03

03

ஐ.நா. பாதுகாப்பு சபையில் இலங்கை விடயம் வெள்ளிக்கிழமை விவாதத்திற்கு

uno.jpgஇலங் கையில் நிலவரம் குறித்து ஐ.நா. பாதுகாப்பு சபை உறுப்பினர்கள் ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூனுடன் வெள்ளிக்கிழமை விவாதிக்கவுள்ளனர். ஆனால், இது அதிகாரப்பூர்வமற்ற ஆலோசனையாகும். இத் தகவலை ஐ.நாவுக்கான துருக்கியின் தூதர் பகி இல்கின் தெரிவித்துள்ளார். 15 நாடுகள் அடங்கிய ஐ.நா. பாதுகாப்பு சபையின் தலைமைப் பொறுப்பு இப்போது துருக்கியிடம் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதேவேளை , இலங்கை விவகாரத்தில் அண்டை நாடுகளோ, சர்வதேச சமுதாயமோ தலையிடக் கூடாது என்று சீனா மீண்டும் கூறியுள்ளது. உள்நாட்டுப் பிரச்சனையை இலங்கை அரசே கவனித்துக் கொள்ளும். சர்வதேச சமுதாயம் வேண்டுமானால் இலங்கைக்கு மனிதாபிமான உதவிகளைத் தரலாம் என்று சீன வெளியுறவுத்துறை துணை அமைச்சர் கூறியுள்ளார்.

ஐ.நா. பாதுகாப்பு சபையில் 5 நாடுகள் நிரந்தர உறுப்பினர்களாக உள்ளனர். அதில் சீனாவும் ஒன்று. இந்த நாடுகளிக்கு வீடோ அதிகாரம் உண்டு. அதன்படி ஐ.நா. பாகாப்பு சபையில் எடுக்கப்படும் எந்த முடிவையும் வீடோ அதிகாரத்தைக் கொண்டு சீனாவால் ரத்து செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சபையில் உள்ள மற்ற 10 நாடுகள் சுழற்சி முறையில் தாற்காலிக உறுப்பினர்களாகவே இருக்க முடியும்.

யாழ், வவுனியா தேர்தல்களில் அ. இ. மு. காங்கிரஸ் போட்டி

அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் யாழ். மாநகர, வவுனியா நகர சபைத் தேர்தல்களில் போட்டியிடவுள்ளது.

வடக்கில் ஜனநாயகத்தை கட்டியெழுப்பும் வகையில் ஜனாதிபதி எடுத்திருக்கின்ற நடவடிக்கைகளுள் ஒன்றாக உள்ளூராட்சித் தேர்தல்கள் நடைபெற இருக்கின்ற இவ்வேளையில், கடந்த ஒரு தசாப்தத்திற்கு மேலாக வடக்கில் இருந்து புலம் பெயர்ந்து வாழுகின்ற முஸ்லிம்கள், தமது தாயக மண்ணில் தமது அரசியல் இருப்பை உறுதிப்படுத்திக் கொள்வதில் ஆர்வமாக இருக்கின்றார்கள்.

சமூக வியாபாரிகளும் அந்நிய சக்திகளின் தரகர்களும் இம்மக்களின் வாக்குகளில் சவாரி செய்ய எத்தனிக்கின்ற இவ் வேளையில் இம்மக்களுக்கு சரியான அரசியல் தலைமைத்துவத்தை வழங்க வேண்டிய பொறுப்பு அகில இலங்கை முஸ்லிம் காங்கிரசிற்கு இருக்கின்றது. எனவே இத்தேர்தலில் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் போட்டி யிட்டு தமது மக்களின் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தும்.

600 அநாதை சிறுவர்களை பொறுப்பேற்கிறது சிங்கப்பூர் பெளத்த சங்கம்

வடக்கில் இருந்து இடம்பெயர்ந்து வந்துள்ள மக்களிடையே உள்ள 600 அநாதைப் பிள்ளைகளை பொறுப்பேற்று அவர்களின் சகல தேவைகளையும் நிறைவேற்ற முடிவு செய்துள்ளதாக சிங்கப்பூர் மகாகர்ணா பெளத்த சங்க மத ஆலோசகர் வண. அலவ்வே குணரத்ன தேரர் தெரிவித்தார்.

