நாவலப்பிட்டி மற்றும் கும்புறுப்பிட்டி மீள் தேர்தல் ஏற்பாடுகள் பூர்த்தி

gamini.jpgநாவலப் பிட்டி மற்றும் கும்புறுப்பிட்டிய மீள்தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் திணைக்களம் நேற்று கூறியது. தேர்தலுக்கான பிரசாரப் பணிகள் நேற்று முன்தினம் (17) நள்ளிரவு பூர்த்தியடைந்ததோடு தேர்தல்கள் நாளை நடைபெறவுள்ளன.

பாதுகாப்புக் கடமைகளில் சுமார் இரண்டாயிரம் பாதுகாப்புத் தரப்பினர் ஈடுபடுத்தப்படவுள்ளதோடு தேர்தல் கடமைகளில் ஈடுபடும் உத்தியோகத்தர்கள் இன்று முதல் (19) வாக்கு நிலையங்களுக்கு செல்ல உள்ளதாகவும் தேர்தல் திணைக்களம் தெரிவித்தது. வாக்குப் பெட்டிகளும் இன்று (19) வாக்குச் சாவடிகளுக்கு எடுத்துச் செல்லப்படவுள்ளன.

நாவலப்பிட்டியிலும் கும்புறுப்பிட்டியிலும் அமைதியான தேர்தல்களை நடத்துவதற்கான சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் தேர்தல் திணைக்களம் கூறியது. விசேட அதிகாரிகள் குழு இன்று (19) நாவலப்பிட்டிக்கு செல்கிறது எனவும் திணைக்கள உயரதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.

மக்கள் எதுவித அச்சமுமின்றி சுதந்திரமாக வாக்களிக்கும் வகையில் உச்ச பாதுகாப்பு ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் கடமைகளுக்குப் பொறுப்பான பாதுகாப்பு அதிகாரி பிரதிப் பொலிஸ் மாஅதிபர் காமினி நவரத்ன கூறினார். 1200 இராணுவம் மற்றும் பொலிஸார் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதோடு தேர்தல் தினத்தில் மேலும் 800 பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை விடுமுறை தினமான நேற்று (18) விசேட வாக்காளர் அட்டை விநியோகம் இடம்பெற்றதோடு இன்றும் (19) வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்படவுள்ளதாக தபால் திணைக்களம் கூறியது.

நாவலப்பிட்டியவில் 37 வாக்களிப்பு நிலையங்களிலும் கும்புறுப்பிட்டியவில் ஒரு வாக்களிப்பு நிலையத்திலும் மீள் தேர்தல் நடைபெறுகிறது.

நாவலப்பிட்டிய வாக்குகள் கண்டி மாவட்ட செயலகத்திலும் கும்புறுப்பிட்டிய வாக்குகள் திருகோணமலை கச்சேரியிலும் எண்ணப்படவுள்ளன. கும்புறுப்பிட்டிய வாக்குகள் அதே வாக்களிப்பு நிலையத்தில் எண்ணுவதற்கே முன்னர் தீர்மானிக்கப் பட்டிருந்தது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *