June

June

தோட்டங்கள் தோறும் டெங்கு விழிப்பூட்டும் நிகழ்ச்சி திட்டம்

dengu_1.gifதோட் டங்கள் தோறும் டெங்கு பற்றி விழிப்பூட்டும் நிகழ்ச்சித் திட்டத்தினை விரைவில் ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக முன்னாள் ஊவா மாகாண சபை உறுப்பினரும், இ.தொ.கா. உப தலைவருமான கே.விஸ்வநாதன் தெரிவித்தார்.  பதுளை மாவட்டத்திலுள்ள தோட்டத் தொழிலாளர்களுக்கிடையே மேற்படி டெங்கு நுளம்பு தொடர்பான அறிவூட்டும் கருத்தரங்கு மற்றும் இதர நடவடிக்கை தொடர்பான விடயங்களை அந்த தோட்ட முகாமையாளர்களுடன் கலந்தாலோசித்து நடத்தவும், மரணங்களை ஏற்படுத்தும் நுளம்பு ஒழிப்பு தொடர்பான செயற்திட்டம் முன்னெடுக்கப்படும்.

நுளம்புகள் பெருகும் இடங்கள், அன்றாடம் சுத்திகரிக்கப்பட வேண்டிய இடங்கள் மற்றும் இந்த நுளம்பால் ஏற்படும் காய்ச்சலை கட்டுப்படுத்தும் முறை போன்ற விடயங்களை நேரடியாக தோட்ட லயன்களுக்குச் சென்று அறிவூட்டவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த அறிவூட்டும் நிகழ்ச்சிகளுக்கு இ.தொ.காங்கிரஸ் காரியாலயங்கள் மூலமும் கல்வி அமைச்சின் மூலமும் பூரண அனுசரணை கிடைக்கும் என கே.விஸ்வநாதன் மேலும் தெரிவித்தார்.

அரச நிறுவனங்களில் ஊழல், மோசடிகள் -அமைச்சர் அமுனுகம குற்றச்சாட்டு

அரச நிறுவனங்களில் இடம்பெறும் ஊழல் மோசடிகளை நிறுத்தும்வரை நாட்டைக் கட்டியெழுப்ப முடியாதெனத் தெரிவித்துள்ள அமைச்சர் சரத் அமுனுகம, நாட்டை அபிவிருத்தி செய்ய அரசுக்கு கிடைக்கும் வரிமூல வருமானம் பற்றாக்குறையாக உள்ளதெனவும் தெரிவித்தார். அத்துடன், அரசுக்கு கிடைக்கும் வருமானங்களின் மூலம் அரச ஊழியர்களின் ஊதியத்தை வழங்கவும் பெற்றகடன்களை திருப்பி அடைக்கவும் ஓய்வூதியம் வழங்கவும் அரச கட்டிடங்களுக்கு இடைக்கிடை வர்ணம் பூசவுமே போதியதாக இருக்கின்றது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

தகவல் மற்றும் ஊடக அமைச்சின் அனுசரணையின் கீழ் பிணை பரிவர்த்தனை ஆணைக்குழு மற்றும் நிதிச் சேவைகள் அக்கடமி ஆகியன இணைந்து நடத்தும் நிதியியல் ஊடகச் சான்றிதழ் கற்கைநெறியின் அங்குரார்ப்பண நிகழ்வு செவ்வாய்க்கிழமை பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றபோது அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே பொது நிர்வாக மற்றும் உள்விவகார அமைச்சரும் நிதி திட்டமிடல் பிரதி அமைச்சருமான சரத் அமுனுகம  தெரிவித்தார்.

பிரட்டனில் வரவுசெலவுத் திட்டம் தொடர்பாக இருதரப்பு விமர்சனங்கள் எதிர்பார்க்கப்படுகின்றது. ஒன்று இங்கிலாந்து வங்கி மற்றையது “பினான்சியல் ரைம்ஸ்’ என்ற ஆங்கில பத்திரிகை. இதிலிருந்து அரச கருமங்ளில் ஊடகத்துறையின் பங்கு எவ்வளவு முக்கியமென்பதை தெளிவாக அறிய முடிகின்றது.

தற்பொழுது மக்கள் பத்திரிகை வாசிப்பது வெகுவாகக் குறைந்துள்ளது. காரணம் தகவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியாகும். இணையத்தளத்தின் மூலம் செய்திகளை அறிந்து கொள்ளும் மக்கள் பத்திரிகைகளில் ஆர்வம் காட்டுவதில்லை. அண்மையில் நாட்டின் வடபகுதியில் மோதல்கள் தீவிரமடைந்திருந்த நிலையில் உலகளவில் பொருளாதாரத்துறை பாரிய வீழ்ச்சியைச் சந்தித்ததுடன் நெருக்கடிக்கும் உள்ளாகியது. இச்சந்தர்ப்பத்தில் யுத்தச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்த ஊடகங்கள் பொருளாதாரப் பிரச்சினை குறித்த செய்திகளுக்கு முக்கியம் வழங்கவில்லை.

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து 1.9 பில்லியன் கடனைப் பெற்றுக்கொள்வதற்கு அரசாங்கம் விண்ணப்பித்திருக்கிறது. இவ்விடயம் தொடர்பாகவும் ஊடகங்கள் உரிய விளக்கங்களையோ விமர்சனங்களையோ வழங்கவில்லை. இலங்கையில் கிட்டத்தட்ட 140 அரச நிறுவனங்கள் உண்டு. இந்நிறுவனங்கள் அரசுக்கு இலாபம் தேடித்தரவில்லை. மாறாக தமது நிறுவனங்கள் பெற்றுக்கொள்ளும் வரிமூல அல்லது ஏனைய வருமானங்களைக் கொண்டு ஊதியம் வழங்கி மக்களின் பணத்தை வீணடிக்கின்றன. அரச நிறுவனங்களில் ஊழல் மோசடிகள் அதிகமாகக் காணப்படுகின்றன. இவற்றை நிறுத்தும்வரை நாட்டைக் கட்டியெழுப்புவதென்பது இயலாத காரியமெனத் தெரிவித்தார்.

வடக்கே உள்ளுராட்சி சபைத் தேர்தலில் த.தே.கூ. போட்டியிடும்: மாவை சேனாதிராஜா

007tna.jpgயாழ்ப் பாணம் மாநகர சபை மற்றும் வவுனியா நகர சபைத் தேர்தலில் தமிழரசுக் கட்சி (தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு) போட்டியிடும் என அக்கட்சியின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினரான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

தெள்ளு கடித்ததால் ஹட்டன் மகளிர் கல்லூரி பூட்டு

மாணவிகள் பலரை தெள்ளுப் பூச்சிகள் கடித்ததால், ஹட்டன் புனித கப்ரியல் மகளிர் வித்தியாலயம் நேற் றுக் காலை 10 மணியிலிருந்து எதிர்வரும் திங்கட்கிழமை வரை மூடப்பட்டுள்ளது.

நேற்றுக் காலை பாடசாலையின் தமிழ்ப் பிரிவின் சுமார் 50 மாணவிகள் தெள்ளுப் பூச்சிக்கடிக்கு உள்ளாகியமை கண்டறியப்ப ட்டு காலை 10 மணிக்கு உடனடியாக பாடசாலைக்கு விடுமுறை வழங்கப்பட்டது. ஹட்டன்-டிக்கோயா சுகாதாரப் பரிசோதகர்கள் விரைந்து வந்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டனர். எனினும், பாடசாலை திங்கள் வரை மூடப்பட்டது.

‘எம் மக்களை மீட்க ‘BTF ன்’ மாபெரும் (முதலைக் கண்ணீர்) போராட்டம்’ : ரி சோதிலிங்கம்

Protest_Londonமுகாம்களில் உள்ள மக்களுக்காக செய்யும் போரட்டம் அவர்களின் அவல நிலையையும் அவர்கள் திரும்பிப் போய் தமது சொந்த இடங்களில் வாழும்நிலையை உருவாக்கும் போராட்டமாக இருக்க வேண்டும். அந்த வகையில் யூன் 20ல் BTF -British Tamil Forum ஒழுங்கு செய்துள்ள பேரணி முகாம்களில் அவஸ்த்தைப்படும் மக்கள் மீண்டும் தமது வாழ்விடங்களுக்கு மீள குடியேற்ற உதவும் என்பதை நம்புவது மிகவும் கடினமாக உள்ளது.

