16

16

பாலியல் சேஷ்டை குற்றச்சாட்டில் பிரிட்டனிலிருந்து இலங்கைக்கு நாடுகடத்தப்படவிருக்கும் இளைஞன்

பிரிட்டனில் ஹீலி என்ற இடத்தில் பெண்கள் மீது பாலியல் இம்சையை மேற்கொண்ட நான்கு குற்றச்சாட்டில் குற்றவாளியாக காணப்பட்ட அச்சல தத்தலாகே என்ற இலங்கை இளைஞனை நாடுகடத்துமாறு பிரிட்டிஷ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த நவம்பருக்கும் ஜனவரிக்கும் இடையில் ஹீலி பல்கலைக்கழக வளாகத்தில் மூன்று தடவைகள் 27 வயதுடைய இந்த இளைஞன் பாலியல் இம்சைக் குற்றங்களை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகாலையில் பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிகள் நடந்துவரும் போது இவர் பாலியல் ரீதியான சேஷ்டைகளை புரிந்துள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டிருக்கிறது. நியூ ஹாசில் எனுமிடத்தில் ஹீலி வீதியில் வசிக்கும் அச்சல டிசம்பர் 23 இல் தேவாலயம் அருகே 2 பெண்களை பின்தொடர்ந்து சென்றுள்ளார். அவர் கார் தரிப்பிடத்திற்கு செல்லும் படிக்கட்டில் 17 வயதுடைய பெண்ணொருவர் மீது அங்க சேஷ்டை மேற்கொண்டுள்ளார். பிரதிவாதியான அச்சல ஹீலி பல்கலைக்கழகத்தில் சட்டத்துறையில் முதுமாணி கற்கைநெறியை பயின்று வருகிறார். 4 பாலியல் சேஷ்டை குற்றச்சாட்டுகள் இவர் மீது தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இவரைக் குற்றவாளியாக நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.  நீதிபதி ரொபர்ட் ரிவர் ஜோன்ஸ், அச்சலவுக்கு 22 மாதகால சிறைத்தண்டனை வழங்கியதுடன் அவர் தன்னாலான விதத்திலே நாடுகடத்தப்பட உள்ளார் என தெரிவித்திருக்கிறார். அத்துடன், 10 வருடங்களுக்கு பாலியல் குற்றவாளிகள் டாப்பில் அவர் கைச்சாத்திட வேண்டுமென நீதிபதி பணித்துள்ளார். .

டெங்கு நோயால் நேற்றுவரை 134பேர் பலி; 9400பேர் பாதிப்பு

dengu_1.gifடெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருவதாக சுகாதாரப் பராமரிப்பு போஷாக்குத் துறை அமைச்சின் நோய்பரவுகைத் தடுப்பு பிரிவு மருத்துவ அதிகாரியான மனோரி கீத்தாஞ்சலி நேற்றுத் தெரிவித்தார்.

இக்காய்ச்சல் காரணமாக நேற்று வரையும் 134 பேர் உயிரிழந்திருப்பதாகவும் 9400 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.இக்காய்ச்சலுக்கு மே மாதத்தில் மாத்திரம் நாலாயிரம் பேர் உள்ளதாகக் குறிப்பிட்ட அவர் கண்டி, கொழும்பு, கம்பஹா, ஹம்பாந்தோட்டை, மட்டக்களப்பு, கேகாலை போன்ற 12 மாவட்டங்களில் இக்காய்ச்சல் தொடர்ந்தும் தீவிர நிலையில் காணப்படுகின்றது என்றும் கூறினார்.

இதன் காரணத்தினால் நுளம்புகள் பெருகக்கூடிய இடங்களை ஒழித்து சுற்றாடலை சுத்தமாகவும், உலர் நிலையிலும் வைத்திருப்பதில் மக்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும். அதுவே நுளம்புகள் பரப்புகின்ற நோய்களைக் கட்டுப்படுத்துவதற்குப் பெரிதும் உதவும் எனவும் அவர் கூறினார்.

ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரி-56 ரக ரவைகள் கண்டுபிடிப்பு

மட்டக் களப்பு, தோணித்தோட்டமடு பிரதேசத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரி-56 ரக துப்பாக்கி ரவைகளை இராணுவத்தினர் நேற்று முன்தினம் மீட்டெடுத்ததாக தேசியப் பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலைய அதிகாரியொருவர் தெரிவித்தார்.