தகவல் ஊடகத்துறை அமைச்சில் நேற்று (2) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,

வடபகுதியில் இருந்து இடம்பெயர்ந்து வந்துள்ள மக்களுக்குச் சகலரும் இன, மத, பேதமின்றி சகல உதவிகளும் வழங்க வேண்டும். இந்த மக்களுக்கென சிங்கப்பூரில் இருந்து ஒரு கோடி ரூபா பெறுமதியான பொருட்கள், பணம் என்பன திரட்டியுள்ளோம். அவை கப்பல் மூலம் கொழும்பு துறைமுகத்தை வந்தடைய உள்ளன. வடபகுதியில் இருந்து இடம்பெயர்ந்து வந்துள்ள 10 வயதுக்குக் குறைவான பெற்றோரை இழந்த 350 பிள்ளைகளையும் 250 உயர் வகுப்பு மாணவர்களையும் நாம் பொறுப்பேற்க உள்ளோம்.

வடபகுதி மக்களுக்கு உதவுவதற்காக 100 பேர் கொண்ட சிங்கப்பூர் பிரஜைகள் குழுவொன்று இலங்கை வர உள்ளது. அந்நாட்டு மக்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சகல உதவிகளும் வழங்கி வருகின்றனர். நாம் வருடாந்தம் பொசன் பண்டிகையை முன்னிட்டு அநுராதபுரத்தில் அன்னதானம் வழங்கி வருகிறோம். இம்முறை மெனிக்பாமிலுள்ள தமிழ் மக்களுக்கு அன்னதானம் வழங்க அரசின் அனுமதியை கோரியுள்ளோம்.

வடக்கில் 13 வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த அரசாங்கம் எதிபார்க்கின்றது

yappa.jpgவடக்கில் 13 வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த உள்ளதாகவும் அதன் ஓர் அங்கமாக அங்கு ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்காக யாழ், வவுனியா உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை நடத்த அராசங்கம் தீர்மானித்ததாகவும் ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா தெரிவித்தார். தகவல் ஊடகத்துறை அமைச்சில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இரு உள்ளூராட்சி சபைகளுக்கும் தேர்தல் நடத்த ஏன் அவசரம் என ஜே. வி. பி. கேள்வி எழுப்பியுள்ளது. அங்கு இடம்பெயர்ந்த மக்களோ ஆயுதக் குழுக்களோ கிடையாது இப்பகுதிகளில் ஜனநாயகத்தை ஏற்படுத்துவதில் முன்பு ஆயுதக் குழுக்களின் பிரச்சினை காணப்பட்டது. இன்று எதுவித வெளிப்பிரச்சினைகளும் கிடையாது. அதனாலே தேர்தல் நடத்த அரசு நடவடிக்கை எடுத்தது.

2008 வாக்காளர் இடாப்பில் பதிவு செய்யப்பட்ட சகலரும் வாக்களிக்கலாம். சகல கட்சிகளுக்கும் எதுவித தடையுமின்றி போட்டியிட சந்தர்ப்பம் உள்ளது. எஞ்சிய உள்ளூராட்சி சபைகள் வடக்கு மாகாண சபை என்பவற்றுக்கும் தேர்தல் நடத்தி விரைவாக 13வது திருத்தச் சட்டத்தை வடக்கில் முழுமையாக அமுல்படுத்த உள்ளோம் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்

இடம்பெயர்ந்த மாணவர்களுக்கு 19 லொறிகளில் கல்வி உபகரணங்கள்

susil_prem_minister.jpgவட பகுதியிலிருந்து இடம்பெயர்ந்துள்ள மாணவர்களுக்கு 19 லொறிகளில் 130 மில்லியன் ரூபா பெறுமதியான கல்வி உபகரணங்கள் கல்வி அமைச்சிலிருந்து நேற்று அனுப்பி வைக்கப்பட்டன.கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த உத்தியோகபூர்வமாக இதனை உரிய அதிகாரிகளிடம் கையளித்தார்.

வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வவுனியா நலன்புரிக் கிராமங்களில் தங்கியுள்ள பாடசாலை மாணவர்களுக்கான சீருடை,  கல்வி உபகரணங்கள் உள்ளிட்ட பொருட்கள் இவ்வாறு அரசாங்கத்தினால் வவுனியாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டன.

மாணவ மாணவிகளுக்கான ஒன்றரை கோடி ரூபா பெறுமதியுடைய தற்காலிகச் சீருடை,  மூன்றரை கோடி ரூபா பெறுமதியான மேசை, கதிரை உள்ளிட்ட கல்வி உபகரணங்களும் 75 மில்லியன் ரூபா பெறுமதியான நூல்கள்,  அப்பியாசப் புத்தகங்களும்  இதிலடங்குவதாகக் கல்வியமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்தார்.

இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை தேவையான உபகரணங்களை நலன்புரி நிலையங்களுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளைக் கல்வியமைச்சு மேற்கொண்டுள்ளது எனவும் அமைச்சர் கூறினார்.

வவுனியாவிற்குக் கொண்டு செல்லப்படும் தற்காலிக சீருடைகள் நலன்புரி நிலையங்களிலுள்ள மாணவர்களுக்கு நேரடியாகப் பகிர்ந்தளிக்கப்படுவதுடன் அங்குள்ள ஆசிரியைகளுக்கு வழங்குவதற்காக 2,000 சேலைகளும் எடுத்துச் செல்லப்படுவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பிரதியமைச்சர் எம். சச்சிதானந்தன் உட்பட கல்வித்துறை சார்ந்த அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர். நேற்று எடுத்துச் செல்லப்பட்ட கல்வி உபகரணங்கள் நாளை மறுதினம் 5ம் திகதி அங்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ளன. 

பிரித்தானிய தூதராலய இணையத்தளம் மாலைதீவில் ஆரம்பிக்கப்பட்டது

பிரித்தானிய தூதராலயத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் நேற்று திங்கட்கிழமை மாலைதீவில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளதாகப் பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.
www.uinmaldives.fco.gov.lk எனும் இவ் இணையத்தளத்தை மாலைதீவின் ஜனாதிபதி மொஹமட் நசீட் ஆரம்பித்து வைத்துள்ளார்.

இதேவேளை, பிரித்தானியாவின் இலங்கை மற்றும் மாலைதீவிற்கான பிரதி உயர்ஸ்தானிகர் மார்க் குட்டிங் மாலைதீவுக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.

பிரித்தானிய பிரதி உயர்ஸ்தானிகரின் இவ் ஒருநாள் உத்தியோகபூர்வ விஜயம் பிரித்தானிய மற்றும் மாலைதீவிற்கான அரசியல் உறவுகள் பொருளாதார அபிவிருத்தி என்பனவற்றைப் பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் அவர் இவ்விஜயத்தின் போது மாலைதீவு ஜனாதிபதி மொஹமட் நசீட், வெளிவிவகார அமைச்சர் அஹமட் சாகீட், பாதுகாப்பு அமைச்சர் அமீன் பைசல், வீடமைப்பு, சுற்றாடல் மற்றும் போக்குவரத்து அமைச்சர் மொஹமட் அஸ்லம், பொலிஸ் ஆணையாளர் அஹமட் பாஸிஷ் உட்பட பலரைச் சந்திக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்விஜயத்தின் போது ஆரம்பித்து வைக்கப்பட்ட உத்தியோகபூர்வ இணையத்தளம் பற்றிக் கருத்துத் தெரிவித்த பிரித்தானிய பிரதி உயர்ஸ்தானிகர்;

இவ் இணையத்தளமானது மாலைதீவு மக்கள் பிரித்தானியா பற்றிய தகவல்களை இலகுவில் பெற வழிவகுக்கும். அத்துடன் பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தின் சேவையை மாலைதீவிற்கு நெருக்கமாக்குமென்றும் தெரிவித்தார்.

மாலைதீவிற்கான பிரித்தானியாவின் உயர்ஸ்தானிகராலயம் கொழும்பிலேயே உள்ளது.

