15

15

ஏ9 வீதியை அடுத்த மாதம் மக்கள் பாவனைக்குத் திறக்க அரசாங்கம் முயற்சி

a9-road.jpgஅடுத்த மாதத்தில் ஏ9 வீதியை மக்கள் பாவனைக்குத் திறந்து விடுவதற்குத் திட்ட மிட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. ஏ9 வீதியைத் திறந்து விடும் பொருட்டு கிளிநொச்சியில் வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் கிளைக் காரியாலயம் ஒன்றை திறக்கவுள்ளதாக பெருந்தெருக்கள் அமைச்சு அறிவித்துள்ளது.

ஏ9 வீதியில் உள்ள நிலக்கண்ணி வெடிகள் யாவும் அகற்றப்பட்டு அது தொடர்பான பாதுகாப்பு அமைச்சின் அறிக்கை கிடைக்கப்பெற்றதும்,ஏனைய பணிகள் அனைத்தும் ஆரம்பமாகும் என்றும் தெரிவிக்கப்பட்டது. பாதுகாப்பு அமைச்சின் அறிக்கை அடுத்த மாதத்தின் இரண்டாம் வாரத்தில் கிடைக்கும் எனவும் பெருந்தெருக்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

ஏ9 வீதி ஓமந்தையில் இருந்து முகமாலை வரை கடந்த மாதம் திறக்கப்பட்டதுடன் முதல் கட்டமாக படையினருக்கான மற்றும் யாழ் குடாநாட்டுக்கான அத்தியாவசிய விநியோகங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது 

இலங்கைப் பிரச்சனையை முன் வைத்து தேர்தலை புறக்கணிக்க சரத் திட்டம்?

sarath-kumar.jpgஇலங்கைப் பிரச்சனையை முன் வைத்து மக்களவைத் தேர்தலை புறக்கணிக்க சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

இந்தக் கட்சியுடனும் கார்த்திக்கின் நாடாளும் மக்கள் கட்சியுடனும் கூட்டணி அமைக்க பாஜக முயன்றது. ஆனால், சரத்குமார் திடீரென மனித நேய மக்கள் கட்சியுடன் பேச்சுவார்த்தையை ஆரம்பித்து பாஜகவை கழற்றிவிட்டார். கார்த்திக் பாஜகவுடன் பேச்சுவார்த்தையை நடத்திக் கொண்டே சில தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துவிட்டார். இதனால் இந்த இருவரையும் விட்டு விட்டு தனித்துப் போட்டி என பாஜக அறிவித்துவிட்டது.

இந் நிலையில் சரத்குமார்-கார்த்திக் கூட்டணி அமைக்கலாம், இருவரும் இணைந்து மனித நேய மக்கள் கட்சியுடன் கூட்டணி அமைக்கலாம் என்று கூறப்பட்டது. ஆனால், இந்த இருவரும் இல்லாமலேயே இன்று புதிய தமிழகம், மனித நேய மக்கள் கட்சி, இந்திய தேசிய லீக் ஆகியவை இணைந்து புதிதாக ஒரு கூட்டணியை உருவாக்கிவிட்டன. இதில் சரத்குமாரையும் சேர்க்க இந்தக் கூட்டணியைச் சேர்ந்த கட்சிகள் முயன்று வருகின்றன.

இந் நிலையி்ல் சமத்துவ மக்கள் கட்சியின் தேர்தல் ஆலோசனை குழுக் கூட்டம் அதன் தலைவர் சரத்குமார் தலைமையில் நடந்தது. இதில் நாடாளுமன்றத் தேர்தல் நிலைபாடு குறித்து முடிவெடுக்க சரத்குமாருக்கு முழு அதிகாரமும் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

முன்னதாக கூட்டத்தில் பேசிய தலைவர்கள் பலரும் முதலில் கட்சிக்கு அனைத்து மாவட்டங்களிலும் நிர்வாகிகளை நியமிக்க வேண்டும், பின்னர் தான் தேர்தலை சந்திக்க முடியும் என்று கூறியதாகத் தெரிகிறது. மாவட்ட நிர்வாகிகளையே நியமிக்காமல் தேர்தலில் போட்டியிடுவது வேஸ்ட் என பலரும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

இந் நிலையில் இலங்கையில் நடக்கும் தமிழர் படுகொலையை கண்டித்து தேர்தலையே புறக்கணிக்கலாம் என்றும் கட்சியின் சில தலைவர்களும் யோசனை கூறியுள்ளனர். இதையடுத்து தேர்தலை புறக்கணிப்பதா அல்லது சில தொகுதிகளில் ம்டடும் போட்டியிடுவதா, கூட்டணி அமைப்பதா என்பதை சரத்குமார் இன்றோ நாளையோ அறிவிப்பார் என்று தெரிறது.