இராணுவத்தினரின் 23 வது படைப் பிரிவுக்குக் கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் மேற்கொண்ட தேடுதலின் போதே இவ்வளவு தொகை ரவைகள் மீட்கப்பட்டதாகவும் அவர் கூறினார். இதேவேளை மட்டக்களப்பு, நரக்கமுல்ல, இழுப் படிச்சேனை போன்ற பிரதேசங்களிலிருந்து இரு கிளேமோர் குண்டுகள், நான்கு கைக்குண்டுகள் உட்பட ஒரு தொகுதி வெடி பொருட்களையும் இராணுவத்தினர் மீட்டெடுத்துள்ளனர்.

இதேநேரம் முல்லைத்தீவு தாளம்குளத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 9 எம். எம். கைக்துப்பாக்கிக்குரிய 99 ரவைகளையும், முல்லைத்தீவு, அம்பகாமம் பிரதேசத்திலி ருந்து ஜி-3 ரக துப்பாக்கிக்குரிய 31 ரவைகளையும், விஸ்வமடு பிரதேசத்திலிருந்து இரு ஆர். பி. ஜி. குண்டு களையும், மேம்படுத்தப்பட்ட இரு குண்டுகளையும் இராணுவத்தினர் மீட்டெடுத்துள்ளனர் என்றார்.

கல்வியியல் கல்லூரியில் பயிற்சிபெற்ற 295 பேருக்கு கிழக்கில் நியமனம்

teacher.jpgகல்வி யியல் கல்லூரிகளில் பயிற்சிகளை நிறைவு செய்த மூவாயிரம் மாணவர்களில் 295 பேருக்கு கிழக்கு மாகாணப் பாடசாலைகளில் நியமனங்களை வழங்க கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது.  கல்வியியல் கல்லூரியின் இறுதிப்பரீட்சையில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்றவர்களுக்கு அவர்கள் விரும்பிய பாடசாலைகளில் நிலவும் வெற்றிடங்களுக்கமைய நியமனம் வழங்கப்படுமெனவும் ஏனைய நியமனங்கள் பாடசாலைகளில் நிலவும் வெற்றிடங்களுக்கேற்ப வழங்கப்படுமெனவும் தெரிவிக்கப்படுகிறது.

கிழக்கு மாகாணத்தில் 7 வருடங்களுக்கு அதிகமாக சேவையிலீடுபட்டுள்ளவர்களுக்கு அவர்களது சொந்த இடங்களுக்கு இடமாற்றங்களை வழங்கும் முகமாகவே இந்நியமனங்களை வழங்கவுள்ளதாகத் தெரிவித்த கல்வியமைச்சின் செயலாளர் மேல் மாகாணசபையைச் சேர்ந்த கல்வியியல் கல்லூரி இறுதிப்பரீட்சையில் சித்தி பெற்றவர்களுக்கு மேல் மாகாணத்தில் ஆசிரிய நியமனங்கள் வழங்கப்படமாட்டாது எனவும் தெரிவித்தார்.

பிரதியமைச்சர் நியோமல் பெரேராவை ஐ.தே.கட்சியில் இருந்து நீக்கத்தடை

புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பிரதி மீன்பிடித்துறை அமைச்சருமான நியோமல் பெரேராவை ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து நீக்குவதற்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இடைக்காலத்தடை விதித்துள்ளது.
பிரதியமைச்சர் நியோமல் பெரேரா கடந்த 2004 பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிட்டு புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார்.

பின்னர் ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் 16 பேர் ஆளும் தரப்பினருடன் சேர்ந்த போது இவரும் சேர்ந்து கொண்டார். மே 28 ஆம் திகதி ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பிரதியமைச்சர் நியோமல் பெரேராவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து நீக்கியுள்ளதாகக் குறிப்பிட்டிருந்தார்.

