ஐரோ. நாடுகளுக்கான சேவைகள் தொடர்ந்தும் பாதிப்பு: பயணிகள் அவதி

srilankan-airlines.jpgஐஸ்லாந்து நாட்டின் எரிமலைக் குமுறலையடுத்து ஐரோப்பிய நாடுகளுக்கான விமான சேவைகள் இடை நிறுத்தப்பட்டுள்ள போதிலும் ரோம் நகருக்க நேற்று அதிகாலை விமான சேவை நடாத்தப்பட்டதாக விமான நிலைய விமான சேவைகள் நிறுவனத் தலைவர் பிரசன்ன விக்கிரமசூரிய தெரிவித்தார்.

ஐஸ்லாந்து நாட்டின் எரிமலைக்குமுறல் காரணமாக ஐரோப்பிய நாடுகளின் வான்பரப்பில் புகையும், சாம்பல் துகள்களும் பரவியுள்ளன. இதனையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை முதல் ஐரோப்பிய நாடுகளுக்கான விமான சேவை மறு அறிவித்தல் வரை இடை நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இவ்வாறான நிலையில் ஐரோப்பிய நாடான இத்தாலியின் ரோம் நகருக்கு விமான சேவை நடாத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து நேற்று அதிகாலை 3.10 மணிக்குப் புறப்பட்ட ஸ்ரீலங்கன் எயார் விமானம் ரோம் நகர நேரமான பிற்பகல் 2.45 மணிக்குத் தரை இறங்கியுள்ளது.

இருந்த போதிலும் ஐரோப்பாவின் ஏனைய நகர்களுக்கான விமான சேவை மறு அறிவித்தல் வரை இடை நிறுத்தப்பட்டதாகவே இருக்கும் என விமான நிலையத்தின் விசேட கரும பீட அதிகாரியொருவர் கூறினார். அதேநேரம் ரோம் நகருக்கு தொடர்ந்தும் விமான சேவை நடாத்துவது குறித்தும் நிலைமைகளுக்கு ஏற்பவே முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் சொன்னார்.

ஐரோப்பிய நாடுகளுக்கான விமான சேவைகள் கடந்த வெள்ளிக்கிழமை முதல் இடை நிறுத்தப்பட்டதால் அந்நாடுகளுக்குப் பயணம் செய்ய முடியாத பயணிகள் நீர்கொழும்பிலும், அதனை அண்டிய பகுதிகளிலுள்ள ஹோட்டல்களிலும் தற்காலிகமாகத் தங்கியுள்ளனர். இந் நிலைமை தொடருமாயின் அப்பிரதேசத்தில் ஹோட்டல்களுக்கும் தட்டுப்பாடு ஏற்படும் என்று உல்லாச பயணத்துறை அதிகாரிகள் கூறினர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *