15

15

புலிகள் மீது ஐ நா குற்றச்சாட்டு

sirjohnholmes.jpgமனித நேயப் போர் நிறுத்தம் அல்லது இலங்கைப் பாதுகாப்புப் படையினர் நடத்தும் தாக்குதல் நடவடிக்கைகளில் ஒரு தற்காலிக நிறுத்தம் என்பது நடைமுறையில் செயல்பட்டுக் கொண்டிருப்பதாக ஐ நா கூறியுள்ளது. ஐக்கிய நாடுகளின் மனித நேயப் பணிகளுக்கான துணைப் பொதுச் செயலர் ஜான் ஹோம்ஸ் பி பி சியின் ஆங்கில செய்திச் சேவைக்கு அளித்த செவ்வியின் போது இதைக் குறிப்பிட்டார்.

தற்போதைய இராணுவ சூழலை வைத்துப் பார்க்கும் போது, பொதுமக்கள்தான் விடுதலைப் புலிகளுக்கு இருக்கும் கடைசி கேடயம் என்று தோன்றுவதாக கூறிய அவர், தான் ஒரு இராணுவ ஆய்வாளர் இல்லை என்ற போதிலும், அங்குள்ள சூழல் புலிகளுக்கு நம்பிக்கை அளிப்பதாகத் தோன்றவில்லை என்றார் அவர்.

இதற்கு ஒரே தீர்வு புலிகள் தமது ஆயுதங்களைக் கீழே போடுவதுதான் என்று ஹொம்ஸ் கூறினார் மேலும் போர் நிறுத்தம் அமலுக்கு வருவதற்கு சற்று முன்னதாகவும் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வர முயன்ற ஆறு பொதுமக்களை விடுதலைப் புலிகள் சுட்டுக் கொன்றுள்ளனதாகவும் அவர் கூறினார்.

தேர்தல் நடத்தை விதி மீறிய லாலு திடீர் கைது – ஜார்கண்டில் பரபரப்பு

laluprasat.jpgமுன் அனுமதி பெறாமல் பள்ளி மைதானத்தில் ஹெலிகாப்டர் தரை இறங்கிய விவகாரத்தில் ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத்தை ஜார்கண்ட் போலீசார் நேற்று திடீரென கைது செய்தனர். பிரசார பொதுக்கூட்ட மேடையில் அவரை போலீசார் கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஜார்கண்ட் மாநிலம் கார்வா பகுதியில் ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் கடந்த 7ம் தேதி பிரசாரம் செய்தார். அப்போது, லாலு வந்த ஹெலிகாப்டர், அதற்காக அமைக்கப்பட்டிருந்த தளத்தில் இறங்கவில்லை. பொதுக் கூட்டம் நடந்த இடத்துக்கு அருகில் இருந்த பள்ளி மைதானத்தில் ஹெலிகாப்டர் இறங்கியது. இது தேர்தல் நடத்தை விதி மீறல் என்று கூறி போலீசார் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த நிலையில் ஜார்கண்டில் பிரசாரம் செய்ய லாலு நேற்று மீண்டும் வந்தார். பலாமு தொகுதியில் போட்டியிடும் ராஷ்டிரிய ஜனதா தள வேட்பாளர் குரன் ராமை ஆதரித்து பொதுக்கூட்டம் ஒன்றில் அவர் பேசினார். அப்போது, பொதுக்கூட்ட மேடையில் ஏறிய போலீசார், லாலுவை கைது செய்தனர். இதனால் பிரசார கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், உடனடியாக அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

களுத்துறை சிறையில் தப்பி செல்ல முயன்ற கைதிகள் மீது துப்பாக்கி பிரயோகம்: 6 பேர் பலி

களுத்துறை சிறைச்சாலையில் இருந்து தப்பிச் சென்ற கைதிகள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் இன்று அதிகாலை இடம் பெற்றுள்ளது. இந்த துப்பாக்கி பிரயோகத்தில் தப்பி செல்ல முயன்ற 11 கைதிகளில் 6 பேர் பலியாகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த சம்பவத்தில் காயமடைந்த நான்கு பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ஒருவர் சரணடைந்துள்ளதாகவும் களுத்துறை காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

