28

28

மக்களுக்கு நன்மை பயக்கும் அரசின் யோசனைகளுக்கு ஐ.தே.க. ஆதரவளிக்கும் – கரு ஜயசூரிய எம்.பி

unp_logo_.jpgஅரசாங்கம் பாராளுமன்றத்தில் முன்வைக்கும் மக்களுக்கு நன்மை பயக்கக்கூடிய யோசனைகளுக்கு எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி முழுமையான ஆதரவு நல்கும் என்று அக்கட்சியின் உபதலைவரும், கம்பஹா மாவட்ட எம்.பி.யுமான கரு ஜயசூரிய நேற்றுத் தெரிவித்தார்.

மக்களுக்கு நன்மை பயக்கக் கூடிய அரசாங்கத்தின் யோசனைகளுக்கு ஆதரவு அளிப்பது என்பதில் நாம் உறுதியாகவுள்ளோம் எனவும் அவர் குறிப்பிட்டார். அஸ்கிரிய, மல்வத்த பீடாதிபதிகளிடம் நேற்று ஆசி பெற்றுக்கொண்ட கரு ஜயசூரிய எம்.பி ஊடகவியலாளர்களைச் சந்தித்த போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில், நாடு சிறந்த ஜனநாயகக் குடியரசாக விளங்குவதற்கு நாம் முழுமையான பங்களிப்பை அளிப்போம். இதற்காக அரசாங்கம் முன்னெடுக்கின்ற வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழைப்பு நன்குவோம். பாராளுமன்ற தெரிவுக்குழுக்களினதும், பாராளுமன்ற ஆலோசனைக் குழுக்களினதும் செயற்பாடுகளுக்கும் முழுமையாக ஆதரவு அளிப்போம்.

இலங்கையில் செனட்சபை ஒன்று அமைக்கப்படவுள்ளது

rajitha.jpgமிக விரைவில் செனட் சபையொன்றை அமைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக மீன்பிடி மற்றும் நீரியல் வள அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமது இரண்டாவது பதவி காலத்திற்கான சத்தியபிரமாணத்தை மேற்கொள்வதற்கு முன்னர், அரசியலமைப்பு சீர்திருத்தம் மேற்கொள்ளும் தருணத்திலேயே செனட் சபையையும் அமைக்கப்படவுள்ளது.

அனைத்து இனத்தவரும் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் வகையில் மாகாண சபைகளின் ஊடாக இதற்கான உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்படவுள்ளனர். இனம் மற்றும் மதம் தொடர்பான விடயங்கள் குறித்து ஏதேனும் சட்டமூலமொன்று நாடாளுமன்றில் நிறைவேற்றப்படவேண்டுமாயின் அதற்கு செனட் சபையின் அனுமதி அத்தியாவசியமாக்கப்படவுள்ளது.

அத்துடன் செனட் சபையின் பெரும்பான்மை அதிகாரம் தமிழ் மற்றும் முஸ்லிம் பிரதிநிதிகளுக்கு வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்..

ஊடகவியலாளர்களுக்கு சகல வசதிகளுடன் ஊடகக் கிராமம் ‘எனது நீண்ட காலக் கனவு இது’ – அமைச்சர் மேர்வின்

m-silva.jpgஊடகவி யலாளர்களுக்காக சகல வசதிகளையும் கொண்ட ஊடகக் கிராமம் ஒன்றை அமைப்பதே தனது நீண்டகால கனவுயென பதில் ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி மேர்வின் சில்வா தெரிவித்தார்.

லேக் ஹவுஸ் நிறுவனத்திற்கு வருகை தந்த அமைச்சர், தொழிற்சங்க பிரதிநிதிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் உரையாற்றுகையில்:-

பேனாவை கையில் எடுத்த அனைவரையும் ஊடகவியலாளர்கள் என கூறிவிட முடியாது. ஊடகவியலாளர்களாக தம்மைக் காட்டிக்கொண்டு பலர் கடந்த காலங்களில் நடந்துகொண்ட விதத்தை முழு நாடும் அறியும். வெளிநாட்டுக்குச் சென்று குடியிருப்பதற்காக சிலர் தம்மைத் தாமே தாக்கிக்கொண்டனர்.