இதனையடுத்து, பிரதியமைச்சர் நியோமல் பெரேரா ஐக்கிய தேசியக் கட்சியின் இந்த நடவடிக்கைக்கு எதிராக கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர், பொதுச் செயலாளர் மற்றும் கட்சியின் நிர்வாகக்குழு உறுப்பினர்களும் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

பரீட்சைகள் ஆணையர் தலைமையிலான குழு அடுத்த வாரம் வவுனியா விஜயம்

11edu-min.jpgவன்னி யிலிருந்து இடம்பெயர்ந்து வவுனியாவில் தங்கியுள்ள மாணவர்களுக்கு ஐந்தாமாண்டு புலமைப்பரிசில் பரீட்சையை நடத்துவது தொடர்பில் முன்னோடி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அநுர எதிரிசிங்க தலைமையிலான பரீட்சைத் திணைக்களக் குழுவொன்று வவுனியாவுக்குச் செல்லவுள்ளது.

கல்வியமைச்சர் சுசில் பிரேம ஜயந்தவின் பணிப்புரைக்கமைய இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் பரீட்சைகள் ஆணையாளர் தலைமையிலான குழு அடுத்த வாரம் வவுனியாவுக்குச் செல்லவுள்ளதாகக் கல்வியமைச்சு தெரிவித்தது.

இது தொடர்பில் கல்விய மைச்சின் உயரதிகாரியொருவர் தெரிவிக்கையில், வவுனியாவிலிருந்து இடம்பெயர் ந்து நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மாணவர்களுக்கு க.பொ.த. உயர்தரப்பரீட்சையை அங்கு நடத்துவதற்கான முன்னோடி நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன.

இதற்கென கொழும்பிலிருந்து றோயல் கல்லூரி, டி.எஸ். சேனநாயக்க கல்லூரி போன்ற உயர் கல்லூரிகளிலிருந்து தேர்ச்சியுள்ள ஆசிரியர்கள் அங்கு அனுப்பிவைக்கப்பட்டு பரீட்சைக்கு மாணவர்களைத் தயார்படுத்தும் நடவடிக்கைகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

இதற்கிணங்க ஐந்தாமாண்டு புலமைப்பரீட்சையும் ஆகஸ்ட் மாத நடுப்பகுதியில் நடத்தப்பட வுள்ளதால் அப்பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களைச் சந்தித்தல் உட்பட அதற்கான சகல ஏற்பாடுகளையும் மேற்கொள்வதற்காக மேற்படி குழுவினர் வவுனியாவிற்குச் செல்லவுள்ளனர். இவர்களுடன் கொழும்பிலிருந்து ஆசிரியர் குழுவொன்றையும் அனுப்பி அம்மாணவர்களின் கல்வி நிலை பற்றி ஆராயவும், பரீட்சைக்கு அவர்களை ஆயத்தப்படுத்தவும் நடவடிக் கைகள் மேற்கொள்ளப்படுமென அவ்வதிகாரி மேலும் தெரிவித்தார்.

இனங்களுக்கிடையிலான ஜக்கியம் – இனியாவது சாத்தியமா? : எஸ். தவராசா

SL_Flag(முன்னைநாள் பாராளுமன்ற உறுப்பினரும் சகலகட்சி மகாநாட்டின் அங்கத்துவருமான எஸ். தவராசா அவர்கள் லண்டன் ‘Oxford Union’ இல்  05.06.09 அன்று ஆற்றிய உரையின் தமிழாக்கம்.)

தலைவர் என்னை அறிமுகம் செய்துவைக்கும்போது நான் சார்ந்திருக்கும் கட்சி (ஈழ மக்கள் ஜனநாயக கட்சி – ஈபிடிபி) இலைங்கை இந்திய ஒப்பந்தத்தை தொடர்ந்து ஆயுதப் போராட்டத்தை கைவிட்டு ஜனநாயக நீரோட்டத்தை தளுவிய ஒன்று என்று குறிப்பிட்டிருந்தார். அந்த அறிமுகத்தில் அவர் முக்கியமான ஓர் விடயத்தை கூற தவறிவிட்டார். அவ்வாறாக ஜனநாயக நீரோட்டத்தை தளுவியமைக்காக நாம் கொடுத்த விலையோ மிக அதிகம். எழுவதுக்கும் மேற்பட்ட கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள் புலிகளினால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். ஒரு சந்தர்ப்பத்தில் கட்சியின் முக்கிய உறுப்பினர் ஒருவர் தனது ஜந்து வயது மகளுடன் புத்தளத்தில் சென்று கொண்டிருந்தபோது அவரை சுட்டுவிட்டு அவ் ஜந்துவயது சிறுமியிடம் அம்மாவிடம் போய் அப்பா சுடப்பட்டு இறந்துவிட்டார் எனக் கூறவும் என்று சொல்லி அனுப்பினர். அவ்வாறாக மனிதாபிமானமற்ற கொடூரமான முறையில் எமது உறுப்பினர்கள புலிப் பயங்கரவாதத்தினால் தாக்கப்பட்டனர். இவையாவும் நாம் ஆயுதப் போராட்டத்தை கைவிட்டு ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்து கொண்டமைக்காக.