பூமி அதிர்ச்சியால் பொத்துவில் பகுதியில் சிறு சேதங்கள்!

நாட்டில் இன்று காலை ஏற்பட்ட மிதமான பூமியதிர்ச்சியால் பொத்துவில் பானம பகுதியில் சிறிது சேதம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் அகழ்வாராய்ச்சி மத்திய நிலையத்தின் சுனாமி மற்றும் பூமியதிர்ச்சி எச்சரிக்கை நிலையத்தின் விஞ்ஞானியான  எஸ்.ரீ. களுபண்டார தெரிவித்தார்.

இன்று காலை 8.50 அளவில் இந்தப் பூமியதிர்ச்சி ஏற்பட்டதாகவும் இதன் அளவு சுமார் நான்கு ரிச்டர் எனவும் கூறினார். இரண்டு விநாடிகள் மட்டும் இது நீடித்ததால் இதன் பாதிப்பு வெகுவாகக் குறைந்தே எனவும் கூறினார். நில அதிர்வு மட்டக்களப்பு, அம்பாறை, ஹம்பாந்தோட்டை, மாத்தறை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்குப் பரவியுள்ளது.

கூடுதலான அதிர்வு பொத்துவில் பானம பகுதிகளில் உணரப்பட்டதாகவும் இதனால் அந்தப் பகுதிகளைச் சேர்ந்த வீடுகளின் ஜன்னல்களின் கண்ணாடிகள் நொருங்கியதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிப்பதாக அவர் குறிப்பிட்டார்.

கடலுக்கடியில் அன்றி தரைப்பகுதிலேயே இந்த பூமியதிர்வு ஏற்பட்டுள்ளதால் சுனாமி அனர்த்தம் ஏற்பட வழியில்லை என்றும்  அவர் மேலும் தெரிவித்தார்.

ஏவுகணைகள் கண்டுபிடிப்பு

sam-missile.jpgநந்திக் கடல் பிரதேசத்தில் 53 ஆம் படைப்பிரிவின் வீரர்கள் நேற்று நடத்திய தேடுதலின் போது விமானங்களைத் தாக்கக் கூடிய நான்கு ஏவுகணைகள்  கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புப் பிரிவுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்றுக் காலை இவை கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அப்பிரதேசத்திலிருந்து தப்பிச் சென்ற புலிகள் இவற்றை மறைத்து வைத்து விட்டுச் சென்றுள்ளதாகவும் இராணுவத்தினர் தெரிவித்தனர். 

உற்சவ தினங்களில் மூவர் மரணம்: 447 பேர் காயம்

தமிழ் சிங்கள புத்தாண்டு தினமான 13 ஆம் 14 ஆம் திகதிகளில் ஏற்பட்ட விபத்துக்களால் மூவர் உயிரிழந்ததுடன் 447 பேர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாக அந்தப்பிரிவுக்குப் பொறுப்பாகக் கடமையாற்றும் பிரதிப் பணிப்பாளர் டொக்டர் பிரசாத் ஆரியவன்ச தெரிவித்தார்.

கடந்த 14 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணி வரை 447 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாகவும் அவர்களில் 173 பேர் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். மூவர் அனுமதிக்கப்பட்டு சிறிது நேரத்தில் உயிரிழந்ததாக அவர் கூறினார். அம்மூவரில் ஒருவர் மரத்திலிருந்து விழுந்தவர் என்றும் ஏனைய இருவரும் ரயிலுடன் மோதியவர்கள் எனவும் குறிப்பிட்டார்.

