11

11

ஐ.ஓ.ஸீ. நிறுவன உடன்படிக்கையில் திருத்தம் – பாராளுமன்றத்தில் அமைச்சர் பௌசி

fawzi_minister.jpgஇந்திய எண்ணெய் நிறுவனமான ஐ.ஓ.ஸீ நிறுவனத்துடனான உடன்படிக்கையில் திருத்தம் கொண்டுவருது குறித்து கவனம் செலுத்தி வருவதாக பெற்றோலியம் மற்றும் பெற்றோலிய வளங்கள் அமைச்சர் ஏ. எச்.எம். பௌசி இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

தற்போதைய உடன்படிக்கைக்கு ஏற்ப அரசாங்கம் எரிபொருள் நிறப்பும் நிலையம் ஒன்றை திறந்தால் ஐ.ஓ.ஸீ. நிறுவனத்துக்கும் நிலையம் ஒன்றைத் திறப்பதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட நிறுவனம் இதுவரை 300 எரிபொருள் நிறப்பும் நிலையங்களைத் ஆரம்பிப்பதற்கு விண்ணப்பித்துள்ளது. எனினும் இதற்கு இன்னும் அங்கீகாரம் வழங்கப்படவில்லை. அதற்கான அனுமதியை வழங்காமல் இருக்கவே உத்தேசிப்பதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

மீட்கப்பட்ட வட பகுதியிலும் எரிபொருள் நிறப்பும் நிலையங்களைத் திறப்பதற்கு தனியார் நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

களனி பல்கலைக்கழக மாணவர்கள்-பிரதேசவாசிகள் மோதல்

university-of-kelaniya.jpgகளனி பல்கலைக்கழக மாணவர்களுக்கும், பிரதேசவாசிகளுக்கும் இடையே இன்று காலை மோதல் இடம்பெற்றுள்ளது. இதில் காயமடைந்த 5 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இம்மோதலின் போது வீதியில் சென்ற வாகனங்கள் தாக்கப்பட்டுள்ளதாகவும், இதனையடுத்து பிரதான வீதி வழியான போக்குவரத்து இடைநிறுத்தப்பட்டு, பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளதாகவும் ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

மோதல் சம்பவத்தையடுத்து, களனிப் பல்கலைக்கழகம் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதாக அறிவிவிக்கப்படுகிறது. எனினும் மருத்துவ பீடம் வழமைபோல் இயங்குமென பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்தன

வடக்கில் விவசாயத்துறை அபிவிருத்திக்கு இந்தியா உதவ வேண்டும் – பேராசிரியர் சுவாமிநாதனிடம் ஜனாதிபதி வேண்டுகோள்

mahi-suwamy.jpgஎல்.ரீ.ரீ.ஈ. யுடனான மோதலின்போது சின்னாபின்னமாக்கப்பட்ட வட பகுதியின் விவசாயத்துறையில் அபிவிருத்திகளை முன்னெடுப்பதற்கு இந்தியா உதவ வேண்டுமென இந்திய பேராசிரியர் சுவாமிநாதனிடம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்தார்.

இலங்கைக்கு வருகை தந்திருக்கும் இந்திய பசுமைப் புரட்சியின் தந்தையெனக் கருதப்படும் பேராசிரியர் எம்.எஸ். சுவாமிநாதன் ஜனாதிபதியை நேற்று முன்தினம் சந்தித்துக் கலந்துரையாடியபோதே ஜனாதிபதி இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அலரிமாளிகையில் நடைபெற்ற இச்சந்திப்பின்போது வட பகுதியில் விவசாயத்துறையில் பாரிய அபிவிருத்தியை ஏற்படுத்தும் வகையிலான புதிய உந்து சக்தியொன்று அவசியமென பேராசிரியர் சுவாமிநாதனிடம் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி,  புலிகளுடனான மோதல்கள் காரணமாக சீர்குலைக்கப்பட்டுள்ள வட பகுதி மக்களின் வாழ்வாதார தொழில்கள் மீளவும் கட்டியெழுப்பப்படும் எனத் தெரிவித்தார்.