2. கடந்த காலங்களில் பிரிஎப் (பிரித்தானிய தமிழர் பேரவை) போன்ற புலிகளின் ஆதவாளர்களால் நடாத்தப்பட்ட போராட்டங்கள் புலிகளின் அழிவுக்கும் புலிகளின் தலைவரின் படுகொலைக்கும் துணை போனது மட்டுமல்ல பல்லாயிரக் கணக்கான தமிழர்களின் உயிரிழப்பிற்கும் காரணமானது.

3. ‘புலிகளுக்கும் தமிழீழம் வேணும் எமக்கும் தமிழீழம் வேணும்’ என்பதால் நாம் அவர்கள் இயக்கத்தையும் அந்தக் கொடியையும் ஏற்றுக் கொண்டோம் என்று இயங்கி தமிழீழக் கோசம், பிரபாகரன் படம், புலிக்கொடியடன் நடாத்திய பேரணிகள் போல் இந்த முறையும்  பிரிஎப் புலிக்கொடி தமிழ்க் கொடி விற்று நிதி சேகரிப்பில் இறங்கினால்கூட ஆச்சரியப்படுவதற்கில்லை.

4. புலிகளின் ஆதரவாளர்களால் இயக்குனர்களால் கடந்த காலங்களில் புலிகளின் பெயரால் மக்களுக்காக மக்களிடமிருந்து சேர்த்த  நிதி மோசடிகளும் தாம் போராட்டத்திற்கு உதவி செய்கிறோம் என்று போராட்த்திற்கும் துரோகம் இழைத்துள்ளதை புலிகளின் ஆதரவாளர்களால் பகிரங்கமாகவே பேசப்படும் விடயமாக உள்ளது.

5. இன்றுவரையில் உயிரிழந்த புலிப் போராளிகளுக்கும் அதன் தலைவருக்கும் அஞ்சலிக் கூட்டம் செய்யாமலும் இன்றும் புலிகள் மீண்டும் எழுவர்; 5வது தமிழீழப்போர் தொடுப்பர்; புலிக்கொடியே தேசியக் கொடி என்றும் கோசம் இட்டு முகாம்களில் உள்ள மக்களின் வாழ்வில் நிலைமைகளை மோசமாக்கும் நிலைக்குத் தள்ளிவிடுவார்கள் என்ற அச்சம் தவிர்க்க முடியாதது.

6. நாட்டில் உள்ள உண்மைச்சுற்றாடல் நிகழ்வை கவனத்தில் எடுக்காமல் புலம்பெயர் சூழலில் கனவு உலகில் தவறான முடிவுகள் எடுக்ப்பட்டு தவறாக வழிநடாத்தப்பட்டது. இதன் முடிவில் புலிகளின் தலைமையும் புலிப்போராளிகளும் அழிக்கப்பட்டனர். இந்த போராட்டங்களின் முடிவுகளின் விமர்சனங்கள் இல்லாமல் மீண்டும் ஒரு போரட்டம் நடத்துவதும் அதுவம் இவ்வளவு அவசர அவசரமாக இது நடாத்தப்படுவதும் இது புலிகளுக்குள்ளேயே நடைபெறும் குழுவாத்தின் பிரதிபலிப்புக்களா என்ற பலத்த சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

7. இன்று இந்த மக்கள் முகாம்களில்  அவலநிலைக்குத் தள்ளப்பட்டதற்கு முக்கிய காரணமாக இருப்பது கிளிநொச்சி மன்னார் முல்லைத்தீவு வவுனியா பிரதேசங்களில் வாழ்ந்த மக்களை புலிகளின் தலைவரையும் ஆயுதங்களையும் பாதுகாக்கும் பொருட்டு மனிதக் கேடயங்களாக பயன்படுத்த இழுத்துச்சென்றதே என்பதை பிரிஎப் மறந்து விடக்கூடாது. இப்படி இழுத்துச்சென்ற மக்களை புதைகுழிகளுக்குள்ளும் செல் மழைக்குள்ளும் பசி பட்டினியுடன் மரணத்தை எதிர்நோக்க வைத்ததும் புலம்பெயர் புலிகளின் தவறான வழிகாட்டலே என்பதை பிரிஎப் மறந்துவிடக்கூடாது. இன்றுள்ள வன்னி முகாம்களைவிட மிகவும் மோசமான நிலையிலேயே இந்த மக்களை புலிகளின் தலைமை வைத்திருந்ததும் இந்த மக்களை புலம் பெயர் புலிகளின் தவறான புத்திமதியில் பலிக்கடாக்களாக்கும் திட்டத்தின் தோல்வியையும் பிரிஎப் மறந்துவிடக் கூடாது.