எமது கட்சியின் தலைவர் அமைச்சர் டக்லஸ் தேவானந்தா அவர்கள் பல தடவைகள் புலிகளின் தாக்குதலில் இருந்து உயிர் தப்பியுள்ளார். ஒரு சந்தர்ப்பத்தில் கொழும்பின் தெற்கு புறத்தில் அமைந்திருக்கும் களுத்துறை மறியற் சாலைக்கு பிரதி சட்டமா அதிபர் சகிதம்  அங்கு தடுத்து வைக்கப்பட்டிருக்கும் கைதிகளின் பிரச்சனைகள் தொடர்பாக பேசித்தீர்ப்பதற்காக சென்றிருந்த வேளை அங்கிருந்த புலிக்கைதிகளினால் தாக்கப்பட்டார். அத்தாக்குதலின் போது  அவர் பலத்தகாயங்களுக்கு உட்பட்டதுடன் ஒற்றைக்கண்ணின் பார்வையையும் இழந்துள்ளார். அவர் உயிருடன் வாழ்வது ஒரு மறு பிறப்பே என்று கூறவேண்டும். இன்னொரு தாக்குதலின் போது கொழும்பில் அவரின் வாசஸ்தலம்  ‘கொமாண்டோ’ முறையிலான தாக்குதலுக்கு உள்ளானது. அத்தாக்குதலின் போது அவரின் நான்கு மெய்க்காட்பாளர்கள் உயிரிழந்தனர். தனது வதிவிடத்தின் பின்பக்க சுவரினால் பாய்ந்து கொண்டதன் மூலம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தப்பித்துக்கொள்ள முடிந்தது. இன்னொரு முயற்சியாக அவரின் அமைச்சுக் காரியாலயத்திற்கு ஒரு பெண் தற்கொலைக் குண்டுதாரி அனுப்பப்பட்டிருந்தார். அமைச்சரின் காரியாலய அறையின் முன்பு பாதுகாப்பு பிரிவினர் சோதனையிட முயன்றபோது அவர் ஒத்துழைக்காமையினால் அண்மையில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு தன் அங்கியில் இருந்த குண்டை வெடிக்கச் செய்ததன் மூலம் நான்கு பொலீஸ் அதிகாரிகள் உயிரை இழந்ததுடன் அத்  தற்கொலைக் குண்டுதாரியும் இறந்து கொண்டார். நான் குறிப்பிட் கடைசி இரு சந்தர்ப்பங்களிலும் நானும் டக்ளஸ் தேவானந்தா அவர்களுடன் உடனிருந்தமையினால் மயிரிளையில் உயிர் தப்பித்துக்கொண்டேன். நாம் சந்தித்த புலிப் பயங்கரவாதத்தின் பலவடிவங்கள் இவையாகும். 

இப்புலிப் பயங்கரவாதம்  இன்று ஏறத்தாள 380 000 மக்களை அகதி முகாம்களில் வாழும் நிலைக்கு தள்ளியுள்ளது. இம்மக்களின் துயரங்களோ சொல்லிலடங்கா. போராளிகள், பொதமக்கள் உள்ளடங்கலாக 25 000க்கும் மேற்பட்டோர் அங்கவீனர்களாக்கப்பட்டு உள்ளனர். அண்மையில் இடம்பெயர்ந்தவர்களை விட, முன்னைய காலங்களில் இடம்பெயர்ந்த ஏறத்தாள 25 000 குடும்பங்கள் இன்னும் யாழ்ப்பாணத்தில் அகதிகளாக உள்ளனர். 75 000 பேர்வரை இந்தியாவில் 113 அகதி முகாம்களில் உள்ளதாக இந்திய அரச அறிக்கைகள் கூறுகின்றன. யாழ்ப்பாணத்திலும் மன்னாரிலும் இருந்து புலிகளினால் இரு தசாப்தங்களின் முன் விரட்டியடிக்கப்பட்ட 75 000க்கும மேற்பட்ட (முஸ்லீம்) மக்கள் இன்றும் புத்தளத்தில் அகதி முகாம்களில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அவர்களின் இன்றைய ஜனத்தொகை இன்னும் அதிகமாக இருக்கும்.
 
