June

June

எல்லைக்கிராமங்கள் வரைபடத்தில் நீக்கப்பட்டிருப்பதுபோல் பின் தங்கியகிராம அடையாளமும் நீக்கப்படும் – அ’புரத்தில் ஜனாதிபதி

mahinda-rajapaksha.jpgபயங்கர வாதம் முழுமையாக ஒழித்துக் கட்டப்பட்டு எல்லைக் கிராமங்கள் இந்நாட்டின் வரைபடத்திலிருந்து நீக்கப்பட்டிருப்பது போல் சகல பிரதேசங்களும் அபிவிருத்தி செய்யப்பட்டு பின்தங்கிய கிராமங்கள் என்ற அடையாளமும் இல்லாமலாக்கப்படும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று அனுராதபுரத்தில் தெரிவித்தார்.

பயங்கரவாதிகளின் தாக்குதல்களுக்கு அஞ்சி தம் இருப்பிடங்களையும், வழிபாட்டுத் தலங்களையும் விட்டு வடமத்திய மாகாண மக்கள் வெளியேறாததன் பயனாக பயங்கரவாதத்தை முழுமையாக ஒழித்துக் கட்டும் நடவடிக்கைகளைத் துரிதப்படுத்த முடிந்ததாகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டார்.

பயங்கரவாதத்தை ஒழித்து நாட்டை ஐக்கியப்படுத்திய ஜனாதிபதியின் தலைமைத்துவத்தையும், முப்படையினரதும் பொலிஸாரினதும் தன்னலமற்ற அர்ப்பணிப்புக்களைக் கெளரவிக்கும் வகையில் இடம்பெற்ற வைபவத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அனுராதபுரம், சிறிமகாபோதி விகாரை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள குழு மண்டபத்தில் (மகுல்மடுவ) இடம்பெற்ற இவ்வைபவத்தில் வடமத்திய மாகாண சங்க நாயக்கர்களினதும் சர்வ மதத் தலைவர்களினதும், வட மத்திய மாகாண மக்களினதும் கெளரவிப்புக்கள் இடம்பெற்றன.

இவ்வைபவத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் உரையாற்றுகையில், உலகிலுள்ள முக்கியத்துவம் மிக்க புனித நகரிலிருக்கும் அட்டமஸ்தான மண்டபத்தில் வைத்து அளிக்கப்படும் இக்கெளரவத்தை முழு நாட்டையும் மீட்டெடுத்த படை வீரர்களுக்கும், அவர்களுக்குத் தலைமையும், வழிகாட்டலும் வழங்கிய எமக்கும் அளிக்கப்படும் ஒன்றாகவே பார்க்கிறேன்.

இந்நாடு விடுவிக்கப்பட்டதும் இங்கு வாழுகின்ற எல்லா மக்களுமே சந்தோஷப்பட்டார்கள், மகிழ்ச்சி அடைந்தார்கள். இந்நாட்டின் கெளரவமும், மகத்துவமும் உலகிற்கு எடுத்துக் கூறப்படும் போது ரஜரட்டவும், எடுத்துக் கூறப்படும், ஆனால் பயங்கரவாதம் வளர்ச்சி பெறத் தொடங்கியது முதல் வடமத்திய மாகாண மக்கள் பெரும் அச்சுறுத்தல்களுக்கு முகம் கொடுத்தார்கள், தாக்கப்பட்டார்கள்.

பயங்கரவாதிகளின் வரைபடத்தில் ஹம்பாந்தோட்டைதான் இறுதி இடமாக இருந்தது. என்றாலும் அவர்கள் வடமத்திய மாகாணத்தையும் ஆக்கிரமிப்பதற்கே முயற்சி செய்தார்கள். இதனால் தான் வடமத்திய மாகாண மக்களைத் தாக்கினர். படுகொலை செய்தனர். இருப்பினும் இம்மாகாண மக்கள் தங்கள் இருப்பிடங்களையும், வழிபாட்டுத் தலங்களையும் விட்டு வெளியேறவில்லை. அர்ப்பணிப்புடன் செயற்பட்டனர். இதன் பயனாக பயங்கரவாதத்தைத் துரிதமாக ஒழித்துக்கட்ட முடிந்தது.

இந்நாட்டில் சிங்கள, தமிழ், முஸ்லிம், கிறிஸ்தவ சகல மக்களும், மதத்தவர்களும், அச்சம், பீதியின்றி வாழவேண்டும். அதற்கான சூழலை உருவாக்கிக் கொடுப்பது எமது பொறுப்பாகும். ரஜரட்ட என்ற பெயரைக் கொண்டிருக்கும் இம்மாகாணம் தன்னிறைவு கொண்டதாக மேம்படுத்தப்படும். எல்லா பின்தங்கிய கிராமங்களும் அபிவிருத்தி செய்யப்படும். இதற்கான திட்டங்கள் மஹிந்த சிந்தனையில் முன்மொழியப் பட்டிருக்கின்றன.

‘ருவன்டி-20’ கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டிக்கு பாகிஸ்தான் தெரிவாகியது – 7 ஓட்டங்களால் தென்னாபிரிக்கா தோல்வி

20-20pakisthan.jpgஉலகக் கிண்ண ருவன்டி-20 கிரிக்கெட் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றியீட்டிய பாகிஸ்தான் அணி இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியுள்ளது.

இங்கிலாந்தின் நட்டிங்ஹேம் நகரிலுள்ள ட்ரெட்ன்ட் ப்ரிட்ஜ் மைதானத்தில் நேற்று தென்னாபிரிக்க அணியை எதிர்த்தாடிய பாகிஸ்தான் அணி 7 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. இத்தொடரில் ஒரு போட்டியிலும் தோல்வியுறாது சிறப்பாக ஆடிய தென்னாபிரிக்க அணி நேற்றைய போட்டியில் பாகிஸ்தான் அணியின் சகலதுறை ஆட்டக்காரர் ஷஹீத் அப்ரிடியின் சிறந்த ஆட்டத்தால் தோல்வியடைந்ததோடு இறுதிப் போட்டிக்குத் தெரிவாகும் வாய்ப்பையும் இழந்தது.