8. இன்றுள்ள முகாம் வாழ்க்கையை புலிகளே புதுமாத்தளன் – முள்ளி வாய்க்கால் பகுதியில் ஆரம்பித்து வைத்து மக்களை மரணம் நோக்கி நடாத்தினர் என்பதையும் இந்த சம்பவங்களை பிரிஎப் புலிகளிடம் தட்டிக்கேட்கவில்லை என்பதையும் இங்கே கூறிக்கொள்வது தவிர்க்க முடியாதது.

9. அது மட்டுமல்ல இப்படியான இந்த சூழ்நிலையிலிருந்து தப்பி ஓடி வந்தவர்களை தலைவரை தனியே விட்டுவிட்டு ஓடிவந்த துரோகிகள் என்றும் இந்த துரோகிகளுக்கு எந்த உதவியும் செய்யக் கூடாது என்று கூறியவர்களும் பிரிஎப்  மற்றும் புலிகளின் ஆதரவாளர்களே.

10. மேலும் மேற்கூறிய இந்த துரோகப்பட்டத்தை ஏக்காளமாக தூபமிட்டு பரப்பிய ஜபிசி ஜிரிவி தீபம் போன்ற ஊடகங்கள் இன்று இவற்றுக்கு என்ன சொல்கிறார்கள்? அரசியல் சவால்களைவிட இராணுவ வெற்றிகளை தமிழீழ வெற்றியாக ஊதித் தொலைத்த இந்த ஊடகங்கள் இன்றும் உங்கள் பேரணியை ஊதித்தள்ளும்.

11. மூன்று மாதங்களுக்கு முன்பு அந்த மக்களின் பரிதாபத்தை துரோகம் என்று கூறிவிட்டு இன்று அதேமாதிரியான சூழ்நிலையில் ஆனால் ஓரளவு மரணபயம் இல்லாமல் வாழும் மக்களை அரசின் மனித உரிமை மீறல்கள் என்று சத்தம்போடும் பிரிஎப் ஏன் அன்று புலிகளால் இதே போன்ற கொடுமைகள் நடைபெறும் போது எதிர்த்து குரல் எழுப்பவில்லை. அப்படி குரல் எழுப்பி  தடுத்து வைக்கப்பட்டு இருந்த மக்களை விடுவிக்கும்படி புலிகளை வற்புறுத்தியிருந்தால் இந்த நிலைமை இப்படி ஏற்ப்பட்டிருக்காது.

12. இன்று புலிகள் இயக்கம் அழிக்கப்பட்டபின்பும் அந்தப் பிரதேசங்களில் மீளக் குடியேற்றம் செய்யாமல் எமது மக்களை இப்படியாக அடைத்து வைத்திருப்பதை மனிதாபிமானமுள்ள எவரும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். அப்படியான மனித உரிமை மீறல்களை தமிழ்பேசும் மக்கள் எதிர்த்தே வந்துள்ளனர். ஆனால் இதேமாதிரியான மனித உரிமை மீறல்களை புலிகள் செய்யும் பொது மட்டும் காரணம் கூறிய பிரிஎப் இப்போது அரசிற்கு எதிராக குரல் எழுப்புவதை வரவேற்கும் அதே வேளை தமது கடந்தகால தவறுகளையும் பகிரங்கமாக மக்களிடம் ஒத்துக்கொள்ள துணிந்து முன்வர வேண்டும்.

13. இந்த யுத்த திருவிழாவை நடாத்த பண உதவி செய்த புலம் பெயர் மக்கள் திருவிழா முடிவில் துப்பரவு வேவைகளுக்கும் செய்யவும் முன்வரவேண்டும். வன்னி நிலப் பரப்பு எங்கும் நிலக் கண்ணி வெடிகள் புதைக்கப்பட்டு இருப்பதாக அரசு தெரிவிக்கிறது. புலிகளும் அதனைத் தெரிவித்துள்ளனர். ஆகவே இந்த யுத்தத்திற்கு ஆரம்பத்தில் போர் முழக்கம் இட்டவர்கள் இந்தக் கண்ணி வெடி அகற்றும் பணிக்கு உதவுவது அவசியம்.