இன்றைய இக்கூட்டத்தின் கருப்பொருளாகிய ‘பயங்கரவாதத்திற்கு பிந்திய காலப்பகுதியில்’ அகதி முகாம்களில் வாழும் மக்களின் உடனடித்தேவைக்கு மேலாக அம்மக்களை மீளக்குடியமர்த்தல்,  உள்ளகக் கட்டமைப்புகளை மீள்நிர்மாணித்தல்; யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை அபிவிருத்திசெய்தல்; மீளக்குடியமர்த்தப்படும் மக்கள் தங்கள் இயல்பு வாழ்பினை மேற்கொள்வதற்கான தொழில்களை ஆரம்பிற்பதற்கு வேண்டிய  உபகரணங்களை வழங்கல் போன்ற பல்வேறு செயற்பாடுகளை செய்யவேண்டி உள்ளது. இவை யாவற்றுக்கும் மேலாக ஓர் முக்கியமான விடயத்தை செய்வதற்கான முனைப்புகளில் ஈடுபட வேண்டி உள்ளது. அதுதான் இனங்களிற்கு இடையில் ஒருமைப்பாட்டை; ஜக்கியத்தை ஏற்படுத்துவதற்கான ஏற்பாடு. ‘இனங்களிற்கு இடையிலான ஜக்கியம்’  ஏன்பதே இன்றைய என்னுடைய பேச்சின் தொனியாக அமையப்போகிறது. ஏனென்றால் அவ்வாறான ஜக்கியத்தை ஏற்படுத்தாமல் ‘பயங்கரவாதத்திற்கு பிந்திய காலப்பகுதியில்’ நாம் மேற்கொள்ளும் எந்த வேலைத்திட்டங்களும் வீணானவையாகப் போய்விடும்.

நேற்றைய தினம் (04.06.09) நான் லண்டனில் உள்ள இலங்கைக்கான தூதுவராலயத்தில் வெளிநாட்டலுவர்கள் அமைச்சர் றோகித போகொல்லகம தலைமையிலான ஆலொசனைக் கூட்டமொன்றிற்கு சென்றிருந்தேன். அங்கு சழூகமளித்தவர்களில் ஏறத்தாள அரைவாசியினர் சிங்களவர்கள் அரைவாசியினர் தமிழர்கள். பேச்சாளர் ‘இராணுவத்தின் வெற்றி’ தொடர்பாக குறிப்பிடும்போது அங்கு பிரசன்னமாயிருந்த சிங்களவர்கள் அனைவரும் கைகளை தட்டி ஆரவாரம் செய்ததையும்; அங்கு சழூகமளித்திருந்த தமிழர்களில் ஒருவரேனும் அவ்வாறு  கைகளை தட்டாததையும் காணக்கூடியதாக இருந்தது. இங்கு முக்கியமாகக் கவனிக்க வேண்டியது அங்கு சழூகமளித்திருந்த தமிழர்கள் பலரை நான் அறிவேன். அவர்கள் புலிகளிற்கு சார்பானவர்கள் இல்லை. நாங்கள் உண்மையில் இலைங்கையில் வாழும் இனங்களிற்கிடையில் ஜக்கியத்தை ஏற்படுத்துவதில் நாட்டமுடையவர்களாயின் நான் கூறிய இவ்விடயத்தை புறந்தள்ள முடியாது. சிங்களவர்கள தமிழர்களிற்கிடையிலான இந்தப் பிரிவானது தினம் தினம் விரிசலடைவதுடன் இரு துருவங்களை நோக்கி மையப்படுத்தப்படுகிறது. இந்த இன விரிசலானது இலங்கையில் மட்டுமல்ல இலங்கையர்கள் கணிசமாக வாளும் நாடுகளில் எல்லாம் பரவலாகக் காணப்படுகிறது. இவ்வாறான இன விரிசலை ஒற்றுமையாக்க வேண்டுமாயின் இதற்கான காரணியை நாம் முதலில் புரிந்து கொள்ளல் வேண்டும்.