எல்.ரீ.ரீ.ஈ.யினரின் கொடுங்கோல் ஆட்சியின் கீழ் மிகவும் துயரங்களுக்குள்ளான வடக்கு வாழ் மக்களிடம் மீண்டும் நம்பிக்கையை ஏற்படுத்துவதே அரசாங்கத்தின் பிரதான குறிக்கோளாகுமெனக் கூறிய ஜனாதிபதி,  வடக்கில் மீளக்குடியமர்த்தப்படவுள்ள மக்கள் அவர்களது வாழ்வாதார தொழிலான விவசாயத்துறையில் பின்பற்ற வேண்டிய உத்திகளை திட்ட வரைபாக சமர்ப்பிக்குமாறு பேராசிரியர் சுவாமிநாதனிடம் வேண்டுகோள் விடுத்தார்

அனைத்துக் கட்சிக்குழு முகாம்களுக்கு செல்வதற்கு அரசு அனுமதிக்க வேண்டும் – சபையில் ஜயலத் எம்.பி.கோரிக்கை

parliament-of-sri-lanka.jpgபாராளு மன்றத்திலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளையும் உள்ளடக்கிய குழுவொன்றை வவுனியாவிலுள்ள அகதிமுகாம்களுக்கு சென்று பார்வையிட அரசு அனுமதிக்க வேண்டுமென ஐ.தே.க. எம்.பி.ஜயலத் ஜயவர்த்தனா கோரிக்கை விடுத்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற அவசர காலச் சட்ட நீடிப்பு விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது;

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் அரசின் அழைப்பிற்கிணங்கவே இலங்கையில் தனது பணிகளை முன்னெடுத்து வருகின்றது. அவர்களின் மனிதாபிமானப் பணிகளில் காணாமல் போனவர்களை கண்டுபிடித்துக் கொடுப்பதும் ஒன்று.

ஆனால், வவுனியா அகதிகள் முகாம்களில் உள்ளவர்களின் பல உறவினர்கள் காணாமல் போயுள்ளனர். இவர்களைக் கண்டு பிடித்துக் கொடுக்க சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்துக்கு அரசு அனுமதி வழங்கவில்லை.

சர்வதேச செஞ்சிலுவைச் சர்வதேசத்திற்கு அரசு இவ்வாறு தடை விதித்திருப்பது ஒரு பாரதூரமான மனித உரிமை மீறல். எங்களுக்கும் பிள்ளைகள் உள்ளனர். அவர்கள் காணாமல் போனால் நாம் எப்படித் துடிப்போம் அதே நிலைதான் தமிழ் மக்களுக்கும் இருக்கும் என்பதை நாம் ஒவ்வொருவரும் புரிந்துகொள்ள வேண்டும். அந்த மக்களின் வேதனைகளை உணர்ந்து கொள்ளவேண்டும்.

வவுனியா அகதி முகாம்களில் குடிநீர், போஷாக்கு, மருத்துவம் உணவு விடயங்கள் தொடர்பில் நாம் திருப்திப்படமுடியாத நிலையே காணப்படுகின்றது. அந்த முகாம்களில் தினமும் 10 முதல் 15 வரையான முதியவர்களும், சிறுவர்களும் மருத்துவ வசதிகளின்றி உயிரிழக்கின்றனர். இது தொடர்பில் கூடிய கவனம் செலுத்தப்பட வேண்டும். இந்த முகாம்களில் 3500 கர்ப்பிணித் தாய்மார்கள் உள்ளனர். இவர்கள் பிரசவத்திற்குப் பின்னரும் மீண்டும் அந்த முகாம்களுக்கே அனுப்பப்படுகின்றனர். அங்குள்ள நிலைமையில் அந்தக் குழந்தையை பராமரிக்கவோ, அரவணைக்கவோ முடியாது.

அகதிமுகாம்களுக்கு செல்வதற்கு எமக்கு அனுமதி மறுக்கப்படுகின்றது. நான் பல முறை முயன்றும் எனக்கு அனுமதி தரப்படவில்லை. எனவே, பாராளுமன்றத்திலுள்ள அனைத்துக் கட்சிப்பிரதிநிதிகளையும் உள்ளடக்கிய குழு ஒன்று அகதிமுகாம்களுக்கு சென்று அங்குள்ள நிலைமைகளை பார்வையிட அரசு அனுமதி வழங்க வேண்டும்.

