ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் ஒரு தடவை கையைச் சுட்டுக்கொண்டவன் நான். இன்னொரு தடவை அப்படிச் செய்வதற்கு நானொரு முட்டாள் அல்லவெனத் தெரிவித்திருக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அமைச்சுப் பதவிகளுக்காக சிறுபான்மைச் சமூகத்தை விலைபேசும் துரோகத்தனத்தை ஒருபோதும் செய்யமாட்டேன் எனவும் உறுதிபடக் கூறியுள்ளார்.
இன்றைய நிலையில் அரசுடன் எந்தவிதமான பேச்சுவார்த்தைக்கும் இடமில்லையெனவும் சுட்டிக்காட்டியிருக்கும் ஹக்கீம் இது நாவலப்பிட்டியில் தனக்கு அளிக்கப்படக்கூடிய வாக்குகளைத் தடுக்கும் ஒரு சதித்திட்டமெனவும் தெரிவித்தார். எமக்கு நாளைய தினம் கண்டி மாவட்டத்தில் பெரு வெற்றி கிட்டும் என்பது உறுதியானது. அரசுமுஸ்லிம் காங்கிரஸ் பேச்சு விரைவில் இடம்பெறுமென அரச ஊடகங்களில் வெளியான செய்தி குறித்து மறுத்துரைக்கையிலேயே ரவூப் ஹக்கீம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
.
அரசாங்கம் முதலில் வடக்கு,கிழக்கு தமிழ் பேசும் மக்களுக்கான தீர்வை முன்வைக்கட்டும். அதன் பிரதிபலிப்பு சாதகங்களை வைத்தே எமது அடுத்த கட்ட நடவடிக்கைகள் அமையும். அதைவிடுத்து அமைச்சுப்பதவிகளுக்காக நாம் சோரம் போகவோ எமது சமூகத்தை விலைபேசி துரோகமிழைக்கவோ நாம் ஒருபோதும் முன்வரமாட்டோம் எனவும் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.