சிலரின் கூற்றுப்படீ தெற்கிலங்கையில், குறிப்பாக கொழும்பிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் பெரும்பான்மையான தமிழர்கள், சிங்களவர்கள் வாழ்வதைப்போல் வாழ்கிறார்கள். அவர்களுக்கு எவ்வித பிரச்சனையும் இல்லை;  ஏனைய சிங்களவர்களிற்கு சமானமாகவே அவர்கள் வாழ்கிறார்கள. இவ்வாறான கூற்றிற்கு எனது பதில் அவ்வாறாக வாழம் தமிழர்களின் உள்ளங்களிற்கும் மனதிற்குள்ளும் புகுந்து நீங்கள் சிங்களவர்களிற்கு சமானமானவர்களாக வாழ்வதாக உணர்கிறீர்களா? நீங்கள் பாரபட்சமாக நடத்தப்படவில்லை என நினைக்கிறீர்களா? ஏன்ற கேள்விகளை எழுப்பினால் நிச்சயமாக அவர்களின் பதில் இல்லை என்றே இருக்கும்.

இன்னுமொரு கருத்து உலாவுகின்றது. அதாவது புலிகள்தான் சகல பிரைச்சனைகளிற்கும் காரணம், தற்போது  புலிகள் இலங்கையில் இருந்து முற்றாக அழிக்கப்பட்ட நிலையில் பிரச்சனைகள் எல்லாம் தீர்ந்துவிட்டது என்பதாகும். பயங்கரவாதம் என்பது அண்மைக் காலங்களில் உருவான ஒன்று. 1970களில் ஆயதப் போராட்டமே முதலில் ஆரம்பமானது. புலிகள் அவ்வாயுதப் போராட்டத்திற்கு பயங்கரவாதத்திற்குரிய செயற்பாடுகளை இணைத்துக் கொண்டதன் மூலம் அதனை ஓர் பயங்கரவாத அமைப்பாக மாற்றிக்கொண்டனர்.

1970க்கு முற்பட்ட காலப்பகுதியில் தமிழர் தரப்பிலிருந்து அரசியல் காரணங்களிற்காக ஒரு துப்பாக்கி வேட்டுவேனும் தீர்க்கப்பட்டது கிடையாது. ஆனால் இலைங்கை சுதந்திரமடைந்த நாள்முதல் தமிழர்களிற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பாரபட்சமான ஏற்பாடுகள் மற்றும்; அவர்கள் சிங்களவர்களிற்கு சமானவற்றவர்களாக நடத்தப்பட்டமை தொடர்பாக தமிழ்த் தலைவர்கள் பல எதிர்ப்பு நடைவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர். அவர்கள் அவ்வாறான எதிர்ப்பு நடைவடிக்கைகளை பாராளுமன்றத்திற்குள்ளும் அதற்கு வெளியிலும் சாத்வீக வளிமுறைகளினால் மேற்கொண்டிருந்தனர்.

இங்கு பிரசன்னமாயிருப்பவர்களில் யாராவது தமிழ் மக்களின் பிரச்சனைகள் என்ன என்பதை அறிய விரும்பினால் பண்டாரநாயகா – செல்வநாயகம் ஒப்பந்தம் டட்லி சேனநாயகா – செல்வநாயகம் ஒப்பந்தம் என்பவற்றை படியுங்கள் மின்வலைப்பின்னல் தளங்களில அவை உண்டு, எனது நேரத்தை அவற்றை விபரிப்பதில் செலவிட நான் விரும்பவில்லை. பண்டாரநாயகா (பேச்சாளர் ‘Oxford Union’; கேட்போர் கூடத்தில் தொங்கிக்கொண்டிருந்த பிரமாண்டமான பண்டாரநாயகாவின் படத்தை தன் சுட்டி விரலால் காட்டியவாறு) செல்வநாயகத்துடன் ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டிருக்கிறார் என்பதே தமிழ் மக்களிற்கு பிரச்சனைகள் உண்டு என்பதற்கு அடையாளமாகும். அவ்வொப்பந்தம் நடைமுறைப்படத்தப்படவில்லை எனினும் அதிலிருந்து  இருந்து நாம் கற்றுக்கொள்ளக் கூடியது என்னவெனில்  தமிழ்மக்களின் பிரச்சனைகள் இவ்வொப்பந்தத்தின் மூலம் அடையாளம் காணப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டமையாகும். இதேபோன்றே  டட்லி சேனநாயகா – செல்வநாயகம் ஒப்பந்தமும் அமைகிறது.

