நாட்டில் இன்று காலை ஏற்பட்ட மிதமான பூமியதிர்ச்சியால் பொத்துவில் பானம பகுதியில் சிறிது சேதம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் அகழ்வாராய்ச்சி மத்திய நிலையத்தின் சுனாமி மற்றும் பூமியதிர்ச்சி எச்சரிக்கை நிலையத்தின் விஞ்ஞானியான எஸ்.ரீ. களுபண்டார தெரிவித்தார்.
இன்று காலை 8.50 அளவில் இந்தப் பூமியதிர்ச்சி ஏற்பட்டதாகவும் இதன் அளவு சுமார் நான்கு ரிச்டர் எனவும் கூறினார். இரண்டு விநாடிகள் மட்டும் இது நீடித்ததால் இதன் பாதிப்பு வெகுவாகக் குறைந்தே எனவும் கூறினார். நில அதிர்வு மட்டக்களப்பு, அம்பாறை, ஹம்பாந்தோட்டை, மாத்தறை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்குப் பரவியுள்ளது.
கூடுதலான அதிர்வு பொத்துவில் பானம பகுதிகளில் உணரப்பட்டதாகவும் இதனால் அந்தப் பகுதிகளைச் சேர்ந்த வீடுகளின் ஜன்னல்களின் கண்ணாடிகள் நொருங்கியதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிப்பதாக அவர் குறிப்பிட்டார்.
கடலுக்கடியில் அன்றி தரைப்பகுதிலேயே இந்த பூமியதிர்வு ஏற்பட்டுள்ளதால் சுனாமி அனர்த்தம் ஏற்பட வழியில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.