09

09

வன்னி ஆயுத படை தலைமயகத்தின் ஆயுத கிடங்கில் தீ விபத்து

வவுனியா மாவட்டத்திலுள்ள மிகப் பெரிய முகாமான ஈரப்பெரியகுள முகாமின் ஆயுதக் கிடங்கு சற்று முன்னர் வெடித்துச் சிதறி வவுனியாவையும் அதனை அண்மதித்த பகுதிகளிலும் பாரிய வெடிச்சத்தங்கள் கேட்பதுடன் வவுனியா நகரப் பகுதி எங்கும் புகைமண்டமாகமாகக் காட்சி தருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முழுமையான சுதந்திர மனநிலையுடன் காணப்படுகின்றனர் – பாராளுமனறத்தில் பிரதமர் ரத்தனசிறி விக்ரமநாயக்க

06arliament.jpgபல தசாப்த காலமாக தீவிரவாதத்தினால் துன்பப்பட்டு வந்த மக்கள் தீவிரவாதம் ஒழிக்கப்பட்டதால்  வீதிகளில் குழுமி ஆரவாரம் செய்தனர். அவர்கள் தற்போது முழுமையான சுதந்திர மனநிலையுடன் காணப்படுகின்றனர்  என்று பிரதமர் ரத்தனசிறி விக்ரமநாயக்க பாராளுமன்றத்தில் இன்று தெரிவித்தார்.
அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்துக்கு நீடிக்கும் பிரேரணை பாராளுமன்றத்தில்  இன்று விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டபேதே பிரதமர் இதனைக் கூறினார்.

நாட்டை துரிதகதியில் அபிவிருத்தி செய்ய  அரசாசாங்கம் ஆரம்பித்துள்ள அனைத்து வேலைத்திட்டங்களுக்கும் அனைவரும் ஒத்துழைப்பு  வழங்க வேண்டும். தற்போது நிலவும் அமைதியான  சூழ்நிலையைப்பாதுகாக்க  அரசாங்கத்தால் மாத்திரம் முடியாது. பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் சகல உறுப்பினர்களும் இந்தப் பொறுப்பினை ஏற்க வேண்டும் என வலியுறுத்தினார்.

தீவிரவாதத்துடன் தொடர்புடைய சகல சக்திகளையும் அழிப்பதற்கு அவசரகாலச் சட்டம் தொடர்ந்தும் அமுல்ப்படுத்தப்பட வேண்டியுள்ளதாகவும் வலியுறுத்தினார்.

இந்தியாவிலுள்ள புலி சார்பு இலங்கையர்களின் வீசாக்களை ரத்துச் செய்யவும்

subramanian_swamy__.jpgஇந்திய ஆள்புல எல்லையில் இருந்துகொண்டு இந்திய அரசாங்கத்துக்கு எதிரான பிரச்சாரங்களை மேற்கொள்ள இலங்கை பிரஜைகளுக்கு எந்த உரிமையும் கிடையாது எனத் தெரிவித்துள்ள ஜனதா கட்சியின் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி, இவர்களின் வீசாக்களை இந்திய அரசு ரத்துச் செய்ய வேண்டுமெனக் கோரிக்கை விடுத்திருப்பதாக ஹிந்து பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.இவ்வாறு இந்திய அரசுக்கு எதிராகக் கோஷமிடுபவர்களில்  பெரும்பாலானவர்கள் புலிசார்பு பிரசாரர்களாகும். இந்தியர்கள் வெளிநாட்டவர்களுக்கு மத்தியில் இருந்துகொண்டு இந்திய அரசாங்கத்துக்கு எதிராகப் பிரசாரம் செய்தால் நாம் அதனை சகித்துக்கொள்ள மாட்டோம். மேலும் எமது நாட்டின் ஸ்திரத்தன்மையை சீர்குலைப்பதற்குத் திட்டமிடுவதாக வெளிநாட்டு அரசாங்கங்களை சந்தேகப்படுவோம். எனவே இவ்வாறான விடயங்களில் நாம் இரண்டு நிலைப்பாடுகளைக் கொண்டிருக்க முடியாது.