இவை 1970ஆம் ஆண்டிற்கு முன் அடையாளம் காணப்பட்ட தமிழ்மக்களின் பிரச்சனைகளாகும். 1970ஆம் ஆண்டின்பின் இன்னும் பல இனரீதியான பாகுபாடுகள் மேற்கொள்ளப்பட்டன. உதாரணத்திற்கு 1970ஆம் ஆண்டு ,அறிமுகப்படுத்தப்பட்ட இன விகிதாசார அடிப்படையிலான பல்கலைக்கழக அனுமதிமுறை. இந்த முறைமையினால் பாதிக்கப்பட்டவர்களில் நானும் ஓருவன். இந்த இன விகிதாசார அடிப்படையிலான பல்கலைக்கழக அனுமதிமுறையே இளைஞர்களை வன்முறையில் ஈடுபடுவதற்கு வித்திட்டது; அதுவே காலப்போக்கில் ஆயுதப்போராட்டமாகப் பருணமித்தது.
 
ஆயுதப்போராட்டம் பயனையும் ஈற்றுத்தந்தது. இந்திய – இலங்கை ஒப்பந்தமும் அதனைத்தொடர்ந்து கொண்டு வரப்பட்ட அரசியலமைப்பு மாற்றங்களும் இவ்வடையாளம் காணப்பட்ட பிரச்சனைகளிற்கு, முழுமையாக இல்லையெனினும், ஓரளவிற்கு தீர்வினை ஏற்படுத்தும் வகையில் கொண்டு வரப்பட்டவையாகும். பண்டா – செல்வா ஒப்பந்தத்தை எடுத்துக்கொண்டால் அதில் சில விடயங்களிற்கு பிராந்திய ரீதியில் அதிகாரப்பரவல் செய்யப்படும் என ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கின்றது. 13ஆவது திருத்தச் சட்டத்தின் மாகாண நிரலை எடுத்துக்கொண்டால் அதில் வரிசைப்படுத்தப்பட்டுள்ள விடயங்கள்  பண்டா – செல்வா ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்ட விடயங்களை விட பன்மடங்காகும். மொழி உரிமை விடயத்தை எடுத்துக்கொண்டால் பண்டா – செல்வா ஒப்பந்தத்தில் இணங்கிய வகையில் 13வது திருத்தச்சட்டத்திலும், அதனைத்தொடர்ந்து ஒரு வருட இடைவேளையின்பின் கொண்டுவரப்பட்ட 16வது திருத்தச்சட்டத்திலும் முழுமையாகக் கையாளப்பட்டிருக்கிறது. குறிப்பாக 16வது திருத்தச்சட்டம் நிர்வாக மற்றும் பதிவேட்டு  மொழி தொடர்பாக கொண்டுவரப்பட்ட அரசியலமைப்பு திருத்தமாகும். இத்திருத்தத்தின்படி வடக்கு கிழக்கு தவிர்ந்த இலங்கையின் எல்லா மாவட்டங்களிலும் நிர்வாக மற்றும் பதிவேட்டு மொழியாக சிங்களமும் வடக்கு கிழக்கில் நிர்வாக மற்றும் பதிவேட்டு மொழியாக தமிழும் அமையும். அவ்வாறாயின் தமிழ் மக்களின் பிரச்சனைகள் யாவும் தீர்க்கப்பட்டு விட்டதே, இதற்குமேலும் என்ன? என்ற கேள்வியை நீங்கள் எழுப்பலாம்.