மாலைதீவில் ஆரம்பித்து வைக்கப்பட்ட இணையத்தளம் பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தின் பணிகள், உத்தியோகபூர்வ விஜயம் தொடர்பான செய்திகள், புகைப்படங்கள், பிரித்தானியா பற்றிய மேலதிக விபரங்கள், பிரித்தானிய கடவுச்சீட்டு மற்றும் விசாவிற்கு விண்ணப்பித்தல், அங்குள்ள கம்பனிகளில் முதலிடல் மற்றும் அவற்றிற்கு ஏற்றுமதி செய்தல், உயர்ஸ்தானிகராலயப் பணியாளர்களுடன் தொடர்பு கொள்ளல் போன்ற விடயங்களை உள்ளடக்கியதாகக் காணப்படுமெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

பேராசிரியர் கிருஷ்ணராஜாவின் மறைவுக்கு தமிழ்ச்சங்கம் அனுதாபம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடாதிபதி பேராசிரியர் எஸ்.கிருஸ்ணராஜாவின் மறைவுக்கு கொழும்புத் தமிழ்ச்சங்கம் ஆழ்ந்த அனுதாபம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்தியில்;

தமிழ் மொழியில் மெய்யியல் கல்வியை வளர்த்தெடுப்பதற்கு பலவழிகளிலும் தொண்டாற்றியவர் பேராசிரியர் எஸ்.கிருஸ்ணராஜா. மெய்யியலிலும் இந்துத் தத்துவத்திலும் பல அரிய நூல்களை எழுதியுள்ளார்.

தமிழியலை நவீனப்படுத்துவதற்கு அவர் பெரும் தொண்டாற்றியுள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சட்டபீடம், கொழும்புத் தமிழ்ச்சங்கத்தில் இயங்குவதற்கு துணைவேந்தருடன் இணைந்து பெரும் பணியாற்றி, தமிழ் மாணவர்களின் சட்டக்கல்வி வளர்ச்சிக்கும் பேராசிரியர் பெரும் தொண்டாற்றியுள்ளார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மட்டுமன்றி கிழக்குப் பல்கலைக்கழகத்தின் தமிழ் மாணவர்களுக்கும் அவர் பெரும் தொண்டாற்றியுள்ளார்.  அன்னாரின் மறைவுக்கு கொழும்புத் தமிழ்ச்சங்கம் ஆழ்ந்த அனுதாபத்தினைத் தெரிவித்துக்கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எமது நாட்டுக்கே உரிய ஒரு அரசியல் தீர்வை முன்வைக்க அரசு நடவடிக்கை -மஹிந்த சமரசிங்க

mahinda_samarasinghe_.jpgநாட்டு மக்கள் அனைவருக்கும் பொதுவானதும் எமது நாட்டுக்கே உரியதுமான ஒரு அரசியல் தீர்வை மிக விரைவில் முன்வைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக இடர் முகாமைத்துவ மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க ஜெனீவாவில் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 11வது அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

நாட்டின் ஏனைய பகுதி மக்கள் அநுபவிக்கும் உரிமைகளை வடபகுதி மக்களுக்கும் பெற்றுக்கொடுக்க வேண்டுமென ஜனாதிபதி தெரிவித்துள்ளார். எனவே, அவர்களுக்கான அரசியல் தீர்வை உலகில் எந்த நாடும்,  அரசாங்கமும் கொண்டுவராத வேகத்தில் முன்வைக்க வேண்டும். ஆனால் அது வேறு ஒரு நாட்டின் மூலம் பெற்றுக்கொண்டதாக இருக்காது. வேறு நாடுகளின் தீர்வு யோசனைகளை ஆராய்ந்துகொண்டிருப்பதற்கு எமக்கு நேரமில்லை.