விடுதலைப்புலிகளை முற்றிலும் அழிப்போம்: சரத் பொன்சேகா

army-wanni.jpgவிடுதலைப் புலிகளை இலங்கையில் இருந்து முற்றிலுமாக அழித்து ஒழிப்போம்’ என்று இலங்கை ராணுவ தளபதி சரத் பொன்சேகா கூறியுள்ளார்.  சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு தினங்களை முன்னிட்டு இலங்கை ராணுவ தலைமை தளபதி சரத் பொன்சேகா அறிக்கை வெளியிட்டார். அந்த அறிக்கையில் பொன்சேகா கூறியிருப்பதாவது:

முன்பு விடுதலைப்புலிகளிடம் இருந்த 13 ஆயிரம் சதுர கி.மீ. பரப்பளவிலான பகுதிகள், தற்போது 23 சதுர கி.மீ. அளவுக்கு சுருங்கி விட்டது. விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள், விமானங்கள், படகுகள் போன்றவற்றை அழித்து விட்டோம். இலங்கையில் இருந்து தீவிரவாதம் மற்றும் தனி ஈழம் கோரும் விடுதலைப்புலிகளின் கனவு ஆகியவற்றை முற்றிலுமாக ஒழிப்பதே எங்களின் லட்சியம்.

விடுதலைப்புலிகளின் பிடியில் இருந்து தப்பித்து வரும் அப்பாவி மக்களுக்கு உபசரிப்பு, நட்பு மற்றும் அன்பை ராணுவம் அளித்து வருகிறது. பாதுகாப்பு வளைய பகுதிக்குள் வரும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதே இதற்கு உதாரணம் ஆகும். விடுதலைப்புலிகள் பிடியில் இருக்கும் மற்ற அப்பாவி மக்களும் விரைவில் விடுவிக்கப்படுவார்கள். இலங்கையில் விரைவில் அமைதி பூத்து குலுங்கும் என்று கூறியுள்ளார்.

சோமாலியக் கடலில் தொடரும் கப்பல் கடத்தல்கள்

somaliya-robbery.jpgசோமா லியாவை அண்டிய ஏடன் வளைகுடா பகுதியில், சர்வதேச கடல் சார் படையினர் பாதுகாப்பை அதிகப்படுத்தி வருகின்ற அதேவேளையில், மேலும் இரண்டு சரக்குக் கப்பல்களைக் கைப்பற்றியுள்ள சோமாலிய கடற்கொள்ளையர்கள், மூன்றாவது ஒரு கப்பலின் மீது சுட்டும் உள்ளார்கள்.

இரண்டு நாட்களில் கடத்தப்பட்ட நான்காவது கப்பலாக டோகோ கொடியுடன் பயணித்த ஒரு 5000 தொன் கப்பல் அமைகின்றது. 24 மாலுமிகளுடன் கிரேக்க கப்பல் ஒன்று கடத்தப்பட்டதை அடுத்து இந்த கப்பலும் கடத்தப்பட்டுள்ளது.

மேலும் இருபது மாலுமிகளுடன் இரு எகிப்திய படகுகளும் கடத்தப்பட்டுள்ளன. லைபீரிய கொடியுடன் பயணித்த ஒரு கப்பலின் மீது சிறிய படகுகளில் வந்த கடற்கொள்ளையர்கள் சுட்டிருக்கிறார்கள்.