14. இன்று வன்னி மக்களின் முகாம் வாழ்க்கையில் இலங்கை இராணுவம் பொலீசார் ஒருபக்கம் லஞ்சம் வாங்கிக்கொண்டு மக்களை வெளியே அனுமதித்துவிட்டு மக்கள் தப்பி ஓடிவிட்டனர் என்று தேடுதல் வேட்டைகள் செய்வதும் இவர்கள் காணாமல் போனோர் என தமிழர்கள் பிரச்சாரம் செய்வதும் நிகழ்கின்றது. புலிகளுடன் தொடர்புபட்டவர்கள் அழைத்துச் செல்லப்படும் சம்பவங்கள் நிகழ்ந்தள்ளன. நிகழ்ந்து கொண்டிருக்கின்றது. இவர்கள் எங்கு கொண்டு செல்லப்படுகிறார்கள் என்பது பற்றிய விபரங்களை அரசு வெளியிடவில்லை. இவை பற்றி சுனில் அபயசேகர போன்ற மனித உரிமைவாதிகள் தொடர்ச்சியாக கேள்விகளை எழுப்பி வருகின்றனர். அவர்களது குரல்களைப் பலப்படுத்துவது மிக மிக அவசியம்.

15. மேற்கூறிய காரணங்களின் அடிப்படையில் கடந்தகாலத் தவறுகள் பற்றிய விமர்சனத்தை முன்வைக்காமல் பிரிஎப் திடீரென இந்த மக்களுக்கான போராட்ட களத்தில் இறங்கியுள்ளது பலமான சந்தேகங்களை உருவாக்கியுள்ளது. இப்படியான போராட்டங்களை ஆரம்பிக்க முன்னர் பிரிஎப் ஒரு சுய விமர்சனத்தை முன்வைத்திருக்க வேண்டும்.

சமஷ்டியை ஏற்க இரு தரப்பும் மறுப்பு; சமாதான முயற்சி முறிவடைய இதுவே காரணம் : எரிக் சொல்ஹெய்ம்

erik_solheim.jpgஇலங்கை அரசும் விடுதலைப் புலிகளும் சமஷ்டித் தீர்வை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கவில்லை. அதனாலேயே,வெற்றிபெறும் நிலையில் இருந்த சமாதான முயற்சிகள் இறுதிக்கட்டத்தில் முறிவடைந்தன.”

இவ்வாறு நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சரும் இலங்கைக்கான முன்னாள் விசேட சமாதானப் பிரதிநிதியுமான எரிக்சொல்ஹெய்ம் தெரிவித்திருக்கிறார்.

பி.பி.ஸியின் ‘ஹார்ட் டோக்’ நிகழ்ச்சிக்கு வழங்கிய பேட்டியில் இதனைத் தெரிவித்துள்ள அவர், இப்போதைய நிலையில் இலங்கைக்கு எதிரான தடைகள் அவசியமில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், இலங்கையின் மனிதாபிமானப் பணிகளுக்காக அரசுக்கு நிதியுதவி வழங்குவதாக இருந்தால், இடம்பெயர்ந்தோரின் முகாம்களுக்குள் செல்வதற்கு அனுமதி வழங்கப்படுவது அவசியம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழர்களுக்குச் சிறந்த எதிர்காலம் உண்டென்பதை இலங்கை அரசு நிரூபிக்க வேண்டும் : புதிய அமெ. தூதுவர் பெட்ரிக்கா

butenis.jpgதமிழர் களுக்குச் சிறந்த எதிர்காலம் உண்டென்பதனை அரசாங்கம் யதார்த்தபூர்வமாக நிரூபிக்க வேண்டுமென இலங்கைக்கான அமெரிக்காவின் புதிய தூதுவர் பெட்ரிக்கா புட்டீனிஸ் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையில் விடுதலைப் புலிகளுடனான போரில் லட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்து வாழ்கின்றனர். இவ்வாறு வாழும் தமிழ் சிறுபான்மை மக்களது உரிமைகளை உறுதிப்படுத்த அரசாங்கம் காத்திரமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். படுகொலைகள், சட்டவிரோத கடத்தல்கள் மற்றும் காணாமல் போதல் சம்பவங்கள் தொடர்பில் உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்.