நேற்றைய போட்டியில் நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி அப்ரிடியின் அதிரடி ஆட்டத்தால் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கட்டுக்களை இழந்து 149 ஓட்டங்களைப் பெற்றது. இதில் அப்ரிடி 34 பந்துகளை எதிர்கொண்டு 8 பவுண்டரிகள் அடங்கலாக 51 ஓட்டங்களைப் பெற்றார். பின்னர் 150 ஓட்டங்கள் எனும் வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கட்டுக்களை இழந்து 142 ஓட்டங்களை மட்டுமே பெற்று 7 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

தென்னாபிரிக்க அணி சார்பாக ஜெக் கலிஸ் மற்றும் டுமினி ஆகியோர் மிகவும் சிறப்பாக ஆடி முறையே 64,  44 ஓட்டங்களைப் பெற்றனர். எனினும் பந்துவீச்சிலும் திறமை காட்டிய அப்ரிடி 16 ஓட்டங்களுக்கு 2 விக்கட்டுக்களை வீழ்த்தினார். தென்னாபிரிக்க அணியின் முக்கிய இரு விக்கட்டுக்களைக் கைப்பற்றியதோடு துடுப்பாட்டத்திலும் பிரகாசித்த அப்ரிடி நேற்றைய போட்டியின் சிறப்பாட்டக்காரராகவும் தெரிவானார்.

இதேவேளை,  இத்தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டி இலங்கை மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய அணிகளுக்கிடையில் இன்று நடைபெறவுள்ளது. இதில் வெற்றி பெறும் அணி நாளை மறுநாள் லண்டன் லோட்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை எதிர்த்தாடும். 

இலங்கைத் தமிழ் மாணவர்களின் இன்றைய கல்விநிலை குறித்து எழுத்தாளர் புன்னியாமீன் அவர்களுடன் ஒரு நேர்காணல்

puniyameen-photortf.jpg‘இலங்கை எழுத்தாளர் புன்னியாமீன்’ அவர்களுடன் இடம் பெற்ற இந் நேர்காணல் இந்தியா தமிழ் நாட்டில் முன்னணித் தமிழ் இணையத்தளங்களில் ஒன்றான ‘சங்கமம் லைவ்’ இல் 19.06.2009 பிரசுரமானதாகும். இந்த நேர்காணல் முனைவர். மு. இளங்கோவன் இணையத்தளத்திலும், கல்வி சார்ந்த சில இணையத்தளங்களிலும் உடன் மறுபிரசுரம் செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் பிரபல எழுத்தாளர் ‘பொன்மொழிவேந்தன்’ பத்து நாட்களுக்கு முன்பு நேரடியாக இந்நேர்காணலை புன்னியாமீன் இடம் இருந்து பெற்றிருந்தார். இந்நேர்காணல் வழங்கப்பட்ட பின்பு வவுனியா நலன்புரி நிலையங்களிலுள்ள தரம் 05 மாணவர்களுக்காக வேண்டிய கல்வி உதவிச் செயற்பாட்டில் ஐக்கிய இராட்சியத்தின் ‘அகிலன் பவுண்டேசனும்’ இணைந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. தேசம் நெட் வாசகர்களுக்காக வேண்டி இந்நேர்காணல் மீளப்பிரசுரமாகின்றது.(ஆசிரியர்)

நேர்காணல்  ‘பொன்மொழிவேந்தன்’ (தமிழ் நாடு)

இலங்கையைச் சேர்ந்த எழுத்தாளர் புன்னியாமீன் அவர்கள் 150 மேற்பட்ட நூல்களை எழுதியுள்ள ஒரு முன்னணி எழுத்தாளராவார். சமூக உணர்வுமிக்க இவரும், இவரது நூல் வெளியீட்டகமான சிந்தனைவட்டமும் 2002, 2006 ஆம் ஆண்டுகளில் இலங்கையில் சப்பிரகமுவ மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளப்பாழின் போதும், 2004ஆம் ஆண்டு சுனாமி நிகழ்வின் போதும் மாணவர்களின் கல்வியை இலக்காகக் கொண்டு பல்வேறுபட்ட சேவை நலத்திட்டங்களை முன்னெடுத்து நடத்தியுள்ளனர்.

மேலும் கல்வியைத் தொடர வசதி இல்லாத நூற்றுக்கணக்கான மாணவர்களுக்குக் கல்வியைத் தொடர உதவிகளைச் செய்துள்ளதுடன்,பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பயிலும் வசதி குறைந்த மருத்துவ, பொறியியல் துறை மாணவர்களுக்குப் பல்வேறு உதவிகளைச் செய்து வருகின்றனர்.

2006ஆம் ஆண்டில் இலண்டனில் வசிக்கும் புகழ்பெற்ற நூலகவியலாளர் திருவாளர் என். செல்வராஜா அவர்களின் வழிகாட்டலுடன் ‘அயோத்தி நூலக சேவை’யின் பரிந்துரையின்படி ‘இலண்டன் புக்ஸ்’ எப்ரோட் நிறுவனத்தின் மூலமாக 4 மில்லியன் உரூபாய்க்கு மேலாகப் பாடசாலைப் புத்தகங்களைப் பெற்று இலங்கையில் உள்ள 115 நூல் நிலையங்களுக்குப் பெறுமதி மிக்க நூல்களை வழங்கினர். அதே நேரம் சிந்தனை வட்டத்தின் தரம் 5 புலமைப்பரிசில் வழிகாட்டல் திட்டத்தின் கீழ் 1996ஆம் ஆண்டு முதல் அனாதைச் சிறுவர்கள், அகதிச் சிறுவர்கள் போன்ற, சராசரியாக 300க்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு ஆண்டு தோறும் விளம்பரங்கள் இன்றி உதவிகளை வழங்கி வருகின்றனர்.

தற்போது வன்னி அவலத்தில் இருந்து மீண்டுள்ள மாணவர்களின் கல்வியை மேம்படுத்த சிந்தனைவட்டம், இலண்டனைத் தளமாகக் கொண்டியங்கும் தேசம்நெற் இணையத்தளத்துடனும், சில புரவலர்களுடனும், பொதுநல அமைப்புகளுடனும் இணைந்து இருபத்து எட்டு இலட்சம் ரூபாய் நிதித்திட்டத்தில் 5ஆம் தர புலமைப் பரிசில் தேர்வுக்குத் தோற்றும் நலன்புரிநிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள பாடசாலைகளில் கற்கும் ஒவ்வொரு மாணவனுக்கும் 30 மாதிரி வினாத்தாள்களையும், 04 வழிகாட்டிப் புத்தகங்களையும் வழங்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதனை முன்னிட்டு சிந்தனைவட்டப் பணிப்பாளர் எழுத்தாளரும் பதிப்பாளருமான புன்னியாமீன் அவர்களுடன் மேற்கொண்ட சிறப்பு நேர்காணல் கீழே தொகுத்து தரப்பட்டுள்ளது.