ஜனநாயக நாடான இலங்கை,  சார்க் அமைப்பின் ஓர் அங்கத்துவ நாடாகவும் காணப்படுகிறது. இலங்கைப் பிரஜைகளுக்கு இலங்கையிலிருந்துகொண்டு எத்தகைய கருத்துக்களையும் தெரிவிக்கலாம் என அவர் தெரிவித்ததாக அச்செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவசரகாலச் சட்டம் 95 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

06arliament.jpgஅவசர காலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்துக்கு நீடிப்பது தொடர்பான பிரேரணை 95 மேலதிக வாக்குகளால் பாராளுமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட்டது. பிரேரணைக்கு ஆதரவாக 102 வாக்குகளும் எதிராக 7 வாக்குகளும் செலுத்தப்பட்டன.

பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் எதிராக வாக்களித்ததுடன் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள்  வாக்களிப்பின் போது சபையில் இருக்கவில்லை. 

யசூசி அகாசி நலன்புரி நிலையங்களுக்கு விஜயம்

yasusiakasi.jpgயப்பானின் இலங்கைக்கான விசேட தூதுவர் யசூசி அகாசி இன்று (09.06.2009) வவுனியாவில் இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள நலன்புரி நிலையங்களுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். அங்கு சென்ற அவர் நலன்புரி நிலையங்களில் உள்ள மக்களை பார்வையிட்டுள்ளார். அங்கு மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து விரிவாக ஆராய்த அவர் மக்களின் குறைகளையும் கேட்டு அறிந்து கொண்டுள்ளார். இவரின் இந்த விஜயத்தின் போது ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷவும் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தொழிலாளர்களின் பிரச்சினைகள் தொடர்பான இரு பிரேரணைகள் மீதான விவாதம் இன்று

parliament.jpgமத்திய மாகாண சபைக்கு உட்பட்ட தோட்டத்தொழிலாளர்கள் எதிர்நோக்குகின்ற இரண்டு முக்கிய பிரச்சினைகள் தொடர்பாக மத்திய மாகாணசபைக்குச் சமர்ப்பிக்கப்பட்ட இரண்டு பிரேரணைகள் இன்று செவ்வாய்க்கிழமை இந்தச்சபையின் விவாதத்துக்குக் கொண்டுவரப்படவுள்ளதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் மத்திய மாகாணசபை உறுப்பினர் பிரகாஷ் கணேஷன் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது;

இன்று தோட்டத் தொழிலாளர்கள் உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்காது பாரிய பொருளாதார பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர். இதுவரை மேற்கொள்ளப்பட்ட கூட்டொப்பந்தத்தின் மூலம் தோட்டத் தொழிலாளர்களுக்குக் குறைந்த பட்ச சம்பளமே கிடைத்து வருகின்றது. இதனால், தோட்டத் தொழிலாளர் சமூகம் தொடர்ந்து பல்வேறுவகையில் ஏனைய சமூகங்களை விட பாரிய பின்னடைவை எதிர்நோக்கி வருகின்றது. இந்த நாட்டுக்கு பொருளாதார வளத்தினைப் பெற்றுத்தருகின்ற தோட்டத்தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளவுயர்வைப் பெற்றுக்கொடுக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு உள்ளது.

ஆகவே தோட்டத்தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளவுயர்வைப் பெற்றுக்கொடுக்கும் வகையில் அரசாங்கம் செயற்பட வேண்டுமென்பதை மத்திய மாகாணசபையின் ஊடாக அழுத்தமொன்றைக் கொண்டு வருவதற்குத் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயம் தொடர்பாக மத்திய மாகாணசபையில் பிரேரணை ஒன்றை சமர்ப்பித்துள்ளேன்.

அத்துடன், அரசாங்கத்தின் எந்தவொரு வறுமை நிவாரணமும் தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படுவதில்லை. உலக வங்கி தனது அறிக்கையொன்றில் மலையகப் பெருந்தோட்டப் பகுதியில் 32 வீதமான வறுமையுள்ளதாக அறிவித்துள்ளது. இதனை அரசாங்க வரவுசெலவுத்திட்டப் பிரேரணையிலும் சுட்டிக்காட்டியுள்ளது.