சமாதானத்தை ஏற்படுத்தக் கூடிய சிறந்த சந்தர்ப்பத்தை இலங்கை அரசாங்கம் கைநழுவ விடக் கூடாது.ஐக்கிய இலங்கைக்குள் தமக்கு சிறந்த எதிர்காலம் இருப்பதாக தமிழ் மக்கள் உணரக் கூடிய வகையில் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் அமைய வேண்டும்.

விடுதலைப் புலிகள் தனிநாடு கோரி 30 வருடங்களாகப் போராடி வந்தனர். ஆனால் கடந்த மாதம் அரச படைகள் அவர்களைத் தோற்கடித்து விட்டனர். சுமார் 3 லட்சம் மக்கள் இன்று இடம்பெயர்ந்து முகாம்களில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். சர்வதேச சமூகத்தினால் இலங்கைக்கு அளிக்கப்பட்டு வரும் ஆதரவு குறித்து அரசாங்கம் திருப்தியடைய வேண்டும். இடம்பெயர்ந்தோர் முகாம்களில் சுதந்திரமாக பணியாற்ற தொண்டு நிறுவனங்களுக்குப் பூரண அனுமதியளிக்கப்பட வேண்டும்” என்றார்.

பதியுதீன் மஹ்மூத் நினைவு தின வைபவம் இன்று கொழும்பில்!

காலஞ்சென்ற முன்னாள் கல்வி அமைச்சர் காயிதே மில்லத் பதியுதீன் மஹ்மூத் அவர்களின் நினைவு தின வைபவம் இன்று கொழும்பில் நடைபெறவுள்ளது. அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணி சம்மேளன ஏற்பாட்டில் இன்று மாலை 4.00 மணிக்கு பொரளை, நகரோதய மண்டபத்தில் நடைபெறவுள்ள இவ்வைபவத்தில் சுகாதார சேவைகள் மற்றும் போஷாக்குத்துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா பிரதம அதிதியாகக் கலந்துகொள்ளவுள்ளார் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்வைபவத்தில் கொழும்பு, ஆனந்தா கல்லூரியின் முன்னாள் துணை அதிபர் வண. திவ்யகஹ யஸஸ்ஸி தேரர் சமாதான சகவாழ்வுக்கு சமத்துவ சமுதாயத்தை நோக்கி.. எனும் தலைப்பில் விசேட உரை நிகழ்த்தவுள்ளார். பதியுதீன் மஹ்மூத் நினைவாக இன்றைய வைபத்தில் உயர்கல்விப் புலமைப் பரிசில் ஒன்று வழங்கப்படவுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

மும்பை தாக்குதல் பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்க சர்தாரியிடம் மன்மோகன்சிங் வலியுறுத்தல்

manmohan_sardari.jpgபிரதமர் மன்மோகன் சிங்கும், பாகிஸ்தான் அதிபர் சர்தாரியும் ரஷ்யாவில் நேற்று சந்தித்து பேசினர். அப்போது மும்பையில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பாகிஸ்தானில் செயல்படும் தீவிரவாத முகாம்களை அழிக்க வேண்டும் என்று மன்மோகன் சிங் கண்டிப்புடன் வலியுறுத்தினார்.
இதுபற்றி விவாதிப்பதற்காக இரு நாடுகளின் வெளியுறவு செயலாளர்களும் விரைவில் சந்தித்து பேச முடிவு செய்யப்பட்டது. மன்மோகன் சிங்கும், சர்தாரியும் அடுத்த மாதம் எகிப்தில் அணி சேரா நாடுகளின் மாநாடு நடைபெறும் போது மீண்டும் சந்தித்து பேச ஒப்புக் கொண்டனர்.

ரஷ்யாவின் 3வது பெரிய நகரமான யக்தரின்பர்க்கில் உள்ள “ஹயாத் ரீஜன்சி” ஓட்டலில் ஷாங்கை ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்.சி.ஓ.) மாநாடு நேற்று நடந்தது. இந்த அமைப்பில் ரஷ்யா, சீனா, கஜகஸ்தான், தஜிகிஸ்தான், கிர்கிஸ்தான், மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் தான் உறுப்பினர்களாக உள்ளன. இந்தியாவும், பாகிஸ்தானும் பார்வையாளர் நாடுகள் என்ற முறையில் மாநாட்டுக்கு அழைக்கப்பட்டு இருந்தன.