கேள்வி: வன்னி அவலத்தில் இருந்து மீண்டுள்ள மாணவர்களின் கல்வி நிலையை மேம்படுத்தத் திட்டமிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அறிகின்றோம். வன்னி அவலத்தில் இருந்து மீண்டுள்ள மாணவர்களின் நிலை பற்றி சற்று விளக்க முடியுமா?

பதில்: இலங்கையில் கல்வியால் உயர்ந்து உலகளாவிய ரீதியில் தடம்பதித்த ஒரு சமூகத்தை உருவாக்கிய இலங்கையில் வடபுலத்து மண் கடந்த 30 ஆண்டு கால யுத்தத்தினால் இன்று சொல்லொனாத் துயரங்களை சுமந்து ‘பூஜ்ய கல்வி அலகை’ எதிர்நோக்கக் கூடிய ஒரு சமூகமாக மாறிவிட்டது. வடபுலத்து மண்ணில் தமிழர்கள் செறிவாக வாழ்ந்து வந்த கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி, பூநகரி, கண்டாவலை ஆகிய கல்விக் கோட்டங்களைச் சேர்ந்த அனைத்துப் பாடசாலைகளும் இயங்கவில்லை.

முல்லைத் தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு கல்வி வலயத்தைச் சேர்ந்த பாடசாலைகளும், துணுக்காய் கல்வி வலயத்தைச் சேர்ந்த துணுக்காய், ஒட்டிசுட்டான், மாந்தை கிழக்கு ஆகிய கோட்டங்களைச் சேர்ந்த பாடசாலைகளும் இயங்கவில்லை. இதனை இன்னும் தெளிவாகக் குறிப்பிடுவதாக இருந்தால் கிளிநொச்சி, முல்லைத் தீவு நிர்வாக மாவட்டங்களைச் சேர்ந்த எந்தப் பாடசாலைகளுமே இயங்கவில்லை எனலாம். இங்கு எந்த மக்களுமே இல்லை. அண்மைக் கால யுத்தத்தில் மாத்திரம் வடபுலத்து மண்ணிலிருந்து இடம்பெயர்ந்த மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் வவுனியாவிலும் யாழ்ப்பாணத்திலும் அகதி முகாம்களில் கூடாரங்களில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். கடந்த வாரம் கல்வி அமைச்சர் பாராளுமன்றத்தில் அறிவித்த அறிவித்தலின்படி சுமார் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் நலன்புரிநிலையங்களில் உள்ளனர்.

வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள நலன்புரி நிலையங்களில் சுமார் 53 பாடசாலைகள் இயங்குகின்றன. இப்பாடசாலைகளில் இம்மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். நலன்புரி நிலையங்களில் ஆரம்பப் பிரிவு தொடக்கம் க.பொ.த உயர்தரம் வரை கற்பித்தலுக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இருப்பினும் முறைசார் கல்வித்திட்டத்தின் கீழ் அனைத்து மாணவர்களாலும் உரிய கல்வியினை பெற்றுக் கொள்ள முடியாதுள்ளது.

கேள்வி : இதனை எந்த அடிப்படையில் நியாயப்படுத்துவீர்கள்?

பதில் : இடம் பெயர்ந்துள்ள மாணவர்கள் மையமாகக் கொண்டு அமைக்கப்பட்ட நலன்புரி நிலையப் பாடசாலைகளில் பெரும்பாலான பாடசாலைகளில் கற்றல் கற்பித்தலுக்குரிய சூழ்நிலை இல்லை. இதனை இரண்டு கோணங்களில் தெளிவு படுத்தலாம்.

ஒன்று இடம்பெயர்ந்த அனைத்து மாணவர்களை அவதானிக்குமிடத்து அவர்கள் அதிகளவிலான மானசீகமான பாதிப்புகளுக்கு உட்பட்டிருப்பதை உணரமுடிகின்றது. அவர்கள் வாழ்ந்த சூழலிலிருந்து தனது நண்பர்கள், உறவினர்கள், பெற்றோர்களை இழந்து அல்லது பிரிந்து வந்த துயரசூழ்நிலை ஒரு புறம். ஏற்கனவே கற்றுவந்த சூழலைவிட வித்தியாசமான சூழலில் அடிப்படை வசதிகள் குறைந்த நிலையில் கற்க வேண்டிய நிர்ப்பந்தம் மறுபுறம். இத்தகைய காரணிகளால் மனோநிலையில் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையிலேயே இம்மாணவர்கள் கல்வியினைத் தொடர வேண்டிய நிலையில் உள்ளனர்.

இரண்டாவதாக இவர்கள் கற்கும் சூழ்நிலை. வசதியான பாடசாலைகளில் வசதி வளங்களோடு கற்று விட்டு தற்போது நலன்புரி நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கொட்டில்களில் அல்லது மர நிழல்களில் கற்க வேண்டிய நிலை. இங்கு பெரும்பாலான மாணவர்களுக்கு மேசை, கதிரைகள் கிடையாது, சீருடை கிடையாது. நிலங்களில் அமர்ந்து கொண்டே கற்கின்றனர். இவர்கள் கற்கும் இடங்களை ஊடறுத்துக் கொண்டு முகாம்களில் உள்ள பெரியவர்கள் செல்லக்கூடிய நிலையும் உண்டு. இவர்கள் கற்கும் இடங்களுக்கு அண்மையில் சீட்டாடுவதும், வம்பளப்பதும் உண்டு. இங்குள்ள நிலையை இன்னும் தெளிவு படுத்துவதாயின் ஆரம்ப வகுப்பில் கற்பிக்கும் சில ஆசிரியர்கள் தனது குழந்தைக்கு பாலூட்டிக் கொண்டு கற்பிக்கும் அவலமும் நலன்புரிநிலையப் பாடசாலைகளில் உண்டு. எனவே மாணவர்களின் மனோ நிலைப்பாதிப்பும், கற்கும் சூழ்நிலையும் தொடர்பு படுத்திப்பார்க்கும் போது முறைசார் கல்வியை மேற்கொள்ள முடியாதிருப்பதைத் தங்களால் உணர்ந்து கொள்ள முடியும்.