மேலும் 514 பேர் கிறீன் ஓசன் கப்பல் மூலமாக புல்மோட்டை பகுதிக்கு

taking-to-green-ocean.jpgஇலங் கையின் வடக்கே புதுமாத்தளன் மருத்துவமனையில் இருந்து நேற்று மேலும் ஒரு தொகுதி நோயாளர்களும், அவர்களது உறவினர்களுமாக 514 பேர் கிறீன் ஓசன் கப்பல் மூலமாக திருகோணமலை மாவட்டத்தில் உள்ள புல்மோட்டை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ள 48 மணிநேர மோதல் தவிர்ப்பு நடவடிக்கை நடைமுறையில் இருக்கும் வேளையில் திங்கள் கிழமையன்றும் இவ்வாறான ஒரு தொகுதி நோயாளர்கள் புல்மோட்டை பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

லாலு மீது நடவடிக்கை இல்லை.

laluprasat.jpgவருண் காந்தியை ரோடு ரோலரை ஏற்றி கொன்றிருப்பேன் என்று பேசிய ரயில்வே அமைச்சர் லாலுவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

இதற்கு “சட்டம் என்கிற ரோலரை’ என்ற பயன்படுத்து சட்டப்படி நசுக்கியிருப்பேன் என்பதைத் தான் அப்படிக் கூறினேன் என்று லாலு விளக்கமளித்தார். இந்நிலையில், துணை தேர்தல் ஆணையர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில், வருண் காந்தி ஒரு சமூகத்துக்கு எதிராகப் பேசியதால் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. லாலு தனிப்பட்ட நபருக்கு எதிராகப் பேசியதால் கடும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மூத்த தலைவர் என்ற முறையில் லாலு அத்தகைய வார்த்தைகளைப் பயன்படுத்தியிருக்கக் கூடாது. எனவே, அவர்களது பேச்சுகள் குறித்து தேர்தல் ஆணையம் கடும் அதிருப்தியைத் தெரிவித்துக் கொள்கிறது என்றார்.

இரண்டு நாள் அமைதிக்குப் பின்னர் மோதல்கள் மோசமாக வெடிக்கலாம் ?

pokkanai.jpgஅரசாங் கத்தின் மோதல் தவிர்ப்பு நடைமுறையில் இருக்கின்ற போதிலும், திங்கள் கிழமை இரவு பத்து மணி முதல் அதிகாலை வரையில் பாதுகாப்பு வலயத்தில் உள்ள வலைஞர்மடம் பகுதியின் எல்லைப்புறத்தில் இரு தரப்புக்களுக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சமர் தொடர்ச்சியாக இடம்பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

போர் நிறுதத்ம் இருந்த காலத்தில் 93 பொதுமக்கள் துப்பாக்கிச் சூட்டுக்காயங்களுடன் புதுமாத்தளன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவி்த்திருக்கின்றன. 6 பொதுமக்கள் உயிரிழந்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இரண்டு தினங்களிலும் பொதுவாக ஷெல் தாக்குதல்கள் இடம்பெறவில்லை என தெரிவிக்கப்படுகின்ற போதிலும், துப்பாக்கிச் சண்டைகள் நடைபெறுகின்ற பகுதிகளில் ஒன்றிரண்டு மோட்டார் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று நள்ளிரவுடன் அரசாங்கத்தின் மோதல் தவிர்ப்பு முடிவுக்கு வருவதையடுத்து, அடுத்து என்ன நடக்கப்போகின்றதோ என்ற ஓர் அச்ச உணர்வு பாதுகாப்பு வலயப் பகுதிக்குள் இருக்கும் மக்கள் மத்தியில் மேலோங்கியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இரண்டு நாள் அமைதிக்குப் பின்னர் மோதல்கள் மோசமாக வெடிக்கலாம் என்று அந்த மக்கள் மத்தி்யில் எதிர்பார்ப்பு நிலவுவதாகவும் கூறப்படுகின்றது.

தற்காலிக போர்நிறுத்தத்தின் முதல் நாளன்று இராணுவம் சிவிலியன்கள் மீது தொடர்ச்சியாக ஷெல் தாக்குதல்கள் நடத்தியதாக விடுதலைப்புலிகள் சுமத்தியுள்ள குற்றச்சாட்டை மறுத்துள்ள இராணுவம், அரச படைகளின் மீது கடுமையான இய்திரத்துப்பாக்கித் தாக்குதல்களை விடுதலைப்புலிகளே மேற்கொண்டதாகக் கூறியிருக்கின்றது.