சப்ரகமுவ மாகாண ஆசிரியர்கள் திருப்பி அனுப்பப்பட மாட்டார்கள் – ஜனாதிபதியுடனான பேச்சையடுத்து ஆறுமுகன் உறுதி

arumugam-thondaman.jpgஆசிரியர் பயிற்சிக் கல்லூரிக்கு தெரிவு செய்யப்பட்ட சப்ரகமுவ மாகாண மலையக ஆசிரியர்கள் எவரும் மீண்டும் பாடசாலைக்கு திருப்பி அனுப்பப்படமாட்டார்கள். அவர்கள் வழமைபோல் தமது இரு வருட உள்ளக பயிற்சியை தொடர முடியுமென்று இளைஞர் வலுவூட்டல் மற்றும் சமூக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் கூறினார்.

சப்ரகமுவ மாகாண பாடசாலைக்கு நியமனம் பெற்ற மலையக ஆசிரியர்களில் சிலர் இரு வருட உள்ளகப் பயிற்சிக்காக ஆசிரியர் பயிற்சி நெறிக்கு தெரிவு செய்ய ப்பட்டனர். இவ்வாறு தெரிவு செய்யப்பட்டவர்களில் சிலருக்கு சப்ரகமுவ மாகாண சபை இரு வருட விடுமுறை வழங்க மறுப்புத் தெரிவித்ததுடன் மீண்டும் பாடசாலைக்கு வருகை தந்து தமது கடமையை பொறுப்பேற்க வேண்டும்.

இல்லையேல் அவர்கள் பதவி நீக்கம் செய்யப்படுவதாக வலயக் கல்விப் பணிமனையினூடாக கடிதம் மூலம் அறிவித்தது. இது குறித்து பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானை நேரில் சந்தித்து அவரது கவனத்தில் கொண்டு வந்தனர்.

உடனடியாக செயற்பட்ட அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான், இது குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கவனத்திற்கு கொண்டு வந்தார். இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஜனாதிபதி கலந்துரையாடி உரிய பணிப்புரையை விடுத்துள்ளார். இதன்படி ஆசிரியர் கல்லூரிக்கு சென்று பதிவு செய்யப் பட்ட சப்ரகமுவ மாகாண மலையக ஆசிரியர்கள் தொடர் ந்து இருவருட உள்ளக பயிற்சியை தொடர முடியும் என்று அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்.

சப்ரகமுவ மாகாண பாடசாலைகளில் நியமிக்கப்பட்ட ஆசிரியர் நியமனத்தில் பல்வேறு குழறுபடிகள் பிரச்சினைகள் காணப்படுகின்றன. இதற்கு இப்பகுதி தமிழ் அதிகாரிகள் தான் பிரதான காரணம். தமிழ் மக்களுக்காக நியமிக்கப்படும் அதிகாரிகள் தமது கடமையை சரிவர செய்தால் தமிழ் மக்களுக்கு எவ்வித பிரச்சினையுமில்லை என்றும் கூறினார்.

வசந்தம் தொலைக்காட்சி, வசந்தம் வானொலி சேவைகள் ஆரம்பம் – கொக்காவிலில் 150 மீட்டர் உயரமான கோபுரம் அமைக்கப்படும்

வடக்கின் ‘வசந்தம் தொலைக்காட்சி’ மற் றும் ‘வசந்தம் வானொலி’ சேவைகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஊடகத்துறை அமை ச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

தகவல் ஊடகத்துறை அமைச்சில் நேற்று (10) நடை பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவிக்கையிலே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

வடக்கு வசந்தம் திட்டத்தின் கீழ் வடக்கில் தமிழ் வானொலி மற்றும் தொலைக்காட்சி சேவைகளை ஆரம்பிக்க ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன. சுயாதீன தொலைக்காட்சி சேவையின் கீழ் உள்ள வசந்தம் தொலைக்காட்சி மற்றும் வசந்தம் வானொலி என்பன வடக்கு பகுதிமக்களுக்காக அங்கு ஆரம்பிக்க உள்ளோம்.

இதற்காக 150 மீட்டர் உயரமான தொலைத் தொடர்பு கோபுரமொன்று கொக்காவில் பகுதியில் அமைக்கப்படும். இதற்காக ஆரம்ப நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றார்.