கேள்வி: மாணவர்களின் மனோ நிலைப்பாதிப்புக்களைக் களைவதற்காக யாதேனும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளனவா?

பதில்: இது குறித்து விரிவான விளக்கத்தை என்னால் தர முடியாது. இருப்பினும் மனஅழுத்தங்களுடன் கூடிய மாணாக்கரின் மனோநிலைப் பாதிப்பினை குறைப்பதற்காக வேண்டி கல்வித் திணைக்களமும், ஏனைய சில நிறுவனங்களும் சில கவுன்சிலின் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அறிகின்றோம். இந்த செயற்கையான சூழ்நிலையில் அவர்களது மனோநிலை மாற்றங்களை சீர்செய்வதென்பது கடினமான காரியமே. அதற்காக வேண்டி இந்த மாணவர்களை விட்டுவிடமுடியாது. வட பகுதிகள் தமிழர் கல்வியால் எழுச்சி பெற்றவர்கள். கல்வியால் எழுச்சிபெற்ற சமூகம் கல்வியால் வீழ்ச்சி பெற்றுவிடக் கூடாது. இதனை ஒவ்வொருவரும் உணர வேண்டிய கட்டத்தில் உள்ளோம். ஏதேவொரு வழியில் ஓரளவுக்காவது கல்வியின்பால் அவர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்த விழைய வேண்டியது ஒவ்வொருவரின் கடமையாகும்.

கேள்வி : இங்குக் கற்கும் மாணவர்கள் காலை உணவைப் பெற்று வருகிறார்களா?

பதில் : முகாம்களில் வழங்க வேண்டிய உணவினையே பெற வேண்டிய நிலையில் இவர்கள் இருப்பதினால் அனைத்து மாணவர்களும் காலை ஆகாரத்தை எடுத்த பின்பே வருவார்கள் என்று கூற முடியாது. மாணவர்களுக்கு உலக உணவுத்திட்டத்தின் கீழ்உணவு வழங்க நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது. அதே நேரம் நலன்புரி நிலையப் பாடசாலைகள் இரண்டு அல்லது மூன்று கட்டங்களாகவும் இயங்குவதை இங்கு குறிப்பிடல் வேண்டும். அதாவது காலையில் சில வகுப்புகள், மத்தியானம் சில வகுப்புகள், பின்நேரம் சில வகுப்புகள் என ஒழுங்கு படுத்தப்பட்டுள்ளன. இலங்கையில் உள்ள பாடசாலைகள் பொதுவாக காலை 7.30 மணிமுதல் பி.ப 1.30 மணிவரை ஆறு மணிநேரம் இயங்கும். ஆனால் இங்கு இயங்கும் பாடசாலைகள் 3 அல்லது 4 மணிநேரமே இயங்கி வருகின்றன.

கேள்வி: வட இலங்கையிலிருந்து இடம்பெயர்ந்து தற்போது வவுனியா நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மாணவர்களுள் தரம் 05 இல் பயிலும் மாணவர்களின் கல்வி நடவடிக்கை தொடர்பாக சிந்தனைவட்டம் சிறப்புக் கவனம் செலுத்தி வருவதாக அறிகின்றோம். தரம் 5வகுப்பை நீங்கள் ஏன் தேர்ந்து எடுத்தீர்கள்?

பதில்: இலங்கையில் மாணவர்களை மையப்படுத்தி அரசாங்கத்தால் 03 பரீட்சைகள் நடத்தப்படுகின்றன. இதில் முதலாவது பரீட்சை தரம் 05 மாணவர்களை மையமாகக் கொண்ட புலமைப்பரிசில் பரீட்சையாகும். ஏனைய பரீட்சைகள் க.பொ.த சாதாரண தர பரீட்சை, க.பொ.த. உயர்தரப் பரீட்சை என்பனவாகும்.

தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சை இலங்கை மாணவனொருவன் எதிர்நோக்கும் முதல் அரசாங்கப் பரீட்சையாகும். அதே நேரம் இது ஒரு போட்டிப் பரீட்சையாகும். இந்தப் பரீட்சையில் சித்தியடையும் மாணவனுக்கு உயர்தரக் கல்வி வரை கற்பதற்கு அரசாங்கம் புலமைப்பரிசில் பணம் வழங்கும். (ஆண்டுதோறும் 5000 ரூபாய்) அத்துடன் இலங்கையில் முன்னணி பாடசாலைகளில் கற்பதற்கான வாய்ப்பும் அம்மாணவர்களுக்குக் கிடைக்கின்றது. இப்பரீட்சை தரம் 5ஐ சேர்ந்த சிறிய மாணவர்களுக்கான அரசாங்கத்தால் நடத்தப்படும் முதல் பரீட்சை என்ற வகையிலும் இப்பரீட்சை இன்னும் இரண்டு மாதங்களில் அதாவது எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்தில் நடைபெறவுள்ளமையினாலும் இப்பரீட்சையை நாங்கள் முதற் கட்டமாகத் தேர்ந்தெடுத்துள்ளோம்.

கேள்வி: நலன்புரி நிலையங்களில் தரம் 5 இல் கல்வி பயிலும் எத்தனை மாணவர்கள் அளவில் இருக்கின்றார்கள்?

பதில்: வவுனியா மாவட்டத்திலுள்ள நலன்புரி நிலையப் பாடசாலைகளில் உத்தியோக பூர்வ இணைப்பாளரும், உதவிக் கல்விப்பணிப்பாளருமான திரு.த. மேகநாதன் அவர்களின் 2009.06.01ஆம் திகதிய உத்தியோகபூர்வ அறிக்கையின் பிரகாரம் வவுனியா நலன்புரி நிலையங்களில் இயங்கும் 53 பாடசாலைகளிலும் தரம் 5 இல் கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை 4872 ஆகும்.. இந்த மாணவர்களின் பரீட்சையை எதிர்நோக்கி நாம் செயல்பட்டு வருகின்றோம்.

கேள்வி: இந்த மாணவர்களின் கல்வி நிலை எவ்வாறு உள்ளது எனக் குறிப்பிட முடியுமா?