இவ்வாறானதொரு நிலையில், தோட்டத் தொழிலாளர்களுக்குச் சமுர்த்தி நிவாரணம் வழங்கப்படாதுள்ளமை பாரியதொரு அநீதியாகும். எனவே இதனைக் கருத்தில் கொண்டு தோட்டத் தொழிலாளர்களும் சமுர்த்தி நிவாரணத்திட்டத்தில் உள்ளடக்கப்படுவதற்கு மத்திய மாகாணசபையின் ஊடாக அரசாங்கத்துக்கு அழுத்தம் கொண்டு வரும் வகையில் மேலும் ஒரு பிரேரணை ஒன்றைச் சமர்ப்பித்துள்ளேன். ஆகவே, இந்தப் பிரேரணைகளை மத்திய மாகாணசபையில் நிறைவேற்றுவதற்கு கட்சி பேதமின்றி அனைத்து உறுப்பினர்களும் முன்வரவேண்டுமெனத் தெரிவித்துள்ளார்.

வடக்கு, கிழக்கு பிரிக்கப்பட்டதற்கு “சிங்கள பாரம்பரியமே’ அடிப்படைக் காரணம்

06srilanks_chief_judge.jpgவடக்கு, கிழக்கு மாகாணங்களை தனித் தனியே பிரிப்பதற்கான தீர்ப்பை உயர் நீதிமன்றம் வழங்கியதற்கு காரணம், மாகாணங்களின் சிங்கள பாரம்பரியத்தை பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டதாலேயே என்று பிரதம நீதியரசர் சரத் என். சில்வா தெரிவித்திருக்கிறார். திருகோணமலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், இது தொடர்பான தீர்ப்பை வழங்குவதற்கு முன்னர் பிராந்தியத்தில் இருந்த சிங்கள பாரம்பரியத்தை கவனமாக ஆராய்ந்ததாக குறிப்பிட்டுள்ளார். 1987 இல் இலங்கை இந்திய உடன்படிக்கையின் கீழ் வட, கிழக்கு மாகாணங்கள் தற்காலிகமாக இணைக்கப்பட்டிருந்தன. நாட்டின் அரசியலமைப்புக்கு எதிரானது என தெரிவித்து 2006 இல் வட, கிழக்கு இணைப்பை உயர் நீதிமன்றம் தனித்தனியே பிரிப்பதற்கு தீர்ப்பை வழங்கியிருந்தது.

ஜாதிக ஹெல உறுமய, ஜே.வி.பி. ஆகிய அரசியற் கட்சிகள் தாக்கல் செய்த மனுவை அடுத்து இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது. வடக்கிலும், கிழக்கிலும் சோமாவதி மற்றும் சேருவில போன்ற பௌத்தமத இடங்களை அபிவிருத்தி செய்வதில் சிங்கள மக்கள் மிக நீண்டகாலமாக தொடர்புபட்டிருந்தனர் என்று சரத் என். சில்வா தெரிவித்திருக்கிறார். நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை பதவிக் காலத்தை பூர்த்திசெய்துள்ள சரத் என் சில்வா இந்தக் கருத்தை தெரிவித்ததாக பி.பி.சி. செய்திச்சேவை குறிப்பிட்டிருக்கிறது.

தொடர்ச்சியாக பல கட்டிடங்களை பிரதம நீதியரசர் வைபவ ரீதியாக திறந்துவைத்துள்ளார். சனிக்கிழமை சேருவில விகாரையை திறந்துவைத்தார். இந்த நிகழ்வில் கலந்துகொண்ட ஜனாதிபதியின் ஆலோசகரும் எம்.பி.யுமான பசில் ராஜபக்ஷ கருத்து தெரிவிக்கையில்; சரத் என். சில்வாவும், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் தசாப்த காலங்களாக நெருங்கிய நண்பர்கள் என்று குறிப்பிட்டார். குழப்பமான தருணங்களில் எல்லாம் பிரதம நீதியரசர், ராஜபக்ஷ குடும்பத்தினருக்கு உதவியதாக அவர் தெரிவித்தார். சிறைச்சாலையில் இருந்து தனது தாயாரின் இறுதிக் கிரியைக்கு அச்சமயம் இளம் அரசியல்வாதியாக இருந்த மகிந்த ராஜபக்ஷ செல்வதற்கு போக்குவரத்து வசதிகளை அச்சமயம், அரசு சட்டவாதியாக இருந்த சரத் என். சில்வா ஏற்படுத்திக் கொடுத்ததாக பசில் ராஜபக்ஷ கூறியுள்ளார்.

