02

02

அடெல் பாலசிங்கத்தைக் கைது செய்ய அரசாங்கம் திட்டம்

02-adele.jpgதமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகராக இருந்த காலஞ்சென்ற அன்ரன் பாலசிங்கத்தின் மனைவியான அடெல் பாலசிங்கத்தைக் கைது செய்வது குறித்து இலங்கை அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அவுஸ்திரேலியாவைப் பிறப்பிடமாகக் கொண்ட அடெல் ஒரு மருத்துவ தாதியாவார். அன்டன் பலசிங்கம் லண்டனில் இருந்த போது, அவரைச் சந்தித்த அடெல் பின்னர் அவரைத் திருமணம் செய்து கொண்டார்.

அண்மைக்காலமாக பிரிட்டனின் நாடாளுமன்றத் தொகுதி மற்றும் முக்கிய பிரதேசங்களில் இலங்கைக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்களின் பின்னணியில் அடெல் பாலசிங்கம் செயற்பட்டதாக புலனாய்வுத்துறையினர் தகவல் வெளியிட்டுள்ளனர். சிறுவர் போராளிகளை இணைத்தமை, புலிகளின் சர்வதேச வலையமைப்பின் பணிகளை மேற்கொண்டமை போன்ற பணிகளில் அடெல் பாலசிங்கம் ஈடுபட்டிருந்ததாக இலங்கை அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

இதனால், அடெல் பாலசிங்கத்தைக் கைது செய்ய வேண்டுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த அடெல் பாலசிங்கம், இலங்கையின் இறையாண்மைக்கு அச்சுறுத்தலாக செயற்படலாம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பிரித்தானியா இலங்கைக்கு ஆயுதங்களை விற்பனை செய்துள்ளது?

bigben_ap_.jpgதமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை முன்னெடுக்க பிரித்தானியா மற்றும் சில ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இலங்கைக்கு ஆயுதங்களை விற்பனை செய்துள்ளதாக டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

சுமார் 13.6 மில்லியன் ஸ்ரெலிங் பவுண்ட் பெறுமதியான இயந்திர துப்பாக்கிகள், இராணுவ வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு பட்ட இராணுவ தளவாடங்களை பிரித்தானியா இலங்கைக்கு விற்பனை செய்துள்ளது.  ஸ்லோவாக்கியா 1.1 மில்லியன் ஸ்ரெலிங் பவுண்ட் பெறுமதியான ஆயுதங்களையும், பல்கேரியா 1.75 ஸ்ரெலிங் பவுண்ட் பெறுமதியான ஆயுதங்களையும் விற்பனை செய்துள்ளன.

இந்த அனைத்து ஆயுத கொடுக்கல் வாங்கல்களும் பூர்த்தியடைந்துள்ளனவா என்பது குறித்து உறுதிப்படுத்த முடியாத நிலை காணப்படுவதாக குறித்த பத்திரிகை சுட்டிக்காட்டியுள்ளது.

இராணுவ தளவாட விற்பனைக்கு அரசாங்கங்கள் அனுமதியளித்த போதிலும், இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டனவா என்பது குறித்து சரியான தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.மோசமான மனித உரிமை நிலைமைகள் காணப்படும் நாடுகளுக்கோ அல்லது உள்ளக பிரச்சினைகள் காணப்படும் நாடுகளுக்கோ ஐரோப்பிய ஒன்றியம் ஆயுதங்களை விநியோகம் செய்வதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆசிய பேஸ்போல் சம்பியன் போட்டியின் இறுதிச் சுற்றில் இலங்கை

basketball.jpgதாய் லாந்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் 8ஆவது ஆசிய பேஸ்போல் சம்பியன்சிப் போட்டியின் இறுதிச் சுற்றில் கலந்துகொள்ளும் வாய்ப்பை இலங்கை அணி பெற்றுள்ளது. மலேசிய அணியை 9-1 எனும் புள்ளி வித்தியாசத்தில் தோற்கடித்தன் மூலம் இறுதிச் சுற்றில் கலந்துகொள்ளும் வாய்ப்பு இலங்கைக்குக் கிடைத்துள்ளது.