பதில்: இம்மாணவர்களின் கல்வித் தரம் மிகவும் பாதிப்படைந்த நிலையிலேயே காணப்படுகின்றது. வட பகுதியில் யுத்த நிலை காரணமாக கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் கடந்த ஆறு மாதங்களாக எந்தவொரு பாடசாலைகளும் இயங்கவில்லை. அதேநேரம், வவுனியா நலன்புரி நிலையங்களிலுள்ள மடு கல்வி வலயம், துணுக்காய் கல்வி வலயம் போன்ற கல்வி வலய மாணவர்கள் ஓராண்டு காலங்களுக்கு மேல் பாடசாலை வாசனையை அறியாமலே உள்ளனர். இந்த மாணவர்கள் தான் எதிர்வரும் ஆகஸ்டில் பரீட்சையை எதிர்நோக்கப் போகின்றார்கள். இலங்கை அரசாங்கத்தால் நடத்தப்படும் பரீட்சை நாடளாவிய ரீதியில் ஒரு பொதுப் பரீட்சை என்பதனால் பரீட்சை திகதிகள் ஒத்திவைக்கப் படமாட்டாது. எனவே இம்மாணவர்கள் பாதிக்கப்பட்ட நிலையிலும் கூட ஆகஸ்ட் பரீட்சையை எழுதியேயாக வேண்டிய நிலையில் உள்ளனர்.

கேள்வி: அப்படியாயின் ஆறு மாதங்களுக்கு மேல் பாடசாலை கல்வியையே பெறாத மாணவர்களுக்கு எந்த வகையில் வழிகாட்டலை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளீர்கள்?

பதில்: பாடத்திட்டத்தின் பிரகாரம் தரம் 4, 5 வகுப்புகளில் இம்மாணவர்கள் பல பாட அலகுகளை முடித்திருக்க வேண்டும். ஆனால் அந்த வாய்ப்பு இம்மாணவர்களுக்கு கிடைக்கவில்லை. இதனால் மாணவர்களை துரிதமாக வழிநடத்தக்கூடிய வகையில் நாங்கள் 30 மாதிரி வினாத்தாள்களையும், 04 வழிகாட்டிப் புத்தகங்களையும் வழங்கி மாணவர்களின் துரித வழிகாட்டலுக்கான ஏற்பாட்டினை செய்கின்றோம். எமது 30 மாதிரி வினாத்தாள்களையும், 04 வழிகாட்டிப் புத்தகங்களையும் மாணவர்களுக்கு வழங்கி நலன்புரி நிலையங்களில் உள்ள ஆசிரியர்கள் வழிநடத்துகின்றனர்.

கேள்வி: இத்திட்டத்தைச் சிந்தனை வட்டம் மாத்திரம் மேற்கொள்கிறதா? அல்லது வேறும் அமைப்புக்களோடு சேர்ந்து மேற்கொள்ளப்படுகிறதா?

பதில்: இத்திட்டத்தை சிந்தனை வட்டம் மாத்திரம் மேற்கொள்ளவில்லை. இந்த செயற்பாட்டுக்கு லண்டனைத் தளமாகக் கொண்டு இயங்கும் ‘தேசம்நெற் இணையத்தளத்’தினர் மற்றும் ‘மத்திய இலங்கை முஸ்லிம் பட்டதாரிகள் ஒன்றியம்’ உட்பட லண்டனில் வேறு சில அமைப்புகள் வழங்கும் உதவியினாலேயே இத்திட்டத்தை முன்னெடுத்து செல்லக் கூடியதாகவுள்ளது.

ஒரு மாணவனுக்கு 570ரூபாய் வீதம் பெறுமதிமிக்க 30 மாதிரிவினாத்தாள்களையும், 04 வழிகாட்டிப் புத்தகங்களையும் 4872 மாணவர்களுக்கும் தனித்தனியாக வழங்கும் வேலைத்திட்டத்திற்கான மொத்த செலவினம் இலங்கை நாணயப்படி 2,777,040 ரூபாவாகும். இதில் மூன்றிலொரு பங்கான ரூபாய் 925,680 சிந்தனைவட்டம் நேரடியாகப் பொறுப்பேற்று நடத்துகின்றது. 7 இலட்சம் ரூபாய்களை வழங்க மத்திய இலங்கை முஸ்லிம் பட்டதாரிகள் சங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது. மீதித் தொகையினை லண்டனைத் தளமாகக் கொண்டு இயங்கும் ‘தேசம்நெற் இணையத்தளத்’தினரும், வேறும் சில அமைப்புகளும் வழங்க முன்வந்துள்ளன.

இலங்கையிலிருந்து பாடத்திட்டத்திற்கு அமைய இவ்வினாத்தாள்களை தயாரித்தல், அச்சிடல், முகாம்களுக்கு நேரடியாக வினியோகித்தல் போன்ற கருமங்களை சிந்தனை வட்டமே நேரடியாக பொறுப்பேற்று நடத்துகின்றனர். எமது இத்திட்டத்திற்கு வவுனியா மாவட்டத்திலுள்ள நலன்புரி நிலையப் பாடசாலைகளின் உத்தியோகபூர்வ இணைப்பாளரும், உதவிக் கல்விப்பணிப்பாளருமான திரு. த. மேகநாதன் அவர்கள் பூரண ஒத்துழைப்பினை நல்கி வருகின்றார்.

கேள்வி: இன்னும் எவ்வளவு காலத்திற்கு இந்த மாணவர்களின் இந்நிலை தொடரும் என எதிர்பார்க்கின்றீர்கள்?

பதில்: 180 நாட்களுள் இடம்பெயர்ந்த மக்களின் அரைவாசிக்கும் மேற்பட்டோர் மீள்குடியேற்றம் செய்ய வேண்டும் என்று அரசாங்கம் கூறி வருகின்றது. அவ்வாறு நடக்குமாயின் வரவேற்கக்கூடிய விடயம். ஆனால், கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் வட இலங்கை பிரதேசத்தில் அடிப்படை கட்டமைப்புகள் முழுமையாக சீர்குழைந்துள்ள நிலையில் இது எவ்வளவு தூரத்திற்கு சாத்தியமாகும் என்பது கேள்விக் குறியாகவேயுள்ளது. எவ்வாறாயினும் ஆறு மாதங்களுக்கு மாத்திரமல்ல. இன்னும் நீண்ட காலத்துக்கு வன்னிப் பிரதேசத்தில் நலன்புரிநிலையங்கள் இயங்குமெனக் கொண்டால் இங்குள்ள மாணவர்களின் எதிர்கால நலன்கருதி பல விசேட திட்டங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.

