற்கான பிரேரணை முன்வைக்கப்பட்ட போதெல்லாம் சபையில் ஆதரவு கிடைத்தது. இதனூடாக கிடைத்த சட்ட அதிகாரத்தினூடாக நாட்டுக்கு பாரிய வெற்றியை பெற்றுக் கொள்ள முடிந்தது. இதனால் நாடும் மக்களும் நன்மையடைந்துள்ளார்கள். எனினும் சிலர் குற்றம் சாட்டுவது போன்று நாம் அவசரகாலச் சட்டத்தை துஷ்பிரயோகம் செய்ததில்லை. எமக்கு அவ்வாறானதொரு தேவை இருக்கவில்லை. பிறந்த நாட்டுக்கும் மக்களுக்கும் நன்மையை பெற்றுக் கொடுப்பது எவ்வாறு என்பது பற்றித்தான் சிந்தித்தோம்.

பயங்கரவாதத்தை தோற்கடித்ததும் அதனூடாக நாட்டுக்கு கீர்த்தி கிடைத்ததும் இதனால்தான். சிலர் அதனை இன்று மறந்துவிட்டனர். அதனால்தான் இவ்வாறான குற்றச்சாட்டுக்களை சுமத்துகிறார்கள். வெள்ளைமுள்ளிவாய்க்கால் பகுதியில் இன்னமும் ஆயுதங்கள் கைப்பற்றப்படுகின் றன. வெடிகுண்டுகள் கைப்பற்றப்படுகிள்றன என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. இவ்வாறான ஆயுதங்கள் சிலரது கைகளில் கிடைக்க வழிவகைகள் செய்யப்படக்கூடாது. இந்தப் பகுதிகளிலுள்ள மக்களின் மனதிலுள்ள அச்சத்தை போக்கவேண்டும். இதனை செய்து முடிப்பதற்காகவே அவசரகாலச் சட்டத்தை நீடிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கிறோம். பயங்கரவாதத்தை ஒழிப்பது மட்டுமின்றி அதற்கு ஆதரவு வழங்குபவர்கள் தொடர்பாகவும் கூடிய கவனம் செலுத்தப்பட வேண்டும்.

புலிகளுக்கு துணை போகின்ற சிலர் புலிகளின் தலைவர் மீண்டும் வரப் போகிறார் என தெரிவித்துள்ளனர். இவர்கள் இதனை எவ்வாறு செய்ய முயல்கிறார்களோ தெரியவில்லை. எனினும் பயங்கரவாதத்தை கல்லறையிலிருந்து மீண்டும் உயிர்த்தெழுவதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை. அதேபோன்று பொதுமக்களை பயங்கரவாதத்தின் பால் தள்ளிவிடுவதற்கும் நாம் தயாரில்லை. நாம் இவ்வாறு செயற்பட்டாலும் பயங்கரவாதத்தை போஷிக்கின்ற சக்திகள், துணை போகின்ற சக்திகள் எமது நாட்டில் இல்லாமலில்லை.

அண்மையில் அமெரிக்காவிலும் இதுபற்றி எச்சரிக்கையும் விடுத்திருந்தார்கள். மும்பாய் தாக்குதலுக்கு உரிமைகோரும் அமைப்பொன்று தெற்காசிய வலயத்துக்கு அச்சுறுத்தலாக இருக்கிறது என்றும் தெரிவித்திருந்தது. வங்காளதேசம், நேபாளம், மாலைதீவு, இலங்கை போன்ற நாடுகளுக்கு இந்த பயங்கரவாதத்தின் நிழல்கள் பரவி வருகின்றமையும் தெரிய வந்துள்ளது. அத்துடன் புலிகளின் நிழல்களும் தமிழ் நாட்டுக்குள் உலவி வருவதாக இந்திய பாதுகாப்பு துறையும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

எனவே இவற்றை மிக எளிதானதாக எடுத்துக்கொள்ள முடியாது. பயங்கரவாதம் முழுமையாக ஒழிக்கப்பட வேண்டும் என்பது மட்டுமல்ல ‘பயங்கரவாதம்’ என்ற சொல் அகராதியிலிருந்தே நீக்கப்பட வேண்டும். வடக்கு கிழக்கு மக்கள் இன்று தமது உரிமைகளை அனுபவித்து வருகிறார்கள். அந்தப் பகுதிகளில் பாரிய அபிவிருத்திகள் நடைபெறுகின்றன.

அவசரகாலச்சட்டம் 53 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதகாலத்திற்கு நீடிப்பதற்கான பிரேரணை 53 மேலதிக வாக்குகளால் நேற்று பாராளுமன்றத்தில் நிறைவேறியது. பிரேரணைக்கு ஆதரவாக 58 வாக்குகளும், எதிராக 5 வாக்குகளும் கிடைத்தன. சபையிலிருந்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எம்.பிக்கள் மூவரும், ஜே.வி.பி. எம்.பிக்கள் இருவரும் பிரேரணைக்கு எதிராக வாக்களித்தனர்.

ஐ.தே.க. உறுப்பினர்கள் எவரும் சபையில் இருக்கவில்லை.

ஆறாவது பாராளுமன்றத்தின் இறுதி அவசரகாலச்சட்டம் மீதான பிரேரணையை பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்க சமர்ப்பித்துப் பேசினார்.

மதுபானக்கடைகள் பூட்டு

பொதுத் தேர்தலை முன்னிட்டு நாளையும், நாளை மறுதினமும் மதுபான கடைகளை மூடுவதற்கு கலால் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

இதேவேளை, சித்திரை புத்தாண்டை முன்னிட்டு எதிர்வரும் 13 ஆம், 14 ஆம் திகதிகளிலும் மதுபான கடைகள் மூடப்படவுள்ளதாக திணைக்களம் தெரிவிக்கிறது.

9 ஆம் திகதி அரச, வங்கி விடுமுறை

எதிர்வரும் 9 ஆம் திகதி அரச மற்றும் விசேட வங்கி விடுமுறை தினமாக அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ளது.

பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் டி.திஸாநாயக்க இதற்கான அறிவித்தலை விடுத்துள்ளார்.

எனவே, அரச கூட்டுத்தாபனங்களின், நியதிச் சபைகளின் தலைவர்கள், மற்றும் தொழில் தருநர்கள் அனைவரையும், தங்களது அனைத்து ஊழியர்களுக்கும் 2010ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 9ஆம் திகதி வெள்ளிக்கிழமை விடுமுறை வழங்குமாறு தொழிலமைச்சர் அதாவுத செனவிரட்ன கேட்டுள்ளார்.