இலங்கையின் பேஸ்போல் வரலாற்றில் இறுதிச் சுற்றுக்கு இலங்கை அணி தெரிவுசெய்யப்பட்டது இதுவே முதல் தடவையாகும்.

முதல் போட்டியில் 3-1 என்ற புள்ளி வித்தியாசத்தில் வெற்றிபெற்ற இலங்கை அணி பாகிஸ்தான் அணியுடன் 10-0 என்ற புள்ளி வித்தியாசத்தில் தோல்வியைச் சந்தித்தது. அரைஇறுதிப் போட்டியில் இந்தியாவும் இலங்கையும் இன்னுமொரு போட்டியில் பாகிஸ்தானும் ஹொங்கொங் அணியும் பங்குபற்றவுள்ளன.

இச்சுற்றுப் போட்டியில் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், தாய்லாந்து, மலேசியா, ஹொங்கொங், மியன்மார் மற்றும் கம்போடியா ஆகிய நாடுகள் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது. 

காணாமல்போன பிரான்ஸ் விமானம் அத்லாண்டிக் கடலில் வீழ்ந்து விபத்து – விமானத்தில் பயணித்த 228 பேரும் பலி

01-air-france.jpg228 பயணிகளுடன் நேற்றுப் பயணம் செய்துகொண்டிருக்கையில் காணாமல்போன பிரான்ஸ் நாட்டின் விமானம் அத்லாண்டிக் கடலில் விழுந்து நொருங்கியுள்ளதாகவும் அதில் பயணித்த அனைவரும் கொல்லப்பட்டிருப்பதாகவும் அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எயார் பிரான்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான இந்த விமானம் பிரேஸிலின் ரியோடி ஜெனிரோ விமான நிலையத்திலிருந்து பாரிஸ் நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் கொல்லப்பட்டவர்களில் 82 பெண்களும், 9 குழந்தைகளும் அடங்குவதாக எயார் பிரான்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

ஈழத்தமிழ் மக்களின் சுய நிர்ணய உரிமையை வென்றெடுப்போம்.!! : தேடகம்

Thedakam_Logoதமிழ் மக்களின் அதிகபட்ச அரசியல் அபிலாசைக்காக போராடிய தமிழீழ விடுதலைப் புலிகளை அழித்து வெற்றிவாகை சூடியிருப்பதாய் இலங்கை அரசு கூறியிருக்கிறது. சிங்கள பௌத்த இனவாதம் மிகப்பெரிய தமிழ் இனப் படுகொலையை நடாத்தி போரை வெற்றி பெற்றதாக அறிவித்து நாடு முழுவதும் கொண்டாட்டங்களை நடாத்தி வருகிறது.

தமிழ் மக்களின் நியாயமான அரசியல் அபிலாசைகளுக்கான தீர்வை முன்வைக்காது இராணுவ ரீதியான தீர்வை முன்தள்ளி பல்லாயிரக்கணக்கான தமிழர்களை கொன்றொழித்து அவர்களது போராட்டத்தை நசிக்கியிருப்பதாக அறிவித்திருக்கிறது.

அனைத்து உலக சமூகமும் கண்மூடியிருக்க தமிழ் மக்கள் கொன்றொழிக்கப்பட்டார்கள். இறுதியாக காயப்பட்ட மக்கள், காயப்பட்ட போராளிகள், போராளிக் குடும்பங்கள், சரணடைந்த போராளிகளை பாதுகாப்பு வலயத்திலிருந்து வெளியே போகவிடாது இலங்கை இராணுவம் படுகொலையை நடாத்தி போரை முடிவுக்கு கொண்டுவந்துள்ளதாய் தெரிவித்திருக்கிறது. எஞ்சியவர்கள் அகதிச்சிறைகளுக்குள் அடைக்கப்பட்டு சித்திரவதைக்குள்ளாகி வருகிறார்கள். தமிழ் மக்கள், சிங்கள இராணுவ ஆக்கிரமிப்பிற்கூடாக பாரம்பரிய நிலங்களில் இருந்து பலாத்காரமாக வெளியேற்றப்பட்டு அகதி முகாம்களுக்குள் நிரந்தரமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். அத்தோடு தமிழ் பிரதேசங்களில் சிங்கள குடியேற்றங்களை ஏற்படுத்துவதில் இலங்கை அரசு முன்னின்று செயற்பட்டு வருகிறது.