கேள்வி: அவ்வாறு யாதாயினும் திட்டம் வைத்துள்ளீர்களா?

பதில்: மாணவர்கள் நலன்புரி நிலையங்களில் வாழும் வரை எம்மால் ஆன உதவிகளை செய்யவே திட்டமிட்டுள்ளோம். எமது முதல் கட்டப்பணியின் பலாபலன்களை அவதானித்து இரண்டாம் கட்டமாக டிசம்பர் மாதத்தில் நடைபெறும் க.பொ.த. சாதாரண தர பரீட்சையை மையமாகக் கொண்டு சில வேலைத்திட்டங்களை நாம் தயாரித்து வருகின்றோம். எமது இந்த செயல்திட்டத்துக்கு பேராதனைப் பல்கலைக்கழக சில புத்திஜீவிகளும் பூரண ஒத்துழைப்பினை நல்கி வருகின்றனர்.

கேள்வி: இலங்கைத் தமிழ் அரசியல்வாதிகளும், புலம்பெயர் ஈழத்துத் தமிழர்களும் இலங்கையின் பிரச்சினைகள் குறித்து ஒருமித்த நிலைப்பாட்டில் உள்ளனரா?

பதில்: இவ்வளவு பாடங்களைக் கற்றும் இலங்கைத் தமிழ் அரசியல் தலைமைத்துவங்கள் ஒன்றிணையக்கூடிய ஒரு போக்கினை காட்டி நிற்கவில்லை. இன்று சுமார் 1 மில்லியனுக்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழ் மக்கள் புலம்பெயர்ந்து ஐரோப்பிய, அமெரிக்க, ஆசிய நாடுகளில் வாழ்ந்தாலும்கூட புலம்பெயர்ந்த தமிழர்களால் கொள்கையளவிலான ஒருமைப்பாட்டினைக் காணமுடியவில்லை. இது விமர்சனங்களுக்கும், விளம்பரங்களுக்கும் அப்பாற்பட்ட ஒரு காலம்.

அண்மையில் இலங்கையின் பேராதனைப் பல்கலைக்கழக கல்வியாளர்கள் “வெளியிட்டிருந்த ஓர் அறிக்கையில் இன்றைய சூழ்நிலை வடபுலத்து தமிழர்களின் கல்வியை நேரடியாக 15 ஆண்டுகள் பின்நோக்கித் தள்ளிவிட்டது” என்று கூறப்பட்ட கருத்து சிந்திக்கத்தக்கதே. அதாவது, இதன் உள்ளார்த்தமான கருப்பொருள் இன்னுமொரு புதியதொரு தலைமுறையினரால் தான் கல்வியினை கட்டியெழுப்ப முடியும் என்பதை வெளிப்படுத்துவதாகவே அமைகின்றது. எனவே, தற்போது உள்ள இளம் சந்ததியினரை குறிப்பாக மானசீக தாக்கங்களுக்கு உட்பட்டுள்ள இவர்களுக்கு நாம் செய்ய முடியும். ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டிய கட்டத்தில் உள்ளனர்.

கேள்வி தமிழ் நாட்டில் வாழும் எமது உறவுகளின் செயற்பாடு தொடர்பாக என்ன குறிப்பிட விரும்புகின்றீர்கள்?

பதில்: தமிழ் நாட்டில் வாழும் உறவுகள் இலங்கை தமிழ் மக்களைப் பற்றியும், அகதிகள் பற்றியும் விசேட கரிசனைக் காட்டி வருவது ஆரோக்கியமான விடயமே. அதேநேரம், சில அரசியல்வாதிகள் இதனைக் குறுகிய நோக்கில் அவதானித்து அரசியல் இலாபம் தேட விளைவது வேதனைத் தருகின்றது.

தமிழ் நாட்டு அரசும் மத்திய அரசும் இலங்கை தமிழ் அகதிகளுக்கான வேண்டி பல்வேறுபட்ட உதவிகளை செய்து வருகின்றன. அதேபோல தமிழ் நாட்டில் உள்ள தனிப்பட்ட பரோபகாரிகளும் இம்மக்களைப் பற்றி சிந்தித்து யாதாவது தம்மால் ஆன உதவிகள் புரிவார்களாயின் இச்சந்தர்ப்பத்தில் பேருதவியாக இருக்கும். அப்படிப்பட்ட பரோபரிகாரிகள் உதவிகள் செய்யுமிடத்து இடம்பெயர்ந்தவர்களின் அத்தியாவசியத் தேவையென்பதைவிட சமூகத்தின் எதிர்கால நோக்கம் கொண்டு செயல்படுமிடத்து அதன் பயன் மிகவும் உச்சமாக இருக்கும் என்பது எனது தாழ்மையான அபிப்பிராயம்.

ஏனெனில், தமிழ் நாட்டில் வாழக்கூடிய பல பரோபகாரிகளுக்கு இலங்கையுடனான நேரடியான தொடர்புகள், உறவுகள் காணப்படுகின்றன. எனவே, அவர்கள் மூலமாக உண்மை நிலைகளை அறிந்து உதவிகளை வழங்க முற்படுவார்களாயின் வரவேற்கக்கூடியதாக இருக்கும். இவ்விடத்தில் நான் ஒன்றைக் குறிப்பிட விரும்புகின்றேன். அரச மட்ட உதவிகள் ஒருபுறமிருக்க தமிழ் நாட்டில் வாழக்கூடிய பரோபகாரிகள் இலங்கை தமிழ் அகதிகள் பற்றி சிந்திக்க வேண்டியது காலத்தின் தேவையாகும்.

உரையாடியவர்: பொன்மொழிவேந்தன்

http://sangamamlive.in/index.php?/content/view/3163/

http://muelangovan.blogspot.com/2009/06/blog-post_19.html

ஷங்ஹாய் ஓத்துழைப்புக்கான அமைப்பில் இலங்கை அங்கத்துவம்!

18rohitha_bogollagama_.jpgஷங்ஹாய் ஒத்துழைப்புக்கான அமைப்பில் இலங்கை அங்கத்துவம் பெறுவதற்கு அமைச்சரவை அங்கீகரித்துள்ளது. இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம சமர்பித்திருந்தார்.

சீனா, ரஷ்யா, கஸகஸ்தான்,  கரிகிஸ்தான், தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பகிஸ்தான் ஆகிய நாடுகள் இந்த அமைப்பில் தற்போது அங்கம் வகிக்கின்றன.

