தமிழ் சிங்கள புத்தாண்டு தினமான 13 ஆம் 14 ஆம் திகதிகளில் ஏற்பட்ட விபத்துக்களால் மூவர் உயிரிழந்ததுடன் 447 பேர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாக அந்தப்பிரிவுக்குப் பொறுப்பாகக் கடமையாற்றும் பிரதிப் பணிப்பாளர் டொக்டர் பிரசாத் ஆரியவன்ச தெரிவித்தார்.
கடந்த 14 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணி வரை 447 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாகவும் அவர்களில் 173 பேர் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். மூவர் அனுமதிக்கப்பட்டு சிறிது நேரத்தில் உயிரிழந்ததாக அவர் கூறினார். அம்மூவரில் ஒருவர் மரத்திலிருந்து விழுந்தவர் என்றும் ஏனைய இருவரும் ரயிலுடன் மோதியவர்கள் எனவும் குறிப்பிட்டார்.
பட்டாசு கெளுத்தியதில் இம்முறை இருவரே காயமடைந்துள்ளனர். வீதி விபத்துக்கள் மூலம் காயமடைந்தவர்களின் எண்ணிக்கையே கூடுதலாக உள்ளது. அதன்படி 155 பேர் வீதி விபத்துக்களில் காயமடைந்துள்ளனர்.
மேலும் வீடுகளில் ஏற்பட்ட விபத்துக்களால் 78 பேரும், மோதல்களால் 66 பேரும், ஏனைய விபத்துக்களால் 62 பேரும், விளையாட்டுகளின்போது 18 பேரும், தொழில்துறைகளின்போது 18 பேரும், தமது கவனயீனத்தால் 06 பேரும் காயமடைந்துள்ளனர் என டொக்டர் ஆரியவன்ச மேலும் தெரிவித்தார்.