வன்னி அவலமும் ஜிரிவி, தீபம், ஐபிசி, ஒரு பேப்பர் புலிகளுடன் செய்த கூட்டுக் கலவியும்.

உயிழிழந்த பொதுமக்கள் 20 000
காயமடைந்த பொதுமக்கள் 60 000
உயிரிழந்த சிறுவர்கள் 3600 (மார்ச் வரை)
காயமடைந்த சிறுவர்கள் 7650 (மார்ச் வரை)
உயிரிழந்த இராணுவத்தினர் 6200
காயமடைந்த இராணுவத்தினர் 30 000
உயிரிழந்த வி புலிகள் ?
காயமடைந்த வி பு ?
புனர்வாழ்வு முகாம்களிலுள்ளோர் 7500
இடம்பெயர்ந்து முகாம்களிலுள்ளோர் 275000

‘300 000 வன்னி மக்களுக்கும் மரணத்துள் வாழ்வு’ என்ற தலைப்பில் பெப்ரவரி 11ல் வெளியான லண்டன் குரலில் முன் பக்கச் செய்தியை வெளியிட்டு 10 000 வரையான பொது மக்கள் கொல்லப்படலாம் என்றும் அச்சம் வெளியிட்டு இருந்தோம். அந்த அச்சம் நிஜமானது மட்டுமல்ல கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 000க்கும் அதிகம் என ஐநா செய்மதிப் புகைப்படங்களை ஆராய்ந்தும் ஏனைய தகவல்களின் மூலமும் யுகே ரைம்ஸ் பத்திரிகை ஆய்வுகளை வெளியிட்டுள்ளது.

பெப்ரவரி முற்பகுதியிலேயே விடுதலைப் புலிகள் இலங்கை இராணுவத்தின் தாக்குதலை எதிர்கொள்ள முடியாததைச் சுட்டிக்காட்டியதுடன் தமிழீழ விடுதலைப் புலிகள் பொதுமக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்துவதைச் சுட்டிக்காட்டி இலங்கை இராணுவத்தின் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் வன்னி மக்களை மரணத்தின் விளிம்புக்கு தள்ளி உள்ளது என்பதையும் எச்சரித்து இருந்தோம். யுத்தத்தில் ஈடுபட்ட இரு தரப்பினரும் பொதுமக்கள் பற்றி எவ்வித அக்கறையையும் கொண்டிருக்கவில்லை.

பெப்ரவரி முற்பகுதியிலேயே தமிழீழ விடுதலைப் புலிகள் தங்கள் ஆயுதங்களை சர்வதேச சமூகத்திடம் ஒப்படைத்து அரசியல் தீர்வுக்கு முன்வர வேண்டும் என்பதை நாம் வலியுறுத்தி இருந்தோம். ஆனால் இவைபற்றி கருத்தில் எடுக்காமல் இந்தியத் தேர்தல் முடிவுக்காக காத்திருந்து அனைத்தும் முடிவுக்கு வந்தபின் சரணடைந்து தங்கள் உயிர்களை இழந்துள்ளனர் புலிகளின் தலைமை. இவர்களின் முட்டாள்தனமான அரசியல் முடிவுகளுக்கு 20 000 பொதுமக்கள் தங்கள் உயிர்களை இழந்துள்ளனர். அதனைப் போன்று பல மடங்கினர் காயத்திற்குள்ளாகி உள்ளனர். ஒட்டுமொத்த வன்னி மக்களும் 275 000 பேர் அகதிகளாக்கப்பட்டு முகாம்களுக்குள் அடைத்து வைக்கப்பட்டு உள்ளனர்.

தமிழீழ விடுதலைப் புலிகள் கண்ணை மூடிக்கொண்டு பாழ்ங் கிணற்றில் வீழ்தது மட்டுமல்ல அதற்கு முன் வன்னி மக்களை அப்பாழ்ங்கிணற்றில் தள்ளிவிட்டுள்ளனர். புலிகள் மட்டுமல்ல புலம்பெயர்ந்த புலி ஆதரவுக் குழுக்களும் குறிப்பாக புலி ஆதரவு ஊடகங்கள் இந்த அழிவுக்கு உடந்தையாக இருந்துள்ளனர்.