அகதிமுகாம்களில் தனது 3 பிரஜைகளை தேடிக்கொண்டிருக்கின்றது அவுஸ்திரேலியா

australia.jpgவவுனியா அகதிமுகாம்களிலுள்ள 3 இலட்சம் பேரில் 3 அவுஸ்திரேலியர்கள் இருப்பதாக தெரிவிக்கப்படும் அதேவேளை, அவர்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் அவுஸ்திரேலிய அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

இரு பெண்களும், 62 வயதுடைய முதியவரும் இலங்கையில் முகாம்களில் இருப்பதாக நம்பப்படுவதாகவும் அவர்கள் பாதுகாப்பாக இல்லை என்பது தொடர்பாக எதுவும் தெரியவில்லை என்றும் அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் ஸ்ரீபன் ஸ்மித் நிருபர்களிடம் தெரிவித்ததாக “த ஏஜ் கொம்’ இணையத்தளம் தெரிவித்தது.

இந்த மூன்று அவுஸ்திரேலியப் பிரஜைகளும் அகதிமுகாம்களில் ஒன்றில் இருப்பதாக நாம் நம்புகிறோம். இலங்கையின் வடபகுதியில் அதிகாரிகள் தற்போது உள்ளனர். அவுஸ்திரேலியப் பிரஜைகளை கண்டுபிடிக்கும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பாக இலங்கை வெளிவிவகார அமைச்சர்களின் கவனத்திற்கு ஸ்மித் கொண்டுசென்றுள்ளார். ?எமக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை. அவர்கள் பாதுகாப்புடன் இல்லை என்று நாம் நம்புவதற்கான காரணமாக இது உள்ளது. அவர்களை இப்போது எம்மால் கண்டுபிடிக்க முடியவில்லை. யு.என்.எச்.சி.ஆர். மூலமாகவோ இலங்கை அதிகாரிகள் ஊடாகவோ எம்மால் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. அவர்களை கண்டுபிடிக்க தீவிரமாக முயன்று வருகிறோம் என்றும் ஸ்மித் கூறியுள்ளார்.

அதேசமயம் இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருக்கும் முகாம்களுக்கும் யு.என்.எச்.சி.ஆர், ஐ.சி.ஆர்.சி ஆகியவற்றை முழு அளவில் அனுமதிக்க வேண்டும் என்று இலங்கையிடம் ஸ்மித் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளார்.

கொரிய அரசாங்கத்துடன் உடன்படிக்கை!

ranjith_siyambalapitiya.jpgநாட்டின் அபிவிருத்திப் பணிகளுக்கு பாரிய அளவில் உதவி வழங்கி வரும் நாடுகளின் ஒன்றான தென் கொரியாவின் சர்வதேச ஒத்துழைப்புக்கான நிறுவனப் பிரதிநிதிகளுக்கு தங்கியிருந்து அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்வதற்காக அவர்களுக்கு வசதிகள், வரப்பிரசாதங்கள் மற்றும் வரிச்சலுகை வழங்குவதற்கான உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திட அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தையும் பதில் நிதியமைச்சர் ரஞ்ஜித் சியம்பலாபிட்டியவே சமர்பித்திருந்தார்.

தாய்லாந்தில் கைதான மூவருக்கு புலிகளுடன் ஆயுத விற்பனையில் தொடர்பு

விடுதலைப் புலிகளுடன் ஆயுத விற்பனையில் சம்பந்தப்பட்டவர்கள் என்ற குற்றச்சாட்டில் மூவரை தாய்லாந்துப் பொலிஸார் கைது செய்துள்ளனர். அத்துடன், அமெரிக்காவில் 9/11 பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்துடனும் இவர்களுக்கு தொடர்பு இருப்பதாக தெரிவிப்பட்டுள்ளது. முகமட் அலி ஹுசெய்ன் , பாபுஜி அல்லது முகமட் மத்பாருகம், சுப்ரி அவே ஆகிய மூவரும் தாய்லாந்தின் ஆயுதப் படைகளின் பாதுகாப்பு நிலையம், தேசிய புலனாய்வு முகவரமைப்பு, தாய்லாந்து அரச பொலிஸார் விசேட விசாரணை திணைக்களம் ஆகியவை இணைந்து மேற்கொண்ட நடவடிக்கைகளின் போது கைது செய்யப்பட்டதாக பாங்கொக் போஸ்ட் பத்திரிகை தெரிவித்துள்ளது.

தாய்லாந்தின் தென்பகுதியிலுள்ள செல்வாக்கு மிக்கவர்களுடன் கைது செய்யப்பட்ட இந்த மூன்று ரோசிங்சியா நபர்களுக்கும் தொடர்பு இருந்ததற்கான ஆதாரம் இருப்பதாக விசேட விசாரணை திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பொல் கொல் தாவே சொட் சொப் கூறியுள்ளார். போலி பயண ஆவணங்கள் மற்றும் ஆயுத விற்பனை என்பவற்றில் சம்பந்தப்பட்ட குழுவின் தலைவரென முகமட் அலி ஹுசெய்ன் அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் விடுதலைப்புலிகளுடன் இவர் ஆயுத விற்பனையில் ஈடுபட்டதாகவும் அத்துடன் அமெரிக்காவில் 9/11 தாக்குதலை நடத்துவதற்கு அல்ஹைடா குழு உறுப்பினர்களுக்கு இவர் போலி ஆவணங்களை வழங்கியதாகவும் பொல் கொல் தாவே கூறியுள்ளார்.

மலேசியாவுக்குச் சென்ற போது முகமட் அலி ஹுசெய்ன் கைது செய்யப்பட்டு 2 வருடங்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். விடுதலையான பின் தாய்லாந்துக்குச் சென்ற அவர் யுத்த ஆயுத விற்பனையாளர்கள், போதைப் பொருள் வர்த்தகர்கள், தென்பகுதியிலுள்ள (தாய்லாந்தின்) கிளர்ச்சியாளர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டுள்ளார் என்றும் பொல் கொல் தாவே கூறியுள்ளார்.