சிங்கள பௌத்த இனவாதம், இலங்கை சுதந்திரம் அடைந்ததிலிருந்து இதுவரை எந்தவொரு விட்டுக்கொடுப்புமில்லாமல் கட்சி பேதமின்றி தனது அரசியல் – இராணுவ ஒடுக்குமுறையை செயற்படுத்தியே வருகின்றது. இனியும் தமிழ் மக்களின் மீதான அடக்குமுறை தொடரவே போகிறது.  சிங்கள பேரினவாதம் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைக்கு வைத்த தீர்வு இனப்படுகொலையே. இதற்கூடாக பெரும்பான்மை தமிழ் மக்களை தமிழீழ தனிநாடு நோக்கி இலங்கை இனவாத அரசு மீண்டும் தள்ளியுள்ளது.

எமது கடந்தகால தமிழர் அரசியல் வரலாறு என்பது கசப்பான பல அனுபவங்களை சுமந்திருக்கிறது. அவற்றை ஆரோக்கியமான முறையில் விமர்சித்து தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை முன்நிறுத்தி வென்றெடுப்பதற்கான போராட்டத்தில் இணைய வேண்டிய கடப்பாடு அனைத்து தமிழர்கள் மீதும் இன்று சுமத்தப்பட்டுள்ளது.

ஈழத் தமிழ் மக்களின் போராட்டம் இன்றோடு முடிந்ததாக சிங்கள பௌத்த இனவாதம் கொக்கரிக்கலாம். அதை அப்பாவி சிங்கள மக்களும் நம்பலாம். ஆனால் தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டத்திற்கான தேவை இன்னும் அழியவில்லை. அதற்கான தமிழ் மக்களின் ஆதரவு இன்னும் மழுங்கவுமில்லை.

எமது மக்களின் சுய நிர்ணய உரிமைக்கான போராட்டம் பலதளங்களில் முன்னெடுக்கப்பட வேண்டிய உச்ச நிலையில் நாம் இன்று இருக்கின்றோம். உலகின் ஒடுக்கப்பட்ட மக்கள், தொழிலாளர்கள், மனிதவுரிமைவாதிகள், செயற்பாட்டாளர்கள், புத்திசீவிகள், பல்வேறு இனக்குழுமங்கள், சமூக உரிமை அமைப்புகள், அரசியல் தாபனங்கள் என பல்வேறுபட்ட உலக மக்களின் ஆதரவை தமிழர் சுய நிர்ணய உரிமைக்காய் வென்றெடுக்கப்படவேண்டிய தேவை இன்று உண்டு. அதற்கான வேலைத்திட்டங்களையும் போராட்டங்களையும் தொடரவேண்டிய தேவை எம்முன்னுள்ளது.

போராட்டத்தில் இராணுவ வெற்றிகளை மட்டுமே மையப்படுத்திப் பார்க்காது, இலங்கை இராணுவ வெற்றிகளை நிலைகுலையச் செய்யக்கூடிய அரசியல் நடவடிக்கைகளை தமிழ் மக்களால் செய்யமுடியுமென இதுவரை காலமும் உலகெங்கிலும் நடந்த போராட்டங்களுக்கூடாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

தமிழ் மக்களின் இருப்பை உறுதிப்படுத்துவதற்கான அரசியல் தீர்வென்பது ஈழத் தமிழ்மக்களின் சுயநிர்ணய உரிமையால் மட்டுமே சாத்தியமாய் உள்ளது. இலங்கை சிங்கள பௌத்த இனவாத ஒடுக்குமுறையிலிருந்து தமிழ் மக்கள் மீட்கப்படவேண்டும். அவர்களின் பாதுகாப்பும், மனிதவுரிமையும், வாழ்வும் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையால் மட்டுமே உறுதிப்படுத்த முடியும்.

எமது இலக்கு நோக்கிய போராட்டத்தில் எம் முன்னுள்ளது வெற்றிகள் மட்டுமே அல்ல தோல்விகளும் தான். அதை புரிந்து கொள்வதும் அரசியல் பின்னடைவுகளை விளங்கிக் கொள்வதும் எமது அடுத்தகட்ட நகர்வுக்கு எம்மை திடமாக முன்தள்ளும். சிங்கள பௌத்த இனவாதம் இலங்கையிலிருந்து நீக்கப்படும் வரை தமிழ் மக்களின் போராட்டம் தொடரவே செய்யும்.

