ஓய்வுபெற்ற ஜெனரல் சரத்பொன்சேகா பாராளுமன்றத்தில் எம்.பி.யாக பதவிப்பிரமாணம் மேற்கொள்ள பாதுகாப்பு அமைச்சின் அங்கீகாரம் தேவைப்படுவதாக இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க கூறியுள்ளார்.
இதுவரை அது தொடர்பான அங்கீகாரம் எதுவும் கோரப்பட்டிருக்கவில்லை என்றும் அவர் ஆங்கிலப் வாரப் பத்திரிகையொன்றிற்குக் கூறியுள்ளார். அத்துடன், இது தொடர்பாக பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம் இருந்து பாதுகாப்பு அமைச்சிற்கு தொடர்பாடல் எதுவும் இதுவரைமேற்கொள்ளப்படவில்லை எனவும் பிரசாத் சமரசிங்க தெரிவித்திருக்கிறார்.
ஜெனரல் பொன்சேகா இப்போது கடற்படைத் தலைமையகத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார். சதி மற்றும் இராணுவ தளபாடக் கொள்வனவில் மோசடிகளை மேற்கொண்டமை போன்ற குற்றச்சாட்டுகள் தொடர்பாக இரு இராணுவ நீதிமன்ற விசாரணைகளை பொன்சேகா எதிர்நோக்கியுள்ளார்.
ஏப்ரல் 8 பாராளுமன்றத் தேர்தலில் ஜனநாயக தேசியக் கூட்டணியின் எம்.பி.யாக கொழும்பு மாவட்டத்திலிருந்து பொன்சேகா தெரிவு செய்யப்பட்டிருக்கிறார். அவருக்கு 98 ஆயிரம் வாக்குகள் கிடைத்துள்ளன. அவருடைய பெயர் பாராளுமன்ற உறுப்பினராக தேர்தல் ஆணையாளரால் வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 22 இல் ஜெனரல் பொன்சேகா பாராளுமன்றத்திற்கு பிரசன்னமாகியிருப்பதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு இதுவரை எந்தவொரு கோரிக்கையையும் தான் பெற்றிருக்கவில்லை என்று பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக கித்துல் கொட கூறியுள்ளார். “இதுவரை நான் எதனையும் பெற்றுக்கொண்டிருக்கவில்லை. அது தொடர்பாக நான் எதனையும் சிந்தித்திருக்கவுமில்லை என்று அவர் மேலும் தெரிவித்திருக்கிறார்.
ஆயினும் இரு தனித்தனியாக கடிதங்களை தமது கட்சி அனுப்பி வைத்திருப்பதாக ஜனநாயக தேசிய கூட்டணியின் பேச்சாளர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்தார். ஒரு கடிதம் பாராளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு அனுப்பப்பட்டிருப்பதாகவும் ஜெனரல் பொன்சேகா வியாழக்கிழமை பதவிப் பிரமாணம் செய்வதற்குரிய ஏற்பாடுகளைச் செய்யுமாறு கோரி அக்கடிதம் அனுப்பப்பட்டிருப்பதாகவும் மற்றைய கடிதம் இராணுவத் தளபதி ஜெகத் ஜயசூரியவுக்கு அனுப்பப்பட்டிருப்பதாகவும் அநுர குமார திஸாநாயக்க கூறியுள்ளார். ஜெனரல் பாராளுமன்றத்திற்கு செல்வதற்குரிய ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு கோரி இராணுவத்தளபதிக்கு கடிதம் அனுப்பியிருப்பதாக அநுர குமார திஸாநாயக்க தெரிவித்தார்.
வியாழன்று பாராளுமன்றத்தில் பொன்சேகா அறிக்கையொன்றை விடுப்பதற்கு உத்தேசித்திருப்பதாக அநுர குமார தெரிவித்தார். ஆனால், வியாழக்கிழமை பாராளுமன்றம் புதிதாகத் தெரிவுசெய்யப்பட்ட எம்.பி.க்கள் பதவிப் பிரமாணம் எடுப்பதற்காக கூட்டப்படுகிறது. ஆதலால் பொன்சேகா தொடர்பாக எந்த ஏற்பாடுகளும் இதுவரை செய்யப்படவில்லை. வியாழக்கிழமை பாராளுமன்றம் கூடும்போது புதிய சபாநாயகர் தெரிவு செய்யப்படவுள்ளார். அதன் பின்னர் எம்.பி.க்கள் சத்தியப் பிரமாணம் செய்துகொள்வர்.