April

April

நாவலப்பிட்டி மற்றும் கும்புறுப்பிட்டி மீள் தேர்தல் ஏற்பாடுகள் பூர்த்தி

gamini.jpgநாவலப் பிட்டி மற்றும் கும்புறுப்பிட்டிய மீள்தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் திணைக்களம் நேற்று கூறியது. தேர்தலுக்கான பிரசாரப் பணிகள் நேற்று முன்தினம் (17) நள்ளிரவு பூர்த்தியடைந்ததோடு தேர்தல்கள் நாளை நடைபெறவுள்ளன.

பாதுகாப்புக் கடமைகளில் சுமார் இரண்டாயிரம் பாதுகாப்புத் தரப்பினர் ஈடுபடுத்தப்படவுள்ளதோடு தேர்தல் கடமைகளில் ஈடுபடும் உத்தியோகத்தர்கள் இன்று முதல் (19) வாக்கு நிலையங்களுக்கு செல்ல உள்ளதாகவும் தேர்தல் திணைக்களம் தெரிவித்தது. வாக்குப் பெட்டிகளும் இன்று (19) வாக்குச் சாவடிகளுக்கு எடுத்துச் செல்லப்படவுள்ளன.

நாவலப்பிட்டியிலும் கும்புறுப்பிட்டியிலும் அமைதியான தேர்தல்களை நடத்துவதற்கான சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் தேர்தல் திணைக்களம் கூறியது. விசேட அதிகாரிகள் குழு இன்று (19) நாவலப்பிட்டிக்கு செல்கிறது எனவும் திணைக்கள உயரதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.

மக்கள் எதுவித அச்சமுமின்றி சுதந்திரமாக வாக்களிக்கும் வகையில் உச்ச பாதுகாப்பு ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் கடமைகளுக்குப் பொறுப்பான பாதுகாப்பு அதிகாரி பிரதிப் பொலிஸ் மாஅதிபர் காமினி நவரத்ன கூறினார். 1200 இராணுவம் மற்றும் பொலிஸார் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதோடு தேர்தல் தினத்தில் மேலும் 800 பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை விடுமுறை தினமான நேற்று (18) விசேட வாக்காளர் அட்டை விநியோகம் இடம்பெற்றதோடு இன்றும் (19) வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்படவுள்ளதாக தபால் திணைக்களம் கூறியது.

நாவலப்பிட்டியவில் 37 வாக்களிப்பு நிலையங்களிலும் கும்புறுப்பிட்டியவில் ஒரு வாக்களிப்பு நிலையத்திலும் மீள் தேர்தல் நடைபெறுகிறது.

நாவலப்பிட்டிய வாக்குகள் கண்டி மாவட்ட செயலகத்திலும் கும்புறுப்பிட்டிய வாக்குகள் திருகோணமலை கச்சேரியிலும் எண்ணப்படவுள்ளன. கும்புறுப்பிட்டிய வாக்குகள் அதே வாக்களிப்பு நிலையத்தில் எண்ணுவதற்கே முன்னர் தீர்மானிக்கப் பட்டிருந்தது.

யாழ்நகரில் இன்று முதல் 3 நாட்கள் சர்வதேச வர்த்தகக் கண்காட்சி

jaffna.jpgயாழ்ப் பாணத்தில் முதற்தடவையாக இன்று முதல் மூன்று நாட்களுக்கு வெளிநாட்டுக் கைத்தொழிலாளர்கள் பங்குகொள்ளும் சர்வதேச வர்த்தகக் கண்காட்சி ஆரம்பமாகின்றது.

இருநூறுக்கும் அதிகமான கைத்தொழிலாளர்கள் இக்கண்காட்சியில் தமது காட்சியறைகளை திறந்துள்ளனர்.யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியையும் அதனோடு கூடிய விளையாட்டரங்கையும் மையப்படுத்தி இக்கண்காட்சித்திடல் அமைக்கப்பட்டுள்ளது. இக்கண்காட்சியை இலங்கைக்கான இந்தியத்தூதுவர் அசோக் கே.காந்த் இன்று காலை 10 மணிக்கு சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைப்பார்.

மூன்று நாட்களும் தொழில்சார் கருத்தரங்கு, கலைநிகழ்ச்சிகள், களியாட்ட நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.”யாழ்ப்பாணத்துக்கான உங்கள் நுழைவாயில்” என்ற கருப்பொருளில் நடைபெறும் இவ்வர்த்தகக் கண்காட்சி குடாநாட்டில் வெளிநாட்டு முதலீடுகளை ஊக்குவிப்பதற்காக பெரும் பொருட்செலவில் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக கண்காட்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.இக்கண்காட்சியை யாழ்ப்பாணம் வர்த்தக,கைத்தொழில் மன்றமும் வரையறுக்கப்பட்ட இலங்கை கண்காட்சி மற்றும் மகாநாடுகள் சேவை அமைப்பும் இணைந்து ஏற்பாடு செய்துள்ளன.

சரத்பொன்சேகா பாராளுமன்றத்தில் எம்.பி.யாக பதவிப்பிரமாணம் மேற்கொள்ள பாதுகாப்பு அமைச்சின் அங்கீகாரம் தேவை – இராணுவப் பேச்சாளர்

parliament.jpgஓய்வுபெற்ற ஜெனரல் சரத்பொன்சேகா பாராளுமன்றத்தில் எம்.பி.யாக பதவிப்பிரமாணம் மேற்கொள்ள பாதுகாப்பு அமைச்சின் அங்கீகாரம் தேவைப்படுவதாக இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க கூறியுள்ளார்.

இதுவரை அது தொடர்பான அங்கீகாரம் எதுவும் கோரப்பட்டிருக்கவில்லை என்றும் அவர் ஆங்கிலப் வாரப் பத்திரிகையொன்றிற்குக் கூறியுள்ளார். அத்துடன், இது தொடர்பாக பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம் இருந்து பாதுகாப்பு அமைச்சிற்கு தொடர்பாடல் எதுவும் இதுவரைமேற்கொள்ளப்படவில்லை எனவும் பிரசாத் சமரசிங்க தெரிவித்திருக்கிறார்.

ஜெனரல் பொன்சேகா இப்போது கடற்படைத் தலைமையகத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார். சதி மற்றும் இராணுவ தளபாடக் கொள்வனவில் மோசடிகளை மேற்கொண்டமை போன்ற குற்றச்சாட்டுகள் தொடர்பாக இரு இராணுவ நீதிமன்ற விசாரணைகளை பொன்சேகா எதிர்நோக்கியுள்ளார்.

ஏப்ரல் 8 பாராளுமன்றத் தேர்தலில் ஜனநாயக தேசியக் கூட்டணியின் எம்.பி.யாக கொழும்பு மாவட்டத்திலிருந்து பொன்சேகா தெரிவு செய்யப்பட்டிருக்கிறார். அவருக்கு 98 ஆயிரம் வாக்குகள் கிடைத்துள்ளன. அவருடைய பெயர் பாராளுமன்ற உறுப்பினராக தேர்தல் ஆணையாளரால் வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 22 இல் ஜெனரல் பொன்சேகா பாராளுமன்றத்திற்கு பிரசன்னமாகியிருப்பதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு இதுவரை எந்தவொரு கோரிக்கையையும் தான் பெற்றிருக்கவில்லை என்று பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக கித்துல் கொட கூறியுள்ளார். “இதுவரை நான் எதனையும் பெற்றுக்கொண்டிருக்கவில்லை. அது தொடர்பாக நான் எதனையும் சிந்தித்திருக்கவுமில்லை என்று அவர் மேலும் தெரிவித்திருக்கிறார்.

ஆயினும் இரு தனித்தனியாக கடிதங்களை தமது கட்சி அனுப்பி வைத்திருப்பதாக ஜனநாயக தேசிய கூட்டணியின் பேச்சாளர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்தார். ஒரு கடிதம் பாராளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு அனுப்பப்பட்டிருப்பதாகவும் ஜெனரல் பொன்சேகா வியாழக்கிழமை பதவிப் பிரமாணம் செய்வதற்குரிய ஏற்பாடுகளைச் செய்யுமாறு கோரி அக்கடிதம் அனுப்பப்பட்டிருப்பதாகவும் மற்றைய கடிதம் இராணுவத் தளபதி ஜெகத் ஜயசூரியவுக்கு அனுப்பப்பட்டிருப்பதாகவும் அநுர குமார திஸாநாயக்க கூறியுள்ளார். ஜெனரல் பாராளுமன்றத்திற்கு செல்வதற்குரிய ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு கோரி இராணுவத்தளபதிக்கு கடிதம் அனுப்பியிருப்பதாக அநுர குமார திஸாநாயக்க தெரிவித்தார்.