யுத்தப் பிரதேசத்தின் யதார்த்த நிலையை விளங்கிக் கொள்ளாமல் புலிகளின் தலைமைக்கு எதுவெல்லாம் மகிழ்ச்சியைக் கொடுக்குமோ அவற்றை மட்டுமே தொலைக்காட்சியில் காட்டியும் வானொலியில் முழங்கியும் பத்திரிகையிலும் இணையங்களிலும் எழுதியும் வந்தனர். ‘வன்னி மக்கள் பெரும் அவலத்திற்குள் தள்ளப்படுகின்றனர். அவர்களை மனிதக் கேடயங்களாக பயன்படுத்தக் கூடாது. இலங்கை அரச படைகளின் மூர்க்கத்தனமான தாக்குதலில் மக்கள் கொல்லப்படுவார்கள். அதனைத் தடுத்து நிறுத்த வேண்டும்.’ என்ற எண்ணம் இந்த ஊடகங்களிடம் இருக்கவில்லை. மாறாக கொல்லப்பட்டவுடன் அதனைப் பிரச்சாரப்படுத்தி அரசியல் செய்யவே முற்பட்டனர்.

இந்த மக்களின் குருதியில் அரசியல் பிரச்சாரம் செய்த ஜி ரிவி தீபம், ஐபிசி, ஒரு பேப்பர் மற்றும் புலிகளின் ஊது குழல்களான ஊடகங்கள் மக்களின் உயிரிழப்புகளும் அவலமும் தவிர்க்க முடியாதது என்ற வகையிலும் அவ்வாறான அழிவுகளே தமிழீழ உருவாக்கத்திற்கு வழியேற்படுத்தும் என்றும் பொய்யான பிரச்சாரங்களை மேற்கொண்டன.

வன்னி மக்கள் எதிர்நோக்கிய மரண வாழ்வுக்கும் அவலத்திற்கும் இலங்கை இராணுவமும் தமிழீழ விடுதலைப் புலிகளும் சம பொறுப்புடையவர்கள் என்பதே சுயாதீன அமைப்புகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மை. ஆனால் இதனை முற்றாக மறைத்து வன்னி மண் பூர்வீக மண். அந்த மக்கள் அங்கிருந்து வெளியேறக் கூடாது என்று ஐரோப்பிய மற்றும் மேற்குநாடுகளில் உள்ள இந்த ஊடகங்கள் வன்னி மக்களை மரண வாழ்வுக்குள் இருக்க நிர்ப்பந்தித்தனர். இந்த மக்களின் அவலத்தில் புலிகளுக்கும் சம பொறுப்பு இருப்பதை தட்டிக் கேட்காமல் புலிக் கொடிகளையும் எங்கள் தலைவர் பிரபாகரன் என்று பிரபாகரனின் படத்தையும் தாங்கி நடத்தப்படும் ஊர்வலங்களுக்கு வக்காலத்து வாங்கினர்.

இலங்கை இராணுவம் மூர்க்கத்தனமான செல் தாக்குதலை நடத்த அதிலிருந்து தப்பி ஓடும் மக்கள் மீது புலிகள் துப்பாக்கிப் பிரயோகம் செய்கின்றனர். இங்குள்ள ஊடகங்கள் இதனைக் கண்டு கொள்ளவேயில்லை.

தமிழீழ விடுதலைப் புலிகளைத் திருப்திப்படுத்த இவர்கள் செய்த ஆய்வுகளும் விமர்சனங்களும் கானல் நீர் போலாக இன்று புலிகளின் தலைமை முற்றாக அழிக்கப்பட்டு வன்னி மக்களும் அவலத்திற்குள் தள்ளி விடப்பட்டுள்ளனர்.

புலிகளின் தலைமை அழிப்பதற்கு இருபத்திநான்கு மணிநேரத்திற்கு முன்னரும் தமிழீழத்தை அடைவதற்கு நெருங்கிவிட்டோம் என்று ஆய்வுகளும் விமர்சனங்களும் செய்த இந்த ஊடகங்களால் விடுதலைப் புலிகளின் தலைமை அழிக்கப்பட்டது என்பதைக் கூடச் சொல்ல முடியவில்லை.

புலிகளை தட்டிக்கொடுக்கும் இடத்தில் தட்டிக்கொடுத்து இடித்துரைக்க வேண்டிய இடத்தில் இடித்துரைத்து இருந்தால் புலிகளின் தலைமையும் காப்பாற்றப்பட்டு இருக்கும் வன்னி மக்களும் இந்த அவலத்திற்கு உட்பட்டிருக்க மாட்டார்கள்.