13 ஆவது திருத்தச் சட்டத்திற்கு அப்பால் அதிகாரத்தைப் பகிர ஐ.தே.க. ஆதரவளிக்கும் : அமைச்சர் ராஜித நம்பிக்கை

rajetha.gif“அரசிய லமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்தை உடனடியாக அமுல்படுத்துவதற்கும், அதன் பின்னர் அதற்கு அப்பால் சென்று அதிகாரத்தைப் பகிரவும் அரசாங்கம் எதிர்பார்க்கின்றது. செனட் சபை ஒன்றை அமைப்பது குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது. இதற்கு தேவையான மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை நாடாளுமன்றத்தில் பெறுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவு வழங்கும் என்றும் நம்புகிறோம்” என பொறியியல் மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார். அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவது தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட குழு அதன் அறிக்கையை தயாரித்துவிட்டது. இறுதி ஆவணம் எனக்குக் கிடைத்துள்ளது. விரைவில் அதனை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிப்போம் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

13 ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவது தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட குழுவில் அமைச்சர் ராஜித்த சேனாரட்ன, ஜனநாயக இடதுசாரிகள் முன்னணியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார, மேல் மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் ரெஜினோல்ட் குரே, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, டிலான் பெரெரா, கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன், கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா உள்ளிட்ட பலர் அங்கம் வகிக்கின்றனர்.

குறித்த குழுவின் இணைப்பாளர் என்ற வகையில் அமைச்சர் ராஜித்த சேனாரட்ன தொடர்ந்து கருத்து வெளியிடுகையில் கூறியதாவது:  தற்போது அரசியலமைப்பில் ஓர் அங்கமாக இருக்கின்ற 13 ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவது தொடர்பில் ஆராந்து வருகின்றோம். அது தொடர்பில் ஆராய விசேட குழு ஒன்று நியமிக்கப்பட்டது. அதில் நானும் அங்கத்துவம் வகிக்கின்றேன். தற்போது நாங்கள் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவது தொடர்பில் ஆராய்ந்து அறிக்கையைத் தயாரித்துள்ளோம். இறுதி ஆவணம் என்னிடம் உள்ளது. அதனை தற்போது தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து விரைவில் ஜனாதிபதியிடம் கையளிக்கவுள்ளோம். முக்கியமாக 13 ஆவது திருத்தத்துக்கு அமைவாக சில அதிகாரங்களை வழங்க வேண்டியுள்ளது. அதாவது தேசிய வைத்தியசாலைகள் மாகாண சபைகளுக்கு வழங்கப்படவுள்ளன. ஆனால் போதனா வைத்தியசாலைகள் மத்திய அரசாங்கத்துக்கு கீழேயே இருக்கும். அதுபோன்று தேசிய பாடசாலைகள் மாகாண சபைகளுக்கு வழங்கப்படவுள்ளன.

மேலும் பொலிஸ் அதிகாரம் தொடர்பிலும் யோசனை ஒன்றை முன்வைத்துள்ளோம். அதாவது குறைந்த அளவிலான அதிகாரம் கொண்ட பொலிஸ் விடயதானம் வழங்கப்படும். மாகாண சபையிலிருந்து பிரதி பொலிஸ் மா அதிபர் ஜனாதிபதியினால் நியமிக்கப்படுவார். ஆனால் அவர் முதலமைச்சருக்கு கீழேயே செயற்படுவார். அவ்வாறு காணி அதிகாரங்களும் வழங்கப்படவுள்ளன.