சிங்கள பௌத்த இனவாதம் தமிழ் மக்களின் நியாயமான போராட்டத்தை நிலைகுலையச் செய்ய பல பிரயத்தனங்களை செய்துவருகிறது. இனவாத சிங்கள அரசை சர்தேச ரீதியில் அம்பலப்படுத்தி அரசியல் ரீதியாக தனிமைப்படுத்தி தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளை வென்றெடுக்க வேண்டிய தேவையுள்ளது.

பன்முகத்தன்மையுடன் கூடிய அரசியல் ஜனநாயக வழிகளுக்கூடாக ஈழத்தமிழ் மக்களின் சுய நிர்ணய உரிமைக்காய், உலகத் தமிழ் மக்கள் ஒன்றிணையவேண்டிய காலமிது. உலகம் தழுவிய ஒன்றிணைந்த போராட்டத்திற்கூடாக மட்டுமே சிங்கள பௌத்த பேரினவாதத்தை வெற்றிகொள்ள முடியும்.

சிங்கள அரசின் கொடூர அடக்குமுறையால் படுகொலை செய்யப்பட்ட போராளிகள், பொது மக்கள் அனைவருக்கும் எமது அஞ்சலிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

உலகத் தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றிணைவோம்!!

இலங்கை அரசை அம்பலப்படுத்துவோம்!!

ஈழத் தமிழ் மக்களின் சுய நிர்ணய உரிமையை வென்றெடுப்போம்!!!

தமிழர் வகைதுறைவள நிலையம் – தேடகம்

மே 18, 2009

ரொரன்டோ, கனடா.

மட்டக்களப்பு மாநகர சபை மேயர் திருமதி சிவகீர்த்தா பிரபாகரன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணையவுள்ளார்.

02seva-geetha.jpgஇது தொடர்பாக அவரிடம் கேட்டபோது இன்னும் ஓரிரு வாரங்களுக்குள் நான் சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொள்ளவுள்ளேன். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அண்மைக்காலமாக வெளியிட்டு வரும் இது ஒரே நாடு ஒரே இனம் என்ற கருத்தை ஏற்றுக்கொண்டு ஜனாதிபதியின் கரங்களைப் பலப்படுத்தவே நான் சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்துகொள்வதற்கு விரும்புகின்றேன்.

கடந்தகால யுத்தத்தினாலும், இயற்கை அனர்த்தங்களினாலும் சிதைவடைந்து போயுள்ள வடக்கு, கிழக்கு மாகாணங்களை அபிவிருத்தி செய்து நமது மக்களின் வாழ்வாதார நிலையை மேம்படுத்த வேண்டியுள்ளது.

இதற்கு இன்று பொருத்தமாகவுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையிலான சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொள்வதுதான் சிறந்ததாகும். தமிழ் மக்களுக்கு தேசிய, சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றுக்கொடுக்க விரும்பும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து தமிழ் மக்களுக்கு சேவையாற்றவே விரும்புகின்றேன்.

கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனுடன் இது தொடர்பாக பேசி அவரையும் இணைத்துக்கொண்டு சேரவிரும்புகின்றேன். இது தொடர்பாக நான் விரைவில் அறிவிப்பேன் என மட்டக்களப்பு மாநகர சபை மேயர் சிவகீர்த்தா பிரபாகரன் தெரிவித்தார்.