எனவே,  எமது நாட்டுக்கே உரிய ஒரு தீர்வையே நாம் காணவேண்டும். அது அனைத்து மக்களாலும் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்க வேண்டும். இந்தத் தீர்வுக்காக நாம் சர்வதேச சமூகத்தின் ஆதரவினை எதிர்பார்க்கின்றோம்; மாறாக இடையூறுகளை அல்ல,  உலகம் வெற்றிகொள்ள முடியாத சவால்களை நாம் வெற்றிகொண்டிருக்கும் வேளையில்,  தீர்வொன்றைக் காண்பதற்கு எமக்கு முடியாது என சர்வதேச சமூகம் சந்தேகிக்கின்றதா? இல்லை. எமக்கு இதைச் செய்ய முடியும்’ என்றும் அமைச்சர் சமரசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

தேசிய வெற்றி விழாவில் ஜனாதிபதி தமிழில் உரை

he_speech_ranaviru_.jpgஎல்.ரீ.ரீ.ஈ.  யினரைத் தோற்கடித்து பாதுகாப்புப் படைவீரர்கள் பெற்றுத் தந்த வெற்றி எமது நாட்டில் வாழும் எல்லா மக்களினதும் வெற்றியாகும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமிழில் தெரிவித்தார்.  படைவீரர்களின் வெற்றியைக் கொண்டாடும் தேசிய வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு கூறினார்.

கொழும்பு,  காலிமுகத்திடலில் தற்போது மிகவும் கோலாகலமாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் இவ்வைபவத்தில் சற்றுநேரத்துக்கு முன்னர் உரையாற்றிய ஜனாதிபதி தனது உரையின் ஆரம்பத்தில் சிங்களத்தில் சில வார்த்தைகளைக் கூறிவிட்டு தமிழ் மொழியில் உரையாற்றினார். ஜனாதிபதி தமதுரையில் குறிப்பிட்ட தமிழ் வாசகங்கள் கீழே.

அன்பர்களே,  இது நம் எல்லோருடைய தாய்நாடு. இந்த நாட்டில் நாம் எல்லோரும் ஒருதாய் மக்களாக சகோதரர்கள் போல் வாழ வேண்டும். இங்கே எந்தவித பேதமும் இருக்க முடியாது.

எல்.ரீ.ரீ.ஈ. யினருடன் நடத்திய யுத்தம் தமிழ் மக்களுக்கு எதிரான யுத்தம் அல்ல. எல்.ரீ.ரீ.ஈ. யினரின் பிடியிலிருந்து அப்பாவி சகோதர தமிழ் மக்களைப் பாதுகாக்க எமது படைவீரர்கள் உயிர் நீத்தார்கள். அவர்கள் செய்த சேவை மறக்க முடியாதது.

எல்.ரீ.ரீ.ஈ. யினரைத் தோல்வி பெறச் செய்து நாம் பெற்ற வெற்றி இந்த தேசத்தின் வெற்றி. நீங்கள் பெற்றுத் தந்த பெருவெற்றி. எமது நாட்டில் வாழும் எல்லா மக்களின் வெற்றி.

அன்பான படைவீரர்களே,  இப்போது பயங்கரவாதிகளுடன் செய்த யுத்தம் முடிந்துவிட்டது. இனி நாம் எமது தமிழ் மக்களுடைய உள்ளங்களை வெற்றிகொள்ள வேண்டும். தமிழ் பேசும் மக்களைப் பாதுகாக்க வேண்டும். அவர்கள் பயம்,  சந்தேகம் இல்லாமல் வாழ வேண்டும். அதுதான் நம் எல்லோருடைய கடமை.

இந்நாட்களில் கடலில் குளிப்பது மிகவும் ஆபத்தானது

sea.jpgஇந் நாட்களில் கடலில் குளிப்பது மிகவும் ஆபத்தானது என சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை எச்சரித்துள்ளதுடன் இவ்வாறு கடலில் குளிக்கச் செல்லும் சிறுவர்களைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பெற்றோர்கள் ஆசிரியர்கள் மற்றும் பொறுப்பு வாய்ந்தவர்களை கேட்டுள்ளது.

கடந்த சில நாட்களில் கடலில் மற்றும் நீர்த்தேக்கங்களில் குளிக்கச் சென்ற பலர் விபத்துக்குள்ளாகியுள்ளனர். கவனயீனமே இவ்வாறான விபத்துக்களுக்கு கூடுதலான காரணம் என்று அதிகாரசபை தெரிவிக்கின்றது.