துரதிஸ்டவசமாக இவையாவும் அரசியலமைப்பு சரத்துக்களே. இவ்வரசியலமைப்பு சரத்துக்கள் முழுமையாக இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. உதாரணத்திற்கு நான் ஏற்கனவே குறிப்பிட்ட 16வது திருத்தச்சட்டம் எவ்வாறு பாரபட்சமாக நடைமுறைப்படுத்தப்படுகிறது என்பதைக் காட்ட வினைகின்றேன். இந்த 16வது திருத்தச்சட்டத்தின் உப பிரிவொன்றில் ஐனாதிபதி எந்தவோரு உதவி அரசாங்க அதிபர் பிரிவில் கணிசமான மாற்று மொழி பேசுபவர்கள் வாழ்வார்களேயாயின், அந்த உதவி அரசாங்க அதிபர் பிரிவை இரு மொழிப்பிரிவாக பிரகடணப்படுத்தலாம் என கூறப்பட்டுள்ளது. வடக்கு கிழக்கில் வாழும் சிங்களவர்கள் தாங்கள் வாழும் உதவி அரசாங்க அதிபர் பிரிவிற்குள் அடங்கும் அரச காரியாலயங்களில் சிங்களத்தில் கருமமாற்றுவதற்கும் அதேபோன்று தெற்கில் வாழும் தமிழர்கள் தாங்கள் வாழும் பிரதேசங்களில் உள்ள  அரச காரியாலயங்களில் தமிழில் கருமமாற்றுவதற்கும் வகைவகுக்கும்  விதத்திலேயே இச்சரத்து அமைந்துள்ளது.

இதன் அடிப்படையில் இதுவரை 29 உதவி அரசாங்க அதிபர் பிரிவுகள் இரு மொழிப்பிரிவுகளாகப் பிரகடணப்படுத்தப்பட்டு உள்ளது. அவற்றினுள் சில பிரிவுகள் வடக்கு கிழக்கிலும் குறிப்பாக கிழக்கிலும், 20க்கும் மேற்பட்டவை தெற்கில் அமைந்துள்ள உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளுமாகும். இப்பிரகடணங்களை நடைமுறைப்படுத்தல் தொடர்பாக பார்ப்போமாயின் வடக்கு கிழக்கில் இரு மொழிப்பிரிவுகளாகப் பிரகடணப்படுத்தப்பட்டுள்ள அத்தனை உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளிலும் சிங்களத்தில் இலகுவாகக் கருமமாற்ற முடியும். ஆனால் தெற்கில் பிரகடணப்படுத்தப்பட்டுள்ள ஒரு உதவி அரசாங்க அதிபர் பிரிவிலேனும் தமிழில் கருமமாற்ற முடியாது. இவவுதாரணத்திலிருந்து அரசியலமைப்பின் ஒரே சரத்து எவ்வாறு பாரபட்சமாக நடைமுறைப்படுத்தப்படுகிறது என்பதை காணக்கூடியதாக இருக்கிறது. இங்கு பாரபட்சமென்பது சட்டவாக்கத்தில் இல்லை அதனை நடைமுறைப் படுத்தலிலேயே உள்ளது.

இதை ஓர் உதாரணத்திற்கே எடுத்துக்காட்டியுள்ளேன். இதைப்போல அரசியல் சாசனத்தில் முறையாக நடைமுறைப்படுத்தப்படாத எத்தனையோ விடயங்களை, அதிலும் குறிப்பாக 13வது திருத்தச்சட்டத்தில் உள்ள விடயங்கள் தொடர்பாக, என்னால் விளக்கிக்கொண்டே போக முடியும். எனக்கு ஒதுக்கப்பட்ட நேரம் காரணமாக என்னால் அவை யாவற்றையும் விபரித்து கூறமுடியாமல் உள்ளது. இங்கு முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டிய விடயம் என்னவெனில் நாம் அரசியல் தீர்வுகளை பற்றி அல்லது அரசியலமைப்பு மாற்றங்களைப்பற்றி எல்லாம் பேசிக்கொள்ளலாம், ஆனால் அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு வேண்டிய மனப்பாங்கு இல்லையெனில் நாம் இப்பிரச்சனைகளிற்கு தீர்வுகண்டு இன ஜக்கியத்தை எற்படுத்த முடியாது. நாம் இப்பிரச்சனைகளை திடசங்கர்ப்பத்துடன்   அணுகினாலேயே உண்மையான இன ஜக்கியத்தை எற்படுத்த முடியும். இன்றைய காலத்தின தேவையானது அரசியலமைப்பின் 13வது மற்றும் 16வது திருத்தங்களில் கொண்டு வரப்பட்ட விடயங்களை முழுமையாக நடைமுறைப்படுத்தி அதன்பின்னும் தீர்க்கப்படாத பிரச்சனைகள் இருப்பின் அவற்றை அடையாளம் கண்டு அதற்குரிய முறையில் அரசியலமைப்பு மாற்றங்களைக் கொண்டு வருதல்.