சுதந்திர ஊடக இயக்கத்தின் செயலாளர் போத்தல கடத்தப்பட்டுத் தாக்குதல்

33222.jpgஊடகவிய லாளரும், சுதந்திர ஊடக இயக்கத்தின் செயலாளருமான போத்தல ஜெயந்த இனந்தெரியாதவர்களினால் நேற்று கடத்தப்பட்டு கடுமையாகத் தாக்கப்பட்டதன் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

வெள்ளை வானில் வந்த சிலரே இவரைக் கடத்திச்சென்று அவரது தலைமுடி, தாடியை வெட்டி கடுமையாகத் தாக்கியதாகத் தெரிவிக்கப்படுகின்றது. தாக்குதலில் கடும் காயங்களுக்கு இலக்கான இவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவரச சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடமையை முடித்துக்கொண்டு நுகேகொடைக்குச் சென்றுகொண்டிருந்த போதே, வெள்ளை வானில் வந்த அறுவர் அவரைக் கடத்தி கண்களை கறுப்புத் துணியினால் கட்டியதுடன் அவரது தலை முடி, தாடியை வெட்டி கடுமையாகத் தாக்கியுள்ளனர். வெட்டப்பட்ட முடிகளை அவரது காற்சட்டைப் பைக்குள் திணித்து நீண்ட தூரத்திற்கு அப்பால் அவரை இறக்கிவிட்டுச் சென்றுவிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மார்பு, தலை, கால்களில் காயங்களுக்கு இலக்கான இவர் சுயநினைவுடன் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஆறு பேர் கொண்ட குழுவினரே தன்னைக் கடத்திச் சென்று தாக்கியதாகவும், பின்னர் கோத்தட்டுவைப் பகுதியில் இறக்கிவிட்டுச் சென்றுவிட்டதாகவும் அவர் வைத்தியசாலையின் பொலிஸாருக்கு வாக்குமூலம் அளித்துள்ளார்.

அவரை அவசர சத்திரசிகிச்சைப் பிரிவில் அனுமதித்த வைத்தியர்கள், மேலதிக சிகிச்சைகளை அளித்து வருவதாகவும், அவருக்கு உயிராபத்தை ஏற்படுத்தக் கூடிய அல்லது நினைவை இழக்கும் வகையிலான எவ்விதமான தாக்குதல்களுக்கும் அவர் இலக்காகவில்லை என்றும், கால்களில் பலத்த காயங்கள் இருப்பதாகவும் வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்தனர். 

காணாமல் போன விமானத்தை தேடும் நடவடிக்கைகள் தொடருகின்றன

01-air-france.jpgகாணாமல் போன  ஏர் பிரான்ஸ் விமானத்தை தேடும் பணியில் பிரேசில் நாட்டு விமானப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.  நாட்டின் தலைநகருக்கு வடகிழக்கே சுமார் 400 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள ஃபெர்ணாண்டோ டெ நொரானோ எனும் தீவிலிருந்து பிரேசிலின் வான்படை விமானங்கள் இந்த தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.

இந்த விமானம் அட்லாண்டிக் பெருங்கடலை பெருமளவில் கடந்த நிலையில் காணாமல் போயுள்ளதால், இந்தத் தேடுதல் பெரும் பகுதியை உள்ளடக்கியதாக இருக்கும் என்று பிரேசிலிலுள்ள பிபிசியின் செய்தியாளர் கூறுகிறார். காணாமல் போன விமானத்ததை தேடும் நடவடிக்கையில் செனிகல் நாட்டிலிருந்து பிரெஞ்சு இராணுவத்தின் வேவு பார்க்கும் விமானம் ஒன்று ஈடுபட்டுள்ளது.

வடபகுதி மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் கையளிப்பு

students1.jpg‘வடக்கு வசந்தம்’ திட்டத்தின் கீழ் இடம்பெயர்ந்த வடபகுதி மாணவர்களுக்கு 46 மில்லியன் ரூபா பெறுமதியான பாடப்புத்தகங்கள் மற்றும் சீருடைகள் வழங்கும் உத்தியோகபூர்வ வைபவம் கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த தலைமையில் இன்று (2) கல்வி அமைச்சில் நடைபெறவிருக்கிறது. இதன் போது வவுனியாவில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்காக சேகரிக்கப்பட்ட பாடப்புத்தகங்கள்,

மேலதிக புத்தகங்கள், சீருடைகள், கல்வி உபகரணங்கள், மேசை, கதிரை மற்றும் உணவு வகைகள் என்பவற்றை கல்வி அதிகாரிகள் அமைச்சரிடம் கையளிக்க உள்ளனர். மேற்படி பொருட்கள் 25 லொறிகளில் வவுனியா நலன்புரி கிராமங்களுக்கு அனுப்பப்பட உள்ளதோடு அவை எதிர்வரும் வெள்ளிக்கிழமை நலன்புரிக் கிராமங்களில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு கையளிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு கூறியது.