இவற்றை நடைமுறைப்படுத்துவது சவாலான விடயமல்ல. காரணம் இவை அரசியலமைப்பில் உள்ள விடயமாகும். ஆனால் 13 ஆவது திருத்தச்சட்டத்தை தாண்டி சென்று செனட் சபை ஒன்றை அமைப்பது தொடர்பில் அரசாங்கம் ஆராய்ந்து வருகிறது. அதில் மாகாணத்துக்கு 4 பிரதிநிதிகள் வீதம் ஒன்பது மாகாணங்களிலும் 36 பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படுவார்கள்.

ஆனால் இதனைச் செய்வதற்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் தேவையாகும். ஏற்றுக் கொள்ளக்கூடிய அரசியல் தீர்வு ஒன்றுக்கு ஆதரவு வழங்கப்படும் என்று ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. எனவே ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவின் மூலம் 13 ஆவது திருத்தச்சட்டத்துக்கு அப்பால் செல்வதுடன் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற முடியும் என்று அரசாங்கம் நம்புகின்றது

டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 116 ஆக அதிகரிப்பு

dengu_1.gifஇவ்வருட ஜனவரி முதலாம் திகதி முதல் இது வரையும் டெங்கு காய்ச்சல் காரணமாக 116 பேர் உயிரிழந்துள்ளனர். குறிப்பிட்ட காலப் பகுதியில் 8087 பேர் இக்காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ளனர் என்று கொழும்பு தொற்று நோய் தடுப்புப் பிரிவு தெரிவிக்கின்றது.

மே மாதத்தில் மடடும் 3937 பேர் டெங்குக் காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ளதுடன் 52 பேர் உயிரிழந்துள்ளதாக கொழும்பு தொற்று நோய் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் தெரிவித்தார். இந்த நோயால்  பீடிக்கப்பட்டவர்களினதும்  உயிரிழந்தவர்களினதும் எண்ணிக்கை  கடந்த மே மாதத்திலேயே அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

டெங்கு காய்ச்சல் தீவிரமாகப் பரவும் பிரதேசங்களாக 68 மருத்துவ அதிகாரிகள் பிரிவுகள் இனம் காணப்பட்டுள்ளதாக சுகாதாரப் பராமரிப்பு, போஷாக்குத்துறை அமைசசு தெரிவிக்கின்றது.

கண்டி,  கொழும்பு,  களுத்துறை, குருணாகல், கேகாலை, கம்பஹா, திருமலை,  மட்டக்களப்பு,  ஹம்பாந்தோட்டை, மாத்தறை ஆகிய மாவட்டங்களிலுள்ள 68 மருத்துவ அதிகாரிகள் பிரிவுகளே டெங்கு காய்ச்சல் தீவிரமாக பரவும் பிரதேசங்களாக இனம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கெப்டன் அலி கப்பல் நேற்று விடுவிப்பு

vanangaaman-captainali.jpgஇலங் கை கடற்பரப்புக்குள் சட்டவிரோதமாகப் பிரவேசித்ததன் காரணமாக கடற்படையினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த கெப்டன் அலி எனும் வெளிநாட்டுக் கப்பல் விடுவிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஐரோப்பிய நாடுகளிலுள்ள புலி ஆதரவாளர்களால் சேகரிக்கப்பட்ட பொருட்களை ஏற்றிக்கொண்டு கடந்த 4ஆம் திகதி இலங்கை கடற்பரப்புக்குள் சட்டவிரோதமாகப் பிரவேசித்த இக்கப்பல் கடற்படையினரால் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வந்தன.

விசாரணைகளையடுத்து இக்கப்பலுடன் தொடர்புபட்டிருந்த கோடீஸ்வர வர்த்தகர் ஒருவர்  நேற்று வத்தளைப் பிரதேசத்தில் வைத்து பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.  இக்கப்பலில் இருந்த பொருட்கள் எதனையும் அரசாங்கம் ஏற்றுக்கொள்ளாததோடு இக்கப்பலை இலங்கையின் எந்தத் துறைமுகங்களுக்கும் பிரவேசிக்க அனுமதி வழங்கப்படவுமில்லை.

நேற்று விடுவிக்கப்பட்ட இக்கப்பல் இலங்கையின் கடல் எல்லையைத் தாண்டிச் செல்லும் வரை கடற்படை வீரர்கள் அவதானித்துக் கொண்டிருந்தார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.