பட்டாசு கெளுத்தியதில் இம்முறை இருவரே காயமடைந்துள்ளனர். வீதி விபத்துக்கள் மூலம் காயமடைந்தவர்களின் எண்ணிக்கையே கூடுதலாக உள்ளது. அதன்படி 155 பேர் வீதி விபத்துக்களில் காயமடைந்துள்ளனர்.

மேலும் வீடுகளில் ஏற்பட்ட விபத்துக்களால் 78 பேரும், மோதல்களால் 66 பேரும், ஏனைய விபத்துக்களால் 62 பேரும், விளையாட்டுகளின்போது 18 பேரும், தொழில்துறைகளின்போது 18 பேரும், தமது கவனயீனத்தால் 06 பேரும் காயமடைந்துள்ளனர் என டொக்டர் ஆரியவன்ச மேலும் தெரிவித்தார்.

புதுவருட தினத்தன்று கொழும்பில் 11 தமிழ் இளைஞர்கள் கைது

arrest.jpgதமிழ், சிங்கள புதுவருடத் தினமாகிய நேற்று புதன்கிழமை கொழும்பில் சிறிலங்கா விசேட அதிரடி்படையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் 11 தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

48 மணிநேர போர் நிறுத்தத்தையடுத்து மோதல் மீள ஆரம்பம்

army-attack.jpgபுது வருடத்தை முன்னிட்டு விடுக்கப்பட்டிருந்த 48 மணித்தியால போர்நிறுத்தம் முடுவடைந்ததையடுத்து இரு தரப்பும் மோதல்களை மீள் ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. விடுதலை புலிகளிற்கு எதிரான மோதலை பாதுகாப்பு படையினர் மீள் ஆரம்பித்துள்ளதாக ஏ.எப்.பி செய்தி வெளியிட்டுள்ளது.

அதேவேளை 48 மணி நேர தற்காலிக போர் நிறுத்தம் நள்ளிரவுடன் முடிவடைந்ததையடுத்து விடுதலை புலிகளும், இராணுவத்தினரும் பரஸ்பரம் எறிகணை தாக்குதல்களை மேற்கொள்வதாக தமிழ்நெட் இணையத்தளம் தெரிவித்துள்ளது. 

ஈரோட்டை திரும்பக் கேட்கும் அதிமுக – மதிமுக கடும் அதிருப்தி

jayalalitha.jpgஈரோட்டைத் திரும்பத் தருமாறும், அதற்குப் பதில் மத்திய சென்னையை எடுத்துக் கொள்ளுமாறும் மதிமுகவிடம் அதிமுக கூறியுள்ளதாம். இதனால் வைகோ கடும் அதிருப்தி அடைந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இதன் காரணமாக அதிமுக, மதிமுக இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது.

கடந்த சட்டசபைத் தேர்தல் முதலே அதிமுகவுடன் இருந்து வருகிறார் வைகோ. ஆனால் லோக்சபா தேர்தல் தொகுதிப் பங்கீட்டில் மதிமுகவை எவ்வளவுக்கெவ்வளவு ஓரம் கட்ட முடியுமோ அவ்வளவும் செய்து விட்டார் ஜெயலலிதா.

கடைசி நேரத்தில் வந்து சேர்ந்த பாமகவுக்கு அது கேட்ட 7 தொகுதிகளையும் தூக்கிக் கொடுத்து உடன்பாட்டை முடித்தார் ஜெயலலிதா. ஆனால் மதிமுக விவகாரத்தில் அப்படியே தலைகீழ். அவர்கள் கேட்டது ஆரம்பத்தில் 7 தொகுதிகள். ஆனால் ஜெயலலிதா சொன்னது 3 தொகுதிகள் மட்டுமே என்று.

இதனால் பேச்சுவார்த்தையில் இழுபறி நீண்டு கொண்டே வந்தது. இறுதியில், கிட்டத்தட்ட 2 வார குழப்பத்திற்குப் பின்னர் மதிமுகவுக்கு நான்கு தொகுதிகள்தான் ஒதுக்க முடியும் என ஜெயலலிதா திட்டவட்டமாக கூறி விட்டார். இதை வேறு வழியில்லாமல் ஏற்றுக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் வைகோவுக்கு.