சந்தர்ப்பவாதம், அதிகார ஆசை, பழிவாங்குதல், கோபம் என்பவற்றை புறந்தள்ளி, தமது பேனாவை பயன்படுத்த வேண்டியது சகல ஊடகவியலாளர்களின் பொறுப்பாகும். இதன் மூலமே உண்மையான ஊடகத்துறையை கட்டியெழுப்ப முடியும். ஊடகவியலாளரின் குடும்பப் பின்னணி, சமூக அந்தஸ்து என்பவற்றை மேம்படுத்துவதன் மூலமே சிறந்த ஊடகத்துறையை கட்டியெழுப்ப முடியும்.

குடும்ப பிரச்சினை, மனதில் இருக்கையில் தனது கருத்தை தெளிவாகவும் சுதந்திரமாகவும் சமூகத்துக்கு முன்வைக்க முடியாது. அதனால் அனைத்துக்கும் முன்பாக ஊடகவியலாளர்களின் சமூக அந்தஸ்த்தை உயர்த்தி பொருளாதார ரீதியில் அவர்களை பலப்படுத்த வேண்டியது மிக முக்கியமாகும். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பெளத்த மதத்தால் போசிக்கப்பட்ட தலைசிறந்த தலைவர். அத்தகைய தலைவரின் கீழ் பணியாற்ற கிடைத்தது நாம் அனைவரும் செய்த பாக்கியமாகும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

ஊடகத்துறை பிரதியமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துகொண்ட கலாநிதி மேர்வின் சில்வா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 16வது சார்க் உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள பூட்டான் சென்றதையடுத்து பதில் ஊடகத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரதமர் தி.மு. இன்று கடமை பொறுப்பேற்பு

dm-jayaratna.jpgஇலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் புதிய பிரதமர் டி. எம். ஜயரத்ன இன்று தமக்கான பொறுப்புக்களைக் கையேற்கிறார். இவ் உத்தியோகபூர்வ நிகழ்வு இன்று காலை 7.30 மணிக்கு கொழும்பு பிளவர் வீதியிலுள்ள பிரதமரின் செயலகத்தில் நடைபெறவுள்ளது.

இன்று காலை பிரதமர் அலுவலகத்தில் இடம்பெறும் விசேட சமய வழிபாடுகளைத் தொடர்ந்து காலை 7.30 மணி சுபவேளையில் புதிய பிரதமர் தமது பதவிப் பொறுப்புக்களைக் கையேற்கவுள்ளார். இந்நிகழ்வில் அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர்களும் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொள்ளவுள்ளதாக பிரதமர் செயலகம் தெரிவித்தது.

ஐ.தே.க..உயர்பதவிகளில் அடுத்த வாரம் பாரிய மாற்றம் செயற்குழு கூடித் தீர்மானிக்கும்

unp_logo_.jpgஐக்கிய தேசியக் கட்சியின் செயற்பாடுகளை மறுசீரமைப்பதற்காக கட்சியின் செயற்குழு அடுத்த வாரம் கூடவிருப்பதாக தெரிவித்த அதன் ஊடகப் பேச்சாளரும் காலி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான கயந்த கருணாதிலக்க அப்போது கட்சியின் உயர் மட்டப் பதவிகளில் பாரிய மாற்றம் ஏற்படலாமெனவும் குறிப்பிட்டார்.

அதற்கு முன்னர் கட்சித் தலைமைத்துவம் கட்சியின் சிரேஷ்ட தலைவர்களுடன் இவ்வாரத்தில் கூடி ஆராயவிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.பாராளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு அடுத்த வாரத்திலேயே கூடவிருக்கின்றது. தேர்தல் தோல்வியையடுத்து கட்சிக்குள் உருவாகி இருக்கும் நெருக்கடி நிலை வலுவடைந்திருக்கும் நிலையில் பெரும்பாலானவர்கள் கட்சித் தலைவர் பதவியிலிருந்து ரணில் விக்கிரமசிங்க வெளியேற வேண்டுமென்ற அழுத்தம் அதிகரித்து வருகின்றது.