வியாழன்று பாராளுமன்றத்தில் பொன்சேகா அறிக்கையொன்றை விடுப்பதற்கு உத்தேசித்திருப்பதாக அநுர குமார தெரிவித்தார். ஆனால், வியாழக்கிழமை பாராளுமன்றம் புதிதாகத் தெரிவுசெய்யப்பட்ட எம்.பி.க்கள் பதவிப் பிரமாணம் எடுப்பதற்காக கூட்டப்படுகிறது. ஆதலால் பொன்சேகா தொடர்பாக எந்த ஏற்பாடுகளும் இதுவரை செய்யப்படவில்லை. வியாழக்கிழமை பாராளுமன்றம் கூடும்போது புதிய சபாநாயகர் தெரிவு செய்யப்படவுள்ளார். அதன் பின்னர் எம்.பி.க்கள் சத்தியப் பிரமாணம் செய்துகொள்வர்.

ஐரோ. நாடுகளுக்கான சேவைகள் தொடர்ந்தும் பாதிப்பு: பயணிகள் அவதி

srilankan-airlines.jpgஐஸ்லாந்து நாட்டின் எரிமலைக் குமுறலையடுத்து ஐரோப்பிய நாடுகளுக்கான விமான சேவைகள் இடை நிறுத்தப்பட்டுள்ள போதிலும் ரோம் நகருக்க நேற்று அதிகாலை விமான சேவை நடாத்தப்பட்டதாக விமான நிலைய விமான சேவைகள் நிறுவனத் தலைவர் பிரசன்ன விக்கிரமசூரிய தெரிவித்தார்.

ஐஸ்லாந்து நாட்டின் எரிமலைக்குமுறல் காரணமாக ஐரோப்பிய நாடுகளின் வான்பரப்பில் புகையும், சாம்பல் துகள்களும் பரவியுள்ளன. இதனையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை முதல் ஐரோப்பிய நாடுகளுக்கான விமான சேவை மறு அறிவித்தல் வரை இடை நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இவ்வாறான நிலையில் ஐரோப்பிய நாடான இத்தாலியின் ரோம் நகருக்கு விமான சேவை நடாத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து நேற்று அதிகாலை 3.10 மணிக்குப் புறப்பட்ட ஸ்ரீலங்கன் எயார் விமானம் ரோம் நகர நேரமான பிற்பகல் 2.45 மணிக்குத் தரை இறங்கியுள்ளது.

இருந்த போதிலும் ஐரோப்பாவின் ஏனைய நகர்களுக்கான விமான சேவை மறு அறிவித்தல் வரை இடை நிறுத்தப்பட்டதாகவே இருக்கும் என விமான நிலையத்தின் விசேட கரும பீட அதிகாரியொருவர் கூறினார். அதேநேரம் ரோம் நகருக்கு தொடர்ந்தும் விமான சேவை நடாத்துவது குறித்தும் நிலைமைகளுக்கு ஏற்பவே முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் சொன்னார்.

ஐரோப்பிய நாடுகளுக்கான விமான சேவைகள் கடந்த வெள்ளிக்கிழமை முதல் இடை நிறுத்தப்பட்டதால் அந்நாடுகளுக்குப் பயணம் செய்ய முடியாத பயணிகள் நீர்கொழும்பிலும், அதனை அண்டிய பகுதிகளிலுள்ள ஹோட்டல்களிலும் தற்காலிகமாகத் தங்கியுள்ளனர். இந் நிலைமை தொடருமாயின் அப்பிரதேசத்தில் ஹோட்டல்களுக்கும் தட்டுப்பாடு ஏற்படும் என்று உல்லாச பயணத்துறை அதிகாரிகள் கூறினர்.

மனுஷன் புலத்தில் 256 வீடுகள்; முதல் வீடு நேற்று கையளிப்பு

house.jpgசுவிஸ் நாட்டின் அபிவிருத்திக்கும் ஒத்துழைப்புக்குமான முகவர் அமைப்பின் நிதியுதவியுடன் யாழ். மறவன் புலத்தில் அமைக்கப்பட்டு வரும் வீடமைப்பு திட்டத்தின் முதல் கட்டி முடிக்கப்பட்ட வீட்டை உரிமையாளருக்கு கையளிக்கும் வைபவம் நேற்று இடம்பெற்றது.