ஆனால் காட் விற்பனையையும் விளம்பரத்தையும் மட்டும் நோக்காகக் கொண்டு சிற்றின்பத்திற்காக ஜி ரிவி தீபம் ஐபிசி ஒரு பேப்பர் போன்ற ஊடகங்கள் புலிகளுடன் செய்த கூட்டுக்கலவியே புலிகளுக்கு உயிராபத்தான நோயை ஏற்படுத்தியது. இறுதியில் சடுதியான அழிவையும் ஏற்படுத்தியது.

இந்நோய் புலிகளின் மூளையின் நரம்புத் தொகுதியைத் தாக்கி அவர்களின் சிந்தனைத் திறனை அழித்து கற்பனையுலகில் உலாவிட்டது.

இந்நோய்குரிய அறிகுறிகள் ஐரோப்பிய பாராளுமன்றத் தேர்தலில் நிற்கும் வேட்பாளர் ஜனனி ஜனநாயகத்திலும் தென்படுகிறது. ஊடகங்களுடனான இந்தக் கூட்டுக் கலவியில் இருந்து விலத்தி யதார்த்தை புரிந்துகொண்டு செயற்படுவது ஜனனியின் அரசியல் எதிர்காலத்திற்கு நன்மை பயக்கும்.

சர்வதேச நாணய நிதியக்கடன் மாத இறுதியில் கிடைக்கும் சாத்தியம்

சர்வதேச நாணய நிதியத்திடம் இலங்கை விண்ணப்பித்திருந்த 1.9 பில்லியன் டொலர் கடனுக்கான அனுமதி ஜூன் இறுதியில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் கூறியுள்ளார். நாம் பெற்றிருக்கும் தரவுகளின் பிரகாரம் இந்த மாத இறுதிக்கு முன்பாக அது இடம்பெறும் என்று கப்ரால் நேற்று புதன்கிழமை ராய்ட்டர் செய்திச் சேவைக்கு தெரிவித்துள்ளார்.

தற்போது சர்வதேச நாணய நிதியக்கடன் தொடர்பான அவசர நிலைமையானது சிறிதுசிறிதாக குறைவடைந்து வருகிறது. இதனால் அது தேவையில்லை என்று நாம் கூறவில்லை. யுத்தம் முடிவடைந்த பின்னர் பொருளாதாரப்பின்னடைவால் ஏற்பட்ட அச்சுறுத்தலிலிருந்தும் இலங்கை சிறிதளவு விடுபட்டுக் கொண்டிருக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடனுக்காக காத்திருக்கும் அதேசமயம், இருதரப்பு ரீதியான கடன் பெறும் பேச்சு வார்த்தையை மத்தியவங்கி ஏற்கனவே ஆரம்பித்திருக்கிறது. லிபியாவிடமிருந்து 500 மில்லியன் டொலர் கடன் பெறுவதற்கான பேச்சுவார்த்தையை தற்போது மேற்கொண்டு வருகிறோம். மற்றொரு நாட்டிடமிருந்து மேலும் 500 மில்லியன் டொலர் வசதிகளை பெற்றுக் கொள்வதற்கான செயற்பாட்டில் நாம் ஈடுபட்டு வருகிறோம் என்றும் கப்ரால் கூறியுள்ளார். சர்வதேச நாணய நிதியம் இது தொடர்பாக உடனடியாக கருத்து எதனையும் தெரிவிக்கவில்லை. ஆனால் இது தொடர்பான தீர்மானம் விரைவில் எடுக்கப்படும் என்று கடந்த மாதம் தெரிவித்திருந்தது.

ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்ட 14 நாட்களுக்குள் தமது கடமையைப் பொறுப்பேற்காதவர்களின் நியமனங்கள் ரத்து

11edu-min.jpgஅரசாங் கத்தினால் ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்ட 14 நாட்களுக்குள் தமது கடமையைப் பொறுப்பேற்காதவர்களின் நியமனங்கள் உடனடியாக ரத்துச் செய்யப்படுமென கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அண்மையில் பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்கப்பட்ட 957 பேரில் 200 பேரே கடமைக்குச் சமூகமளித்துள்ளமை தெரியவந்துள்ளது. தமக்கு வசதியான பாடசாலைகளைத் தேடி ஏனையோர் அலைந்து திரிகின்றனர். எனினும் எக்காரணத்திற்காகவும் இவர்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட மாட்டாதெனவும் அமைச்சர் தெரிவித்தார்.

