புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பிரதி மீன்பிடித்துறை அமைச்சருமான நியோமல் பெரேராவை ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து நீக்குவதற்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இடைக்காலத்தடை விதித்துள்ளது.
பிரதியமைச்சர் நியோமல் பெரேரா கடந்த 2004 பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிட்டு புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார்.
பின்னர் ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் 16 பேர் ஆளும் தரப்பினருடன் சேர்ந்த போது இவரும் சேர்ந்து கொண்டார். மே 28 ஆம் திகதி ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பிரதியமைச்சர் நியோமல் பெரேராவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து நீக்கியுள்ளதாகக் குறிப்பிட்டிருந்தார்.
இதனையடுத்து, பிரதியமைச்சர் நியோமல் பெரேரா ஐக்கிய தேசியக் கட்சியின் இந்த நடவடிக்கைக்கு எதிராக கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர், பொதுச் செயலாளர் மற்றும் கட்சியின் நிர்வாகக்குழு உறுப்பினர்களும் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.