அமைப்பின் பிரமுகரான மாட்டின் ஸ்ரீயூடர் புதிய வீட்டின் வாயிலை சம்பிரதாய முறைப்படி நாடாவெட்டி திறந்து வைத்து உரிமையாளரிடம் கையளித்துள்ளார். மேற்படி சுவிஸ் நாட்டின் அபிவிருத்திக்கும் ஒத்துழைப்புக்குமான முகவர் நிலையமானது சாவகச்சேரி பிரிவில் உள்ள மறவன்புல கிராமத்தில் 256 வீடுகளை கட்டிவருகிறது.

பொன்சேகாவின் பாராளுமன்ற பிரவேசத்துக்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதி தேவையா?

sarath_fonseka.jpgதடுத்து வைக்கப்பட்டிருக்கும் ஜெனரல் சரத்பொன்சேகா பாராளுமன்றம் செல்வதற்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதி கோரப்படவேண்டுமென இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்திருக்கும் கூற்றை ஜனநாயக தேசியக்கூட்டணி முற்றாக நிராகரித்திருக்கின்றது. மக்களால் தெரிவுசெய்யப்பட்ட ஒரு பாராளுமன்ற உறுப்பினர் சிவில் நீதிமன்ற உத்தரவில் தடுத்து வைக்கப்பட்டிருந்தாலும் கூட அவரால் பாராளுமன்ற அமர்வுக்குச் செல்ல சட்ட ரீதியான அனுமதியுண்டு. அதற்காக அவர் முன் அனுமதி பெறவேண்டிய தேவை கிடையாது.

ஜெனரல் சரத் பொன்சேகாவை விசாரிக்கும் இராணுவ நீதிமன்றம் கூட சட்டபூர்வமானதா என்ற கேள்விஎழுந்துள்ள நிலையில் அவர் பாதுகாப்பு அமைச்சின் அனுமதிகோரவேண்டுமெனக் கூறுவது கேலிக்கூத்தானதாகும். ஜெனரல் சரத்பொன்சேகா 22 ஆம் திகதி காலை புறப்பட்டுத்தான் பாராளுமன்றம் செல்லவேண்டுமெனக் கேட்டால் பாதுகாப்புத் தரப்பு எந்தவித மறுப்பும் தெரிவிக்காமல் அவரை பாராளுமன்றத்துக்கு அழைத்துவர வேண்டும்.

சட்டம் இவ்வாறிருக்கின்ற போதிலும் அதற்கும் மேலதிகமாக ஜெனரல் பொன்சேகாவின் சட்டத்தரணி வட்டகமே ஊடாகவும் சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். புறம்பாக இராணுவத்தளபதிக்கும் பாராளுமன்றச் செயலாளர் நாயகத்துக்கும் கட்சி கடிதங்களை அனுப்பியுள்ளது.

ஜெனரல் சரத் பொன்சேகா பாராளுமன்றம் வருவதைத்தடுக்க பல்வேறுபட்ட திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன. இத்திட்டங்களை முறியடித்து எதிர்வரும் 22 ஆம் திகதி நாம் அவரைப் பாராளுமன்றத்துக்கு அழைத்து வருவோம் என்று நேற்றைய செய்தியாளர் மாநாட்டில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

‘மாதா’ விவரண திரைப்பட விவகாரம்; குற்றத் தடுப்பு பொலிஸாரிடம் விசாரணைகள் ஒப்படைப்பு

வன்னியில் இடம்பெற்ற மனிதா பிமான நடவடிக்கையைச் சித்தரிக் கும் வகையில் தயாரிக்கப்பட்ட காதல் காவியமான ‘மாதா’ விவரணத் திரைப்படம் கணனியின் ஹார்ட் டிஸ்க் இலிருந்து முழுமையாக களவாடப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகள் கொழும்பு குற்றத் தடுப்பு பொலிஸாரிடம் ஒப்படைக் கப்பட்டிருப்பதாக பொலிஸ் வட்டாரங்கள் நேற்றுத் தெரிவித்தன.