யுத்த கால மனித உரிமை மீறல் குறித்து சர்வதேச ரீதியில் விசாரணை நடத்தப்பட வேண்டும் : மனித உரிமை கண்காணிப்பகம்

HRW Logoஅரசாங் கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில், நாட்டில் பாரிய மனித உரிமை மீறல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இவை குறித்து சர்வதேச ரீதியான விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென மனித உரிமை கண்காணிப்பகம் கோரிக்கை விடுத்துள்ளது.

மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்தும் நோக்கில் ஜனாதிபதி ஆணைக்குழு மேற்கொண்ட விசாரணைகள் இடைநடுவில் நிறுத்தப்பட்டுள்ளமை பாரதூரமான ஒரு நிலைமையாகும் என மனித உரிமை கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது.

இரண்டு தரப்பினராலும் மேற்கொள்ளப்பட்ட யுத்தக்குற்றச் செயல்கள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதென மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஆசிய பிராந்திய பிரதிப் பணிப்பாளர் எலாயன் பியர்சன் (Elaine Pearson) தெரிவித்துள்ளார்.

2006ஆம் ஆண்டு முதல் இடம்பெற்ற பல்வேறு பாரிய மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பில் சர்வதேச மற்றும் உள்நாட்டு மனித உரிமை ஆர்வலர்கள் பல வழிகளில் அழுத்தம் கொடுத்திருந்தனர். இதன் காரணமாக முன்னாள் நீதவான் நிஷாங்க உதாலகம தலைமையில் விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டது. எனினும், கடந்த ஞாயிற்றுக்கிழமையுடன் மேற்படி விசாரணை குறித்த ஆணைக்குழுவின் பணிகள் இடைநடுவில் கைவிடப்பட்டுள்ளன.

இறுதிக்கட்ட யுத்தம் நடைபெற்ற போது இழைக்கப்பட்ட யுத்தக் குற்றச் செயல்கள் உள்ளிட்ட சகல மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பாகவும் சர்வதேச ரீதியில் பக்கச்சார்பற்ற விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென மனித உரிமை கண்காணிப்பகம் கோரிக்கை விடுத்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் இலங்கை அரச படையினரால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல் சம்பவங்கள் குறித்து சுயாதீனமான முறையிலான விசாரணைகள் உடனடியாக ஆரம்பிக்கப்பட வேண்டும் என மனித உரிமை கண்காணிப்பகம் மேலும் தெரிவித்துள்ளது

தேசிய தொடர்புசாதன வலையமைப்பு

mahinda-rajapaksha.jpgதேசிய தொடர்புசாதன வலையமைப்பை அமுல்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை சமர்பித்திருந்தார்.

தொலைத் தொடர்புகள் கட்டளைகள் ஆணைக்குழுவுக்கு இதனை அமுல்படுத்துவதற்கான அதிகாரம் வழங்கப்படுகிறது. அத்துடன் தகவல் மற்றும் தொடர்புசாதன தொழில்நுட்ப நிறுவனத்துடன் செய்துகொள்ளப்பட்டுள்ள புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு ஏற்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

தேர்தல் முடிவுகளை எதிர்த்து ஈரானில் தொடர்ந்தும் ஆர்ப்பாட்டம் – ஈரான் விடயத்தில் தலையிடவில்லையென அமெரிக்கா அறிவிப்பு

president-ahamadinejad.jpgஈரான் அரசாங்கத்தின் உத்தரவை ஏற்க மறுத்த எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் நேற்று வியாழக்கிழமை பாரிய ஆர்ப்பாட்டமொன்றுக்குத் தயாராகினர். தேர்தலில் தோல்வியடைந்த ஹுஸைன் மூஸாவி ஆர்ப்பாட்டத்துக்கான அழைப்பை விடுத்தார்.

ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளைக் கண்டித்து அமைதியான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் மீது தாக்குதல் நடாத்தப்பட்டது. இதில் 07 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர். ஆர்ப்பாட்டத்தில் பலியானோருக்கு துக்கம் தெரிவிக்கும் வகையில் நேற்று வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

அனைவரையும் கறுப்பு நிற ஆடைகளை அணியுமாறு ஹுஸைன் மூஸாவி கேட்டுள்ளார். அரச தொலைக் காட்சியொன்று ஆர்ப்பாட்டத்துக்குத் தயாராகிக் கொண்டிருந்த சனக் கூட்டத்தைக் காட்டியது. ஆனால் வெளிநாட்டு ஊடகங்கள் ஆர்ப்பாட்டக் காரர்களின் செய்திகளைத் திரட்டவோ அல்லது அவ்விடங்களுக்குச் செல்லவோ அனுமதிக்கப்படவில்லை.

ஈரானில் நடந்த ஜனாதிபதித் தேர்தல் முறைகேடாக நடந்தது. வாக்குகள் மீள எண்ணப்பட வேண்டுமென மூஸாவியின் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்கின்றனர். பல நாட்களாக இந்த அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் இடம் பெறுகின்றன. அரசாங்கத்தின் உத்தரவை மீறியும் வன்முறைகளும், ஆர்ப்பாட்டங்களும் இடம் பெறுகின்றன.

ஜனாதிபதி அஹ்மெதி நெஜாதுக்கு ஆதரவாகவும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகின்றன. இந்நிலையில் வாக்குகளை மீள்எண்ணும்படி ஆன்மீகத் தலைவர் ஆயதுல்லாஹ் அலி கொமெய்னி உத்தரவிட்டுள்ளார்.

ஈரானில் இரண்டு தடவைக்கு மேல் ஒருவர் ஜன திபதியாக முடியாது. அஹ்மெதி நெஜாத், இரண்டாவது முறையாகவும் ஜனாதிபதியாகியுள்ளார். இவரின் வெற்றியை ஹுஸைன் மூஸாவியால் பொறுத்துக் கொள்ளமுடியவில்லை. அமெரிக்கா, மேற்குலக நாடுகளின் ஆதரவுடன் மூஸாவி ஈரானின் அமைதியைக் குழப்புவதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அமெரிக்கா இதை நிராகரித்துள்ளது. ஈரானின் உள் விவகாரங்களில் தலையிடும் தேவையோ, நோக்கமோ எமக்கில்லையென அமெரிக்கா அறிவித்துள்ளது. ஈரானில் நடப்பதை அவதானிக்கின்றோம். ஆனால் அதில் தலையிடவில்லையென ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவித்தார். வாக்குகள் மீள எண்ணப்பட்டாலும் அஹ்மெதி நெஜாதே வெல்வார் என நம்பப்படுகின்றது.