தனியாக பேச்சு: மாநாட்டில் பங்கேற்க சென்றிருந்த பிரதமர் மன்மோகன் சிங்கும், பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரியும் மாநாட்டு மண்டபத்தில் நேருக்கு நேராக சந்தித்தனர். அப்போது இரு தலைவர்களும் கைகுலுக்கி வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். இருவரும் இணைந்து நின்று போட்டோவுக்கு “போஸ்” கொடுத்தனர்.

மாநாட்டு இடைவேளையில் நேற்று மதியம் இருவரும் சந்தித்துப் பேசினர். மும்பை தாக்குதலுக்கு பிறகு இரு நாடுகளின் தலைவர்கள் சந்திப்பது இதுவே முதல் தடவை.

உதவியாளர்கள் இன்றி மன்மோகன் சிங்கும், சர்தாரியும் தனியாகவே பேசினார்கள். அப்போது பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்களை முற்றிலுமாக அழித்து இந்தியாவுக்கு எதிராக தாக்குதல் நடத்துவதை தடுக்க வேண்டும் என்று மன்மோகன் சிங் பகிரங்கமாகவே வற்புறுத்தினார்.

மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டதாக நம்பப்படும் ஜமாத்- உத்-தவா அமைப்பின் தலைவர் ஹபீஸ் முகமது சயீத்தை பாகிஸ்தான் அரசு விடுதலை செய்தது ஏமாற்றம் அளிப்பதாகவும், பாகிஸ்தானில் உள்ள இந்தியாவுக்கு எதிரான தீவிரவாதிகளை ஒடுக்க இன்னமும் நடவடிக்கை எடுக்காதது வருத்தம் தருகிறது என்றும் சர்தாரியிடம் மன்மோகன் சிங் கடுமையாக கூறினார்.

இன்னும் ஆதாரம் தேவை: பாகிஸ்தான் அதிபர் சர்தாரி பதில் அளிக்கையில், “மும்பை தாக்குதலில் தொடர்புடையதாக கருதப்படும் சில தீவிரவாதிகளை பிடித்து உள்ளோம். ஆனால் இந்தியா தரப்பில் இருந்து இன்னும் அதிக ஆதாரங்கள் தேவைப்படுகின்றன” என்றார். இதற்கு இந்தியா தரப்பில் இதுவரை கொடுக்கப்பட்டுள்ள ஆதாரங்களை மன்மோகன்சிங் எடுத்துக் கூறினார்.

இதையடுத்து மும்பை தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தான் தரப்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து இரு நாடுகளின் வெளியுறவுச் செயலாளர்களும் விரைவில் சந்தித்துப் பேசுவது என்றும், அடுத்த மாதம் எகிப்தில் நடைபெற உள்ள அணி சேரா நாடுகளின் மாநாட்டின் போது மன்மோகன் சிங்கும், சர்தாரியும் மீண்டும் சந்தித்துப் பேசுவது என்றும் பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்பட்டது.

முல்லைத்தீவு கிளிநொச்சி பகுதியில் படைப்பிரிவின் தலைமையகங்கள்!

பாதுகாப்புப் படைப்பிரிவின் இரண்டு தலைமையகங்களை முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அமைக்கப்படும் முல்லைத்தீவு  தலைமையகத்தின் கட்டளை அதிகாரியாக மேஜர் ஜனரல் நந்தன உடவத்தையும் கிளிநொச்சி தலைமையகத்தின் கட்டளை அதிகாரியாக மேஜர் ஜனரல் சன்ன குணதிலக்கவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வடக்கில்; இராணுவத் தலைமையகங்களாக இதுவரை பலாலி மற்றும் வவுனியா இராணுவத் தலைமையகங்கள் செயல்பட்டு வந்தன. பொதுமக்களின் காணிகளில் உத்தேச இராணுவத் தலைமையகங்களை அமைப்பதற்கு பயன்படுத்தப்படமாட்டாது எனத் தெரிவிக்கப்படுகிறது.