இதனையொட்டி அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த அடங்கலான குழுவினர் வவுனியாவுக்கு விஜயம் செய்ய உள்ளனர். இடம்பெயர்ந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் தேவைகள் குறித்து ஆராய கல்வி அமைச்சின் செயலாளர் நிமல் பண்டார இருவாரங்களுக்கு முன் வவுனியா சென்றிருந்தார். இதன் போது மாணவர்கள் தமது கல்வி நடவடிக்கைகளை முன்னெடுக்க உடனடியாக தேவைப்படும் உபகரணங்கள் குறித்து ஆராயப்பட்டது. இதன்படி 25 ஆயிரம் சீருடைகள், 500 மேசைகள், 1500 கதிரைகள், 5 இலட்சம் பாடநூல்கள் உள்ளிட்ட உபகரணங்கள் 5 ஆம் திகதி பகிர்ந்தளிக்கப்பட உள்ளன.

இதேவேளை 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை, க.பொ.த சாதாரண தரப்பரீட்சை என்பவற்றுக்கு தோற்றும் மாணவர்களுக்கு பரீட்சைக்கு தயாராவதற்கான விசேட வகுப்புகளும் 5ஆம் திகதி ஆரம்பிக்கப்பட உள்ளன. பயிற்றப்பட்ட ஆசிரியர்கள் இதற்காக நியமிக்கப்பட உள்ளனர்.

வவுனியா – யாழ் ரயில் பாதை நிர்மாண பணியை 2010 இல் பூர்த்தி செய்ய திட்டம்

sri-lankan-railway.jpgவவுனி யாவில் இருந்து யாழ்ப்பாணம் வரையான 159 கிலோ மீட்டர் ரயில் பாதையை நிர்மாணிக்கும் பணிகள் 2010 ஆம் ஆண்டில் பூர்த்தி செய்ய திட்டமிட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்தது. இதற்கு 14 பில்லியன் ரூபா செலவாகும் என கணிக்கப்பட்டுள்ளது.

வடக்கிற்கான ரயில் பாதையையும் ரயில் நிலையங்களையும் அமைக்க நிதியமொன்று அமைக்கப்பட்டுள்ளதோடு இதற்கு சகல மக்களும் தமது பங்களிப்பை வழங்குமாறு அமைச்சர் டளஸ் அலஹப்பெரும கோரியுள்ளார். வடக்கு வசந்தம் திட்டத்தின் ஆரம்பிக்கப்பட்டுள்ள உதுருமிதுரு திட்டத்தினூடாக வடபகுதிக்கான ரயில் சேவை மீள ஆரம்பிக்கப்பட உள்ளது. இதன் முதற்கட்டமாக எதிர்வரும் 6 ஆம் திகதி வவுனியாவில் இருந்து தாண்டிக்குளம் வரை ரயில் சேவை இடம்பெற உள்ளது.

வடக்கிலுள்ள உறவினர் வீடுகளுக்கு ரயிலில் பயணம் செய்ய கனவுகானும் மக்களின் கனவு அடுத்த வருடம் நனவாகும் என்று தெரிவித்துள்ள அமைச்சர் டளஸ் அலஹப்பெரும 2010ல் ரயில் பாதை நிர்மாணப் பணிகளை பூர்த்தி செய்ய உத்தேசித்துள்ளதாகக் கூறினார்.

யாழ்ப்பாணத்தில் இருந்து யாழ்தேவி ரயிலில் கொழும்பு வர எதிர்பார்க்கும் தமிழ் மக்களின் கனவும் விரைவில் நிறைவடையும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். வவுனியாவில் இருந்து வடக்கு வரையான ரயில் பாதை மற்றும் ரயில் நிலையங்களில் சிலவற்றை நிர்மாணிக்கும் பொறுப்பை, ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தறை மக்கள் ஏற்றுள்ளதோடு வேறு சில அரச நிறுவனங்கள் கட்சிகள் என்பனவும் இந்தப் பணிக்கு தமது பங்களிப்பை வழங்க முன்வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.