நாடளாவிய ரீதியில் பத்து இலட்சத்துக்கும் மேற்பட்ட தமிழ் மொழி மூல மாணவர்களுக்கு கற்பிக்கும் நடவடிக்கைகளில் 49824 தமிழ் மொழி மூல ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனரெனவும் அமைச்சர் தெரிவித்தார். இம்முறை க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கு ஆங்கில மொழி மூலம் தோற்றிய மாணவர்களுள் 80 சதவீதமானோர் சித்தியடைந்துள்ளதாகவும், க.பொ.த. சாதாரணதரப் பரீட்சையில் இம்முறை 4,000 பேர் தோற்றியதுடன் இவர்களில் 80 வீதமானோர் சித்தியடைந்துள்ளமை மகிழ்ச்சியளிப்பதாகவும் அமை ச்சர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று ஜே.வி.பி. எம்.பி. ரணவீர பதிரன எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். பாராளுமன்றம் நேற்றுக்காலை 9.30 மணிக்கு சபாநாயகர் டபிள்.யூ.ஜே.எம். லொக்கு பண்டாரவின் தலைமையில் கூடியது.

வாய்மூல விடைக்கான வேளையில் ரணவீர பதிரண எம்.பி. தமில் மொழிமூலம் கற்பிக் கும் ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் கல்வி கற்கும் மாணவர்களின் எண்ணிக்கை தொடர்பாகக் கேள்வியெழுப்பினார்.

இக்கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர்:-

தமிழ் மொழிமூல ஆசிரியர்கள் 13,213 பேர் சேவையில் உள்ளதுடன் கடந்த ஜூன் மாதம் நியமனம் வழங்கப்பட்ட 959 பட்டதாரி ஆசிரி யர்களிலும் 150 தமிழ் பட்டதாரிகள் உள்ளனர். அத்துடன் 110 ஆங்கில மொழிமூல ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் இரண்டு வாரங்களுக்குள் ஆராய்ந்து தேவைப்படும் ஆசிரியர்களை நியமிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கான விளம்பரங்களை பிரசுரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதெனவும் அமைச் சர் தெரிவித்தார்.அதேவேளை கடந்த ஜூன் முதலாம் திகதி 957 பேர் பட்டதாரி ஆசிரியர்களாக நியமனம் பெற்றுள்ளனரெனினும் அதில் இருநூறு பேரே கடமைக்குச் சமுகமளித்துள்ளனரென்பதையும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

நிவாரணக் கிராமங்களில் கண் சிகிச்சை முகாம் – ஸ்டாண்டட் சார்ட்டட் வங்கி ஒரு மில். அமெ. டொலர் உதவி

வடக்கு வசந்தத்தின் கீழ் வவுனியா நிவாரணக் கிரா மங்களில் தங்கியுள்ள மக்களுக்கென இலவச கண் சிகி ச்சை முகாம்களை நடாத்துவதற்கு ஸ்டேண்டட் சார்ட்டட் வங்கி ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்குவதற்கு முன்வைத்துள்ளது.

இது தொடர்பாக சுகாதாரப் பராமரிப்பு, போஷாக்குத் துறை அமைச்சுடன் ஸ்டேன்டட் சார்ட்டட் வங்கிப் பிரதி நிதிகள் இணக்கப்பாட்டு உடன்படிக்கையிலும் கைச் சாத்திட்டுள்ளார்கள்.

இந்நிதியுதவியின் மூலம் இலவச கண் சிகிச்சை முகாம்களை நடாத்துவதற்கான நடவடிக்கைகளை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மேற்கொண்டுள்ளார். கண் சிகிச்சை முகாம்களில் கண் பரிசோதனை, மூக்கு கண்ணாடி வழங்குதல் உட்பட கண்ணோடு தொடர்பான குறைபாடுகளுக்குத் தேவையான சிகிச்சைகளை மேற்கொள்ளவும் அமைச்சர் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.