வை.கோ விடயத்தில் சட்டம் அதனுடைய வேலையைச் செய்யும் – ராகுல் காந்தி

rahul.jpgஇலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டாரானல் இந்தியாவில் இரத்த ஆறு ஓடும் என தமிழ் நாட்டு அரசியல்வாதிகளில் ஒருவரான வை.கோபாலசாமி தெரிவித்திருந்தார். இன்று கொச்சியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாடொன்றில் பதிலளித்த இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரும் புலிகளால் படுகொலைசெய்யப்பட்ட இந்திய முன்னாள் பிரதமரின் புத்திரருமான ராகுல் காந்தி அவர்களிடம் வை:கோ வின் கருத்து தொடர்பாக கேட்ட போது, அவருடைய கருத்தை இந்தியச் சட்டம் கையாளும் என தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஆதரிக்கப்போவதில்லை எனவும் ஆனால் இலங்கையில் தமிழ் மக்கள் துன்புறுத்தப்படுவதை அனுமதிக்கப்போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

வெறிப் பேச்சு பேச மாட்டேன். ஜாமீ்ன் கோரும் வருண்

india-varun.jpgஇனிமேல் மத உணர்வுகளைத் தூண்டும் வகையில் பேச மாட்டேன் என்று உச்ச நீதிமன்றத்தில் பாஜக வேட்பாளர் வருண் காந்தி உறுதியளித்து மனு தாக்கல் செய்துள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம் பிலிபிட் தொகுதியில் போட்டியிடும் வருண் காந்தி, தனது பிரசாரத்தின்போது முஸ்லிம்களின் கையை வெட்டுவேன், தலையை வெட்டுவேன் என்றார்.

இதையடுத்து அவர் மீது தேர்தல் ஆணையம் வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டது. இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி பல நீதிமன்றங்களை அணுகினார் வருண். ஆனால், ஜாமீன் மறுக்கப்பட்டதையடுத்து ஊர்வலமாக வந்து சரணடைந்தார். அந்த ஊர்வலத்தின்போதும் பெரும் கலவரம் நடந்தது. இதையடுத்து அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்தார் உத்தரப் பிரதேச முதல்வர் மாயாவதி.

இதை எதி்ர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார் வருண். மேலும் தன்னை இடைக்கால ஜாமீனில் விடுவிக்க வேண்டும் என்றும் கோரியிருந்தார். இந்த மனு தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் தலைமையிலான பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது பிலிபிட் தொகுதியில் வருண் காந்தி வேட்பு மனு தாக்கல் செய்யவும், பிரசாரம் தொடங்கவும் வசதியாக இந்த மனுவை அவசர மனுவாகக் கருதி விசாரிக்க வேண்டும் என்று வருண் காந்தி தரப்பு கோரியது.

அடுத்த மதத்தினரை ஆத்திரமூட்டும் வகையில் பேச மாட்டேன் என்று வருண் காந்தி உறுதியளித்தால் அவரை ஜாமீனில் விடுவிக்க ஆட்சேபம் இல்லை என்று உத்தரப் பிரதேச அரசு வழக்கறிஞரும் தெரிவித்தார்.

இதையடுத்து தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், ஜாமீனில் விடுவித்தால் ஆத்திரமூட்டும் வகையிலோ அல்லது மத உணர்வுகளைத் தூண்டு வகையிலோ பேச மாட்டேன் என வருண் காந்தி உறுதிமொழிப் பத்திரம் வழங்க வேண்டும். அப்போதுதான் அவரை ஜாமீனில் விடுவிக்க முடியும் என்று நிபந்தனை விதித்தார். இந்த நிபந்தனையை ஏற்றுக் கொள்வதாக வருண் காந்தி சார்பில் உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கை வரும் 16ம் தேதிக்கு ஒத்தி வைத்த நீதிபதி, அன்றைய தினம் வருண் காந்தியின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு வழங்கப்படும் என்றார்.