 கொழும்பு குற்றத்தடுப்பு பொலிஸார் இதனுடன் சம்பந்தப்பட்ட அனைவரிடமும் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வரும் அதேவேளை, ஏனைய கணனிகளின் உதவியுடன் இழந்த படத்தொகு ப்பை மீளப் பெற்றுக் கொள்வது தொடர்பான முயற்சியிலும் ஈடுபட்டு வருவதாக அதன் தயாரிப்பாளர் விஸ்வநாத் புத்திக்க கீர்த்திசேன தெரிவித்தார்

விசேட ரயில், பஸ் சேவை இன்றும் தொடர்கின்றது

train.jpgபண்டி கையை முன்னிட்டு சொந்த இடங்களுக்குச் சென்ற மக்கள் திரும்பி வருவதற்காக விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நேற்றும் விசேட ரயில், பஸ் சேவைகள் நடத்தப்பட்டதோடு இன்றும் (19) மேலதிக சேவைகள் நடத்தப்படுவதாக போக்கவரத்து அமைச்சு நேற்று கூறியது.

பிரதான நகரங்களில் இருந்து கொழும்பு வரவும் பிரதான நகரங்களுக்கிடையிலும் மேலதிக பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, மட்டக்களப்பு, அம்பாறை, கண்டி, நுவரெலியா, பண்டாரவளை, வவுனியா போன்ற இடங்களில் இருந்து விசேட பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

இந்திய விஸா நிலையம் மே 5 முதல் யாழில் இயங்கும்

இந்திய விஸா நிலையமொன்று எதிர்வரும் மே மாதம் முதல் யாழ்ப்பாணத்தில் இயங்கவுள்ளது. இந்த நிலையம் மே மாதம் 5ம் திகதி திறந்து வைக்கப்படும் என்று இலங்கைக்கான இந்தியாவின் தூதுவர் அசோக் கே. காந்த் நேற்று தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம், மத்திய கல்லூரியில் நடைபெறும் யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தக கண்காட்சியை அங்குரார்ப்பணம் செய்து வைக்கும் வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

யாழ். குடா நாட்டு மக்கள் இந்த நிலையத்தில் விஸா விண்ணப்பப் படிவங்களைப் பெற்றுக் கொள்ளவும், அவற்றைக் கையளிக்கவும் முடியும்.  இதன்படி விஸாவைப் பெற்றுக் கொள்ள மாத்திரமே கொழும்பி லுள்ள இந்திய உயர் ஸ்தானிகரால யத்திற்கு செல்ல வேண்டும் என்று தூதரக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

“அமைச்சுப்பதவிகளுக்காக நாம் சோரம் போகவோ எமது சமூகத்தை விலைபேசி துரோகமிழைக்கவோ நாம் ஒருபோதும் முன்வரமாட்டோம் – ரவூப் ஹக்கீம்

rauff.jpgஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் ஒரு தடவை கையைச் சுட்டுக்கொண்டவன் நான். இன்னொரு தடவை அப்படிச் செய்வதற்கு நானொரு முட்டாள் அல்லவெனத் தெரிவித்திருக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அமைச்சுப் பதவிகளுக்காக சிறுபான்மைச் சமூகத்தை விலைபேசும் துரோகத்தனத்தை ஒருபோதும் செய்யமாட்டேன் எனவும் உறுதிபடக் கூறியுள்ளார்.

இன்றைய நிலையில் அரசுடன் எந்தவிதமான பேச்சுவார்த்தைக்கும் இடமில்லையெனவும் சுட்டிக்காட்டியிருக்கும் ஹக்கீம் இது நாவலப்பிட்டியில் தனக்கு அளிக்கப்படக்கூடிய வாக்குகளைத் தடுக்கும் ஒரு சதித்திட்டமெனவும் தெரிவித்தார். எமக்கு நாளைய தினம் கண்டி மாவட்டத்தில் பெரு வெற்றி கிட்டும் என்பது உறுதியானது. அரசுமுஸ்லிம் காங்கிரஸ் பேச்சு விரைவில் இடம்பெறுமென அரச ஊடகங்களில் வெளியான செய்தி குறித்து மறுத்துரைக்கையிலேயே ரவூப் ஹக்கீம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
.
அரசாங்கம் முதலில் வடக்கு,கிழக்கு தமிழ் பேசும் மக்களுக்கான தீர்வை முன்வைக்கட்டும். அதன் பிரதிபலிப்பு சாதகங்களை வைத்தே எமது அடுத்த கட்ட நடவடிக்கைகள் அமையும். அதைவிடுத்து அமைச்சுப்பதவிகளுக்காக நாம் சோரம் போகவோ எமது சமூகத்தை விலைபேசி துரோகமிழைக்கவோ நாம் ஒருபோதும் முன்வரமாட்டோம் எனவும் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.