இப்படியாக முடிவுக்கு வந்தது மதிமுக – அதிமுக தொகுதிப் பங்கீடு உடன்பாடு. இதன்படி, மதிமுகவுக்கு விருதுநகர், ஈரோடு, நீலகிரி, தஞ்சாவூர் ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.

இந்த நிலையில் இப்போது திடீரென புதுப் பூசல் வெடித்துள்ளதாம். ஈரோட்டில் காங்கிரஸ் சார்பில் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிடுகிறார். இதனால் அவரை எதிர்த்து அதிமுக சார்பில் வலுவான வேட்பாளரை நிறுத்த விரும்புகிறாராம் ஜெயலலிதா.இதனால் ஈரோட்டை எங்களிடம் கொடுத்து விடுங்கள். நீங்கள் மத்திய சென்னையில் போட்டியிடுங்கள் என்று அதிமுக தரப்பில் மதிமுகவும் கூறப்பட்டுள்ளதாம்.

மத்திய சென்னையில் தயாநிதி மாறனை எதிர்த்து மோத நடிகர் எஸ்.எஸ்.சந்திரன் விரும்பவில்லையாம். இதனால் மதிமுகவை மத்திய சென்னையில் தள்ளி விட அதிமுக முடிவு செய்துள்ளது.

ஏற்கனவே இந்தத் தொகுதியைத்தான் மதிமுகவுக்காக அதிமுக ஒதுக்கியிருந்தது. ஆனால் வேண்டவே வேண்டாம் என்று வைகோ தீர்மானமாக கூறி விட்டார். இந்தத் தொகுதியால்தான் உடன்பாடு ஏற்படாமல் இழுபறி நிலவியது. இந்த நிலையில் தற்போது மறுபடியும் மத்திய சென்னையை எடுத்து்க கொள்ளுங்கள், ஈரோட்டைத் தாருங்கள் என அதிமுக கூறியுள்ளதால் மதிமுக கடும் அதிருப்தி அடைந்துள்ளதாம்.

ஈழக் கொலைகள்-100 பெண்கள் சாகும் வரை உண்ணாவிரதம்

fasting-100.jpgஈழத்தில் பாதிக்கப்பட்டுள்ள பெண்களையும் குழந்தைகளையும் மக்களையும் காக்கும் நோக்கத்தோடு தமிழகம் முழுவதிலும் இருக்கும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த 100 பெண்கள் சென்னையில் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். நேற்று 2வது நாளாக உண்ணாவிரதப் போராட்டம் தொடர்ந்தது.

ஈழத் தமிழர்களுக்காக தீக்குளித்து உயிர் நீத்த முத்துக்குமாரின், கொளத்தூர் பகுதியில், இந்த உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கியது. பேராசிரியை சரஸ்வதி தலைமையில் 100 பெண்கள் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

மாணவிகள், வழக்கறிஞர்கள், பேராசிரியர்கள், ஆசிரியர்கள், உழைக்கும் பெண்கள் உள்ளிட்ட என பல தரப்பினரும் கலந்து கொண்டுள்ளனர். முதலில் காவல்துறையினர் இதை அனுமதிக்கவில்லை. அனுமதி இல்லாமல் இப்படி கூடக் கூடாது என போலீஸார் தெரிவித்தனர். இதையடுத்து அருகில் உள்ள பிளாட்பாரத்தில் பந்தல் போட்டு பெண்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.

இலங்கையில் இன்று காலை சிறிய நில நடுக்கம்

சற்று நேரத்துக்கு முன்னர் இலங்கையின் பல பகுதிகளிலும் நில அதிர்வு ஒன்று உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நில அதிர்வினை உணரக் கூடியதாக இருந்தது.

இந்த நில அதிர்வானது பண்டாரவளை, அட்டாம்பிட்டிய, நுவரெலியா, பொத்துவில், அம்பாறை, கல்முனை, கண்டி உள்ளிட்ட பல்வேறு பிரதேசங்களிலும் உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நில நடுக்கம் தொடர்பான உத்தியோகபூர்வமான செய்திகள் எதுவும் இதுவரை வெளிவரவில்லை. இது குறித்த மேலதிக பரிசோதனைகளை மேற்கொண்டு வருவதாக, இலங்கை நிலவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.