இவ்வாறான நிலையிலேயே கட்சியின் செயற்குழுக் கூட்டம் அடுத்த வாரத்தில் கூடவிருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கயந்த கருணாதிலக்க தெரிவித்தார்.

சார்க் மாநாட்டையொட்டி திம்பு நகர் விழாக்கோலம்: உச்சி மாநாடு இன்று ஆரம்பம்;

saarc-logo.jpgபூட்டான் தலைநகர் திம்புவில் இன்று (28) ஆரம்பமாகும் 16 ஆவது ‘சார்க்’ உச்சி மாநாட்டில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆரம்பவுரை நிகழ்த்துகிறார். அதனையடுத்து ‘சார்க்’ அமைப்பின் தலைமைப் பதவியை பூட்டானிய பிரதமர் ஜிக்மி வை தில்லேவுக்குப் பொறுப்பளிப்பார்.

சார்க் மாநாடு இன்று ஆரம்பமாவதையிட்டுத் திம்பு நகர் கோலாகலமாகக் காட்சியளிக்கிறது. சார்க் அமைப்பு ஆரம்பிக்கப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி 16வது உச்சி மாநாடு பிரமாண்டமான முறையில் நடைபெறுகிறது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ‘சார்க் கிராமத்திலுள்ள இலங்கை இல்லத்தில் பூட்டான் பிரதமர் தின்லேயைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். பூட்டானுக்கு முதன் முதலாக விஜயம் செய்துள்ள ஜனாதிபதி ராஜபக்ஷவுக்கு பூட்டான் மன்னரின் சார்பிலும், மக்களின் சார்பிலும் பிரதமர் தின்லே உற்சாகமான வரவேற்பை தெரிவித்துக்கொண்டார்.

பயங்கரவாதத்தை இல்லாதொழித்துச் சமாதானத்தை ஏற்படுத்தியமைக்காக நன்றி தெரிவித்த பிரதமர் தின்லே, இது பிராந்தியத்தில் அமைதியைப் பலப்படுத்து வதற்கு வழிவகுக்குமென்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஜனவரியில் நடந்த ஜனாதிபதித் தேர்தலிலும் ஏப்ரலில் நடைபெற்ற பொதுத் தேர்தலிலும் அடைந்த வெற்றிக்காக ஜனாதிபதிக்குப் பாராட்டுதல்களையும் பூட்டான் பிரதமர் தெரிவித்தார்.

இந்தச் சந்திப்பின்போது உடனிருந்த புதிய பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்த பூட்டான் பிரதமர் மக்களின் பேராதரவுடன் நாமல் வெற்றி பெற்றுள்ளதாகவும் எதிர்காலத்தில் இலங்கையில் மாத்திரமன்றி பிராந்தியத்திலும் முக்கிய பங்காற்ற முடியும் என்றும் குறிப்பிட்டார்.

‘சார்க்’ ஆரம்பிக்கப்பட்ட 25 ஆவது ஆண்டில் உச்சி மாநாட்டை நடத்துவதையிட்டு பூட்டான் பிரதமருக்கு ஜனாதிபதி வாழ்த்துக்களைத் தெரிவித்தார். இதேவேளை, 16 ஆவது உச்சி மாநாட்டில் அவதானிப்பாளராக ஓர் இடம் கிடைத்துள்ள அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் ஹாபர் ஒ பிளக்கை, நேற்று மாலை ஜனாதிபதி சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

‘சார்க்’ கிராமத்திலுள்ள இலங்கை இல்லத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்தது. ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலுக்குப் பின்னர் இலங்கையின் எதிர்காலத் திட்டங்கள், இதுவரை அடைந்துள்ள முன்னேற்றங்கள் குறித்து ஜனாதிபதி விளக்கியுள்ளாரெனத் தெரிவிக்கப்படுகிறது.